search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசத்தி வரும் பேக்-அப் விக்கெட் கீப்பர்கள் - இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா?
    X

    அசத்தி வரும் பேக்-அப் விக்கெட் கீப்பர்கள் - இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா?

    ஐபிஎல் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ரிஷப் பாந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். #IPL2018 #IPL18

    இந்திய கிரிக்கெட் அணியில் நெடுங்காலமாக தோனி விக்கெட் கீப்பராக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு விருத்திமான் சாஹா, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

    ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனி விக்கெட் கீப்பராக கலக்கிக்கொண்டு வரும் நிலையில், கூடுதல் விக்கெட் கீப்பர்களை ஆடும் லெவனில் அணி நிர்வாகம் அதிகமாக களமிறக்குவது இல்லை. அடுத்தாண்டு நடக்க உள்ள உலகக்கோப்பை வரை தோனி விளையாடுவார் என்பதால், இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதான ஒன்றுதான்.

    2019 ஆண்டுக்கு பின்னரும் தோனி விளையாடுவதும், ஓய்வு பெறுவதும் அவரது கையில் மட்டுமே உள்ளது. சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்தால், அவரை ஓரங்கட்டவும் முடியாது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை பார்க்கும் போது இந்திய அணியில் அவர்களுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்றே எண்ண தோன்றுகிறது.


    முக்கியமாக டெல்லி அணியில் உள்ள ரிஷப் பாந்த். இதுவரை 577 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட் 180 ஆகும். 20 வயதே ஆன அவரது ஆட்டம் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக பஞ்சாப் வீரர் கேஎல் ராகுல் 537 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 163. கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 371 ரன்கள், ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் 353 ரன்கள், மும்பை வீரர் கிஷான் 238 ரன்கள் எடுத்துள்ளனர்.

    சஞ்சு சாம்சன் கடந்த சில ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அவருக்கு அணியில் இடம் கிடைத்த பாடில்லை. தற்போது, பாந்த், ராகுல், கிஷான் என இளம் வீரர்களின் செயல்பாடுகள் திருப்தி அளித்தாலும், அவர்கள் அனைவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைப்பதும் சாத்தியமில்லை.


    கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்தினாலும், அடுத்து வரும் தொடர்களிலும் அவர்களது இடம் கேள்விக்குறியானது தான். எனினும், இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், அப்போது தான் எதிர்காலத்தில் அணி சிறப்பான ஒன்றாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×