search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பரவசமூட்டும் ஏழைகளின் ஊட்டி ஏற்காட்டிற்கு ஒரு சுற்றுலா
    X

    பரவசமூட்டும் ஏழைகளின் ஊட்டி ஏற்காட்டிற்கு ஒரு சுற்றுலா

    • தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்.
    • சமீபகாலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது.

    சில குடும்பங்களில் வார இறுதியில் ஒரு மினி சுற்றுலா போவதை வழக்கமாக வைத்திருப்பர். சில குடும்பங்களில், சேர்ந்தாற்போல் 3 நாட்கள் விடுமுறை கிடைத்தால் சுற்றுலா போய்விடுவர். ஆனால் பல குடும்பங்களில் பள்ளி ஆண்டு விடுமுறை தான் சுற்றுலா செல்லும் நேரம். அவ்வாறு விடுமுறையை கழிக்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சொர்க்கமாக திகழ்வது ஏற்காடு மலைவாசஸ்தலம்.

    தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலம் தான் ஏற்காடு. கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது, தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்.

    சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதனாலேயே ஏழைகளின் ஊட்டி என்று ஏற்காடு அழைக்கப்படுகிறது.

    மரங்களின் நிழலும், தென்றலின் சுகமும், வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை இங்கு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகான கவர்னராக இருந்த சர் தாமஸ் முரோ என்பவரால் 1842-ம் ஆண்டு ஏற்காடு கண்டறியப்பட்டது. ஏற்காடு அதன் பெரும்பான்மை சாகுபடியான காபி, ஆரஞ்சு, பலாப்பழம், கொய்யா, ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு தோட்டங்களுக்கு பெயர் போனது. காபி ஒரு முக்கிய உற்பத்தியாகும். இது ஆபிரிக்காவில் இருந்து 1820-ல் ஸ்காட்டிஷ் கலெக்டர் எம்.டி. காக்பர்ன் மூலம் ஏற்காடு வந்தது. மேலும் இங்கு அரிய வகையான மரங்களும் வனவிலங்குகளும் உடைய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. ஏற்காட்டில் உள்ள காடுகளில் சந்தனம், தேக்கு மற்றும் வெள்ளி கருவாலி மர வகைகள் மிகுதியாக காணப்படுகின்றன. மேலும் காட்டெருமை, மான், நரிகள், கீரிபிள்ளைகள், பாம்புகள், அணில்கள் போன்ற விலங்கு வகைகளும், பறவை இனங்களான புல்புல், கருடன், சிட்டு குருவி மற்றும் ஊர்குருவி வகைகளும் இங்குள்ள காடுகளில் காணப்படுகின்றன.

    தென்னிந்தியாவின் ஆபரணம் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க பல அற்புதமான இடங்கள் இருக்கின்றன. சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஏற்காட்டில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மலர் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி, படகு போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. மே மாதத்தில் இங்கு வர நேர்ந்தால் இந்த கோடை திருவிழாவை தவறவிட்டுவிட கூடாது. மேலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கான இடங்கள் பல ஏற்காட்டில் உள்ளன.

    எம்ரால்ட் ஏரி

    அதில் முதலாவதாக ஏற்காட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சமாக கருதப்படுவது, அதன் நடுவே அமைந்துள்ள இயற்கையான ஏரியாகும். இது மிகவும் பிரபலமாக எமரால்டு ஏரி என்று அழைக்கப்படுகிறது. அற்புதமான மலைகள் மற்றும் அழகிய தோட்டங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட இந்த ஏரி கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஏரியில் படகு மூலம் சவாரி செய்யும் வசதிகள் நியாயமான கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. உங்கள் தேவைக்கு ஏற்ப சுயமாக இயக்கப்படும் படகுகளையும் தேர்வு செய்யலாம்.


    பகோடா பாயின்ட்

    ஏற்காடு பிரதான பஸ் நிலையத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகோடா பாயின்ட், ஏற்காட்டிலியே மிகவும் உயரமான தளமாகும். இதன் உச்சியில் இருந்து ஏற்காட்டின் மொத்த அழகையும் கண்டு களிக்கலாம். இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள், இங்கு கற்களால் ஒரு ராமர் கோவிலை கட்டியுள்ளனர். இதன் அழகை கண்டு கழிக்க, இரவு 7 மணிக்கு முன் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.


    கிள்ளியூர் நீர்வீழ்ச்சி

    இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும், இந்த 300 அடி உயர நீர்வீழ்ச்சியின் மயக்கும் மற்றும் வசீகரிக்கும் அழகு, உங்கள் மனதிலும் இதயத்திலும் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்காட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவியில் கோடைகாலத்திலும் நீர் இருந்துகொண்டே இருக்கிறது. மூலிகைகள் நிறைந்த மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் இந்த அருவியில் குளிப்பது பேரானந்தம் தரும் அனுபவமாக இருக்கும்.

    இந்த கிளியூர் அருவிக்கு வர தென்மேற்கு பருவ மழைக்கு பிந்தைய காலம் உகந்ததாக சொல்லப்படுகிறது. கொஞ்சம் சுவாரஸ்யம் வேண்டும் என விரும்புகிறவர்கள் இந்த அருவியை ட்ரெக்கிங் பயணம் மூலமாக அடர்த்தியான வனப்பகுதியினுள் பயணித்தும் சென்றடையலாம்.

    லேடிஸ் சீட்

    ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மற்றொரு பிரபலமான இடம் லேடிஸ் சீட். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். வானிலை சரியாக இருந்தால், இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள். இந்த தொலை நோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் பார்வையாளர்களின் வருகைக்கு தினமும் திறக்கப்பட்டிருக்கிறது.

    கதைகளின் படி ஒரு ஆங்கிலேய பெண்மணி இந்த இடத்தில் அமர்ந்தவாறு சூரியன் மறையும் தருனத்தில் சுகமாக குளிர் காய்ந்து கொண்டு இயற்கையின் அழகான காட்சியை ரசித்து கொண்டிருந்ததால் லேடிஸ் சீட் என்ற பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஜென்ஸ் சீட், சில்ட்ரன் சீட் ஆகியவையும் இங்கு மிக பிரபலம். இவை அடிப்படையில் ஏற்காடு மலை உச்சியில் அமைந்துள்ள இயற்கை பாறைகளின் தொகுப்பாகும். அந்த பாறைகள் இருக்கைகளை போல் அமைந்து மலை சாலைகளை நோக்கியவாறு அமைந்துள்ளன.

    அண்ணா பூங்கா

    ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும். இதேபோல் வனதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள மான் பூங்காவானது படகு இல்ல ஏரிக்கு நடுவில் ஒரு தீவு போல உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடந்து செல்வதே ஒரு தனி அனுபவத்தை ஏற்படுத்தும்.

    தாவரவியல் பூங்கா

    18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1963-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அற்புதமான மரங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ள எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் இந்த பூங்கா ஒரு கடவுளின் பரிசு போல காட்சியளிக்கும்.

    சேர்வராயன் கோவில்

    கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் உள்ளது இக்கோவில். மே மாதத்தில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலம். இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும், காவிரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவிரி நதியையும் குறிக்கின்றனர். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் உள்ளது.

    இவை தவிர கரடி குகை, ஆர்தர் இருக்கை, மாண்ட்ஃபோர்ட் பள்ளி, மீன் காட்சியகம், திப்பேரேரி காட்சி முனை, கொட்டச்சேடு தேக்கு காடு, கிரேஞ்ச், ரெட்ரிட் இல்லம், மஞ்சகுட்டை வியூ பாயிண்ட், தலைசோலை அண்ணாமலையார் கோவில், நல்லூர் நீர்வீழ்ச்சி ஆகியவையும் ஏற்காட்டில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும்.


    எப்படி ஏற்காடுக்கு செல்வது?

    தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால், விமானம், ரெயில் மற்றும் சாலை என அனைத்து போக்குவரத்து முறைகளாலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

    சேலம் விமான நிலையம் ஏற்காடுக்கு அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். சேலம் விமான நிலையத்திலிருந்து ஏற்காடு சுமார் 47 கி.மீ. ஆகும். பயணிகள் விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்து இலக்கை அடையலாம்.

    இதேபோல் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்காடு சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கேரளா, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு தினசரி ரெயில்கள் உள்ளன. ரெயில் நிலையத்திலிருந்து ஏற்காடு செல்ல வாடகை வண்டியில் செல்லலாம். இல்லையெனில் ரெயில் நிலையத்திலிருந்து சேலம் மத்திய பஸ் நிலையத்திற்கு உள்ளூர் பஸ்சில் ஏறுங்கள். அங்கிருந்து ஏற்காடு செல்லும் பஸ் கிடைக்கும்.

    தமிழ்நாடு மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இருந்து சாலை வழியாக ஏற்காடு இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, கோயம்புத்தூர், சென்னை அல்லது சேலம் போன்ற நகரங்களில் இருந்து ஏற்காட்டுக்கு வாகனத்தில் வார இறுதியில் மக்கள் செல்கின்றனர். சேலம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து ஏற்காட்டிற்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. சேலம் - ஏற்காடு செல்லும் பஸ்கள், ஏற்காடு ஏரிக்கரையில் நின்று செல்லும். ஏரியில் ஒரு வண்டி ஸ்டாண்ட் உள்ளது, அங்கு நீங்கள் சுற்றுலாவிற்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம். அப்புறம் என்ன அப்பிடியே ஜாலியா ஏற்காட்டுக்கு ஒரு டூர் போயிட்டு வாங்க..!

    ஏற்காட்டில் என்ன கிடைக்கும்?

    ஏற்காடு ஒரு மலை வாசஸ்தலம் என்றாலும் தீவிர வெப்ப நிலை மாற்றம் இங்கு இருப்பதில்லை. எனவே சுற்றுலா பயணிகள் சுமப்பதற்கு கடினமான தங்கள் குளிர் கால உடமைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு இலகுவான உடைமைகளை கொண்டு வந்தால் போதுமானது. ஆண்டு முழுவதும் லேசான மற்றும் இதமான வெப்பநிலையே இங்கு காணப்படுகிறது. ஏற்காட்டின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச சராசரி வெப்ப நிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும்.

    ஆண்டு முழுவதும் இந்த மலைவாசஸ்தலத்திற்கு செல்ல முடியும் என்றாலும் கூட, கோடை மற்றும் குளிர்காலத்தில் ஏற்காடு செல்வது ஏற்றதாக கருதப்படுகிறது. ஏற்காட்டில் கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்குறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இங்கு பருவமழை பெய்கிறது. மழைப்பொழிவு காரணமாக, இப்பகுதியில் மலையேற்றம் செய்வதும் மற்ற இடங்களுக்குச் செல்வதும் கடினமாகிறது.

    ஏற்காட்டில் அக்டோபர் மாதம் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. இதனால் ஏற்காடு குளிர்காலத்தில் இனிமையான காலநிலை மற்றும் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளைக் கொண்டுள்ளது. எனவே அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் தான் ஏற்காடு செல்ல சிறந்த பருவம் ஆகும். ஏராளமான பட்ஜெட் மற்றும் நடுதரப்பட்ட ஹோட்டல்கள் ஏற்காட்டில் இருப்பதால், இங்கு தங்குவது ஒரு எளிதான விஷயமாகும்.

    உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப அழகிய சுற்றுப்புற காட்சிகள் நிறைந்த அறைகள், தனி பங்களா, காற்றோட்டமான அறைகள் என விரும்பியவற்றை நீங்கள் தேர்வு செய்து தங்கலாம். ஏன் வீடு போன்ற தங்கும் இடங்கள் கூட உள்ளன. ஏற்காட்டிற்கு வருபவர்கள், உள்ளூர் ஏற்காடு காபியை ருசிக்க வேண்டும். அதன் சொந்த சுவை மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனித்து நிற்கிறது. இதேபோல், இங்கு நூற்றுக்கணக்கான மிளகாய் பஜ்ஜி கடைகள் உள்ளன. இந்த பஜ்ஜியை தொட்டு சாப்பிட பிரத்யோகமாக ஒரு வகையான சட்னி தயார் செய்து கொடுக்கின்றனர். அந்த சட்னி பஜ்ஜிக்கு மேலும் சுவை கூட்டுகிறது. இதுமட்மின்றி ஸ்பைசி மயோனைஸ் மிளகாய் பஜ்ஜி, பிரட் ஆம்லெட் போன்றவையும் மிக பிரபலம்.

    ஆண் மற்றும் பெண்களுக்கு நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகையான முடவன் ஆட்டுக்கால் கிழங்கு இங்கு பரவலாக கிடைக்கின்றன. இந்த கிழங்கில் சூப் வைத்து விற்கின்றனர். இந்த சூப்பின் சுவையானது ஆட்டுக்கால் சூப்பின் சுவையை போலவே இருக்கும். இதையும் சுவைத்து பார்க்க மறக்காதீர்கள்.

    Next Story
    ×