என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • ஒளவைக்கு கர்வம் தோன்றியபோதுதானே `சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?` எனக் கேட்டு முருகன் சிறுவனாகத் தோன்றி அவரது கர்வத்தை அடக்கினான்?
    • தமிழில் காளமேகப் புலவர் ஈற்றடி கொடுத்தால் வெண்பா பாடியது போல, காளிதாசரும் சிக்கலாகக் கொடுக்கப்பட்ட ஈற்றடிகளுக்கெல்லாம் வடமொழியில் சுலோகங்கள் இயற்றியிருக்கிறார்.

    மகாகவி காளிதாசர் சமஸ்கிருதக் கவிஞர்களில் மிக முக்கியமானவர். அவரது படைப்புகளை நீக்கி விட்டு சமஸ்கிருத இலக்கிய வரலாற்றை எழுத இயலாது.

    காளிதாசரின் வரலாறு பரவலாய் அனைவரும் அறிந்த ஒன்று. தமிழில் அவரது சரிதம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

    காளிதேவியின் அருள் பெற்றவர் மகாகவியான காளிதாசர். அவர் மேகத்தைத் தூதுவிடும் தூது இலக்கியமான மேக சந்தேசம், மகாபாரதக் கிளைக் கதையின் புத்துருவாக்கமான சாகுந்தலம், ராமாயணக் கதையைப் பேசும் ரகுவம்சம், இன்னும் விக்கிரமோர்வசீயம், மாளவிகாக்னி மித்ரம் உள்ளிட்ட பல காவியங்களைப் புனைந்தார்.

    அந்தக் காவியங்கள் மூலம் நாம் அறியும் காளிதாசரது பரந்துபட்ட பூகோள அறிவு, தாவரவியல் அறிவு, விலங்கியல் அறிவு, ஆன்மிக முதிர்ச்சி உள்படப் பல செய்திகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.

    கண்ணதாசன் தம் கவிதை யில் காளிதாசரது படைப்புகளை அழகாகப் பட்டியலிடுகிறார்:

    `காதல் மணம் கொண்ட

    பாசம் - அந்தக்

    கவிஞனின் மேக சந்தேசம்

    தூதுசெல்லும் ஒரு மேகம்

    - அதைச்

    சொல்வது மேக சந்தேசம்

    கங்கைக் கரை இருந்த

    பெருவம்சம் - அந்தக்

    கவிஞன் கவியுரைத்த

    ரகுவம்சம்

    செங்கையில் நாடாண்ட

    திருவம்சம் - மன்னன்

    ஸ்ரீராமன் பிறந்த ரகுவம்சம்...`


    கவியரசர் கண்ணதாசனுக்குக் காளிதாசன் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. `கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?` என்ற திரைப்பாடலில் `கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா? காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?` என்ற வரிகள் மூலம் காளிதாசனைப் பெருமைப்படுத்துகிறார் அவர்.

    தமிழில் காளமேகப் புலவர் ஈற்றடி கொடுத்தால் வெண்பா பாடியது போல, காளிதாசரும் சிக்கலாகக் கொடுக்கப்பட்ட ஈற்றடிகளுக்கெல்லாம் வடமொழியில் சுலோகங்கள் இயற்றியிருக்கிறார்.

    `குளு குக்குளு குக்குளு` என்று அவருக்கு ஒரு ஈற்றடி கொடுத்தார்கள். பொருளற்ற இந்த ஈற்றடிக்கு எப்படித்தான் அவர் கவிதை புனையப் போகிறார் என எல்லோரும் காத்திருந்தார்ள். காளிதாசர் அசரவில்லை.

    `பொய்கைக் கரையிலிருந்த நாவல் மரத்தில் நாவல் பழங்கள் பழுத்துக் குலுங்கின. அந்த நாவல் மரத்தின் கிளைகளைக் குரங்குகள் உலுக்கியபோது நாவல் பழங்கள் பொய்கைத் தண்ணீரில் பொலபொலவென உதிர்ந்தன. அப்போது எழுந்த ஒலிதான் குளுகுக்குளு குக்குளு!` என அந்த ஈற்றடிக்கும் சாமர்த்தியமாக சுலோகம் எழுதினார் அவர்.

    `டடண்டடண்டண் டடடண் டடண்டண்` என்றும் அவருக்கு ஓர் ஈற்றடி கொடுக்கப் பட்டது. இந்த அர்த்தமற்ற ஈற்றடியில் எப்படியும் அவரால் கவிதை புனைய முடியாது எனப் பொறாமை கொண்ட மற்ற கவிஞர்கள் அவரின் தடுமாற்றத்தைக் காண ஆவலோடு காத்திருந்தார்கள்.

    இறையருள் பெற்ற காளிதாசரா தடுமாறுவார்?

    `நந்தவனப் பொய்கையில் குடத்தில் நீர்சேந்திய தலைவி, இடுப்பில் குடத்தோடு குளத்துப் படிகளில் ஏறி வந்தாள். அப்போது எதிரே வந்த தலைவனைக் கண்டதும் நாணத்தால் குடத்தை நழுவ விட்டாள். தண்ணீர்க் குடம் குளத்துப் படிக்கட்டுகளில் கடகடவென உருண்டபோது எழுந்த ஒலிதான் டடண்டடடண் டடடண் டடண்டண்!` என்று அவர் சொன்ன அழகிய கவிதையைக் கேட்டுப் பொறாமைக் கவிஞர்களின் தலைகள் கவிழ்ந்தன.

    தாம் எழுதிய அற்புதமான படைப்புகளாலும் மன்னரும் மக்களும் தன்னை மிகவும் மதித்ததாலும் காளிதாசரிடம் சற்று ஆணவமும் தலைதூக்கியதாகச் சொல்கிறது அவரது வரலாறு. கவிஞர்களுக்கு கர்வம் ஏற்படும்போது இறைச்சக்தி அதை அடக்குவதைத் தமிழ் இலக்கியமும் சொல்கிறது.

    ஒளவைக்கு கர்வம் தோன்றியபோதுதானே `சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?` எனக் கேட்டு முருகன் சிறுவனாகத் தோன்றி அவரது கர்வத்தை அடக்கினான்?


    காளிதாசர் வாழ்விலும் இதுபோன்ற ஒரு சம்பவம் வருகிறது.

    காளிதாசர் வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தார். கடும் தாகம் அவரை வாட்டியது. தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று அவர் விழிகள் தேடின.

    அதோ சற்று தூரத்தில் ஒரு கிராமப் பெண் இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு நடந்து வந்து கொண்டிருக்கிறாளே? அவளிடம் நீர் கேட்போம். அவள் தன்னை நெருங்கும் வரை காத்திருந்த காளிதாசர், அவளிடம் `கடும் தாகம் எனக்கு. உன் குடத்திலிருந்து எனக்குச் சிறிது தண்ணீர் தருவாயா?` எனக் கேட்டார்.

    அவளோ சரியான வாயாடியாக இருப்பாள் போலிருந்தது. `சரிதான் சுவாமி! நீங்கள் யார் என உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    தண்ணீர் தருகிறேன். நான் யாருக்குத் தண்ணீர் தருகிறேன் என்பது எனக்குத் தெரிய வேண்டும் அல்லவா?` என்றாள் அவள்! தண்ணீர் பெறுவதற்குக் கூட ஆளை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டுமா? வேடிக்கைதான் என நினைத்தார் காளிதாசர்.

    கல்வியறிவற்ற இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணுக்குத் தான் கவிஞன் என்றால் புரியுமோ? புரியாதோ? எனவே பொத்தாம் பொதுவாக அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என எண்ணினார்.

    `நான் ஒரு பயணி அம்மா! எங்கும் பயணம் செய்பவன். அவ்வளவுதான்!` என்றார்!

    அவள் அவர் பதிலைக் கேட்டுக் கலகலவென்று நகைத்தாள்.

    `உலகில் இரண்டே இரண்டுபேர் தான் பயணிகள் என்று சொல்லிக் கொள்ள உரிமையுள்ளவர்கள் சுவாமி! ஒருவர் சந்திரன்! இன்னொருவர் சூரியன்! இவர்கள்தான் இரவு பகல் என நிற்காமல் பயணிப்பவர்கள். அவர்கள் இருவரைத் தவிர மற்ற யாரையும் நான் பயணி என ஒப்புக் கொள்வதில்லை!` என்றாள் அவள்!

    பெரிய வம்பு பிடித்த பெண்ணாய் இருப்பாள் போலிருக்கிறதே என்று நினைத்த காளிதாசர், `சரி. என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள்!` என்றார்.


    `சுவாமி! உலகில் இரண்டே இரண்டு விருந்தினர்தான் உண்டு! ஒன்று செல்வம்! இன்னொன்று இளமை! இந்த இரண்டும் தான் விருந்தினராக வரும். நிலையாக நிற்காது. உடனே போய் விடும்! இந்த இரண்டைத் தவிர வேறு யாரையும் நான் விருந்தினர் என ஏற்றுக்கொள்ள முடியாது` என்றாள் அவள்!

    இதென்ன, விடாப்பிடியாக ஏதேதோ ஏட்டிக்குப் போட்டியாய்ச் சொல்லிக் கொண்டே இருக்கிறாளே? காளிதாசரிடம் மெல்லிய சீற்றம் எட்டிப் பார்த்தது.

    எரிச்சலான அவர், `பெண்ணே! நான் ஒரு பொறுமைசாலி! அதனால்தான் உன் இடக்குப் பேச்சை சகித்துக் கொண்டிருக்கிறேன்!` என்றார்!

    அதற்கும் அந்தப் பெண் பதில் வைத்திருந்தாள்.

    `பொறுமை என்றால் இரண்டைத் தான் அப்படி ஏற்க முடியும். ஒன்று நாம் வாழும் இந்த பூமி! எவ்வளவு மிதித்தாலும், எத்தனை தோண்டினாலும் தாங்கும்! மற்றொன்று மரம் ! யார் கல்லால் அடித்தாலும் வெறுக்காமல் கல்லடி தந்தவர்க்கே காய்களைக் கொடுக்கும். எனவே உங்களைப் பொறுமைசாலி என என்னால் ஒப்புக்கொள்ள இயலாது` என்றாள்!

    கோபமடைந்த காளிதாசர் `உன்னிடமிருந்து தண்ணீர் பெறாமல் நான் விடமாட்டேன் பெண்ணே! நான் ஒரு பிடிவாதக்காரன், தெரிந்துகொள்` என்றார்!

    அதற்கும் அந்தப் பெண் அசரவில்லை. கலகலவென நகைத்தாள்.

    `சுவாமி! உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான். ஒன்று தலைமுடி! இன்னொன்று நகம்! இந்த இரண்டும்தான் வேண்டாம் வேண்டாம் என்று எத்தனை முறை வெட்டினாலும் பிடிவாதமாக மீண்டும் மீண்டும் வளரும்! அந்த இரண்டோடு ஒப்பிடும்போது உங்களைப் பிடிவாதக்காரன் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது!` என்றாள் அவள்.

    பேச்சுக்குப் பேச்சு அவள் மறுபேச்சுப் பேசுவதைக் கண்டு தாகம் அதிகரிக்கவே `உன்னிடம் தண்ணீர் கேட்டேனே? நான் ஒரு முட்டாள்!` என்று தன்னை நொந்து கொண்டார் காளிதாசர்.

    அந்தப் பெண், அப்போதும் விடவில்லை.

    `உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான் உண்டு! ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன். மற்றவன் நாடாளத் தெரியாத அந்த மன்னனுக்குத் துதிபாடும் மந்திரி!` என்றாள்!

    காளிதாசர் செய்வதறியாது சற்றே யோசித்தார். பின் தெளிவடைந்தவராய் சடாரென அந்தப் பெண்ணின் காலில் விழுந்தார்!

    அந்தப் பெண் `மகனே... எழுந்திரு!` என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் திகைத்தார். அந்தப் பெண் மறைந்து போனாள்.

    ஒரு கையில் சூலத்தோடும் ஒரு கையில் தண்ணீர்க் குடத்தோடும் காளிதேவி நின்றிருந்தாள். பட்டிக்காட்டுப் பெண்ணாகத் தண்ணீர்க் குடத்துடன் வந்தவள், தான் நாள்தோறும் வழிபடும் காளிதான் என அறிந்து காளிதாசர் பக்திப் பரவசத்துடன் கைகூப்பி வணங்கினார்.

    காளிதேவி தன் அடியவனான் காளிதாசரைக் கனிவுடன் பார்த்துப் பேசலானாள்:


    `மகனே! ஆணவத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு அலையாதே! என் கடாட்சம் இருப்பதால் நீ கவி பாடுகிறாய், அவ்வளவே. இறையருளாலேயே உலகில் எல்லாம் நடக்கிறது என்ற உண்மையை உணர்ந்து அடக்கமாக இருக்கக் கற்றுக் கொள். கவிஞனாக இருப்பது முக்கியம்தான்.

    அதைவிட முக்கியம் கர்வம் இல்லாத மனிதனாக இருப்பது. நீ கவிஞனாக இருப்பதோடு மனிதனாகவும் இரு!" என்று கூறி தண்ணீர்க் குடத்தைக் காளிதாசர் கையில் கொடுத்து காளிதேவி மறைந்து போனாள்!

    காளிதேவி கொடுத்த குடத்திலிருந்த தண்ணீரை அருந்திய பின் காளிதாசனின் கவிதையாற்றல் இன்னும் பல மடங்கு பெருகியது. எவ்வளவு ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் அடக்கம் மிக முக்கியம் என்ற உண்மையை உணர்ந்த காளிதாசர், இந்த சம்பவம் தந்த முதிர்ச்சியால் அதன்பின் பண்பட்ட மனிதராகவும் வாழ்ந்தார் என்கிறது காளிதாசர் சரிதம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • மாணவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.
    • மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் வெளிநாட்டில் மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்தல் அவசியம்.

    மருத்துவக்கல்வி மற்றும் மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முதல் உயர்கல்வி விருப்பம், கனவு, ஆசை அனைத்துமே எம்.பி.பி.எஸ். ஆக மட்டுமே நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே கடவுளுக்கு அடுத்த நிலையில் எல்லோரும் உயர்வாக மதிப்பது மருத்துவர்களைத்தான். சமீபகால கொரோனா பேரிடர் சமயத்தில் உலக மக்களுக்கு மருத்துவ சமுதாயம் ஆற்றிய சேவை அளப்பரியது. அவ்வாறான விலைமதிப்பற்ற இந்த மருத்துவக் கல்வி ஏராளமான மாணவர்களுக்கு கிடைக்கும் நோக்கத்தில் நமது அரசாங்கங்கள் எடுத்த சீரிய முயற்சியால் இன்று தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    தற்போதைய தேசிய மருத்துவ ஆணையத்தின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 74 மருத்துவக் கல்லூரிகளில் (அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உட்பட) 11,000க்கும் அதிகமான மருத்துவக்கல்வி இடங்கள் உள்ளன.


    வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி

    தேசிய மருத்துவச் செலவுக்கான தேர்வு வாரியத்தின் 2020-ம் ஆண்டு புள்ளி விவரப்படி சுமார் 45 வெளிநாடுகளுக்கு மாணவர்கள் மருத்துவக்கல்வி (எம்.பி.பி.எஸ்.) கற்கச் சென்று வருகின்றனர்.

    இதில் அதிக அளவில் இந்தியாவின் நீண்ட நாளைய நட்பு நாடான ரஷ்யா மற்றும் அதனிடமிருந்து பின்னாளில் பிரிந்த அர்மீனியா, கிர்கிஸ் குடியரசு, ஜார்ஜியா, கஜகிஸ்தான், உக்ரைன் மற்றும் இந்தியாவிற்கு மிக அருகிலுள்ள பங்களாதேஷ், நேபாளம், கிழக்கு ஆசிய நாடான சைனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

    இதில் ரஷ்யா மற்றும் அதனுடன் முன்பு இணைந்திருந்த நாடுகளான அர்மீனியா, கிர்கிஸ் குடியரசு, ஜார்ஜியா, கஜகிஸ்தான், உக்ரைன் மற்றும் பெரும்பாலான நாடுகளில் மருத்துவக் கல்வியானது 6 வருட படிப்பாகவும் எம்.டி. (Medical Doctor) எனும் பட்டமாகவும் வழங்கப்படுகிறது.

    மற்றும் பங்களாதேஷ், நேபாளம் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்தியாவை போன்று 5 மற்றும் 5½ வருட படிப்பாகவும் எம்.பி.பி.எஸ் எனும் பட்டமாகவும் வழங்கப்படுகிறது.

    ஏன் வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர்?

    அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்ப தேர்வாக இருப்பது எம்.பி.பி.எஸ். மட்டுமாக இருப்பதால் மாணவர்களின் மதிப்பெண், பொருளாதாரம், மருத்துவக்கல்லூரி இடங்கள் என பல்வேறு காரணிகளால் மருத்துவச் செலவுக்கான எம்.பி.பி.எஸ். ஆசை இருந்தும் பெரும்பாலானாவர்களுக்கு அது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.


    அவ்வாறான மாணவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியானது மாணவர்களின் மதிப்பெண்களை தாண்டி அவர்களின் உயர்கல்வி விருப்பத்தை முதன்மையாகக் கொண்டுள்ளது. இதனால் மேல்நிலைக் கல்வியில் 50 சதவீத மதிப்பெண்களுடன் மருத்துவம் பயில உண்மையான விருப்பமுள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்கள் சிறந்த தேர்வாக உள்ளன. இந்தியாவில் மருத்துவக்கல்வியை ஒழுங்கு படுத்தும் நோக்கில் 1933-இல் துவங்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளைப் பின்பற்றி 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயிலச் சென்று வந்தனர். தற்போது கடந்த சில ஆண்டுகளாக மாற்றிய மைக்கப்பட்ட புதிய இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் 18-11-2021 விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயிலச் செல்கின்றனர்.

    இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகள்

    வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்வியின் தரம் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம் ஆகியன இந்திய மருத்துவக் கல்வியின் தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கடந்த 18-11-2021-ல் இந்திய தேசிய மருத்துவ ஆணையம் சில விதிமுறைகளை வகுத்து வெளியிட்டது. அதன் விவரம் பின்வருமாறு:

    4(a)(i)வெளிநாட்டில் இந்திய மாணவர்கள் பயிலும் மருத்துவக் கல்வியானது குறைந்தது 54 மாதங்கள் இருக்க வேண்டும். (அதாவது இந்திய மருத்துவக் கல்வியைப் போன்றே 4½ வருடங்கள் மருத்துவக் கல்வி)

    (ii)மருத்துவக் கல்வி பயிலும் அதே கல்லூரியில் குறைந்தது 12 மாதங்கள் உள்ளுறை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    (இதுவும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் உள்ளுறை பயிற்சியை போன்றதே)

    (iii)மருத்துவக் கல்வியானது ஆங்கில வழி கல்வியாக இருக்க வேண்டும்.

    (iv)தேசிய மருத்துவ ஆணையத்தின் அட்டவணை I-ல் குறிப்பிடப்பட்டுள்ள கண்டிப்பான பாடங்கள் அனைத்தும் பயிற்றுவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.



    4(b)அந்த நாட்டிலுள்ள சம்பந்தப்பட்ட உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அல்லது மருத்துவ பட்டம் வழங்கிய நாட்டின் நீதிமன்ற எல்லைக்குட்பட்டு மருத்துவராகப் பணிபுரிய உரிமம் வழங்கப்பட வேண்டும். அதோடு அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவம் பார்க்க உரிமம் வழங்கப்பட வேண்டும்.

    (c)தேசிய மருத்துவ ஆணையத்தில் விண்ணப்பித்து குறைந்தது இந்தியாவில் 12 மாதங்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    (d)தேசிய மருத்துவ ஆணையத்தில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    அட்டவணை-1

    வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் நிரந்தர பதிவு பெறுவதற்கான அளவுகோல்கள்:

    2(i)வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்களின் பாடத்திட்டம், செய்முறை, மருத்துவப் பயிற்சி என அனைத்தும் இந்தியாவின்க்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையாக இருத்தல் வேண்டும்.

    (b)12 மாதங்கள் உள்ளுறை பயிற்சியை அதே மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்திட வேண்டும். அதனுடன் கீழ்க்கண்ட மருத்துவப் பாடங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பாட விவரம் பின்வருமாறு:

    Community Medicine, General Medicine, Psychiatry, Paediatrics, General Surgery, Anesthesia, Obstetrics and Gynaecology, Orthopaedics, Otorhi nolaryngology, Ophthalmology, Dermatology, Emergency or Casualty Services, Lab Services and their sub-specialities.

    (ii)கல்வி பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தேவைப்பட்டால் பார்வையிடப்படும்.

    (iii)முழு கல்வி காலம், பயிற்சி, உள்ளுறை பயிற்சி என அனைத்தும் வெளிநாட்டில் ஒரே மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்திடல் வேண்டும்.

    (iv)மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் வெளிநாட்டில் மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்தல் அவசியம்.

    நீட் தேர்வும் வெளிநாடு மருத்துவக் கல்வியும்

    கடந்த 2017-ம் ஆண்டில் இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வானது கட்டாயமாக்கப்பட்ட சூழலில் 2018-ம் ஆண்டு முதல் வெளிநாடு சென்று மருத்துவக்கல்வி படிப்பதற்கும் நீட் அவசியம் என தேசிய மருத்துவ ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்குகள் மற்றும் கொரோனா பேரிடர் போன்ற காரணங்களால் அடுத்த சில வருடங்களில் வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு நீட் விலக்கு தரப்பட்டது. மேலும் 05-04-2019 தேதியிட்ட அறிக்கையில் "ஒரு மாணவன் நீட் தேர்வில் தகுதி பெற்ற மதிப்பெண்ணானது அடுத்து 3 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்க செல்லுபடியாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தகுதி மதிப்பெண்

    மருத்துவக் கல்விக்கு நீட் கட்டாய மாக்கப்பட்டது முதலே நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்ணானது, 720க்கு நடத்தப்படும் நீட் தேர்வில் 90 முதல் 150 வரை மட்டுமே இருந்துள்ளது.

    வருடம்  

    பொது

    ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி

    2018 

    119

     96

    2019 

    134 

    107

    2020 

    147

     113

    2021 

    138 

    108

    2022 

    117 

    93

    2023 

    137 

    107




    அதாவது பொது பிரிவினருக்கு மொத்தம் 720க்கு 117 முதல் 147 வரை மட்டுமே தகுதி மதிப்பெண்ணாக உள்ளது. மேலும் ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 93 முதல் 113 வரை மட்டுமே இதுவரை தகுதி மதிப்பெண்ணாக உள்ளது.

    மேலும் வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், நாடுகள், கல்லூரிகள் பற்றிய விவரங்கள், வங்கிக்கடன் பற்றிய விவரங்கள், மாணவர்களை அனுப்பும் நிறுவனத்தை தேர்வு செய்வது உட்பட விரிவான விவரங்களை வரும் வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.

    • உலகமே சொல்லும் கால்பந்து மன்னன் பீலே, பீலே என்று.
    • பீலே இளம் வயதில் ஷூ பாலிஷ் போட்டும், வேர்க்கடலையை விற்றும் பணம் சம்பாதித்தார்.

    மிகுந்த ஏழ்மையில் பிறந்து தன் முயற்சியால் முன்னேறி ஒரு நாட்டில் நடந்த போரையே தற்காலிகமாக நிறுத்தி தன்னைக் காணச் செய்த ஒரு பெரும் வீரர் யார்?

    உலகமே சொல்லும் கால்பந்து மன்னன் பீலே, பீலே என்று!

    பிறப்பும் இளமையும்: பீலே என்று உலகத்தினரால் அறியப்படும் எட்ஸன் அராண்டெஸ் டொ நாசிமெண்டோ 1940-ல் அக்டோபர் 23-ம் தேதி டொண்டின்ஹோ என்பவருக்கும் செலஸ்டி அராண்டெஸ் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

    சகோதரர்கள் இருவரில் இவரே மூத்தவர். தந்தை ஒரு கால்பந்து விளையாட்டுக்காரர். பிரேசில் நாட்டில் ட்ரெஸ் கொராகஸ் என்ற இடத்தில் அவர் பிறந்தார். மிக ஏழ்மையான குடும்பம். தனது 6-ம் வயதில் பீலே ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும், வறுத்த வேர்க்கடலையை விற்றும் பணம் சம்பாதித்தார்.

    தந்தையின் நண்பர் ஒருவரின் பெயரை தவறாக பீலே என்று உச்சரிக்க அவரை நண்பர்கள் செல்லமாக அவரை பீலே என்றனர். அதுவே நிலைத்து விட்டது.

    ஆனால் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எடிஸன் பெயர் தான் அவருக்கு சூட்டப்பட்டிருந்தது. தனது பெயருக்கு என்ன அர்த்தம் என்று தனக்குத் தெரியாது என்றும் போர்த்துக்கீசிய மொழியில் அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்றும் அவர் தனது சுயசரிதத்தில் பின்னால் எழுதியுள்ள்ளார். ஆனால் எது எப்படியானாலும் உலகத்தினருக்கு அவர் பீலே தான்!

    கால்பந்து விளையாட்டு: தந்தை கால்பந்தில் பயிற்சி தர, அந்த விளையாட்டு அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் கால்பந்து வாங்கக் காசில்லாமல் சாக்கில் கந்தல்துணிகளை அடைத்து கால்பந்து போலச் செய்து தனது பயிற்சியை அவர் தொடங்கினார்.

    ஷூ போட வழியின்றி ஷு இல்லாமல் வெறும் காலோடு ஆங்காங்கே இருந்த விளையாட்டு மைதானங்களில் விளையாடி தனது விளையாட்டை அவர் செம்மைப் படுத்திக் கொண்டே இருந்தார்.

    உலகக் கோப்பை வெற்றி: தனது 15-ம் வயதில் பிரேசிலின் தேசிய விளையாட்டுக் குழுவில் சாண்டாஸ் நகரக் குழுவிற்காக அவர் விளையாட ஆரம்பித்தார்.

    17-ம் வயதிலேயே உலகக் கோப்பையை வென்றார். 1958, 1962, 1970 ஆகிய மூன்று போட்டிகளில் உலகக் கோப்பையை வென்ற அவரது சாதனையைப் பார்த்து உலகமே பிரமித்தது. பிரேசிலுக்காக அவர் 92 விளையாட்டுக்களில் 77 கோல்களைப் போட்டார். பிரேசில் நாட்டின் கதாநாயகனாக ஆனார்.

    இவர் விளையாடிய விளையாட்டுக்களில் ஒரு கோலாவது போட்டு விடுவார். 1956-ல் விளையாடியதற்காக அவருக்குக் கிடைத்த தொகை வெறும் பத்து அமெரிக்க டாலர்களே! தனது வருமானத்தை வைத்துத் தான் குடும்பத்திற்காக கேஸ் ஸ்டவ்வையே முதலில் வாங்க வைத்தார்.

    ஆனால் பெரும் விளையாட்டு வீரராக உலகை அவர் வலம் வந்த போது அவர் அமெரிக்காவில் தனது வருமானத்திற்கான வரியாக மட்டும் 20 லட்சம் டாலர்களைத் தர வேண்டி இருந்தது. சந்தோஷமாக அவ்வளவு பெரும் தொகையை அவர் வரியாகக் கட்டினார்.

    பீலே போட்ட கோல்கள் எத்தனை?

    பீலே கால்பந்து விளையாட்டில் போட்ட மொத்த கோல்கள் எத்தனை என்பது பற்றி வேறுபட்ட கருத்துக்கள் தொடர்ந்து நிலவுகின்றன. கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் அவரது சாதனையை அங்கீகரித்து அவர் போட்ட கோல்கள் 1279 என்று அறிவித்திருக்கிறது. ஆனால் 2015-ல் பீலே தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் போட்ட மொத்த கோல்கள் 1283 என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரேசிலுக்கு அவர் தந்த உலகக் கோப்பை 1958-ல் பீலே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு பிரேசிலை முன் நிறுத்தினார். பின்னர் மூன்று உலகக் கோப்பைகளை வென்றார்.

    இளம் வயதில் உலகக் கோப்பையை வென்றவரும் இவரே தான், மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரரும் இவரே தான்!

    92 முறை ஹாட் ட்ரிக் கோல் அடித்த இவரது சாதனை என்றும் பேசும் பொருளாக ஆகி விட்டது! (ஒரு விளையாட்டில் மூன்று கோல்களைப் போடுவது ஹாட் ட்ரிக் சாதனையாகும்) 31 விளையாட்டுக்களில் இவர் நான்கு கோல்களைப் போட்டு சாதனை நிகழ்த்தியுள்ளார்.

    1958-ல் இவர் நிகழ்த்திய சாதனையைப் பார்த்த மக்கள் இவருக்கு 'ஓ ரெ' என்ற பட்டப்பெயரைச் சூட்டினர். இதற்கான அர்த்தம் "மன்னன்" என்பதாகும்.

    போரை நிறுத்திய பீலே: மின்னல் போல அங்குமிங்கும் களத்தில் அவர் விளையாடு வதையும் பந்து நகர்த்துவதையும் மடக்குவதையும் முன்னேறிச் சென்று அனாயாசமாக கோல் போடுவதையும் பார்க்க ஆயிரக்கணக்கானோர் முதலிலேயே வந்து நின்று விடுவர். அவரது தோற்றம் அனைவரையும் ஈர்த்தது.

    1967-ல் நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. இரண்டு குழுக்களுக்குமிடையே நடந்த அந்த உக்கிரமான போர் பீலே அங்கு விளையாட வருகிறார் என்பது தெரிந்ததுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    தற்காலிகமாக இரு நாட்கள் இப்படி ஒரு போரை தன் விளையாட்டால் நிறுத்திய ஒரே வீரர் அவரே. அவரது பெயர் பொறித்த டி ஷர்ட்டுகளை அணிவது ஒரு கௌரவமாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் முப்பது சட்டைகள் வரை வைத்திருப்பர். இல்லாவிடில் அவர்களால் மைதானத்தை விட்டு வெளியேற முடியாது. அவ்வளவு டிமாண்ட் அந்த சட்டைகளுக்கு!

    விளையாட்டுத் துறை அமைச்சர்: பிரேசில் நாடு வளர்ந்து வரும் உலக கதாநாயகனைப் போற்றியதோடு ஒரு சமயம் பயப்படவும் செய்தது - எங்கேயாவது அவர் இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்று விடுவாரோ என்று!

    1995-ல் அவர் பிரேசிலின் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டார். மூன்று ஆண்டுகால பதவி காலத்தில் பிரேசில் நாட்டில் இருந்த லஞ்சம் உள்ளிட்ட களைகளை எல்லாம் அறவே ஒழித்த அவர் நாட்டின் விளையாட்டுத் துறையையே நவீன மயமாக்கினார்.

    பீலே தினம்: அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் நாள், பீலே தினமாக பிரேசில் கொண்டாடி வருகிறது. 1969-ல், நவம்பர் 19-ம் நாளன்று சாண்டோஸ் நகரில் அவர் தனது ஆயிரமாவது கோலைப் போட்டு சாதனை நிகழ்த்தினார்.

    இந்த கோலைப் போட்டவுடன் ரசிகர்கள் உற்சாகம் மீறி மகிழ்ச்சி பொங்க மைதானத்தில் நுழைந்து விடவே அரை மணி நேரம் விளையாட்டு நிறுத்தப்பட்டது.

    இந்த ஆயிரமாவது கோல் நினைவாக பிரேசில் ஒரு விசேஷ தபால் தலையை வெளியிட்டு இவரை கௌரவித்தது. நூற்றாண்டின் இணையற்ற வீரர்: சென்ற நூற்றாண்டில் இணையற்ற வீரராகத் திகழ்ந்த இவர் "நூற்றாண்டின் வீரர்" என்று கொண்டாடப்படுகிறார்.

    வெண்கலத்தினாலான இவரது சிலை ஒன்று ரியோ டி ஜெனிரோவில் திறந்து வைக்கப்பட்டது. ரொனால்ட் ரீகன், எலிசபத் மகாராணி உள்ளிட்ட ஏராளமானோர் அவரைச் சந்தித்து புகழ்ந்து மகிழ்ந்துள்ளனர். இவரை அனைவரும் ப்ளாக் பெர்ல் - கறுப்பு முத்து என்றே அழைப்பது வழக்கமானது.

    இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு மிக்க நூறு பேர்களைத் தேர்ந்தெடுத்த டைம் பத்திரிகை பீலேயையும் ஒருவராக அறிவித்தது.

     குடும்பம்: பீலே மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஏழு குழந்தைகள் அவருக்கு உண்டு.

    அதிர்ஷ்ட சட்டை எங்கே?

    எல்லோரையும் போல பீலேக்கும் அதிர்ஷ்டம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். நண்பர்களும் கால்பந்து ஆர்வலர்களும் மிகவும் கவலையுற்றனர். பீலே தனக்கு ஏன் இப்படிஒரு சோர்வு ஏற்பட்டது என்று யோசிக்கலானார். விடை அவரது மனதில் பளிச்சென உதயமானது.

    வழக்கமாக அவர் அணியும் சட்டையை ஒரு கால்பந்து ரசிகர் விரும்பிக் கேட்கவே பீலே அவருக்கு அதைக் கொடுத்துவிட்டார். தனது சட்டை போன அன்றிலிருந்து தான் இந்த மனச்சோர்வு தனக்கு வந்தது என்று அவர் எண்ணினார்.

    உடனே ஒரு துப்பறியும் நிபுணரை நியமித்தார். யாருக்கு தான் தனது சட்டையைத் தந்தாரோ அவரைக் கண்டு பிடித்து அதைப் பெற்றுத் தரவேண்டும் என்பதே துப்பறிவாளருக்கு அவர் இட்ட கட்டளை.

    பெரும் தேடலை மேற்கொண்ட துப்பறிவாளரும் ஒரு வழியாக அந்த ரசிகரைக் கண்டுபிடித்து சட்டையைத் திருப்பி வாங்கி வந்து அதை பீலேயிடம் தரவே அவருக்கு அடங்காத மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்றிலிருந்து அவர் பழைய பீலே ஆனார். உற்சாகம் அவருக்குக் கரை புரண்டோடியது.

    சரி, உண்மையில் நடந்தது என்ன? துப்பறிவாளர் பீலேயைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். ஆகவே பீலே விளையாடிய முந்தைய விளையாட்டின் சட்டையையே செட் - அப் செய்து அவரிடம் தந்து விட்டார் - உண்மையைச் சொல்லாமலேயே! எல்லாம் மனதில் தான் இருக்கிறது என்பதையே இந்தச் சம்பவம் சுட்டிக் காட்டுகிறது!

    பீலே அறக்கட்டளை: 1977-ல் அவர் தீவிர விளையாட்டிலிருந்து ஒய்வு பெற்றார். கால்பந்தாட்டத்திற்கான உலக தூதுவராக ஆனார். மிக்க ஏழ்மையில் வாழ்ந்த அவருக்கு வறுமை என்றால் என்ன என்பது நன்கு தெரியும். ஆகவே உலகின் ஆகப் பெரும் செல்வந்தராக அவர் ஆன போது ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அதில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உதவலானார்.

    மரணம்: 2019-ல் சிறுநீரகக் கற்களை அகற்ற ஒரு அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டார். தொடர்ந்து பெருங்குடலில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. கொரானா காலத்தில் அவர் புற்று நோய் முற்றவே 2022, டிசம்பர் மாதம் 29-,ம் நாள் உயிரிழந்தார்.

    சாண்டோஸ் நகரில் பெல்மிரா ஸ்டேடியத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் கூடிய ரசிகர்கள் வரிசையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரேசில் நாடு 3 நாள் துக்கம் அனுஷ்டித்தது.

    சுயசரிதமும் டாகுமெண்டரி படமும்: பீலே திரைப்படங்களில் தோன்றிய காட்சிகளும் உண்டு. இவரைப் பற்றிய டாகுமெண்டரி படமும் எடுக்கப்பட்டது. தனது சுயசரிதத்தையும் பீலே எழுதியுள்ளார். 'மை லைஃப் அண்ட் தி பியூட்டிஃபுல் கேம்' என்பதே அந்த புத்தகத்தின் பெயர். அழகிய விளையாட்டு - பியூட்டிபுல் கேம் - என்பதே இவர் கால்பந்துக்கு சூட்டிய அழகிய பெயராகும். இவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள், மெடல்கள் கணக்கிலடங்கா.

    பயிற்சி, பயிற்சி, பயிற்சி: பீலே தனது வாழ்க்கைச் செய்தியாக அறிவித்திருப்பது ஒரே ஒரு வார்த்தை தான் : அது தான் பயிற்சி! பயிற்சி!

    பயிற்சி!! பயிற்சி!!! இதுவே வெற்றிக்கான வழி என்பது அவரது கொள்கையாகும்.

    அவரது புகழ் பெற்ற பொன்மொழிகளில் சில:

    வெற்றி என்பது ஒரு தற்செயலான விஷயம் அல்ல. கடும் உழைப்பு, விடாமுயற்சி, நன்கு கற்பது, தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக செய்யும் வேலையில் அளவற்ற ஈடுபாடு - இதுவே வெற்றிக்கு வழி! ஒரு தனிப்பட்ட நபர் ஒரு போதும் ஒரு விளையாட்டை அவரால் மட்டுமே வெல்ல முடியாது.

    நான் கால்பந்து விளையாடுவதற்காகவே பிறந்துள்ளேன் - எப்படி பீத்தோவன் இசைக்காகப் பிறந்தாரோ, எப்படி மைக்கெல் ஏஞ்சலோ ஓவியம் படைக்கப் பிறந்தாரோ அது போலத் தான் நான் கால்பந்து விளையாடப் பிறந்துள்ளேன். கால்பந்து பற்றி அவர் கூறியது:

    தலை இதயத்துடன் பேசுகிறது; இதயம் கால்களுடன் பேசுகிறது. கால்பந்து எனக்கு ஒரு மதம் போல! நான் பந்தையே வழிபடுகிறேன். அதையே கடவுளாகக் கருதுகிறேன்.

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • புதினா, கொத்துமல்லியை அரைத்து நீரில் கரைத்துப் பருகலாம்.
    • கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நம் உடலை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பது பற்றித் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்தான் கோடைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. நம் உடலில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

    நம்மைச் சுற்றியுள்ள வெப்பநிலை 40 செல்சியசை தாண்டும்போது, பல்வேறு துயர்களுக்கு நம் உடல் ஆளாக வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளில் மிகவும் முதலானவை வெப்பப் பக்கவாதம் (Heat Stroke), தொற்று நோய்களின் அதிகரிப்பு, உணவு நஞ்சினால் ஏற்படும் வயிற்றுப் போக்கு ஆகியன.

    வெப்பப் பக்கவாதம் என்றால் என்ன?

    வெப்பப் பக்கவாதம் என்பது வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கடுமையான நோய்களில் இதுவும் ஒன்றாகும். நம் உடலின் வெப்பநிலை 104 பாரன்ஹீட்அல்லது 40 செல்சியசை தாண்டும் போது, உடலின் குளிரூட்டும் தன்மை செயலிழந்து போகிறது.

    இதனால் மூளை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, தன்நினைவை இழக்க நேரிடும். இதையே வெப்பப் பக்கவாதம் என்கிறோம். இதற்கும் ரத்தக் குழாய் அடைப்பால் வரும் பக்கவாதத்திற்கும், எந்தத் தொடர்பும் இல்லை. இவை இரண்டுமே பெரும்பாலும் வயதானவர்களையே தாக்கக்கூடியது.

    வெப்பப் பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது?

    *வெயில் காலங்களில் போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது.

    *மதுப்பழக்கம்.

    *இறுக்கமான உடை அணிவது.

    *வெயிலில் அதிகமாக வேலை செய்வது.

    *நன்கு காற்றோட்டம் இல்லாத அடைப்பட்ட இடத்தில் அதிக நேரம் இருப்பது.

    வெப்பப் பக்கவாதம் - அறிகுறிகள் என்ன?

    *உடலின் வெப்பநிலை அதிகமாதல்

    *மயக்கம்

    *மூச்சு விடுவதில் சிரமம்

    *தலைவலி

    *மனச்சோர்வு

    *மனக்குழப்பம்

    *தன்நினைவை இழத்தல்

    *வியர்வைச் சுரப்பிகள் தன் செயல்திறனை இழந்துவிடுவதால், உடலில் இருந்து வியர்வை வெளியேறாமை.

    பொதுவாக வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது வியர்வை சுரந்து உடலில் வெப்பநிலையைச் சீர் செய்திட முயற்சி செய்யும். ஆனால் இந்த வெப்பப் பக்கவாதத்தில் வியர்வை வரவே வராது.

    வெப்பப் பக்கவாதத்தைத் தடுக்க இதைச் செய்யுங்கள்:

    *அதிக வெயில் நேரங்களில், வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    *ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும் (இதய நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மருத்துவரின் கருத்துரைகள் தேவை).

    *காலையில் எழுந்தவுடன் நீர் ஆகாரம் எடுத்துக் கொள்ளலாம், இதனோடு சிறிது வெங்காயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

    *புதினா, கொத்துமல்லியை அரைத்து நீரில் கரைத்துப் பருகலாம்.

    *மோர் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

    *குளிர்ச்சியைக் கொடுக்கும் இளநீர், நுங்கு ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

    *ஒரு நாளைக்கு 2-3 முறை குளிக்கலாம்

    *நிறையப் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம்.

    *வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை அணியலாம்.

    இப்படிச் செய்வதால் வெப்பப் பக்கவாதத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.


    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    உணவு நஞ்சாதல் (Food Poisoning):

    வெப்பக் காலங்களில் உணவு, பால், பழங்கள் ஆகிய அனைத்துமே விரைவாகக் கெட்டுவிடும் தன்மையுடையன. ஆகவே சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளை உண்பதற்கு முன்பு வீணாகிவிட்டதா? என்பதைப் பரிசோதித்து, பின் எடுத்துக்கொள்வது நல்லது. சால்மோனெல்லா, கேம்பைலோபாக்டர் போன்ற பாக்டீரியாக்கள் வெயில் காலங்களில் அதிகமாகப் பரவும் தன்மையுடையவை. சில பாக்டீரியாக்கள் பால், பால் சார்ந்த பொருட்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றில் அதிகமாகப் பல்கிப் பெருகக்கூடியன.

    இதுமட்டுமல்லாமல் மேலும் சில பாக்டீரியாக்கள் சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளைக் கெட்டுவிடச் செய்கிறது.

    தொடக்க நிலையில் சிலருக்கு உணவின் சுவை மாறியுள்ளதைக் கண்டறிய முடிவதில்லை. இப்படிக் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவதால் ஏற்படுவதுதான் உணவு நஞ்சாதல் என்கிறோம்.

    சமைத்த உணவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவதும் உணவு நஞ்சாவதற்கு மற்றுமொரு காரணம் ஆகும்.

    உணவை ஆக்கும் ஒருவரின் கைகள் தூய்மை கெட்டு இருந்தாலும், அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும், அவருக்குள்ள நோயும் உணவின் மூலம் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.

    உணவு நஞ்சாதலின் அறிகுறிகள்:

    கெட்டுப்போன உணவை எடுத்துக் கொண்ட சில மணிநேரங்களிளேயே இதன் அறிகுறிகள் தொடங்கிவிடும். அவையாவன,

    *உடல் சோர்வு, *வயிற்று வலி, *வாந்தி, *வயிற்றுப்போக்கு, *மயக்கம், *வயிற்றுப் பிடிப்பு, *பசியின்மை

    உணவு நஞ்சாவதைத் தடுக்க...

    *சமைத்த 4 மணி நேரத்திற்குள் உணவை உண்டுவிடுவது நல்லது.

    *வெளியிடங்களில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    *குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    *உணவு ஆக்குவதற்கு மற்றும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாகத் தூய்மை செய்ய வேண்டும்.

    *காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நன்கு தண்ணீரில் சுத்தப்படுத்திய பின்பு பயன்படுத்த வேண்டும்.

    *மலம் கழித்த பின்பு கைகளை நன்கு தூய்மை செய்ய வேண்டும்.

    வெயில் காலங்களில் பரவும் தொற்று நோய்கள்:

    அம்மை நோய், தட்டம்மை, சின்னம்மை, விளையாட்டம்மை, காய்ச்சல் (Flu), இருமல், சளிபோன்ற தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றவற்களுக்குப் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

    நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்,

    *அதிகம் வெயிலில் செல்வதைத் தவிர்த்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    *கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    *பெரும்பாலான தொற்றுகள் காற்றின் மூலம் பரவுவதால் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.

    *எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    *வெயில் நேரங்களில் அதிகம் கிடைக்கும் தர்பூசணி, வெள்ளரி மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

    *அடிக்கடி சூடுபடுத்திய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், நலமாக வாழவும், வெப்பப் பக்கவாதம், உணவு நஞ்சாதல் மற்றும் தொற்று நோய்கள் இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேற்கூறிய தற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்.

    அதிகப்படியாக வியர்ப்பதால், நம் உடலில் உள்ள நீர் மற்றும் உப்புகள் வெளியேறி விடுகின்றன. எனவே வயதானவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் வெப்பச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். எனவே இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

    போன்: 75980-01010, 80564-01010.

    • நம் கண்ணுக்கு ஒளியாய் இருந்து நம்மை வழி நடத்திச் சென்று உலக உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால் சூரிய பலம் மிக அவசியம்.
    • ஞாயிற்றுக்கிழமை புதன் ஒரையில் மகா விஷ்ணுவை வழிபட்டால் முத்தாய்பான முன்னேற்றம் வந்து சேரும்.

    நவகிரகங்களில் முதன்மையான கிரகமான சூரியன் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழத் தேவையான ஒளிக்கதிர்களை எந்த விதமான பாகுபாடுமின்றி வழங்குபவர். நம் கண்ணுக்கு ஒளியாய் இருந்து நம்மை வழி நடத்திச் சென்று உலக உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால் சூரிய பலம் மிக அவசியம். இனி பன்னிரு ராசிக்கு சூரிய தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்கு சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. அதாவது ஐந்தாம் அதிபதி. இவர்களுக்கு சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது நல்லது. பூர்வீகத்தில் பிறந்து பூர்வீகத்திலேயே புகழ், அந்தஸ்து, கவுரவத்துடன் வாழ்வார்கள். தலைமை பண்பு மிகுந்தவர்கள். ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும்.குல தெய்வ , பித்ருக்கள் நல்லாசிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். பெற்ற பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு, அரசியல் ஆதாயம், கவுரவப் பதவிகளால் பெருமையடைவார்கள். சூரியனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் குல தெய்வ குற்றம் இருக்கும். பித்ருக் கடன் தீர்க்க முடியாது. அதிர்ஷ்டத்தை தேடி அலைவார்கள். பிள்ளைகளால் நிம்மதி குறையும். புத்திர பாக்கியம் கால தாமதமாகும்.

    பரிகாரம்: ஞாயிற்று கிழமை சூரிய ஒரையில் சிவப்பு வஸ்திரம் சாற்றி சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு சூரியன் சுக ஸ்தான அதிபதி. 4-ம் அதிபதி.இவர்களுக்கு சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவதுடன், சுப கிரக சம்பந்தம் பெறுவது நல்லது.சூரியன் பலம் பெற்றால் நல்ல ஆரோக்கியமான உடல்வாகுடன் இருப்பார்கள். எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள். தாயின் அன்பும், ஆசியும் எப்பொழுதும் உண்டு. முக்கிய பணிகளை தாயின் ஆசிர்வாதம் பெற்றப்பிறகே செய்வார்கள்.

    சுய உழைப்புச் சொத்தும் தாய் வழிச் சொத்தும் மிகுதியாக இருக்கும். அந்தஸ்தான உயர்ரக வாகன யோகம், அரசு வழி ஆதாயம், அரச பதவி உண்டு. விவசாயம், கால்நடை வளர்ப்பு, சொத்துக்கள், ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் பெருகும்.பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது மாணவத் தலை வர்களாக இருப்பார்கள். இளம் வயதில் அரசியல் ஆர்வம் ஏற்படும்.

    சூரியன் பலம் குறைந்தால் ஆரோக்கிய கேடு மிகுதியாக இருக்கும். சொத்துக்களால் மன உளைச்சல் அதிகரிக்கும். தாய், தாய் வழி உறவுகளின் ஆதரவு குறையும். அரசு, அரசியல் ஆதாயம் குறையும்.

    பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட வேண்டும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு சூரியன் சகாய ஸ்தான அதிபதி. 3-ம் அதிபதி. இவர்களுக்கு சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது நல்லது.

    சுய ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் அதீத ஞாபக சக்தி உண்டு. வீரம், தைரியம், தன்னம்பிக்கை நிரம்பியவர்கள். திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம் என்பதால் திட்டமிட்டு காய் நகர்த்துவார்கள் செயல்படு வார்கள். பூர்வீகத்திற்கு மிக அருகில் வசிப்பார்கள். ஆதாயம் இல்லாத செயலில் இறங்க மாட்டார்கள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல் இவர்களின் அனைத்து முயற்சியிலும் சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு இருக்கும்.

    சூரியன் பலம் குறைந்தால் நிலையாக ஒரே இடத்தில் இருக்க முடியாமல் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். முறையான திட்டமிடுதல் இருக்காது. அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். சொத்துக்கள் தொடர்பான முறையான ஆவணங்கள் இருக்காது. இளைய உடன் பிறப்புகளின் ஆதரவு குறையும்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை புதன் ஒரையில் மகா விஷ்ணுவை வழிபட்டால் முத்தாய்பான முன்னேற்றம் வந்து சேரும்.

    கடகம்

    கடக ராசிக்கு சூரியன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி. 2-ம் அதிபதி. சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது கடக ராசிக்கு சுபத்துவமான அமைப்பு .சூரியன் சுப வலுப் பெற்றவர்களுக்கு நிலையான நிரந்தரமான வருமானம் உண்டு.

    பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதிப்பவர்கள். தன் அன்பால், திறமையான பேச்சால் குடும்பத்தை தன் வசப்படுத்துவார்கள். இவர்களின் பேச்சிற்கு எதிர் பேச்சு இருக்காது. குடும்பத்தை திறமையாக நிர்வகிப்பார்கள். கொடுத்த வாக்கை, சத்தியத்தை காப்பாற்றுவார்கள்.

    சூரியனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் குடும்ப உறவுகளுடன் ஒட்ட மாட்டார்கள். நிறைவேற்ற முடியாத வாக்கை கொடுத்து விட்டு வருந்துவார்கள். நிலையான வருமானம் கிடைக்காது. சுய தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹ்ருதயம் படிக்க வேண்டும்.

    சிம்மம்

    சிம்மத்திற்கு சூரியன் ராசி அதிபதி. இவர்கள் ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது ராஜ யோகத்தை தரும். சூரியன் பலம் பெற்றால் ஆன்ம பலத்துடன் தேஜஜான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள் , குடும்பத்தின் தலைமுறையின் முதல் வாரிசாக பிறப்பார்கள். அல்லது இவர்களின் செயல்பாடுகள் குடும்ப மூத்த உறுப்பினர்களைப் போல் தோரணையாக இருக்கும்.

    தலைமைப்பண்பு சிறந்த நிர்வாகத் திறமை புகழ், அந்தஸ்து, கவுரவம் நிறைந்தவர்கள். சுய முயற்சியால் வாழ்வில் உன்னத நிலையை அடைவார்கள். அரசியல் ஆர்வம், அரசியல் பதவி, கவுர பதவிகள் உண்டு. கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி உயர்ந்த நிலையை அடைவார்கள்.

    சூரியன் பலம் குறைந்தால் ஜாதகர் நிலையற்ற தன்மையுடையவராக இருப்பார். சுய முடிவு எடுக்கத் தெரியாது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தத் தெரியாது.ஆன்ம பலம் குறையும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உள்ளவர்.

    பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை சூரிய ஓரையில் ஏழு குதிரையுடன் அமர்ந்த சூரிய பகவானை வழிபடவும்.


    கன்னி

    கன்னி ராசிக்கு சூரியன் விரய அதிபதி என்பதால் சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது சிறப்பல்ல. மத்திம பலத்துடன் இருக்க வேண்டும். சூரியனுக்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் சுப விரயம், மன நிறைவான வெளிநாட்டு வாழ்க்கை, சேவை மனப்பான்மை நிறைந்தவர்களாக இருப்பார்கள். சூரியனுக்கு லக்ன ரீதியான அசுப கிரக சம்பந்தம் இருந்தால் வீண் விரயம், சம்பாதித்த காசு தங்காத நிலை, அதீத மருத்துவச் செலவு அல்லது விரும்பத்தகாத வெளிநாட்டு வாழ்க்கை அல்லது தலைமறைவு வாழ்க்கை அல்லது சிறை தண்டனை அல்லது அடிமை வாழ்க்கையை அனுபவிக்க நேரும். வெகு சிலருக்கு உடல் உறுப்புகளை இழக்கவும் நேரும். கண் பாதிப்பு. மன சஞ்சலம் அதிகரிக்கும். உஷண நோய் தாக்கம் இருக்கும். தூக்கம் குறைவுபடும். நல்ல இல்லற வாழ்க்கை அமையாது.

    பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை சிவனடியார்களுக்கு தேவையறிந்து உதவ வேண்டும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு சூரியன் லாப அதிபதி, பாதகாதிபதி. லாப அதிபதி வலுத்தால் பாதகமும் மிகுதியாகும். துலாம் ராசிக்கு சூரியன் அசுப கிரக சம்பந்தம் பெற்றால் பாதகம் குறைந்து சாதகம் மிகுதியாகும். மிகச் சுருக்கமாக உயிர் காரகத்துவத்தால் நன்மை அடைந்தால் பொருள் காரகத்துவத்தால் பாதிப்பு இருக்கும். பொருள் இழப்பு இருந்தால் உயிர் காரகத்துவத்தால் நன்மை கிடைக்காது.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை பஞ்சாமிர்தத்தால் அபிசேகம் செய்து சிவனை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்கு சூரியன் தொழில் ஸ்தான அதிபதி. சுய ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்று சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது உயர்வான கவுரவமான தொழில் யோகத்தை தரும். சூரியன் பலம் பெற்றால் அரசு உத்தியோகம், அரசியல் ஆதாயம் உண்டு. தொழில் மூலம் மிக உயர்ந்த உன்னத நிலையை அடைவார்கள். புகழ், அதிகாரம், கவுரவப் பதவிகள் தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசின் டெண்டர், காண்டிரக்ட் போன்றவற்றில் அதிக லாபம் உண்டு. கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான்.

    சூரியன் பலம் குறைந்தால் உதவி, முன்னேறு வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்போது அதனை சரியாக பயன்படுத்த தெரியாது அல்லது பயன்படுத்த முடியாது. நிலையான ஒரு தொழில் செய்ய மாட்டார்கள். பல தொழில் செய்து பண விரயத்தையும், நஷ்டத்தையும் சந்திப்பவர்கள். கர்மம் செய்ய வாரிசுகள் இருக்க மாட்டார்கள்.

    பரிகாரம்: ஞாயிற்று கிழமை சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபட வேண்டும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு சூரியன் பாக்கிய அதிபதி. இவர்கள் ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது உயர்வான உன்னதமான பாக்கிய பலனைத் தரும்.சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த பண்ணை யாளர்களாக இருப்பார்கள். தாய்வழி, தந்தை வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும், தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.தாய், தந்தை வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு. தந்தை தந்தை வழி முன்னோர்களின் நல்லாசிகள் தொடர்ந்து கிடைக்கும். குலத் தொழிலில் வெற்றி உண்டாகும். வெளிநாட்டு வாழ்க்கை, வெளிநாட்டு வியாபாரத்தில் விருப்பம் இருக்கும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்வதில் ஆர்வம் மிகுந்தவர்.

    சுய ஜாதகத்தில் சூரியன் பலம் குறைந்தால் பித்ருக் கடன் செலுத்த முடியாது. குடும்பத்தில் துர்மரண பாதிப்பு இருக்கும். தந்தைக்கு முன்னேற்றம் குறையும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு குறையும்.

    பரிகாரம்: சூரியன் பலம் குறைந்தவர்கள் அமாவாசை நாட்களில் முறையான முன்னோர் வழிபாடு செய்து வர முத்தாய்ப்பான முன்னேற்றம் தேடி வரும்.

    மகரம்

    மகர ராசிக்கு சூரியன் அஷ்டமாதிபதி என்பதால் சுப வலுப்பெற்றால் விபரீத ராஜ யோகத்தை அனுபவிப்பார்கள். வெளிநாட்டு வாழ்க்கையை, விரும்புவார்கள். அசுப வலுப்பெற்றால் விபத்து கண்டம், அறுவை சிகிச்சை, அவமானம் போன்ற பாதிப்பு இருக்கும். இவர்கள் யாரிடமும் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. இவர்கள் கடன் வாங்கினால் கடனை திருப்பி செலுத்துவது கடினம். ஜாமீன் போடக்கூடாது.

    பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை இளநீர் அபிசேகம் செய்து சிவனை வழிபட வேண்டும்.


    கும்பம்

    கும்ப ராசிக்கு சூரியன் ஏழாம் அதிபதி. மாரகாதிபதி. சூரிய தசை காலத்தில் பாதிப்பு அதிகமாகும். சூரிய புத்தி காலங்களில் குறைவான பாதிப்பு உண்டு. அதே நேரத்தில் சூரியன் மிக பலவீனமாக இருந்தால், அசுப கிரக சம்பந்தம் பெற்றால் திருமணம் தடைபடும். திருமண வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் அசவுகரியம் உண்டாகும்.

    பரிகாரம்: கும்ப ராசியினர் வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபட சூரிய தோஷம் விலகும்.

    மீனம்

    மீன ராசிக்கு சூரியன் ஆறாம் அதிபதி. ஆறாம் அதிபதி வலுத்தால் கடன், நோய், எதிரி தொல்லை இருக்கும். ஆறாம் அதிபதி வலுக் குறைந்தால் தேவைக்கு கடன் கிடைக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எதிரிகளை வெல்லும் தைரியம் இருக்காது. சூரியன் 8,12ல் நின்றால் ஒரளவு சுப பலன் உண்டாகும். ஒரு மறைவுஸ்தான அதிபதி இன்னொரு மறைவு ஸ்தானத்தில் அமர்வதால் விபரீத ராஜ யோகம் ஏற்படும். எனினும் மீன லக்னத்திற்கு சூரிய தசை வராத வரை பெரிய பாதிப்பு இருக்காது.

    பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை விபூதி அபிசேகம் செய்து சிவனை வழிபடவும். பொதுவாக ஒளி கிரகமான சூரியன் மறைவு ஸ்தானத்தில் நிற்பதும் அசுப கிரக சம்பந்தம் பெறுவதும் சிறப்பல்ல. பாதிப்பு உள்ளவர்கள் உரிய வழிபாட்டு முறையை கடை பிடிப்பது நல்லது.

    • பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் அவரது ஆத்மாவின் பயணங்கள் இருக்கும்.
    • கர்ம தோஷம் அடுத்தடுத்த பிறவியிலும் கடல் அலைபோல வந்து கொண்டே இருக்கும்.

    ஒருவர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் அவரது ஆத்மாவின் அடுத்தடுத்த பயணங்கள் இருக்கும். ஒருவர் அதிக புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவிகளில் அவரது பிறப்பு மிகவும் சிறப்புகள் கொண்டதாக இருக்கும். அதேசமயத்தில் ஒருவர் அதிக பாவங்கள் செய்தால் அது அவரது அடுத்த பிறவிகளிலும் தொடரும்.

    ஒருவர் செய்யும் மிகவும் கொடூரமான பாவ செயல்களுக்கு நிவாரணம் தேடிக் கொள்ளாவிட்டால் அது கர்ம தோஷமாக மாறி விடும்.

    அந்த கர்ம தோஷம் அடுத்தடுத்த பிறவிகளிலும் கடல் அலைபோல வந்து கொண்டே இருக்கும். நிறைய பேர், வாழ்க்கையில் கஷ்டப்படும் போது அவர்களுக்கு தங்களது கர்ம தோஷத்தின் பாதிப்புகள் பின்தொடர்கின்றன என்பது தெரியாமலேயே இருக்கும்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருவர் முன் ஜென்மத்தில் தேவையில்லாத பாவங்கள், சாபங்களை சம்பாதித்து இருந்தால் அவை அடுத்த பிறவிகளில் நிச்சயம பாடாய்ப்படுத்தி விடும். குறிப்பாக 12 வகை சாபங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் தோஷங்களாக மாறி தொடரும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சப்த சாபம், பித்ரு சாபம், பசு சாபம், பூமி சாபம், நதி சாபம், விருட்சம் சாபம், குலதெய்வ சாபம், ரிஷி சாபம், தேவ சாபம் ஆகிய 12 சாபங்களும் அடுத்த பிறவிகளில் தோஷமாக மாறும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    பொதுவாக பாவங்கள் செய்யக்கூடாது. மற்றவர்களிடம் சாபங்கள் வாங்கக் கூடாது என்பார்கள். சாபங்கள் வாங்கியிருந்தால் அது கர்ம தோஷமாக மாறுவதை தடுக்கவே இயலாது. அதனால்தான் நன்கு பக்குவம் அடைந்தவர்கள் ஏதாவது துன்பம் நேரிடும்போது, `அனைத்துக்கும் காரணம் நம் கர்மா' என்று சொல்வதை கேட்டு இருப்பீர்கள்.

     முக்கிய விஷயங்களில் ஒருவருக்கு தொடர்ந்து தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் அதை கர்ம தோஷம் என்று மிக உறுதியாக சொல்லிவிட முடியும்.

    சில கர்ம தோஷங்களை ஒருவரது பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்துதான் கண்டறிய முடியும். அந்த வகையில் ஒருவர் முன்ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார் என்பதை அவரது ஜாதகம் துல்லியமாக காட்டிக்கொடுத்து விடும்.

    அந்த கர்ம தோஷங்களை உங்கள் ஜாதகத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் முன் ஜென்மத்தில் ஏதாவது பாவங்கள் செய்து கர்மாவை சேர்த்து வைத்திருந்தால் அது இந்த ஜென்மத்தில் 5-ம் இடத்தில் வந்து நமக்கு நடத்தி காட்டி கொடுத்து விடும். எனவேதான் 5-ம் இடத்தை பாவ பூர்வ புண்ணிய இடம் என்று சொல்கிறார்கள்.

    5-ம் இடத்தை வைத்து ஒருவரது ஜாதகத்தின் முன் ஜென்ம நிலையை கண்டுபிடித்து விடமுடியும். சூரியன், சந்திரனுடன் ராகு-கேது இருந்தால் அதை முன்ஜென்ம பித்ரு தோஷம் என்று சொல்வார்கள். அதுபோல 9-ம் இடத்தை வைத்தும் கர்ம தோஷங்களை ஜோதிடர்கள் கணிப்பது உண்டு.

    ஒருவருக்கு மிக மிக கடுமையான தோஷங்கள் இருந்தால் அவரது 5-ம் வீடு, 5-ம் அதிபதி, 9-ம் வீடு, 9-ம் அதிபதி ஆகியவற்றை சரியானபடி ஆய்வு செய்தால் அவரது கர்ம தோஷங்களை கண்டுபிடித்து விட முடியும்.

    கர்ம தோஷங்களை அடுத்தடுத்த பிறவிகளுக்கு கொண்டு செல்வது சனி கிரகம்தான். மற்ற கிரகங்களுக்கும் இதில் பங்களிப்பு உண்டு.

    என்ன கர்ம தோஷம் ஏற்பட்டு இருக்கிறது? அதன் பாதிப்பு எப்படி இருக்கிறது? என்ன பரிகாரம் செய்தால் அந்த கர்ம தோஷங்களில் இருந்து விடு படலாம் என்பதை தெரிந்து கொண்டால்தான் முன் ஜென்ம தோஷங்களுக்கு பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்.

     முன் ஜென்ம பாவங்கள் கர்ம தோஷமாக மாறி ஆட்டிப் படைப்பதாக நினைத்தால் நிச்சயமாக வழிபாடுகளை அதிகரிக்க வேண்டும்.

    ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு ஒருமனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பின்னர் வீட்டுக்கு வந்து குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வம் படத்தின் முன்பு அரசமர இலைகளை மூன்று மூன்றாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் சிறிது உப்பு வைத்து உதிரி பூக்களையும் சுற்றி போட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

    அந்த 9 இலைகள் மீதும் 9 அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி மனதார குல தெய்வத்தை அழைத்து வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டை ஒரு தடவை செய்தால் மட்டும் போதாது. 9 அமாவாசை நாட்களில் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த வழிபாடு மூலம் நம்மை பிடித்து இருக்கும் முன் ஜென்ம கர்ம தோஷ வினைகளில் இருந்து விடுபட முடியும்.

    ஆலயங்களுக்கு வழிபாடு செய்ய செல்லும்போது கர்ம தோஷங்களுக்காக நீங்கள் என்ன பரிகார பூஜைகள் செய்தாலும் சண்டிகேஸ்வரரை மறக்காமல் வணங்க வேண்டும். சண்டிகேஸ்வரரை வணங்காமல் கர்ம தோஷ பரிகார பூஜைகள் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்காது.

    ஏனெனில் முன் ஜென்ம பாவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட கர்ம தோஷத்தை விரட்டியடிக்கும் ஆற்றல் கொண்டவராக சண்டிகேஸ்வரர் கருதப்படுகிறார்.

    கர்ம தோஷத்துக்காக சண்டிகேஸ்வரரை வழிபடும் போது அவருக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுவது மிகவும் நல்லது. அன்றைய தினம் அவரை வேண்டிக் கொண்டு அன்னதானம் செய்யலாம். இந்த பூஜை முன் ஜென்ம கர்ம தோஷங்களை உடனடியாக நீங்க செய்யும் ஆற்றல் கொண்டது.

     தமிழகத்தில் முன் ஜென்ம கர்ம தோஷங்களை போக்கும் ஆற்றல் கொண்டதாக 6 ஆலயங்கள் கருதப்படுகின்றன. அந்த 6 ஆலயங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    1. திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவில்-கடன், சத்ரு, நோய் போன்றவற்றைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது இந்த ஆலயம்.

    2. கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம். இது மாந்தி பகவான் பரிகாரத்தலம் ஆகும்.

    3. திருப்பாம்புரம் சேஷ புரீஸ்வரர் கோவில்- ராகு-கேது பரிகாரத் தலம்.

    4. வைத்தீஸ்வரன் கோவில்- இது செவ்வாய் பரிகார தலமாகும்.

    5. திருத்தேவன்குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவில். இது அனைத்து முன் ஜென்ம பாவங்களை யும் போக்கும் ஆலய மாகும்.

    6. திருவிடைமருதூர் மகாலிங்கம் கோவில். இது பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் ஆலயமாகும்.

    இவை அனைத்துக்கும் மேலாக குல தெய்வ ஆலயத்துக்கு சென்று நைவேத்தியங்கள் படைத்து பூஜைகள் செய்தால் கர்ம வினைகள் பாதிப்பை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும். எனவே குல தெய்வ வழிபாட்டை மறக்காதீர்கள்.

    சிலருக்கு தங்களது ஜாதக அடிப்படையில் சில குறிப்பிட்ட ஆலயங்களில் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தால் பலன் கிடைக்கும் நிலை இருக்கும். அதை தெரிந்து கொண்டு செய்தால் பூர்வஜென்ம பாவங்கள் கர்மாவாகி மாறியிருப்பதை கட்டுப்படுத்தலாம் அல்லது பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம்.

    • அஸ்வமேதம் தான் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் நடித்த படம்.
    • கிளைமாக்ஸ் காட்சி ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் நடந்தது.

    அஸ்வமேதம் இதுதான் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் நடித்த படம். மிகப்பெரிய நடிகர். எனவே எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

    படத்தில் பாலகிருஷ்ணா மருத்துவர் வேடம் எனக்கு. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் நடந்தது. அதுவரை பாலைவனம் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது எப்படி இருக்கும் என்று நேரில் பார்த்தது கிடையாது.

    எனவே முதல் முறையாக பாலைவனத்தை பார்க்கப் போகிறோம் என்று ஆசையும் இருந்தது. அதேநேரம் இன்னொரு மலையாள படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த படத்தின் காட்சிகள் கேரளாவில் மிகவும் உள்புற பகுதி களில் நடந்து கொண்டிருந்தது.

    படப்பிடிப்பு முடிந்து மறுநாள் நான் ஜெய்ப்பூர் செல்ல வேண்டும். ஜெய்ப்பூர் செல்வதும் எளிதல்ல. கொச்சியில் இருந்து விமானத்தை பிடித்து ஜெய்சல்மீர் செல்ல வேண்டும். அங்கிருந்து காரில் ஜெய்ப்பூர் பயணிக்க வேண்டும்.

    இந்த காலத்தை போல் அப்போதெல்லாம் தகவல் தொடர்பு சாதனங்கள் கிடையாது. ஒருவருக்கொருவர் தகவல்கள் பரிமாறி கொள்வது கஷ்டம்.

    இந்த நாளில் இந்த இடத்துக்கு வருவேன் என்றால் அந்த இடத்துக்கு சென்று விட வேண்டும். மற்ற வர்களும் அதேபோல் அந்த இடத்துக்கு வந்து விட வேண்டும் என்பதுதான் ஏற்பாடு.

    அதேபோல்தான் படக்கு ழுவினர் அனைவரும் ஜெய்ப்பூர் சென்று சேர்ந்து விட்டார்கள். எல்லோரும் எனது வரு கைக்காக காத்திருந்தார்கள்.

    நேரம் செல்ல செல்ல அவர்களுக்கும் சந்தேகம். மீனா வருவாளா... மாட்டாளா... என்று ஒருவருக்கொருவர் பேசி இருக்கிறார்கள்.

    இன்று வருவதாகத்தானே சொல்லி இருந்தார். ஏன் வரவில்லை என்று குழப்பத்தி லேயே இருந்திருக்கிறார்கள்.

    ஒரு நாள் போகாமல் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.

    இதெல்லாம் என்க்கும் தெரியும். எனவே அடித்து பிடித்து கேரளாவில் இருந்து ஜோத்பூர் சென்று அங்கிருந்து ஜெய்சல்மீர் போய் சேர்ந்து விட்டோம்.

    ஆனால் நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்... இந்த இடத்துக்கு வந்து விட்டோம்... என்று இந்த காலத்தை போல் 'ரன்னிங் கமென்ட்ரி' எல்லாம் கொடுக்க முடியாது.

    ஒரு வழியாக ஜெய்சல்மீரில் இருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணியளவில் ஜெய்ப்பூர் போய் சேர்ந்தோம்.

     ஓட்டலில் எங்களை எதிர்பார்த்து காத்திருந்த படக்குழுவினருக்கு என்னை பார்த்த பிறகுதான் நிம்மதி.

    வந்திட்டீங்களா மேடம். வாங்க... வாங்க... என்று உற்சாகமாக வரவேற்று அழைத்து சென்றார்கள். அதன் பிறகுதான் எல்லோரும் இரவு சாப்பாடே சாப்பிட்டோம்.

    மறுநாள் அதிகாலையிலேயே படப்பிடிப்புக்கு தயாரானோம். காரில் படப்பிடிப்பு நடக்கப்போகும் இடத்தை சென்றடைந்தோம்.

    நாங்கள் சென்ற நேரம் பகல் 12.30 மணி போன இடம் பாலைவனம் ஆயிற்றே? மரங்களை எங்கே காண்பது? நிழலை எங்கு தேடுவது?

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பொன்னிற போர்வை விரித்தது போல் மணல் மட்டுமே பரந்து விரிந்து கிடந்தது. ஆங்காங்கே ஒட்டகங்களில் ஒரு சிலர் பயணித்து கொண்டிருந்தார்கள்.

    காரைவிட்டு இறங்கியதும் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அனலை அள்ளி கொட்டுவது போல் காற்று வீசியது. பாலைவனம் எப்படி இருக்கும் என்று தெரியாததால் புடவை, உயரமான ஹீல்ஸ் வைத்த செருப்பும் வாங்கி சென்றிருந்தேன்.

    காட்சியை பற்றி விளக்கும் போது முதல் முறையாக ஸ்லோமோஷனில் ஹை ஸ்பீடில் படமாக்க இருந்தார்கள். அந்த மாதிரி காட்சியில் நடிப்பது வழக்கமாக நடிப்பதை விட டபுள் ஸ்பீடில் நடிக்க வேண்டும்.

     எனவே சேலை கட்டிக் கொண்டு உயரமான ஹீல்ஸ் போட்டு நடிப்பது ஆபத்து. வழுக்கி விழ நேரிடலாம் என்று சாதாரண சப்பல் அணிந்து கொண்டேன்.

    பாலைவன மணலில் இறங்கி நடந்தோம். சற்று தூரத்தில் ஒரு சிறிய கொட்டகை மட்டும் போட்டு இருந்தார். அந்த கொட்டகைக்குள் தான் சாப்பிடுவது, ஓய்வு எடுப்பது எல்லாம்.

    நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். உண்மையான வெயில் அனுபவத்தை பாலைவனத்தில் பெற முடியும். இப்படியும் ஒரு பிரதேசம் இருக்கத்தானே செய்கிறது என்று எனக்குள் நானே நினைத்துக் கொண்டேன்.

    நம்ம ஊரில் கோடை காலம் தொடங்கியதும் 100 டிகிரி வெயில் அடித்தாலே வெளியே நடமாட முடிவதில்லை. எப்போது முடியும் இந்த வாட்டி வதைக்கும் வெயில் என்று தவிப்போம்.

    ஆனால் பாலைவனம் எல்லா காலமும் இப்படித்தான் இருக்கு மாம் சிறிது தூரம் வெயிலில் நடந்தாலே எங்காவது சற்று நேரம் ஒதுங்கி நிற்க நிழல் இருக்காதா என்று தேடி ஓடுவோம்.

    எப்படியும் சற்று தூரத்தில் நிழல் கிடைக்கும். ஆனால் பாலைவனத்தில் எங்கும் ஓடி தேடினாலும் நிழலை பார்ப்பது அரிது தாகம் வந்தால் தண்ணீர் கிடைக்காது. இப்படியும் ஒரு பிரதேசம்... இங்கும் உயிர்கள் வாழ்கிறது கண்முன்னால் ஒட்டகம் செல்கிறது. இவை தண்ணீருக்கு என்ன செய்யும்? எப்படித்தான் இந்த வெயிலை தாங்குகின்றதோ என்றெல்லாம் என் மனதுக்குள் ஓடியது.

    உறைய வைக்கும் பனி பிரதேசத்தில் பனிக்கரடிகள் வாழவில்லையா அதேபோலத்தான் இந்த வெயிலையும் தாக்குப் பிடிக்கும் வகையில் இந்தப் பிரதேசத்தில் உயிர்கள் வாழ்கின்றன இறைவன் படைப்பில் எத்தனை அதிசயங்கள்...? நினைத்தாலே ரொம்ப ஆச்சரியமாக இருக்கி றதல்லவா?

    வாழ்க்கையில் நாம் சாதிக்கும் எத்தனையோ சம்பவங்கள் நமக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஷூட்டிங் நடந்த இடம் ரொம்ப தூரத்தில் இருந்தது. அதுவரை பாலைவன மணலில் நடந்தே செல்ல வேண்டும்.

    அந்த மணலில் நடந்து செல்ல ஏது வான செருப்பு அணியாததால் நடக்கும் போது கால் மணலில் புதைந்ததால் நெருப்பில் கால் வைத்தது போல் இருந்தது. சூடு தாங்க முடியவில்லை. கால்களில் கொப்புளமே வந்துவிட்டது.

    தொடர்ந்து இந்த மாதிரி சாதாரண சப்பல் போட்டு நடிக்க முடியாது என்பதை உணர்ந்து இரவோடு இரவாக சென்று ஷூ வாங்கி போட்டேன்.

    ஷூ போட்டு நடக்கும் போதும் கால் மணலில் புதையும் போது மணல் சிறிதளவு உள்ளே சென்று விடும். இருந்தாலும் பரவாயில்லை.

    அந்த படத்தில் இடம் பெற்றுள்ள `ஓ பிரேமா...' என்ற பாடல் பாலைவனத்தில் பட மாக்கப்பட்டது. எப்படியோ அந்த படக்காட்சி முடிந்து விட்டது.

    அந்த படத்தில் இடம் பெற்ற 'கும்தலகிடி கும்மா குமதம்...' என்ற மற்றொரு டூயட் பாடல் சூப்பர் ஹிட்டானது. அந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது ரொம்ப சுவாரஸ்யமானது.

    எதிர்பாராத காரணங்களால் டைரக்டருக்கு வர முடியாமல் போனது. மறுநாள் ஷூட்டிங்குக்கு எனக்கு என்ன காஸ்ட்யூம் சொல்லி இருக்கிறார் என்று கேட்டேன். எதுவும் சொல்லவில்லை என்றார்கள். அப்போ நான் எப்படி நடிப்பது?

    வேறு வழியில்லை. காட்சிக்கு ஏற்ற காஸ்ட்யூமை நானே முடிவு செய்தேன். இந்த கலர் சேலை, இந்த கலர் ஜாக்கெட், அது இந்த மாடலில் இருக்க வேண்டும். பாவாடை இந்த கலரில் வேண்டும் என்று போன் மூலம் ஐதராபாத்தில் இருந்த டிசைனரிடம் கூறுவேன்.

     இந்த காலத்தில் என்றால் வாட்ஸ் ஆப்பில் தெளிவாக டைப் செய்தும், மாடல்களை அனுப்பியும் சொல்ல முடியும். அது டிசைனருக்கும் புரியும்.

    நான் போனில் சொன்னது அவருக்கு எந்த மாதிரி புரிந்தது என்று தெரியாது. அவர் இரவோடு இரவாக தயார் செய்து விமானத்தில் அனுப்புவார். காலை 6 மணிக்கு முதல் விமானம் வரும்.

    ஒருவர் விமான நிலையத்துக்கு சென்று அதை வாங்கி வருவார். இப்படியே நான்கைந்து நாட்கள் விமானத்திலேயே வரவழைத்து சமாளித்தேன். 8 காஸ்ட்யூம்களில் ஆடினேன். 'கும்தலகிடி கும குமதா...' பாடலும் சூப்பராக அமைந்தது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த பாடல் மனசுக்கு பிடித்த பாடல். இப்போதும் விரும்பி கேட்பதுண்டு.

    இன்னொரு சுவாரஸ்யமான தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    • தனிமை ஒரு சுதந்திர உணர்வினைக் கொடுக்கும்.
    • நோய் பாதிப்பினை சமாளித்து மீள வேண்டும்.

    வெயிலுக்கு ஜூஸ் போல குடிச்சாதான் நிம்மதியா இருக்கு என எல்லோருமே சொல்கிறோம். ஆனால் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

    இப்போது கூறப்படும் இந்த ஜூஸ் வெயில் காலத்திற்கு மட்டுமல்ல, மற்ற நாட்களிலும் குடிக்கலாம். சர்க்கரை நோய் கட்டுப்படும். கல்லீரல் நன்றாக செயல்படும். கொழுப்பு-கெட்ட கொழுப்பு குறையும். மற்றும் பல ஊட்ட சத்துகள் நிறைந்தது. பல், எலும்பு ஆகியவை உறுதிப்படும். அந்த ஜூஸ் தான் கொத்தமல்லி தழை ஜூஸ்.

    * சர்க்கரை அளவினை ரத்தத்தில் கட்டுப்படுத்தும்.

    * நரம்புகளுக்கு வலுவேற்றும்.

    * சிறுநீரக பாதை பாதிப்புகளை நீக்கும்.

    * உடலில் நச்சுகளை நீக்கும்

    * குடல் புண்ணை ஆற்றும்

    * வயிற்று உபாதைகளை நீக்கும்

    * கல்லீரலை பாதுகாக்கும்.

    * சரும பாதுகாப்பு தரும்

    * கண்களுக்கு நல்லது.

    செய்வது மிக சுலபம்

    ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஜூஸ் செய்வது போல் மிக்சியில் சுற்றி வடித்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நீர் சேர்த்தும் கொள்ளலாம்.

    நாள் முழுவதும் அவ்வப்போது சிறிது இதனை குடித்தால் உடல் ஏசியில் இருப்பது போல் இருக்கும்.

    இதனை நீர் மோரிலும் சிறிது கலந்து அருந்தலாம். இதனைப் போல் 4 அல்லது 5 இலை புதினா, சிறிய இஞ்சி துண்டு ஒரு நெல்லிக்காய் மற்றும் நீர் தேவையான அளவு சேர்த்து ஜூஸ் செய்து வடிகட்டி அருந்தலாம்.

    இதனை ஒருமுறை அருந்தினாலே போதும் அரிதாக சிலருக்கு புதினா அலர்ஜி இருக்கும். மற்றபடி தினமும் இந்த இலை 4 அல்லது 5 என்ற அளவில் சேர்க்கும் போது குடல் பிரச்சினைகள் தீரும்.

    எலுமிச்சை சாறினை ஒரு லிட்டர் நீரில் கலந்து அவ்வப்போது குடிக்கலாம். இவை அனைத்துமே குறைந்த செலவில் நிறைந்த பலன் தருபவை.

    இருதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் குறிப்பாக இந்த கொளுத்தும் வெயில் நேரத்தில் சில அறிகுறிகளுக்கு அதிக கவனம் தர வேண்டும்.

    * மூச்சு விடுவதில் சிரமம் * அதிக சோர்வு

    * கால், வயிற்றில் வீக்கம் * படபடப்பு

    * விடாத இருமல் * இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் * வயிற்று பிரட்டல் * வாந்தி * நெஞ்சில் அழுத்தம் இவைகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.

    மன உளைச்சல் ரொம்ப அதிகமாக இருக்கா? கீழே கூறப்படுபவை சற்று வித்தியாசமாகக் கூட இருக்கலாம். ஆனால் பலன் தருபவை. முயன்று பார்க்கலாமே.

    முடிந்த வரை தனியாக இருங்கள் என்று சொன்னால் பலருக்கு மன உளைச்சல் கூடி விடும். காரணம் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் சூழ்நிலையிலேயே இருந்து பழகியவர்கள்.

    * ஆகவே தினமும் 1 அல்லது 2 மணி நேரம் வரை தனியே இருந்து பழுகுங்கள்.

    * தனியாக அமர்க்களம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல் இருப்பது ஒரு தவம்.

    * சுற்றியுள்ள அனைவரும் நல்லவர் என்பது மிகக் குறைவு. இவர்களின் எண்ணங்களோடு உடன் இருப்பதனை காட்டிலும் தனியே இருப்பது நல்லது.

    * தனிமை ஒரு சுதந்திர உணர்வினைக் கொடுக்கும். மன உளைச்சலைக் குறைக்கும்.

    உங்களது வாழ்க்கையினை பிறருடன் ஒப்பிக்கும் குணம் நீங்கும்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    * பிறரது தேவையற்ற பேச்சுகளுக்கு கவனம் செலுத்துவது நீங்கும். இதுவே மன உளைச்சலை அதிக அளவில் குறைக்கும்.

    * குறைவாக பேசும் போது பிறரால் நீங்கள் அதிகம் மதிக்கப்படுவீர்கள்.

    * உடல் ஆரோக்கியம் நன்கு கூடும்.

    இந்த தனிமையில் மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி, தியானம் இவற்றினை செய்யலாமே.

    குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு. கொளுத்தும் வெயிலில் எங்கும் செல்ல முடியவில்லை. அவர்கள் நேரத்தினை பயனுள்ளதாக மாற்றுவது எப்படி?

    ஒருநாள் ஒரே ஒரு நாள் அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்ய விடுங்கள். டி.வி. ஓடிக் கொண்டே இருக்கட்டும், பாட்டு அலறட்டும். போனில் குடைந்து கொண்டே இருக்கட்டும், கன்னா, பின்னா என சாப்பிடட்டும். விட்டு விடுங்கள். கோபம் கொள்ள வேண்டாம். மறுநாள் அநேகமாக பலரிடம் நிறைய மாறுதல்கள் தெரியும். "படி...படி"... என அடைத்து, அடக்கி ஒரு வருடம் முழுவதும் மூச்சு திணற வைத்த அவர்களுக்கும் சற்று சுதந்திரம் தேவை.

    அவர்களது பலம், பலவீனம் இதனை அவர்களே சுய ஆய்வு செய்து குறைந்தது பலம்-15, பலவீனம் 15 என ஒரு பேப்பரில் எழுத வேண்டும். நீங்களும் கூட செய்யலாம். பலருக்கு பலம் 4 கூட தாண்டாது. பலவீனம் கூடுதலாக இருக்கும். இந்த முயற்சி அவர்களை வெகுவாய் நல்வழிக்கு திருப்பும்.

    ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளேயே நடக்கச் செய்யுங்கள். கைகளை தூக்கி கால் விரல் நுனிகளை பூமியில் பதித்து குதிகால் உயர்த்தி நடக்கச் செய்யுங்கள். உடல் கம்பீரமாய் மாறும். இதனை ஓரிரு முறை செய்யலாம். மற்றபடி சாதா நடை, கைவீசி நடை, பின்னோக்கி நடை, நேர் கோட்டின் மேல் நடை என பல விதமாய் செய்ய வையுங்கள்.

    பிள்ளைகளை வைத்துக்கொண்டு பறவைகளுக்கு சாப்பாடு கொடுங்கள். ஒருவருக்கேனும் அன்றாடம் சிறு தர்மம் செய்ய வையுங்கள். அக்கம் பக்கத்தினரை அறிமுகம் செய்து வையுங்கள்.

    இச்செயல்கள் அவர்களுக்கு ஒன்றினை நன்கு புரிய வைக்கும். நம் வாழ்க்கையினை நாம்தான் முயன்று நல்ல வழியில் உருவாக்கி கொள்ள வேண்டும் என நன்கு புரிந்து விடும்.

    உங்கள் பிள்ளைகளுக்கு ஆணோ, பெண்ணோ தன்னை பாதுகாத்துக் கொள்ளுதல் பற்றி சிலவற்றினை சொல்லித் தரலாமே!

    * முக்கியமான உறவுகளின் போன் நம்பர்கள், தெரியாத நபர்களுடன் செல்லக் கூடாது என அவர்களின் வயதுக்கேற்ப பாதுகாப்பு முறைகளை சொல்லித் தரலாமே.

    மேலும் * இந்த கோடை விடுமுறையில் பிள்ளைகள் சுத்தமாக சாப்பிட பழகுவோம், பழக்குவோம்.

    * தவறான நட்புகளை களைய இந்த விடுமுறை காலம் ஒரு வாய்ப்பு.

    * தவறான, சோம்பேறித்தனமான பழக்கங்களில் இருந்து மீள பொன்னான காலம்.

    * தினமும் காலையில் எழுந்தவுடன் குளிக்கச் செய்வோம். 10-20 நிமிட ஷவர் குளியல் உடல் சூட்டினை நன்கு தணித்து விடும்.

    * வீட்டில் இருந்தாலும் சுத்தமான, கசங்காத ஆடையை நேர்த்தியாய் உடுத்த பழக்குவோம். பழைய சாயம் போன உடை, வாராத தலை முடி என நாள் முழுவதும் இருப்பது விடுமுறை சலுகை அல்ல.

    * எப்பொழுதும் அனைத்துப் பொருட்களும் உரிய இடத்தில் முறையாய் இருக்க பிள்ளைகள் வேலை செய்ய வேண்டும். இப்படி பழகி விட்டால் வீடு தெய்வீகமாய் இருக்கும்.

    * நியாயமான முயற்சிகளை கை கொடுத்து உயர்த்தி வருபவர்களோடு பழக வேண்டும்.

    * சமையல் செய்வது கூட (ஓரிரு முறைகள்) அனுபவம்தான்.

    * வாழ்க்கையில் சாதனை படைப்பதனை விட முறையாய் பூமியில் நடப்பதே ஆரம்ப சாதனை தான் என்பதனை சொல்லிக் கொடுங்கள்.

    * நோயற்ற வாழ்வும், மன நிம்மதியும் கிடைப்பதற்கரிய சாதனை என்பதனை சொல்லிக் கொடுங்கள்.

    வெயில் வருடா வருடம் நம்மை வறுத்து எடுத்து விடுகின்றதுதான். மழை, வெள்ளம் என பாதிப்பினை ஏற்படுத்துகின்றதுதான். நோய், பிரச்சனை என விடாது நம்மை தாக்குகின்றதுதான். இதனையும் மீறி ஒருவனுக்கு வாழ்க்கை தொடங்குகின்றது. ஒருவனுக்கு முடிந்து விடுகின்றது. வாழும் வரை நல்ல முயற்சிகள் செய்வோமே!

    அதில் ஒன்றுதான் நம்மை நாமே நன்கு கவனித்துக் கொள்வது.

    * உடல் நலத்தினை கூட்டுவது என்பதில் முயற்சி வேண்டும்!

    * உடல் நலத்தினை அன்றாடம் பராமரிக்க வேண்டும்!

    * நோய்களை வருமுன் தவிர்ப்பதே நல்லது!

    * நோய் பாதிப்பினை சமாளித்து மீள வேண்டும்!

    இதற்கு நமக்குத் தேவையானது விழிப்புணர்வு, சுயக்கட்டுப்பாடு, தன் மீது நம்பிக்கை கொள்ளுதல் ஆகும். உடல் நலம் என்றதும் அனைவரும் சொல்லும் அளவு வளர்ந்துள்ளது விழிப்புணர்வு.

    உடற்பயிற்சி, யோகா, தியானம், முறையான உணவு இதில் நமக்கு எதில் கூடுதல் முயற்சி தேவை இருக்கின்றது என்பதனை சற்று ஆராய வேண்டும்.

    மனநலம் என்பதற்கான விழிப்புணர்வு நமக்கு இன்னும் சற்று கூடுதலாகவே தேவைப்படுகின்றது.

    நம் மனதினை வருத்தப்படுத்தும், காயப்படுத்தும் நிகழ்வுகளால் நம்முடைய பண்பான குண நலன்கள் மாறி விடக்கூடாது.

    ஒவ்வொருவர் வாழ்விலும் வாழ்நாள் முழுவதும் அழுவதற்கும், சோகத்தில் கழிப்பதற்கும் அநேக காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு காரணம் கண்டிப்பாய் ஒரு சிறிய புன்னகையை உங்களுக்கு வரவழைத்து இருக்கும். அதனை பிடித்துக் கொள்ள வேண்டும். அதுவே நல்ல சூழலை ஏற்படுத்தி விடும்.

    யார் உங்களை இன்று வேண்டாம் என்று ஒதுக்குகின்றார்களோ ஒரு நாள் அவர்களே நீங்கள் வேண்டும் என்று திரும்பி வருவார்கள். இதுவே இயற்கையின் நியதி.

    தசைகளில் வலி, தலைவலி, இயலாமை, தூக்கமின்மை அதிக இனிப்புக்கு ஏங்குதல், சோர்வு, வயிற்றுப் பிரச்சினை இவை மன நல பாதிப்பின் காரணமாகவும் இருக்கலாம். இதனை மீறித்தான் எழ வேண்டும். எழுந்து நின்று வாழ்வோம்.

    • நாம் நம்மை மதிக்கத் தொடங்கினால் வாழ்க்கையின் மதிப்பீடு பெருகிக்கொண்டே போகும்.
    • இயற்கையின் படைப்பில் எல்லாருமே அழகானவர்கள்

    இயற்கையின் படைப்பில் எல்லாருமே அழகானவர்கள்; மனிதர்கள் அழகானவர்கள்; அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வாழ்க்கையும் அழகானதுதான். யார் யார் தனது மதிப்பை உணர்ந்து தன்னை ஆராதிக்கக் கற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர்.

    சிலர் வாழ்க்கையில், நொடிக்கு நொடி தாம் சல்லிக்காசுக்குப் பிரயோஜனமில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சலித்துக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் அவர்களெல்லாம் பெரும் புதையல் மேட்டுக்கு மேல் தாம் அமர்ந்திருப்பது தெரியாமல் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவர்கள். நொந்தவர்கள் வெந்துதான் போகவேண்டுமேயொழிய எந்த காலத்திலும் சிறந்தவர்கள் ஆகமுடியாது.

    சம்பாதித்துக்கொண்டே இருப்பதுதான் மதிப்புமிக்க வாழ்க்கை என்று சிலர் கூறுகிறார்கள்; அவர்கள் `சம்பாதிப்பது' என்று அர்த்தப்படுத்திக் கொள்வதெல்லாம் `பணம் சம்பாதிப்பது' பற்றியதே ஆகும். பொருளை ஈட்டுவதும், வீடு,நிலம், கார் முதலிய வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதும் ஒருவகைச் சம்பாத்தியம்தான் என்றாலும் அதையும் தாண்டிப் பலவகைச் சம்பாத்தியங்கள் உலகில் உள்ளன.

    அறிவைச் சம்பாதிப்பது, திறமையைச் சம்பாதிப்பது, நற்குணங்களைச் சம்பாதிப்பது,புகழைச் சம்பாதிப்பது, நல்ல நண்பர்களையும் நல்ல உறவுகளையும், நல்ல மனிதர்களையும் சம்பாதிப்பது, நல்ல பெயரைச் சம்பாதிப்பது, நல்ல அனுபவங்களைச் சம்பாதிப்பது என்று மதிப்புமிக்க சம்பாத்தியங்கள் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் சம்பாதிப்பதற்குப் பணம் தேவைப்படுவதே இல்லை; ஏன்? பணத்தைச் சம்பாதிப்பதற்குக் கூட அடிப்படையில் பணம் தேவைப்படுவதே இல்லை; அடிப்படையில் உழைப்பும் தளராத முயற்சியும் இருந்தால் போதும்.

    இந்த உலகில் உயிர்வாழும் காலம் வரைக்கும் தேவையான பணத்தோடு வாழ்வது மதிப்பான வாழ்க்கை என்பர் சிலர். தன் காலத்திற்குப் பிறகும், வருகிற சந்ததிகளுக்கும் சொத்துச் சேர்த்து வைப்பதே சிறந்த மதிப்பான வாழ்க்கை எனச் சிலர் முதுமையிலும் ஓய்விலாது பணம் தேடிக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் இதுவெல்லாம் பொருளாதாரம் சார்ந்த கோட்பாடே ஆகும்.

    உண்மையில் வாழ்க்கையின் மதிப்பு எவ்வளவு? அதன் விலைமதிப்பு என்ன?. இந்தக் கேள்வி களுக்குப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கூறினாலும், தத்துவ, வாழ்வியல் அடிப்படை களில் கூறினாலும் பதில் ஒன்றுதான். ஆம்! வாழ்க்கை விலை மதிப்பற்றது.

    வாழ்க்கையின் மதிப்பை மற்றவர்களிடம் கேட்பதைவிட நமக்கு வாழ்க்கையைத் தந்த கடவுளிடமே கேட்டுவிடுவோமே என்று முடிவு செய்து கடவுளிடம் கேள்வியோடு போய் நின்றான் ஒரு மனிதன். அவனது கையில் ஒருகல்லைத் தந்த கடவுள், "இதை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் செல்!. அங்கே வணிகம் செய்யும் பலவித வணிகர்களிடம் இதற்கு என்ன விலை தருவீர்கள்? என்று கேட்டு வா! விற்றுவிடாதே! விலையை மட்டும் கேட்டு வா!" என்று கூறி அனுப்பி வைத்தார்.

    கடைவீதிக்கு வந்த மனிதன் முதலில் ஒரு தள்ளுவண்டியில் ஆரஞ்சுப் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த வியாபாரியிடம் கடவுள் தந்த கல்லைக் காண்பித்து இதற்கு என்ன விலை தருவாய்? என்று கேட்டான். கல்லை வாங்கிப் பார்த்த பழ வியாபாரி, ஒரு டஜன் ஆரஞ்சுப்ப ழங்கள் தரலாம்! என்று பதிலளித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளரைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

    அடுத்து ஒரு காய்கறிக் கடைக்குச் சென்ற மனிதன், அங்கிருந்த வியாபாரியிடம் கல்லைக் காண்பித்து, இதற்கு என்ன விலை தருவாய்? என்று கேட்டான். கல்லைக் கொஞ்சம் ஆர்வத்தோடு பார்த்த காய்கறி வியாபாரி, இந்தக் கல்லுக்கு விலையாக ஒருமூட்டை உருளைக் கிழங்கைத் தரவா? என்று கேட்டார். மறுத்த மனிதன் அடுத்து ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தான்.

    அலங்காரமாகவும் வெகுநேர்த்தியாகவும் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் மனிதனை அன்போடு வரவேற்றனர்.

    முதலாளியை விசாரித்துக் கொண்டு, அவரிடம், தான் கொண்டு வந்திருந்த கல்லைக் காண்பித்து இதற்கு என்ன விலையை நீங்கள் நிர்ணயித்துத் தருவீர்கள்? என்று கேட்டான்.

    கல்லை வெறுமனே பார்க்காமல் உரிய கருவிகள்கொண்டு ஆராய்ந்து பார்த்த நகை வியாபாரி, 10 லட்சம் ரூபாய் தரலாம் என்று கூறினார். இருந்தாலும் இது விற்பனைக்கல்ல என்று மனிதன் கல்லைத் தர மறுக்கவே, மேலும் ஐந்து லட்சம் போட்டு 15 லட்சமாகத் தருகிறேன் என்று விலையை உயர்த்திக் கூறினார் நகை வியாபாரி. கல்லை விற்காமல் விலைமட்டும் கேட்டு வா! என்று கடவுள் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு கடையைவிட்டுக் கல்லோடு வெளியேறினான் மனிதன்.

    அந்தக் கடைவீதியில் விலையுயர்ந்த கற்கள் நவரத்தினங்கள் விற்கும் கடைக்குள் அடுத்து நுழைந்தான் மனிதன். கையில் பளபளவென்று ஒளிவீசும் ஒரு கல்லோடு ஒரு மனிதன் நுழைவதைக் கண்ட கடையின் ரத்தின வியாபாரி அவனை ஆவலோடு வரவேற்றார்.

    கல்லின் மதிப்பை அறிந்து செல்ல வந்திருப்பதை மனிதன் வியாபாரியிடம் தெரிவித்தான். கல்லை வாங்கிப் பார்த்தவுடன், ஐயா விலைமதிப்பற்ற மாணிக்கக் கல் ஐயா தங்கள் கையில் ஜொலிப்பது; இதனைத் தொட்டுப் பார்ப்பதே பெரும் பாக்கியம்! என்று தனது கையில் கல்லை வாங்கினார் ரத்தின வியாபாரி.

    நவீன இயந்திரங்கள் கருவிகள் கொண்டு பலநிமிடங்கள் ஆராய்ந்து பார்த்தார். பார்த்து முடித்தவுடன் மிகுந்த மரியாதையுடன், மனிதனின் கைகளை நீட்டச் சொல்லி அந்த மாணிக்கக் கல்லைக் கைகளில் வைத்தார். ஐயா இந்த மாணிக்கக் கல்லுக்கு விலைகூற என்னால் மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள ரத்தினக் கற்கள் வியாபாரிகள் எத்தனைபேர் சேர்ந்தாலும் முடியாது!. இந்த உலகையே விலைபேசினாலும் இந்தக் கல்லின் மதிப்பிற்கு இணையாகாது! என்று வியாபாரி சொல்லிமுடித்தார்.

    கல்லோடு மீண்டும் கடவுளிடம் வந்த மனிதன், கடைவீதியில் நடந்த சம்பவங்களை விரித்துரைத்தான். சிரித்துகொண்டே கடவுள் சொன்னார்," மானுடா உன் வாழ்க்கையும் இந்த மாணிக்கக் கல்லைப்போல விலைமதிப்பற்றதுதான். ஆரஞ்சுப்பழ வியாபாரி, காய்கறி வியாபாரி, நகைக்கடை வியாபாரி ஆகியோர் அவரவர் அறிவிற்கு எட்டிய வரையில் கல்லுக்குள்ள மதிப்பைக் கூறினர். ஆனால் கல்லின் உண்மையான மதிப்பை அறியத் தெரிந்த ரத்தின வியாபாரியே அதன் உண்மை மதிப்பை, விலைமதிப்பற்ற சிறப்பை உனக்கு விளங்க வைத்தார்".

    "மனித வாழ்க்கை ஒவ்வொன்றும் இந்த மாணிக்கக் கல் போன்று விலை மதிப்பற்றதுதான். புரியாதவர்கள் மதிப்பிழந்து போகிறார்கள்.

    மதிப்பை உணர்ந்து கொண்டவர்கள் சாதித்துச் சாதித்து மதிப்பைப் பெருக்கிகொண்டே போகிறார்கள்" என்று சொல்லி முடித்தார் கடவுள்.

    படைத்தவன் பெருமைக்குரியவனாக இருக்கும்போது படைப்புமட்டும் எப்படிப் பெருமை குறைந்ததாக இருக்கும்?.

    நாம்தாம் தேவையில்லாமல் பலவேளைகளில் நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம். நம்மைப்பற்றி அடுத்தவர் கொண்டுள்ள கருத்துதான் மதிப்பீடு என்றாலும், சாதாரண அறிவுகொண்டவர்கள் நம்மைக் குறைத்துக் கூறுவதை வைத்து நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டால் எப்படி?.

    இந்த உலகில் எல்லாரும் ஒரேவிதமான கண்ணோட்டம் கொண்டவர்கள் இல்லை; அவரவர் பார்வைக்கு ஏற்ற வகையில் மனித வாழ்க்கையின் மதிப்பீடுகள் மாறுபடலாம். அவர்கள் ஆளுக்கொருவகையில் மதிப்பிடுவதை வைத்து நம்முடைய மதிப்பும் அவ்வளவுதான் என்று மனம் தாழ்ந்து விடக்கூடாது.

    விலைமதிப்பற்ற வாழ்க்கை நமக்கு வாய்த்திருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழும் வகையில் வாழ்ந்து மதிப்பை உயர்த்திக்கொண்டே போக வேண்டும்.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் மதிப்பையும் உயர்த்திக்காட்டுவதில் முன்னிற்பது அவனது குடும்ப வாழ்வே ஆகும். குடும்ப உறுப்பினர்களான கணவன், மனைவி, பிள்ளைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்டு வாழும் நெறியறிந்து வாழவேண்டும். அதுவே மதிப்பைத் தரும் குடும்ப வாழ்வு.

     `அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவரா? சிறப்பாகத்தான் இருப்பர்!' என்று பெருமைப் படும் அளவுக்குக் குடும்ப வாழ்வை மதிப்புடன் நடத்த வேண்டும். கணவர் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம், குழந்தைகள் ஒருபக்கம், மூத்தோர்கள் ஒருபக்கம் என ஆளுக்கொரு பக்கமாகக் கருத்தொற்றுமை சிதையுமளவுக்குக் குடும்பம் போனால் வாழ்க்கை மதிப்பற்றுப் போய்விடும்.

    குடும்பத்திற்கு அடுத்து வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் கவனம் செலுத்த வேண்டியது அவரது உழைப்பில் அல்லது தொழிலில் மதிப்போடு செயல்படுவது ஆகும். ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் மதிப்பிழந்து போவதற்கு முக்கியமான காரணம் தாம் செய்யும் தொழிலை அவர்கள் மதிப்பதே கிடையாது. என்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் நான் பார்க்கவேண்டிய தொழிலே இதுவல்ல! என்று மாதம் பத்து லட்சம் சம்பாதிப்பவர் கூட வேண்டா வெறுப்புடன் கூறுவதைப் பார்க்கலாம்.

    இப்படி வேண்டா வெறுப்புடன் தொழில் செய்பவர்கள் அந்த தொழிலால் எந்தக் காலத்திலும் மதிப்புடன் வாழப்போவதேயில்லை. பலர் கூறுவதைப்போல தெருக்கூட்டும் தொழில் செய்பவர்கூட அதைத் தொழில்பக்தியோடு செய்தால், அந்த தொழில் மூலமாகவும்கூட உலகம்போற்றும் மதிப்பையும் மரியாதையையும் பெறலாம்.

    உழைப்பதற்கு கைகால்கள் கொண்ட உடம்பையும், சிந்திக்க, கற்க, அன்பு செலுத்த, அடுத்தவர்க்கு உதவ எண்ணற்ற உடல் உறுப்புகளையும் உணர்வுகளையும் விலை மதிப்பற்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். நம்முடைய மதிப்பை நாம் முதலில் உணர்ந்துகொள்வதே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பை அறிந்துகொள்ளத் தொடங்கும் அரிச்சுவடி.

    மதிப்புமிக்க உடம்பை வைத்துக்கொண்டு மதிப்பிற்குரிய செயல்களை மட்டுமே செய்வது; வாழ்க்கையில் துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் அவற்றின்மூலம் கற்றுக்கொண்டே இருப்பது; நேர்மையில் இருந்து விலகாமல், நேர்த்தியான செயல்களை மட்டுமே செய்து மதிப்புடனும் மரியாதையுடனும் இயங்கிக் கொண்டே இருப்பது; அன்பையும் சேவையையும் அறவழியில் செய்வதொன்றே மதிப்பான வாழ்க்கை என்பதை மதிப்புடன் வாழ்ந்த மாமனிதர்கள் வழியாக அறிந்து கொள்வது... இவையே வாழ்க்கையின் மதிப்பு.

    வானுறையும் தெய்வத்தின் வழி படைப்பு நிகழ்வது உண்மையென்றால், படைப்பாய் பிறந்துள்ள மனிதர் அனைவரும் தனது மதிப்பை உணர்ந்த செயல்களினால் வாழ்வாங்கு வாழ்ந்தால் அந்த தெய்வீக வாழ்க்கையை மண்ணுலகிலேயே அடைந்து விடுவர். இது வள்ளுவர் வாக்கு.

    மதிப்பிற்குரியவர்களே! நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதை நமது மதிப்புமிக்க செயல்களால் வாழ்ந்து காட்டுவோம்; நாம் நம்மை மதிக்கத் தொடங்கினால் நமது வாழ்க்கையின் மதிப்பீடு பெருகிக் கொண்டே போகும்; நாம் நம்மைத் தாழ்த்திக்கொண்டே போனால் நமது வாழ்க்கையின் மதிப்பும் தாழ்ந்துகொண்டே போகும்.

    மதிப்போம்! மதிப்பீடுகள் பெருக்குவோம்!

    தொடர்புக்கு 9443190098

    முனைவர்

    சுந்தர ஆவுடையப்பன்

    • சில விஷயங்களை நாம் தியாகம் செய்து தான் ஆக வேண்டும்.
    • நாம் தொடங்கும் செயல் நமக்கு எதிர்மறையாக இருக்குமென்றால் நமக்கு முதலிலேயே உள்ளிருந்து சமிக்கைகள் வரும்.

    அன்பார்ந்த வாசகர்களே, ஞான வாழ்க்கை வாழ்வதற்கு துன்பத்தை நீக்கி இன்பத்தோடு வாழ ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று பார்த்தோம். அதற்கு துன்பம் தராத இன்பம் புறத்தே தேடினால் கிடைக்காது. அது நமக்கு உள்ளே உள்ளது.

    அதற்கு சில விஷயங்களை நாம் தியாகம் செய்து தான் ஆக வேண்டும். அது என்ன என்றால் எதிர்பார்ப்பு, நிபந்தனை, ஒப்பிட்டு பார்த்தல் ஆகிய மூன்றையும் நாம் விட்டுவிட வேண்டும். இந்த மூன்றும் நம்மிடம் இருப்பதால் தான் நம் வாழ்வில் நடக்க வேண்டியது நடக்காத போது மன அழுத்தம் ஏற்பட்டு, மூச்சின் எண்ணிக்கை மாறுவதால் தான் விதி நம் வாழ்வில் விளையாடி நமது ஆயுளை குறைக்கிறது.

    எனவே நாம் யாருக்கும் நிபந்தனை விதிக்க கூடாது. ஏன் நமக்கு நாமே கூட நிபந்தனை விதித்து கொள்ளக் கூடாது. அந்த நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் மூச்சின் நீளம் மாறுவது மட்டும் அல்லாமல், சூரிய, சந்திர நாடியை மாறி மாறி வேகமாக இயங்க வைக்கும்.

    நாம் தினமும் காலை எழுந்தவுடன் நாடி சுத்தி பிராணாயாமம் செய்யும் போது மனம் ஆனது அமைதி நிலைக்கு செல்கிறது, அதனால் அன்று முழுவதும் நமது செயல்கள் அனைத்தும் நன்மை தரக் கூடியதாக இருக்கும்.

    மனதின் அலைசுழல் வேகம் ஆனது மூச்சின் எண்ணிக்கையை பொறுத்து அமைகிறது. மூச்சின் எண்ணிக்கை நமது ஆயுளை தீர்மானிக்கிறது. இதை உணர்ந்த மகான்கள் முதலில் மனதை அடக்க வேண்டும் என்றார்கள். அப்படி செய்தால் மூச்சு ஒடுங்கும் என்று கூறினார்கள்.

    ஆனால் மனதை அடக்க முடியவில்லை. எனவே, மூச்சை குறைத்தால் (எண்ணிக்கை) மனம் அடங்கும் என்றார்கள். இதற்கு தான் பிராணாயாமம் அவசியம் ஆகிறது. அப்படி செய்து மேற்சொன்ன மூன்றையும் விட்டுவிட்டால், நம் வாழ்வில் நடக்கின்ற எந்த ஒன்றுக்கும் கேள்வியாக உள்ளவரும், பதிலாக உள்ளவரும் அவரே என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

    அது எப்படி என்றால், எதை எல்லாம் வைத்து நம்மை நாம் அடையாளம் கண்டு கொண்டோமோ அதை எல்லாம் விட்டுவிட்டால், நாம் உணரலாம். அதற்கு நாம் புலன்கள் கடந்த நிலையிலே கேட்டல், பார்த்தல், தொகுத்தல், நுகர்தல், உண்ணுதல், செல்லுதல், உறங்குதல், சுவாசித்தல். இவற்றில் நாம் ஈடுபட்டு இருந்தாலும், உண்மையிலேயே நாம் ஒன்றும் செய்யவில்லை. அந்த உணர்வு வந்தால் புலன்கள் மட்டுமே இயங்கும். ஏனென்றால் நாம் அதிலிருந்து வேறுபட்டவர். இதுவே ஆத்மாவின் நிலை. இதற்கு மூச்சு பிறக்கின்ற இடத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு தான் நாடி சுத்தி பிராணாயாமம் செய்ய வேண்டும். சரி, இப்போது நாடி சுத்தி பிராணாயாமத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்..

    அதிகாலையில் எழுந்தவுடன் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். ஏனென்றால் அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.00 மணி வரை வான் காந்த ஆற்றல் தூய்மையாக இருக்கும்.

    முதலில் பிராணாயாமம் செய்வதற்கு முன்னால், நமது நாசியில் உள்ள தடைகளை சரி செய்ய வேண்டும்.

    நிலை 1 - வலது ஆள்காட்டி விரலால் வலது நாசியை மூடி, இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து இடது நாசி வழியாகவே மெதுவாக வெளிவிட வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

    நிலை 2 - இடது ஆள்காட்டி விரலால் இடது நாசியை மூடி, வலது நாசி வழியாக மூச்சை உள்ளே இழுத்து, அதே வலது நாசி வழியாகவே மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

    நிலை 3 - இரு கைகளையும் ஒன்றாக கோர்த்துக் கொண்டு இரண்டு (வலது, இடது) நாசிகள் வழியாகவும் மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

    இந்த மூன்று நிலைகளிலும் மொத்தம் 30 முறை மூச்சை மெதுவாக உள் இழுத்து மெதுவாக வெளிவிட்டவுடன், ஒரு நிமிடம் கண்கள் மூடிய நிலையிலேயே உடலை கவனிக்க வேண்டும். இப்போது மூச்சு குழாயில் உள்ள தூசுகள், அடைப்புகள் எல்லாம் சரியாகி மூச்சு சீராக ஓடுவதை கவனிக்க வேண்டும். பிறகு இப்போது நாடி சுத்தி பிராணாயாமத்தை தொடங்க வேண்டும்.

    அமர்வு நிலை 1: சுக ஆசனம், வஜ்ராசனம், இரண்டு நிலைகளிலும் அமர முடியாதவர்கள், நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம். கீழே விரிப்பு இருக்க வேண்டும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    அமர்வு நிலை 2: தலை, கழுத்து, முதுகுத்தண்டு ஒரே நேர் கோட்டில் இருக்குமாறு அமர்ந்து கொள்ளவும்.

    அமர்வு நிலை 3: இடது கை சின் முத்திரையில் இருக்க வேண்டும். அதாவது கட்டை விரல், ஆள்காட்டி விரல்களின் நுனிகளை மெதுவாக அழுத்தி கொண்டு மற்ற மூன்று விரல்கள் நேராக கீழ் நோக்கி இருக்க வேண்டும்.

    அமர்வு நிலை 4: வலது கை நாசிகா முத்திரையில் இருக்க வேண்டும். அதாவது ஆள் காட்டி விரல், நடுவிரல் இரண்டும் உள் நோக்கி மடக்கி கொள்ள வேண்டும், மற்ற மூன்று விரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

    நிலை 5: இடது கை சின் முத்திரையில் தொடை மீது வைத்து கொண்டு, வலது கையில் நாசிகா முத்திரையில் முதலில் வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி கொண்டு இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவு இழுத்தவுடன், வலது கை மோதிர விரலால் இடது நாசியை மூடி கொண்டு, வலது நாசி பக்கம் உள்ள கட்டை விரலை எடுத்து விட்டு, இப்போது இடது நாசியில் இழுத்த மூச்சை வலது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும்.

    நிலை 6: மூச்சை வெளியிட்ட வலது நாசி வழியாகவே மெதுவாக நம்மால் முடிந்த அளவு மூச்சை இழுத்தவுடன் வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி கொண்டு இடது நாசியில் உள்ள மோதிர விரலை எடுத்துவிட்டு மெதுவாக வெளிவிட வேண்டும்.

    இப்படி இடது பக்கம் மூச்சை இழுத்து வலது பக்கம் வெளிவிட்டு, வலது பக்கம் மூச்சை உள் இழுத்து இடது பக்கம் வெளிவிடுதல் என்பது ஒரு பிராணாயாமம் ஆகும். அதாவது இரண்டு தடவை மூச்சை இழுத்து விடுவது ஒரு பிராணாயாமம்.

    நிலை 7: இதே போன்று ஐந்து முறை செய்ய வேண்டும். அதாவது 5 பிராணாயாமம் செய்த பிறகு, இரு கைகளையும் ஒன்றாக கோர்த்து கொண்டு மூச்சை மெதுவாக உள் இழுத்து வெளிவிட்ட படி உடலையே கவனிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நிமிடம் வரை அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

    மறுபடியும் 5 முறை நாடி சுத்தி பிராணாயாமம் செய்ய வேண்டும். மறுபடியும் ஒரு நிமிடம் உடலையே கவனிக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும். அதாவது ஒரு 10-15 நிமிடங்கள் மெதுவாக இப்படி செய்து விட்டு கண்கள் மெதுவாக திறந்த பிறகு நமது நித்திய கடமைகளை செய்ய துவங்கலாம்.

    இந்த நிலை நாள் முழுவதும் நமது மனம் ஆனது அமைதி நிலை என்று சொல்லுகின்ற ஆல்பா நிலையில் இருப்பதற்கு சமம். அதாவது நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அதன் விளைவு என்பது அந்த செயல் முடிந்த பிறகு தான் தெரியும். விளைவானது நன்மையாக இருந்தால் நான் செய்தேன் என்று சொல்லுவோம். விளைவில் ஏதாவது தீமை வந்துவிட்டால், நாம் பழியை மற்றவர்கள் மீது போட்டு விடுவோம்.

    ஆனால் இந்த பிராணாயமம் பயிற்சியை நாம் தொடர்ந்து செய்து விட்டால், நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது, நமக்கு முதலிலேயே தெரிந்து விடும். இதை தான் விளைவுகள் அறிந்த விழிப்பு நிலை என்கிறோம். இந்த நிலையில் நமக்கு வரும் விளைவு நன்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே நாம் அந்த செயலை செய்வோம். நாம் தொடங்கும் செயல் நமக்கு எதிர்மறையாக இருக்குமென்றால் நமக்கு முதலிலேயே உள்ளிருந்து சமிக்கைகள் வரும். உடனே அந்த செயலை நாம் செய்ய மாட்டோம்.

    இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால்,நமக்கு வரும் எந்த ஒரு விளைவும் ஒன்று நாம் செய்த செயல் அல்லது நமது முன்னோர்கள் செய்த செயல்களாக இருக்கும். தினமும் இந்த பயிற்சிக்கு பிறகு நமது செயல்களை செய்வதால், நாம் புதியதாக எந்த விதமான கர்ம வினை பதிவுகளையும் ஏற்று கொள்வதற்கு வாய்ப்பு இருக்காது. ஆனால் நமக்குள் ஏற்கெனவே பதிவுகள் எந்த நேரத்திலே விதியாக எழுச்சி பெறுமோ அந்த நேரத்திலே எழுச்சி பெறும்.

    ஆனால் நாம் தினமும் நல்ல செயல்களையே செய்து வந்தால் விதியின் மூலமாக வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

    எனவே இந்த நாடி சுத்தி பிராணாயாமம் என்பது நம் விதியை மதியால் மாற்றும் வித்தை என்பதை நாம் தெரிந்து கொண்டு தினமும் செய்வோமேயானால் காலத்தை நம்மால் வெல்ல முடியும். இதன் மூலமாக நமது ஆயுள் நீளும். நமது ஆயுள் நீளும் போது, நமது கர்மாவை நாமே குறைந்த தாக்கத்துடன் அனுபவித்து விட்டு நமது அடுத்த சந்ததிகளுக்கு எந்தவித பாவ பதிவுகளையும் சேர்த்து வைக்காமல் நல்ல பதிவுகளை மட்டும் வைத்துவிட்டு செல்வோம்.

    எனவே ஆயுள் விருத்திக்கு மட்டும் அல்ல, பாவ பதிவுகளையும் போக்கும் அற்புத பொக்கிஷம் தான் இந்த பயிற்சி. இனி எந்த எந்த வயதில் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தால் எவ்வளவு காலம் ஆயுள் கூட்டி கொள்ளலாம் என்பதை பற்றி ஆராய்ச்சி செய்வோம்.

    போன்: 9444234348

    • மலத்துவாரத்திற்கு மேல் 5 அங்குலத்திற்குள் மூன்று முடிப்புகள் உள்ளன.
    • 3-வது மடிப்பில்தான் மூல நோய் உண்டாகிறது.

    வயிற்றின் அடியில் கவிழ்த்து வைத்தாற்போல் மேலே ஏறிய பின் கீழே இறங்கும் வடிவ பெருங்குடலின் முடிவு மலத்து வாரமாகும். மலத்துவாரத்திற்கு மேல் ஏறத்தாழ 5 அங்குலத்திற்குள் மூன்று முடிப்புகள் உள்ளன.

    முதல் மடிப்பு மலத்தை வெளித்தள்ள சுருங்கி கீழ்வதாகும். இரண்டாவது மடிப்பு மலத்தை வெளித்தள்ளுவதாகும். மூன்றாவது மடிப்பு மலங்கழித்தவுடன் மூடிக்கொள்வது. இந்த 3-வது மடிப்பில்தான் மூல நோய் உண்டாகிறது. மூலம் 21 வகைப்படும் என்று யூகி முனிவரால் அருளப்பட்ட வைத்திய சிந்தாமணி எண்ணாறு என்னும் நூல் கூறுகிறது. அவை வருமாறு:-

    நீர்மூலம்:

    வயிறு வலித்து சுருண்டு மேலும் கீழும் பொருமிக் கொள்ளும். வாயில் நீர் ஊறும். மலம் வறண்டு போகும். அடிக்கடி மலம் வருவது போன்ற உணர்ச்சி ஏற்படும்.

    செண்டுமூலம்:

    ஆசன வாயில் வலிக்கும். காரம் உட்கொண்ட வுடன் மலம் வெளிவரும். ரத்தமும் நீரும் கலந்து வெளிவரும். ஆசன வாயில் அரிப்பு ஏற்படும். சுருங்கும்.

    தொந்தி மூலம்:

    மலங்கட்டிக் கொண்டு இருக்கும். வயிறு பொருமல் ஏற்படும். நடக்க முடியாது. வியர்க்கும். தாகம் ஏற்படும். ஆசனவாய் அட்டைபோல் சுறுங்கும்.

    வினைமூலம்:

    பசி ஏற் படாது. உண்ட உணவு செரிக்காது. அடிவயிறு குத்தும். கை, கால் உளைச்சல் ஏற்படும். வயிறு இரைத்து சூடு ஏற்படும். மலங்கட்டும். நரம்புகளை இழுக்கும். ஆசன வாயில் கருப்பு அதிகரிக்கும். தினமும் எரிச்சல் உண்டாகும்.

    மேக மூலம்:

    உடம்பில் திமிர் ஏற்படும். சிறுநீர் எரியும். தலையும், காலும் வலிக்கும். திடீரென்று கழிச்சல் ஏற்படும். ரத்தம் பீறிடும்.

    பவித்திர மூலம்:

    கை, கால் கனக்கும். மலவாயில் கனல் ஏற்படும். ஆசன வாயில் கட்டி ஏற்படும். ஆசன வாயில் மாம்பூ போல முளைகள் ஏற்படும். பின் கோவை பழம் போல சிவப்பு நிறமாகும்.

    கிரந்தி மூலம்:

    ஆண்குறியில் புண் ஏற்படும். கை, கால்களில் கருப்பு ஏற்படும். ஆசன வாயில் புண்ணாகி கொடி கொடியாய் முளை உண்டாகி சீழும், ரத்தமும் வெளிப்படும். மலம் கட்டிக்கொண்டு கீற்று போல வெடித்து இறங்கும்.

    குத மூலம்:

    மூக்கில் குறுத்து போல வெளிப்பட்டு உள்ளே இழுத்துக்கொள்ளும். ரத்தமும், சீழும் வெளிப்படும். அடிக்கடி நாவறட்சி ஏற்படும். கை, காலில் மதப்பு ஏற்படும். கோபம் ஏற்படும். புற மூலம்: எண்ணெய் போலும், நீர் போலும் மலவாயில் கசிந்து சீழ் கொட்டும். அரிப்பு ஏற்படும். உடம்பு முழுவதும் சிறு சிறு சிரங்குகள் ஏற்பட்டு சொறி ஏற்படும். பிணம் போல முக வாட்டம் ஏற்படும்.

    சுருக்கு மூலம்:

    வாயில் தடிப்பு ஏற்பட்டு ஆசன வாய் சுருங்கிக்கொள்ளும். பெருங்குடலில் வலி ஏற்படும். வயிறு பொருமும். நீரும், ரத்தமும் வெளியாகும். உடல் வெளுக்கும். உடம்பில் அசதி ஏற்பட்டு தளரும்.

    சவ்வு மூலம்:

    தொப்புளை சுற்றி தாமரை பூ போல தடிப்பு ஏற்படும். ஆசன வாயில் சவ்வு போல ஏற்படும். சீழும், நீரும் அடிக்கடி கசியும்.

    மூளை மூலம்:

    ஆசன வாயில் கடுக்கும். எரியும், மிக சுருங்கும். அரிப்பு காணும். அடிவயிறு கல் போலாகும். மலம் கழிக்கும்போது ரத்தம் பீறிடும்.

    வரண மூலம்:

    மலங்கட்டிக் கொண்டு துண்டாக வரும். அடிக்கடி கோபம் ஏற்படும். நாளடைவில் உடல் பலம் குறையும்.

    ரத்த மூலம்:

    தொப்புளில் வலி ஏற்படும். மலங்கழிக்கும் முன் ரத்தம் பீறிட்டு வெளிவரும். உடலில் வறட்சி ஏற்படும். நாளடைவில் மூட்டுகளில் வலி ஏற்படும். காய்ச்சல் ஏற்படும். மயக்கம் உண்டாகும். கண்களில் நிறமுண்டாகும்.

    சீழ் மூலம்:

    மலவாய் கடுத்து எரிவு ஏற்படும். மலவாய் தளர்ந்து போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளிப்படும்.

    ஆழி மூலம்:

    வள்ளி கிழங்கு போல முளை காணும். சீழும் ரத்தமும் ஏற்படும். காரம் உண்ண முடியாது. உடல் பலம் குறையும்.

    தாமர மூலம்:

    ஆசன வாயை சுற்றி புண் ஏற்படும். வயிறு கொள்ளும் பசி இருக்காது. மூச்சுத் திணறல் ஏற்படும்.

    விதமூலம்:

    கோவைப்பழம் போல் முளை தள்ளி இருக்கும். நாளடைவில் கறுப்பாக மாறும். மிருதுவதுவாகும். கடுப்பு அரிப்பு குத்தல் வலி ஏற்படும். மலவாயின் உள்ளும் வெளியும் வலி ஏற்படும்.

    பித்தமூலம்:

    அடிக்கடி தலைவலி ஏற்படும். பருத்திக் கொட்டை போலும் நெல் போலும் முளை உண்டாகும். மாவு உருண்டைப் போல் ரத்தமும், சீழும் கலந்து மலம் வெளியாகும். அடிக்கடி தாகம் ஏற்படும். வியர்க்கும்.வயிறு வலிக்கும்.

    சிலேட்டுமா மூலம்:

    எண்ணை நிறமுளை ஏற்படும். எப்பொழுதும் எரிவு இருக்கும். கருப்பு ஏற்பட்டு நீர் சீழ் இவைகளோடு மலம் வெளிவரும். சிறுநீர் சீழ் இவைகளோடு மலம் வெளிவரும். சிறு நீர் சுடும். விந்து நஷ்டம் ஏற்படும் . உடல் வெளுக்கும் வாய் சுவையற்றுப் போகும்.

     இதற்கு எளிய சித்த வைத்திய முறைகள் உள்ளன. பிரண்டையை உலர்த்தி சூரணித்து அதற்கு நிகராக சர்க்கரை கலந்து சிறிது பசு நெய்யில் குழைத்து 40 நாட்கள் உண்ண தீரும்.

    சதுரக்கள்ளியை நறுக்கி பானையில் போட்டு 4 படி தண்ணீர் விட்டு வேடு கட்டி, அதன்மேல் 1/2 கப் கருங்குறுவை மாவை வைத்து பிட்டவித்து 3 நாட்கள் மூன்று வேளை கொடுக்க மூலம் தீரும்.

    கொட்டைப்பாசி 50 கிராம், கடுக்காய் 50 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி வடிகட்டிக் கொள்ளவும். 5 கிராம் மிளகு தூளை மேஜைக் கரண்டி அளவு தேனில் குழைத்து காலை மாலை இரண்டு வேளையாக 5 நாட்கள் உண்டு வர சகல மூல நோய்கள் குணமாகும்.

    நாயுருவி இலை 50 கிராம், கறிவேப்பிலை 50 கிராம், கருணைக் கிழங்கு 150 கிராம், பசுவெண்ணெய் 250 கிராம் இவற்றை லேகியம் போலக் கிண்டி ஒரு வேளைக்கு 10 கிராம் அளவு வீதம் 5 நாட்கள் உண்டு வர நோய் குணமாகும். 1 நாளைக்கு 1 வேளை சாப்பிடவும்.

    காட்டு கருணை, காராக் கருணை, பிரண்டை, கொடி வேலி, அறுகு, புளியமடல், மகுளி ஆகியவற்றை நிழலில் உலர்த்தி இடித்து வடிகட்டி வைத்துக் கொண்டு காலை மாலை இரு வேளைகளிலும் 5 கிராம் தூளை 1 மேஜைக் கரண்டி தேனில் குழைத்து அருந்தலாம்.

    கைக்குத்தல் கருங்குருவை அரிசியை 200 கிராம் அளவு எடுத்து மண் சட்டியில் போட்டு 100 மில்லி லிட்டர் முப்பிரண்டை சாற்றையும் 100 மிலி கடல் நீரையும் விட்டு 3 மணி நேரம் ஊற வைத்து அரிசியை மட்டும் எடுத்து அரைத்து அடை போல தட்டி இரும்பு தோசைக் கல்லில் போட்டு 50 கிராம் பசு நெய் விட்டு வேக வைத்து காலை உணவாக 6 நாட்கள் தொடர்ந்து உண்டு வர வெளி மூலம் குணமாகும்.

    50 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பசும் பாலில் வேக வைத்து 50 கிராம் தேனில் உட்கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் சாப்பிட்ட பின் 1 மணி நேரம் கழித்து மருந்தை ஒரு வாரம் சாப்பிடவும், உரித்த வெள்ளைப்பூண்டை நெய்யில் வதக்கி பின் தேனிட்டு அரைத்து காலை மாலை இருவேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும்.

    புளிக்கருணைக் கிழங்கு தோல் நீக்கி 100 கிராம் எடுத்து சில துண்டு துளாக்கிக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் கிழங்கைப் போட்டு 5  கிராம் மிளகு தூளைப் போடவும். பின் 200 மி.லி. நெய் விட்டு வறுத்து எடுத்து மரக்கறியுடன் சேர்த்து சாப்பிட குத்துமூலம் குணமாகும்.

    விளாமிச்சை வேரை சிறிது வாழைப் பூவின் சாறு விட்டு அரைத்து வாழைப் பூவின் சற்றில் கலந்து உணவுக்கு முன் அருந்து ரத்தக்கடுப்பு நீங்கும்.

    சித்த மருத்துவர்

    கே.எஸ்.சுப்பையாபாண்டியன்

    9994932121

    • இந்திய அரசியலமைப்பை மாற்றியமைப்பது தான் உண்மையில் பா.ஜ.க.வின் திட்டம் என்ற அய்யம் வலுப்பட்டது.
    • சூரத் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்று மாயமானார்.

    விஷன் 2047 என்றால் என்ன? 'விக்சித் பாரத்' எப்படி இருக்கும்? இந்தியா அந்தப் பொற்காலத்திற்கு எப்படிச்செல்லும்?

    நம்பிக்கைக் கதைகளை வடிவமைக்கும் போது விவரங்கள் அவ்வளவு முக்கியமில்லை, மகா ஜனங்களே!.

    அடித்துச் சொல்லுங்கள். உறுதியாகச் சொல்லுங்கள்! மக்கள் அதை நம்புவார்கள். ஊர்ச் சந்தையில் கல்நார் பல்பொடி விற்பனை செய்பவனின் டெக்னிக் இது. ஆயுசுக்கும் பல் சம்பந்தப்பட்ட கோளாறு வராமல் இருக்கும் என்று அடித்துச் சொல்லி வியாபாரம் நடத்துவான் அவன்.

    ஆத்தாடி.

    'அப் கி பார் சார் சௌ பார்'என்ற மோடி முழக்கம் முக்கியம் என்று கர்நாடக பா.ஜ.க. எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே மார்ச் 10-ந் தேதி கூறினார். அரசியலமைப்பைத் திருத்தியமைக்க 400க்கு மேற்பட்ட மிருகபல மெஜாரிட்டி மோடிக்குத் தேவை என்று விளக்கமும் கொடுத்தார் அவர்.

    ராகுல் காந்தி தீவிர தாக்குதலில் இறங்கினார். இந்திய அரசியல் சாசனத்தை மோடி ரத்து செய்து விடுவார் என்று எதிர்த் தரப்பு பீதியைக் கிளப்பியது.

    ஏற்பட இருக்கும் கடும் சேதாரத்தை உணர்ந்தது பா.ஜ.க. ஹெக்டேவின் 'தனிப்பட்ட பார்வை' என்று நிராகரித்தது. கட்சி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறினார் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா.

    ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் மீரட் பா.ஜ.க வேட்பாளர் அருண்கோவில். மற்றும் பைசாபாத் எம்.பி. லல்லு சிங் உள்ளிட்ட பலர் ஹெக்டேவின் கருத்தை எதிரொலித்தனர். இந்திய அரசியலமைப்பை மாற்றியமைப்பது தான் உண்மையில் பா.ஜ.க.வின் திட்டம் என்ற அய்யம் வலுப்பட்டது.

    "ஆர்.எஸ்.எஸ். இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது. பா.ஜனதா மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால் அரசியலமைப்பு மீண்டும் எழுதப்பட்டு இடஒதுக்கீடு நீக்கப்படும்!" என்றது இந்தியா கூட்டணி.

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் செப்டம்பர் 2015-க்கு முந்தைய அறிக்கையையும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி மன்மோகன் வைத்யாவின் ஜனவரி 2017 அறிக்கையையும் எதிர்த் தரப்பு சுட்டிக்காட்டியது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அரசியல் சாசனத்தைத் திருத்தவே பா.ஜ.க. 400 சீட் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று ராகுல் காந்தி வாதிட்டார்.

    டேமேஜ் கண்ட்ரோல் மோடுக்குப் போன மோடி 'பரம்பரை வரி'யைக் கையிலெடுத்தார். 'உங்கள் செல்வத்துக்காக அவர்கள் வருகிறார்கள்'என்பதுதான் மூன்றாம் கட்டத் தேர்தலில் பிரதமரின் மிகப் பெரிய தேர்தல் பரப்புரை! 'பெண்களின் லாக்கர்களுக்குள் நுழைய விரும்புகிறது காங்கிரஸ்' என்பது மட்டுமே தொடர் வியூக உத்தி!

    மேற்படிப் பிரசாரம் மிகவும் ஏழ்மையான வாக்காளர்களிடம் பேசும்போது என்ன பயன் தரும்? பரம்பரை வரியைப் பற்றி பாமர வாக்காளர்களுக்கு என்ன பதற்றம்? இதில் இன்னொரு சிக்கல்! முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜெயந்த் சின்ஹா, ஸ்வராஜ்யா தலையங்க இயக்குனர் ஆர்.ஜெகந்நாதன், ஐ.டி. செல் தலைவர் அமித் மாளவியா மற்றும் பல பா.ஜ.க. தலைவர்கள் கடந்த காலத்தில் பரம்பரை வரிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்கள். அந்த வீடியோக்கள் மீண்டும் உலா வரத் தொடங்கின.

    பா.ஜ.க.வின் கூட்டு சங்கடம் பன்மடங்காகப் பெருகியது. உடனே டிராக் மாறியது. "உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றைப் பறித்து அவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்!" என்று குஜராத்தில் பிரசாரம் செய்தார் மோடி. பாமர வாக்காளனுக்கு எருமைக் கணக்குப் புரியும் அல்லவா?

    அம்மா இந்திராகாந்தி செல்வத்தில் பாதி அரசாங்கத்திற்குச் செல்லக்கூடாது என்பதற்காகவே ராஜீவ் காந்தி பரம்பரை வரிச் சட்டத்தை ரத்து செய்தார் என்று குற்றம் சாட்டினார் மோடி.

    பரம்பரை வரி ஒழிப்பு நடைமுறைக்கு வந்தது மார்ச் 16, 1985 முதல்! இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984-ல் படுகொலை செய்யப்பட்டார். சட்டம் எந்தப் பின்னோக்கிய விளைவையும் கொண்டிருக்கவில்லை. எனவே பரம்பரை வரியை ரத்து செய்ததால் ராஜீவுக்கு எந்தப் பலனும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

    மீண்டும் ஒரு திசை வழி மாற்றம்! ஏப்ரல் 25-ல் மத்தியப் பிரதேசத்தில் உரையாற்றிய மோடி "வாரிசு வரியை மீண்டும் கொண்டுவருவதின் மூலம் மக்களின் வருமானத்தில் பாதிக்கும் மேல் காங்கிரஸ் பறிக்கும்!" என்றார். அதாவது இப்போது மோடி பிரசாரம் வருமானம் பற்றியது. நோட் திஸ் பாயிண்ட் மை லார்ட். பரம்பரைச் சொத்து அல்ல!! ஜஸ்ட் இன்கம்!

    "விலைமதிப்புள்ள பொருட்களைப் பற்றி 'எக்ஸ்ரே'நடத்தி, மக்களின் நகைகள் மற்றும் சிறுசேமிப்புகளைப் பறிமுதல் செய்யக் காங்கிரஸ் விரும்புகிறது. உங்களுக்கும் உங்களைக் கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டத்திற்கும் இடையே மோடி மட்டுமே பாதுகாப்புச் சுவர்."

    "முஸ்லிம் வாக்கு வங்கிக்காக எஸ்சி/எஸ்டி/ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறிக்கக் காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் கூறுகிறது."

    தராசு ஷ்யாம்

    தராசு ஷ்யாம்

     "உங்களுக்கு இரண்டு வீடு இருந்தால் ஒரு வீட்டைப் பிடுங்கி முஸ்லீம்களுக்குக் கொடுத்து விடுவார்கள்!"

    சொத்து, நகை மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைப் பற்றி வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சாமானிய வாக்காளர்களுக்கு என்ன கவலை! குந்தவே குடிசை இல்லை.. கோபுரத்தைக் கண்டது யார்?

    இதற்கிடையில் தேர்தல் களத்தில் பல மாற்றங்கள்! கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காணாமல் போனது. சூரத் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்று மாயமானார். இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பா.ஜ.க. விலேயே சேர்ந்தார்.

    முன்பே அகிலேஷ் உ.பி.யில் கடைப்பிடித்தது இந்த சூரத் பார்முலா. அவர் 2012-ல் பதவி இழக்க நேரிட்டபோது மனைவி டிம்பிளைக் களத்தில் நிறுத்தினார். அவருக்கு எதிரான பா.ஜ.க. வேட்பாளர் கடைசி நேரத்தில் காலை வாரினார். டிம்பிள் போட்டியில்லாமல் ஜெயித்தார்.

    ஆனால் அதன் பின் நோட்டா பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இப்போது "அன் அப்போஸ்ட்" என்று அறிவிக்கும அதிகாரம் தேர்தலை நடத்தும் அதிகாரிக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

    சூரத் இப்போது சுப்ரீம் கோர்ட்டில்! மோடி பரப்புரை செய்வதற்கு வசதியாக 2019-ல் பல கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முரட்டு தேசியவாதம் பற்றிய சொற்சித்திரம் வரையப்பட்டது. மோடியின் கரங்களில் தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.

    புல்வாமா 2019 அதற்குக் கை கொடுத்தது. ஆனால் புல்வாமாவைப் புஸ்வாணம் ஆக்கினார் காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால். அவர் மீது ஈடியும் சி.பி.ஐ.யும் பாய்ந்தன. இந்த முறையும் 44 நாட்களில் ஏழு கட்டத் தேர்தல்! அதே 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'! ஆனால் இந்திய எல்லைக்குள் சீனா தொடர்ந்து ஊடுருவி வருவதால் மோடியின் முரட்டு தேசியவாதம் எடுபடவில்லை.

    அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளுக்கு தங்கள் நாட்டுப் பெயரைச் சூட்டி வரைபடம் வெளியிட்டது சீனா. சியாச்சின் பனிப்பாறை அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இப்போது அது சாலை அமைத்து வருகிறது.

    முன்னெப்போதும் இல்லாத அளவு வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களைக் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிவீர் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு! விவசாயிகள், ராஜபுத்திரர்கள், சத்திரியர்கள், தலித்துகள் போராடத் துவங்கி உள்ளனர்.

    எனவே மறுசுழற்சி செய்யப்பட்ட இந்துத்துவா பரப்புரை இப்போது மீண்டும் கைகொடுக்கும் என்று மோடி நினைக்கிறார். ஆனால் சாப்பாடா, சாமியா? எது முக்கியம், பிரதமர் அவர்களே!

    பா.ஜ.க.வில் நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியல் இருந்தாலும், நடைமுறையில் இரண்டு பேர் மட்டுமே! மோடி மற்றும் அமித்ஷா! வெளிப்படையாகச் சொன்னால் முழுக்க முழுக்க மோடி தான்!

    பீகாரில் தேஜஸ்வி, உ.பி மற்றும் அண்டை மாநிலங்களில் அகிலேஷ், மகாராஷ்டிராவில் தாக்கரே பவார்; கர்நாடகாவில் சித்தராமையா, டி.கே.எஸ்., தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி. பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரம் இனி காந்திகளை மட்டுமே நம்பி இல்லை.

    அதே நேரத்தில் ஏழு கட்டப் பரப்புரைக் களம் பிரியங்காவுக்கும் ராகுலுக்கும் பெரிய வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    மூன்றாம் கட்டத் தேர்தலின் அதிரடித் திருப்பம் கர்நாடகாவில் ஏற்பட்டது. தேவேகவுடாவின் பேரன் ரேவண்ணா பாலியல் அத்துமீறல் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வெளிவந்தன. பா.ஜனதாவின் முக்கிய கூட்டாளி மதச் சார்பற்ற ஜனதா தளம். 2019-ல் கர்நாடகாவின் 25 தொகுதிகள் பா.ஜனதா வசம். ஜூன் 4-ந் தேதி என்ன கிடைக்கும்?

    ஆக, 370+ லட்சியம் எட்டமுடியாத நெடுங்கனவு! பா.ஜ.க. இப்போது வைத்திருக்கும் 303 இடங்களில் 32 இடங்களை இழந்தாலே தனிப்பெரும்பான்மை கேள்விக்குறி தான் ! கர்நாடகா அதற்குக் கட்டியம் கூறுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நரேந்திரமோடி என்ன நாடோடி மன்னனா, அல்லது பொன்னியின் செல்வனா?

    ×