search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2வது டி20 - அயர்லாந்து அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா
    X

    2வது டி20 - அயர்லாந்து அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா

    அயர்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி, அயர்லாந்து அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. #IREvIND #INDvIRE

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ராகுல் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். கோலி 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 



    அதிரடியாக விளையாடிய ராகுல் 36 பந்தில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். ராகுல் - ரெய்னா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மா டக்-அவுட் ஆனார். சிறிது நேரத்தில் சுரேஷ் ரெய்னா 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் மணிஷ் பாண்டே - ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தனர். கடைசி ஓவரில் பாண்டியா அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் கெவின் ஓ பிரையன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 214 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 



    அதைத்தொடர்ந்து அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் களமிறங்கினர். ஸ்டிர்லிங் 2-வது பந்திலேயே டக்-அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து வில்லியம் போர்டர்பீல்ட் களமிறங்கினார். அவர் 14 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் போல்டாகி வெளியேறினார். 

    அதற்கு அடுத்த ஓவரில் ஷனான் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கியவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆண்ட்ரூ பால்பிர்னி 9 ரன்னிலும், கெவின் ஓ பிரையின் டக்-அவுட்டும் ஆகினர். இதனால் அயர்லாந்து அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது.



    அதைத்தொடர்ந்து சிமி சிங், சஹால் பந்தில் டக்-அவுட் ஆனார். அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. ஜார்ஜ் டாக்ரெல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டூவர்ட் தாம்சன் 13 ரன்னில் சஹால் பந்தில் போல்டானார். அயர்லாந்து அணி, 12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.



    இந்திய அணியின் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகனாகவும், சஹால் தொடர்நாயகனானவும் தேர்வு செய்யப்பட்டனர். #IREvIND #INDvIRE
    Next Story
    ×