search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
    X

    ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

    ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ICCU19WorldCup #Pakistan #India
    வெலிங்டன்:

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், 2-வது அரையிறுதி போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. ஷப்மான் கில் அபாரமாக விளையாடி 102 ரன்கள் குவித்தார். பிரித்வி ஷா 41 ரன்களும், மஞ்ஜோத் கல்ரா 47 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அர்ஷத் இக்பால் 3 விக்கெட்டுகளும், முகமது மூசா 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. துவக்க வீரர்கள் முகமது ஷாயிப் ஆலம் 7 ரன்களும், இம்ரான் ஷா 2 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இவர்களை விரைவில் வெளியேற்றிய இஷான் போரல், அடுத்து வந்த அலி ஷர்யப் ஆசிப் (1), அமாத் ஆலம் (4) ஆகியோரையும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார்.

    28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணிக்கு மிடில் ஆர்டர் வீரர்களும் கைகொடுக்கவில்லை. சற்றுநேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரோகைல் நசீர் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். முகமது தாகா(4), ஹசன் கான் (1), ஷகீன் ஷா அப்ரிடி (0), ஷாத் கான் (15), அர்ஷத் இக்பால் 1)  என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, பாகிஸ்தான் அணி 69 ரன்களில் சுருண்டது.

    இதனால்  இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் போரல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிவ சிங், பாரக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆட்டநாயகனாக கில் தேர்வு செய்யப்பட்டார்.



    ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 
    Next Story
    ×