என் மலர்
செய்திகள்

சமூக வலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளான தோனி - விராட் கோலி பதிலடி
இந்தியா - இங்கிலாந்து மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சிக்கப்பட்ட நிலையில், கேப்டன் கோலி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். #ENGvIND #MSDhoni #Kohli
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்தார். இதனால், 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது.
கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் சொதப்ப,
அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சுரேஷ் ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினார்.
பெரிதும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தோனி 59 பந்துகளுக்கு 37 ரன்னில் வெளியேற இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.
அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12-வது வீரர் என்ற தனிப்பட்ட சாதனையை தோனி நேற்று பெற்றிருந்தாலும், அவரது நேற்றைய ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது. இதனால், சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.
இதற்கிடையே, தோனி மீதான விமர்சனத்துக்கு கோலி பதிலடி கொடுத்துள்ளார். “தோனி மீதான விமர்சனம் அணியினரை பாதிக்கவில்லை. அவர் களத்தில் நினைப்பதை செய்து முடிப்பதில் தோல்வி அடைந்தால், மீண்டும் மீண்டும் அவர் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒரு போட்டியை வைத்து ஒருவரின் செயல்திறனை முடிவு செய்வது பலரது மோசமான செயலாக உள்ளது. அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என கோலி தெரிவித்துள்ளார்.
Next Story






