என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- பல பல்கலைக்கழகங்களில் சகுந்தலா தேவி நிகழ்ச்சிகள் நடக்கவே இங்கிலாந்து பத்திரிகைகள் அவரைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்து எழுத ஆரம்பித்தன.
- சகுந்தலா தேவி பல நூல்களை எழுதியுள்ளார்.
இதோ சில கணிதப் புதிர்கள். விடைகளைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்:
1. ஒரு விசித்திரமான இரண்டு இலக்க எண் அது. அதனுடைய இலக்கங்களைக் கூட்டி வரும் எண்ணைப் போல மூன்று மடங்கு ஆகும் அந்த எண். அந்த எண் என்ன?
2. 1/81 – இதன் விடையை எழுதுங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.
3. 1789. இந்த எண்ணை ரோமன் எழுத்துக்களில் எழுத முடியுமா?
4. 100 அடி நீளமுள்ள ரிப்பன் ஒன்று இருக்கிறது. இதில் ஒரு அடி வெட்ட ஒரு வினாடி ஆகும். இந்த ரிப்பனை ஒரு அடி துண்டுகளாக வெட்ட எவ்வளவு நேரம் ஆகும்?
5. ஒரு தவளை 30 அடி உயரமுள்ள சுவரில் ஏறுகிறது. ஒரு மணி நேரத்தில் அது மூன்று அடி ஏறுகிறது. ஆனால் மூன்று அடி ஏறினால் அது இரண்டு அடி வழுக்கி கீழே வருகிறது. சுவரின் மேலே செல்ல அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
6. தீபாவளி தினத்தன்று பரிசு கொடுப்பது அந்தக் குடும்பத்தின் பழக்கம். இரண்டு தந்தைமார் பரிசு கொடுக்க முனைந்தனர். ஒரு தந்தை தன் மகனுக்கு ரூ.150 கொடுக்க இன்னொருவர் தன் மகனுக்கு ரூ.100 கொடுத்தார். ஆனால் அந்த இரண்டு மகன்களும் தங்களிடையே ரூ.150 தான் பரிசாக வந்ததைக் கண்டனர். இதற்கான விளக்கம் என்ன?
விடை:
1. அந்த எண் 27.
27 ; 2+7 = 9 ; 9 x 3 = 27
2. 0123456789 (பூஜ்யத்திலிருந்து ஒன்பது வரை தொடர்ந்து எண்கள் வருவதைக் கவனிக்கவும்)
3. M D C C L X X X I X
4. 99 வினாடிகள். 99வது அடியை வெட்டிய பின் மீதி இருக்கும் ரிப்பனை வெட்ட வேண்டாமே!
5. மொத்தம் 30 மணி நேரம் ஆகும் என்று சொன்னால் அது தவறு. 27வது மணி முடியும்போது அது உச்சியிலிருந்து மூன்று அடி கீழே இருக்கும். மூன்று அடி ஏறினால் அது சுவரின் வெளியில் வந்து விடும், இல்லையா?
6. அந்தக் குடும்பத்தில் இரண்டு தந்தைமார், இரண்டு மகன்கள் என்று நினைத்தால் அது தவறு. தாத்தா, அவர் பிள்ளை, பேரன் என்று மூன்று பேர் தான் அவர்கள். தாத்தா தன் பிள்ளைக்கு ரூ.150 கொடுக்க அதிலிருந்து பிள்ளை தன் மகனுக்கு (அதாவது தாத்தாவின் பேரனுக்கு ரூ.100 கொடுத்தார். ஆக 100 + 50 = ரூ.150 தான் மொத்த பரிசுத் தொகையாக ஆனது)

இது போன்ற நூற்றுக்கணக்கான கணிதப் புதிர்களைச் சொல்லி அசத்துபவர் ஒரு கணித மேதை. அவர் யார் என்று பார்ப்போமா?
கம்ப்யூட்டரை விட வேகமாக கணக்கைப் போட முடியும் என்று நிரூபித்தவர் யார்? 3 வயதிலேயே தனது கணிதத் திறமையைக் காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தவர் யார்? கின்னஸ் ரிகார்டில் தன் திறமையைப் பதிவு செய்தவர் யார்? இத்தனை கேள்விகளுக்கும் பதிலாக வரும் ஒரே பெயர் சகுந்தலா தேவி என்பது தான்.
பிறப்பும் இளமையும்: சகுந்தலா தேவி பங்களூரில் 1929ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் நாள் ஒரு அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை சி வி. சுந்தரராஜ ராவ் சர்கஸில் ஒரு ட்ரபீஸிய வித்தை நிபுணராகவும் கயிற்றில் நடந்து அனைவரையும் பிரமிக்க வைப்பவராகவும் பணியாற்றி வந்தார். சகுந்தலாவிற்கு மூன்று வயது ஆகும்போது கார்ட் வித்தைகளை விளையாட்டாக அவருக்கு தந்தை காண்பிக்க அனைத்து எண்களையும் அபாரமாக அவர் சொல்வதைக் கண்டு அவர் வியந்தார். தனது மகளின் திறமையைக் கண்ட தந்தை சர்கசில் இருந்து விலகினார். தன் மகளுக்கு ஆறு வயதாகும்போது பல தெருக்களிலும் அவரது திறமையைக் காட்டும் நிகழ்ச்சிகளை நடத்தலானார்.
காலம் செல்லச் செல்ல அவரது திறமையை உலகம் நன்கு அறிந்து கொண்டு பிரமித்தது. மைசூர் பல்கலைக்கழகத்திலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் அவர் தனது திறமையைக் காட்டினார்.
பின்னர் 1944ம் ஆண்டு அவர் தனது தந்தையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கு பல பல்கலைக்கழகங்களில் அவரது நிகழ்ச்சிகள் நடக்கவே இங்கிலாந்து பத்திரிகைகள் அவரைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்து எழுத ஆரம்பித்தன. அவர் முதலில் ஆங்கிலம் கற்கவில்லை என்றாலும் நாளடைவில் அதைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.
1950ம் ஆண்டு பிபிசி அவரைத் தனது நிகழ்ச்சிக்கு அழைத்தது. அங்கு லெஸ்லி மிட்சல் என்பவர் அவரைப் பேட்டி கண்டார். ஒரு சிக்கலான கணிதம் அவரிடம் கொடுக்கப்பட அதற்கான விடையை ஒரு சில விநாடிகளிலேயே சகுந்தலா கூறி விட்டார்.
ஆனால் விடைகள் மிட்செலின் விடைகளுடன் ஒத்துப்போகவில்லை.திருப்பி ஒரு முறை தனது விடையை மிட்செல் சரி பார்க்கும்போது சகுந்தலாவின் விடையே சரி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி உலகளாவிய விதத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதிலிருந்து அவருக்கு ஹ்யூமன் கம்ப்யூட்டர் (மனிதக் கணினி) என்ற பெயர் தரப்பட்டது. தொடர்ந்து பல நாடுகளிலும் அவரது கணித நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன.
1976ம் ஆண்டு நியூயார்க் நகரமே அவரது திறமையைக் கண்டு பிரமித்தது.
பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியரான ஆர்தர் ஜென்ஸன் அவரைத் தன் ஆய்வுக்காக அழைத்தார்.
616297875 என்ற எண்ணின் கனமூலம் என்னும் கியூப் ரூட்டையும் 170859375 என்ற எண்ணின் ஏழாம் மூலத்தையும் கண்டுபிடிக்குமாறு கூறினார்.
395, 15 என்று விடைகளை மனதிலேயே போட்டு அவர் கூற ஜென்ஸன் தான் இந்த எண்களை எழுதும் முன்னரேயே விடைகளை சகுந்தலா தேவி கூறியது பிரமிப்பூட்டும் ஒரு விஷயம் என்றார்.
201 இலக்கமுள்ள ஒரு பெரிய எண்ணின் 23வது மூலத்தைப் போடுமாறு அவரைச் சொல்ல அவர் 50 விநாடிகளில் விடையை (விடை 546372891) அவர் சரியாகக் கூறினார். இந்தக் கணக்கின் தீர்வைக் கண்டுபிடிக்க கம்ப்யூட்டரில் ஒரு தனி புரோகிராமையே எழுதி இதை சரிபார்க்க வேண்டி இருந்தது.
லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு 13 இலக்க எண்களைக் கொடுத்து அவற்றைப் பெருக்கி விடை தருமாறு கூற 28 விநாடிகளில் அதற்கான விடை 18, 947, 668, 177, 995, 426, 462, 773, 730 என்று கூறினார். இந்த நிகழ்வு கின்னஸ் புக் ஆப் ரிகார்ட்சில் பதிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு குழந்தையும் கணிதத்தில் மேதையாகலாம் என்று அவர் கூறியதோடு அதற்கான திறமையை எப்படி வளர்ப்பது என்பதையும் சொல்லித் தந்தார். தான் எப்படி மனதிலேயே இதை சாதிக்க முடிகிறது என்பதையும் அவர் விளக்கினார்.
மண வாழ்க்கை: ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் பரிதோஷ் பானர்ஜி என்பவரை அவர் மணம் புரிந்தார். அனுபமா பானர்ஜி என்ற ஒரு பெண் குழந்தை அவருக்கு உண்டு. ஆனால் 1979ல் தன் கணவரை அவர் விவாகரத்து செய்தார்.
அரசியல் ஈடுபாடு: அரசியலில் குதித்த அவர் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் லோக் சபா உறுப்பினராக ஆந்திராவில் மேடக் தொகுதியில் இந்திரா காந்திக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மும்பை தெற்குத் தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளராக நின்று அவர் தோல்வி அடைந்தார்.
நூல்கள்: சகுந்தலா தேவி பல நூல்களை எழுதியுள்ளார். 'பஸில் டு பஸில் யூ', 'தி வோர்ல்ட் ஆப் ஹோமோசெக்சுவல்ஸ்', 'மேதபிலிடி: அவேகன் தி மேத் ஜீனியஸ் இன் யுவர் சைல்ட்' போன்ற அவரது நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்களாகும்.
1977-ல் வெளியான ஓரினச் சேர்க்கையைப் பற்றிய அவரது நூல் தான் இதைப் பற்றி முழு ஆய்வு செய்யப்பட்ட நூலாக இருந்தது.
அவர் ஒரு ஜோதிட நிபுணரும் கூட. எண்களைப் பற்றிய மர்மங்கள் அனைத்தையும் அறிந்த பெரும் கணித நிபுணராக அவரை உலகம் அங்கீகரித்தது.
மறைவு: 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவாசக் கோளாறுகளுக்காக பங்களூரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அடுத்த இரு வாரங்களில் இதயத்திலும் சிறுநீரகத்திலும் பாதிப்புகள் ஏற்பட அவர் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி தனது 83ம் வயதில் மரணமடைந்தார்.
திரைப்படம்: சகுந்தலா தேவி பற்றிய திரைப்படம் ஒன்று 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடித்திருந்தார்.
சகுந்தலா தன் வாழ்க்கை மூலம் தெரிவிக்கும் ஒரு செய்தி இது தான். கடவுள் படைப்பில் - அல்லது இயற்கை என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் - அனைத்துமே எண்கள் தான் – கணிதம் தான்! "எல்லாமே எண்கள் தான்" என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன பிதகோரஸின் கூற்றை திடமாக, வலுவாக ஆமோதிக்கிறார் அவர்.
கணிதம் இல்லாத ஒரு பொருள் உலகத்திலேயே இல்லை. அவரது 'கணிதப் புதிர்களும் விடுகதைகளும் 'என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் விரிவாக இதைக் கூறுகிறார்.
"மனிதனும், மிருகங்களும் தங்கள் உள்ளுணர்வு மூலம் கணிதத்தை தங்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கின்றன. நத்தை தன் கூடை துல்லியமான கணித அடிப்படையில் உருவாக்குகிறது. சிலந்திகளின் கணித ஆற்றல் அதன் கூட்டை அமைக்கும்போது தெரிய வருகிறது. சோளம், சூரியகாந்திப் பூ ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தால் அவற்றில் கணித அமைப்பைக் காணலாம்." என்று அவர் கூறுகிறார்.

ச.நாகராஜன்
சகுந்தலா தேவியின் பொன்மொழிகளில் சில:
எண்கள் எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு; அவை பேப்பரில் அடையாளங்களாக மட்டும் உள்ளன!
கணிதமில்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே எண்கள் தான்!
கல்வி என்பது பள்ளிக்குச் சென்று ஒரு பட்டத்தைப் பெறுவது அல்ல; அது உங்கள் அறிவைப் பெருக்கி வாழ்க்கையைப் பற்றிய உண்மையை உள்ளே இழுத்து உணர்வதாகும்.
உங்கள் உடலில் உள்ள எந்த ஒரு தசையையும் பயன்படுத்தாவிடில் அது சுருங்கி வறண்டு விடும். அதே போலத் தான் மூளையும். அதை அதிகமாக பயன்படுத்தப் பயன்படுத்த அது இன்னும் சிறப்பாக ஆகிவிடும்.
கணிதம் என்றாலேயே ஏன் குழந்தைகள் அஞ்சி நடுங்குகின்றன? ஏனெனில் தவறான அணுகுமுறையே அதற்குக் காரணம். அதை ஒரு பாடமாக அணுகுவதனால் தான் இது ஏற்படுகிறது.
இந்தியாவின் பெருமைக்குரிய கணித மேதையாக விளங்கிய சகுந்தலா தேவியின் நூல்கள் நமது மூளை ஆற்றலை வளர்க்க உதவுபவை. அவற்றைப் பயன்படுத்துவோமாக.
- குளிர்காலத்திலும் உடலில் வெப்பம் சமநிலையில் இருந்து, குளிரைச் சமாளிக்கும் திறனுடன் இருக்க வேண்டியது அவசியம்.
- வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.
குளிர்காலத்தில் தாக்கும் நோய்கள் குறித்தும் தடுப்பு முறைகள் குறித்தும் பார்ப்போம்.
குளிர்ந்த, வறண்ட காற்று நமது எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்சினைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்சினைகள் படை எடுக்கும்.
இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
குளிர்காலத்தில் தோல் எளிதில் வறண்டு விடும். வறண்ட சருமம் ஈரப்பதத்தை இழக்கச் செய்து தோலில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, தோல் வெடிப்புக்குக் காரணமாகிறது.
குளிர்காலத்தில் தோலில் பாயும் ரத்தக் குழாய்களும் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபட்டு வியர்வை நாளச்சுரப்பி, எண்ணெய்ப் பசையைத் தோலுக்குத் சீராகச் தரும் சுரப்பி செயல்படாமல் போவதாலும் தோல் வறண்டு அரிப்பு ஏற்படும்.
குளிர் காலம் தீவிரமடையும் நேரத்தில் பசி அதிகம் இருக்காது. அஜீரணம் உருவாகலாம். பொதுவாக அதிக உணவுப் பொருட்களை ஜீரணிக்கும் சக்தி கொண்ட குடல் செயல்பாட்டில் மந்தம் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் உரிய உணவு வகைகளைச் சாப்பிடாவிட்டால், ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு உடலில் சோர்வு ஏற்படும்.
'நாம் அனைவரும் அறிந்தபடி, நம் உடலுக்கு வைட்டமின் டி இன் முக்கிய ஆதாரமாக சூரிய ஒளி உள்ளது. குளிர்காலத்தில் சூரிய ஒளி இல்லாததால், நம் வைட்டமின் டி அளவு குறையலாம். வைட்டமின் நிறைந்த உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் போன்ற நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.
உடல் ஆரோக்கியமாக இருக்கத் திடகாத்திரமாகப் பராமரிக்க வேண்டும். குளிர்காலத்திலும் உடலில் வெப்பம் சமநிலையில் இருந்து, குளிரைச் சமாளிக்கும் திறனுடன் இருக்க வேண்டியது அவசியம்.
முதியவர்களுக்கு இயல்பிலேயே உடல் வெப்பம் குறைவாக இருக்கும். குளிர்காலத்தில் இதன் தாக்கம் அதிகரித்து ஆபத்தைத் தரும். இதைத் தவிர்க்க குளிரிலிருந்து காக்கும் வகையில் நன்கு கனமான உடைகளை அணிய வேண்டும்.
மூட்டு வலி:
குளிர்காலத்தில் முதியவர்களுக்குக் கை, கால், மூட்டுகள் பன்மடங்கு விறைப்புத்தன்மை பெற்று முன்னங்கால் மூட்டு அதிகமாக வலிக்கும். இரவு நேரம் அதிகப்பனியால் முன்னங்கால் மூட்டு மேலும் பாதிக்கப்படும்.
இதைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா பயிற்சி, பிசியோதெரபி சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
காய்ச்சல்:
இது 'இன்ப்ளூயன்ஸா' என்ற வைரஸால் பரவும் சுவாச நோயாகும். அசுத்தமான பொருட்களைத் தொடுவதன் மூலம், தும்மும்போது அல்லது இருமும்போது காற்றில் பரவும் நீர்த்துளிகளிலிருந்து பரவும்.
மூச்சுக்குழாய் அழற்சி:
மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்தும் பல்வேறு வைரஸ்கள் உள்ளன, மிகவும் பொதுவானது ஆர்.எஸ்.வி. ஆகும். நீங்கள் அதை சளி அல்லது காய்ச்சல் வைரஸ் அல்லது உள்ளிழுக்கும் பாக்டீரியாவிலிருந்து உருவாக்கலாம். நீங்கள் புகைபிடித்தல், சைனசிடிஸ், டான்சில்கள் அல்லது ஒவ்வாமை மற்றும் காற்று மாசுபாடு போன்ற எரிச்சலூட்டும் காரணிகளால் கூட தொற்றை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஸ்ட்ரெப் தொண்டை:
இது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது. குழந்தைகளிடையே இது மிகவும் பொதுவானது. இது பெரும்பாலும் பள்ளியிலோ அல்லது விளையாடும் நேரத்திலோ குழந்தைகளிடையே பரவுகிறது.
நிமோனியா:
இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் சுவாசிக்கப்படும் ஒரு நோயாகும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் அல்லது ஆஸ்துமா, முதுமை அல்லது புகைபிடித்தல் போன்ற பிற நோய்களால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்போது இது பெரும்பாலும் நிகழ்கிறது.
குளிர்கால உணவு:
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள். இனிப்பு, புளிப்பு, உப்பு அதிகமுள்ள உணவு, கொழுப்பு அதிகமுள்ள கோதுமை உணவு, மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட உணவு, பால் பொருள்கள், கரும்புச்சாறு, வெந்நீர் ஆகியவை. பருவகாலப் பழங்கள், காய்கறிகள், வெப்பம் தரும் உணவு வகைகள் குறிப்பாக இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்த உணவுப் பொருள்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். உணவில் பூண்டு, இஞ்சி, மிளகு, புதினா ஆகியவற்றைச் சேர்த்துகொள்ளலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.
தும்பை பூவை நசியம் செய்யலாம்.
சுக்கு தைலம் மற்றும் நொச்சி தைலம் போன்றவற்றை தலை முழுக்கு செய்யலாம்.
சுவாச மண்டலம்:
மஞ்சள் மற்றும் பால் : மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சளியை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. வெதுவெதுப்பான பாலில் ½ டீஸ்பூன் மஞ்சள் கலந்து இரவில் குடிக்கவும். இது தொண்டை வீக்கத்தைக் குறைத்து, சளி தொற்றில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.
தோல் நீக்கிய இஞ்சி துண்டு, லவங்கம், துளசி இலை, கற்பூரவல்லி இலை, மிளகு, ஏலக்காய், இடித்த பூண்டு பெருஞ்சீரகம், ஓமம், சீரகம் இவற்றை தண்ணீரில் பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். இந்த வகை டீ நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உதவுவதோடு, குளிர்காலத்தில் சுவாசக் கோளாறுகளையும் சரியாக்கும்.
ஓமம், மஞ்சள் தூள், மூன்று துளி நீலகிரி தைலத்தை சேர்த்து ஐந்து நிமிடம் நீராவி பிடித்தால் மார்பு, நாசிப் பகுதிகள் விரிவடைந்து சளி வெளியேறிவிடும். இதனால் சளி தொந்தரவில் இருந்து சுலபமாக நிவாரணம் கிடைக்கும்
தேன் ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். எனவே, இது சுவாச நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தேனில் உள்ள பலன்களைப் பெற ஒரு கப் வெதுவெதுப்பான நீர் அல்லது தேநீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்த வேண்டும்.
பாத வெடிப்பு:

பாத வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒரு பக்கெட் சுடுநீரில் சிறிது உப்பு போட்டுக் கால் பாதங்களைப் பத்து நிமிடங்கள் வைத்து, பிறகு பாதங்களை நன்கு துடைத்துவிட்டு மாய்சுரைசிங் கிரீம் அல்லது ஹேண்ட் அண்ட் பாடி லோஷனைத் தடவி வரலாம்.
வறண்ட சருமம்:
வறண்ட தோல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. ஆனால் இங்கு குளிர் காலத்தில் ஈரப்பசை குறைவாக உள்ளதால் தோல் வறண்டு அதனால் அரிப்பு ஏற்படுகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கலாம். பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை அனைவரையும் பாதிக்கலாம். கோடையில் குறைவாகவும் காணப்படும். இந்த நோய் தீவிரமானால் நிரந்தரமாக அரிப்பு ஏற்படலாம். இதற்குச் சில தீர்வுகள் உள்ளன.
1. மிகவும் சூடான தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
2. 15 முதல் 20 நிமிடத்திற்குக் குறைவான நேரத்தில் குளிப்போர் குறிப்பாக வெதுவெதுப்பான நீரிலேயே குளிக்க வேண்டும். குழந்தைகளையும் அவ்வாறே பழக்க வேண்டும்.
3. குளித்த உடனேயே ஈரத்துடன் பேபி ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் தேய்த்து, பின்னர் காய்ந்த துண்டினால் ஒத்திக் கொள்வது நல்லது. எண்ணெயைத் தோல் உறிஞ்சிக் கொள்வதால் துணிகளில் ஒட்டுவதில்லை.
4. இதற்கும் அடுத்த படியாக ஈரப்பசை அதிகமாக்கும் களிம்புகளைத் தடவிக் கொள்வது சிறந்தது.
மேற்கூறியவற்றை அன்றாடம் செய்து வந்தால் வறண்ட தோல் நீங்கி இது முக்கியமாகக் குழந்தைகளின் தோல் வறண்டு போகாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டும். இதனைத் தடுக்க கற்றாழை அல்லது எண்ணெய் ஆகியவற்றை தடவி வர, எளிதில் தோல் வெடிப்பு சரியாகும்
உதடு வெடிப்பு:

உதடு வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசலாம். வறண்ட சர்மம் உள்ளவர்கள் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வர சர்மம் சீராகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க:
உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

இயற்கை மருத்துவர் நந்தினி, 9500676684
தொண்டை வலி:
குளிர் காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு, வலி இருந்தால் சமையல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம்.
வெந்நீரில் சிறிதளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவைத்து அருந்தினால், சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி போன்ற நோய்கள் நம்மை நெருங்காது. இவை எல்லாம் பொதுவாக குளிர்காலத்தில் நம் உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு வீட்டு மருத்துவம் மூலம் நம்மை எவ்வாறு தற்பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட வழிமுறைகள் ஆகும். மேலும் நோய் தீவிரப்படின் மருத்துவரை அணுகவும்.
- துர்வாச முனிவரின் சாபம் கேட்டு இந்திரன் நடுநடுங்கி போனான்.
- ‘சரஹணபவ’ - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
அத்திரி முனிவருக்கும் அனுசுயாவிற்கும் பிறந்தவர் துர்வாச முனிவர். இவர் ருத்திரனின் மறு அவதாரமோ என்று எண்ணும் அளவுக்கு முன்கோபம் உடையவர். மற்ற முனிவர்களைப் போல அல்லாமல் அவர் சாபமிடும்போதெல்லாம் அவரது தவவலிமை கூடும். அவரது சாபங்களால் பாதிப்படைந்தோர் பலர். இதனால் அவர் எங்கு சென்றாலும் மிகுந்த பயம் கலந்த மதிப்புடன் நடத்தப்பட்டார். காளிதாசரின் சாகுந்தலத்தில் சகுந்தலாவிற்கு தனது காதலனை மறக்க சபித்தவர் இவர்.
துர்வாசருக்கும் அம்பரீசனுக்கும் இடையே எழுந்த மோதல் கிருஷ்ணரின் சரிதையான பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
துர்வாசர் சாபம் மட்டுமே இடுபவர் அல்லர். தன்னை நன்றாக கவனித்துக் கொள்பவர்களுக்கு வரங்களும் கொடுத்திருக்கிறார். எடுத்துக்காட்டாக பாண்டுவின் மனைவி குந்திக்கு எந்த தேவரையும் நினைத்த மாத்திரத்தில் கூப்பிட அவர் அருளிய வரத்தை சொல்லலாம். இந்த வரத்தின் மூலமே கர்ணன், தருமன், பீமன், அர்ச்சுனன் மற்றும் மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் பிறக்க ஏதுவாயிற்று.
இத்தகைய சிறப்புடைய துர்வாச முனிவர் காசி மாநகரில் தன் பெயரால் லிங்கத்திரு மேனியை நிறுவி அதனை தினந்தோறும் வழிபட்டு வந்தார். அன்றும் அவ்வாறே துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வழிபட்டார். அவரது பக்திக்கு மகிழ்ந்த சிவபெருமான், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றைக் கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்தப் பிரசாதத்தை எடுத்து துர்வாச முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார்.
பின்னர் அதனை தேவர்களின் தலைவனான இந்திரனுக்குப் பரிசளிக்க எண்ணி தேவலோகம் விரைந்தார். துர்வாச முனிவர், சீற்றத்துக்குப் பெயர் பெற்றவர். அதீத சினத்தால் யார், எது என்றெல்லாம் பாராமல் சபித்து விடுவார்.
தேவேந்திரன், தனது வாகனமான ஐராவதத்தின் மீதேறி உலா வந்து கொண்டிருந்தான். தன் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்கள் பெற்றும் இந்திரனின் அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. வெண்மை நிறத்தில் இருந்த ஐராவதத் திற்குத் தன்னைக் குறித்தும், தனது நிறம் மற்றும் இந்திரனுக்கு வாகனமாக இருப்பது குறித்தும் மிகுந்த பெருமை இருந்தது. அது மகிழ்ச்சியுடனும், கர்வத்துடனும் தனது தலைவனைச் சுமந்து கொண்டு வந்தது.

இந்திரன் எதிரே வந்து கொண்டிருந்த துர்வாச முனிவர், அவன் நீடூழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் கமண்டலத்தில் இருந்த, சிவபெருமான் தனக்காக அளித்த பொற்றாமரையை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார்.
இந்திரன் சற்றும் பணிவின்றி, அந்தத் தாமரையின் மதிப்பை அறியாது மிகவும் அலட்சியமாக அதனை வாங்கி, அதைத் தன் யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். வெள்ளை யானையோ, அதன் புனிதம் அறியாது அந்தப் பொற்றாமரை மலரைத் தன் தும்பிக்கையால் எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு மிதித்தது.
அதைக் கண்ட துர்வாச முனிவருக்கு மிகுந்த கோபம் உண்டானது. விழிகள் சிவந்த அவர், "இந்திரா, சிவபெருமானின் பிரசாதத்தை நீ அலட்சியம் செய்து விட்டாய்! அதன் மதிப்புத் தெரியாமல் இந்த யானையிடம் கொடுத்தாய். அதுவோ அந்த மலரின்புனிதம் அறியாமல் தன் காலில் போட்டு மிதித்து விட்டது. அதனால், தேவேந்திரனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கரப்படை உன் தலையைக் கொய்து விடும்" என்று சாபமிட்டார்.
பின் வெள்ளை யானையான ஐராவதத்தை நோக்கி, "இந்திரன் உன் மீது வைத்த, இறைவனின் கருணையால் கிடைத்த தாமரை மலரை, அதன் பெருமை அறியாமல் உன் கால்களால் நசுக்கினாய். அதனால், உன் நான்கு கொம்புகளுடன் வெள்ளை நிறமும் நீங்கும், இன்று முதல் நீ கருமை நிறம் கொண்ட காட்டு யானையாக மாறுவாய். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் நூறாண்டு காலம் திரிவாய்" என்று சாபமிட்டார்.
துர்வாச முனிவரின் சாபம் கேட்டு இந்திரன் நடுநடுங்கி போனான். முனிவரின் கால்களில் விழுந்து கதறினான். தன் தவறுகளையும், யானையின் தவறையும் மன்னிக்கும்படி வேண்டினான். தேவர்கள் அனைவரும் துர்வாச முனிவரைப் பணிந்து வணங்கினர்.
துர்வாசர் அதுகண்டு சற்றே தன் கோபத்தை குறைத்தார். இந்திரனை நோக்கி, "இந்திரா நான் கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. என்றாலும், பாண்டிய மன்னனின் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்" என்று ஆறுதல் கூறினார். பின் "ஆணவச்செருக்கினை உடைய வெள்ளை யானை, காட்டு யானையாகி நூறாண்டு கழிந்தபின் இறைவனின் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறும்" என்று கூறினார்.
ஐராவதம் வெள்ளை யானை தன் ஆணவச் செயலுக்காகக் கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து, காட்டு யானையாக மாறியது. காடுகளுக்குள் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. பல வனங்களில் அலைந்து திரிந்தது. இப்படியே நூறாண்டுகள் கடந்தன.
துர்வாச முனிவர் மனமிரங்கி, இந்திரனைப் பார்த்து, கேடு வரும் போது கெடுமதியும் வரும் என்பார்கள், அது போல் நேர்ந்தது. வேலன் வளரும் திருச்செந்தூர் சென்று சண்முகன் பாதத்தை அன்புடன் வணங்குவாயாக. அவரைப் பணிந்து அருந்தவம் புரிவாயானால் சில நாட்கள் சென்றபின் தேவர்கள் அமுதம் வேண்டி கடலைக் கடைவார்கள். அப்போது உதிக்கும் அமுதத்துடன் லட்சுமி தோன்றுவாள். அந்த லட்சுமி உன்னைக் கண்டால் முருகன் கிருபையால் இச்சாபம் நீங்கும். பிறகு பொன்னுலகம் சென்றடையவாய்" என்று கூறிச் சென்று விட்டார்.
அதன்படி இந்திரன் திருச்செந்தூரை வந்தடைந்தான்.
கந்தனைப் பணிந்து அங்கு அரிய தவமிருந்தான். சில நாட்கள் சென்றபின் திருப்பாற்கடலை தேவர்கள் கடையும்போது உதித்த அமுதத்துடன் லட்சுமி பிறந்தாள். அவள் திருமுகத்தை இந்திரன் தரிசிக்கவே சாபம் நீங்கப் பெற்றான். முருகன் கிருபையால் பொன்னுலகம் சென்று சகல சம்பிரமத்துடன் அரசு புரியலானான்.
இந்திரன் திருச்செந்தூரில் தவம் புரிந்தபோது வெள்ளை யானை தன் எஜமான் தன்னால் அல்லவா இச்சாபம் வாங்க நேர்ந்தது. ஆகையால் இப்பாவம் தீர கந்தன் பாதத்தை அர்ச்சனை புரியவேண்டுமென்றே ஆவலினால் நாரதரைப் பணிந்து சக்தி வேலேந்திய கந்தனைப் பூஜிப்பதற்கேற்ற மந்திரத்தை உபதேசிக்க வேண்டுமாறு கேட்டது.
நாரதரும் மிக்க மகிழ்ச்சியுடன் வெள்ளை யானையின் தீவிர பக்தியை மெச்சி சடாட்சர மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

சரவணபவ என்பது முருகனுக்குரிய சடாட்சர மந்திரம். சரவணபவ என்ற மந்திரத்தில் ஒரே அட்சரமான 'வ' இருமுறை வரக்கூடாது என்பது ஒரு தத்துவம் என்பதால் "சரஹணபவ" என்று முருகனுக்குரிய சடாட்சர மந்திரம் ஆனது.
இதை சொல்லும் விதத்தில் நன்மைகள் கிடைக்கும்.
1. 'சரஹணபவ' - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
2. 'ரஹணபவச' - என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
3. 'ஹணபவசர' - என தொடர்ந்து ஜெபித்து வர பகை,பிணி நோய்கள் தீரும்.
4. 'ணபவசரஹ' - என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
5. 'பவசர ஹண' - என தொடர்ந்து ஜெ பித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
6. 'வசரஹணப' - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும். ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.
90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும் வெற்றிலை, பாக்கு, திணை மாவு, பழங்கள் வைத்து வழிபட வேண்டும்.
மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம். கல்கண்டு கூட படைக்கலாம். ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து (அதாவது மேலே முதலாவது கோணம்) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் "றீங்'' என்று எழுதி ஜெபம் செய்து அந்த விபூதியை அணிந்து வர விரைவான சிறந்த பலன் உண்டாகும்.
மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் "ஓம் றீங்"எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும் என்பது ஐதீகம்.
அம்மந்திர உபதேசத்தைப் பெற்று ஐராவதம் தன் கவலை நீங்கிற்று. ஆனந்தக் கண்ணீர் விட்டது. முருகக் கடவுளை வணங்கி திருச்செந்தூரையும் அதன் எல்லையையும் சந்தோஷத்துடன் பிரதட்சிணம் வந்தது. சண்முகமூர்த்தியின் பாதகமலங்களை அர்ச்சித்தது.
இவ்விதம் ஐந்து நாட்கள் இரவும், பகலும் பூசித்து குமாரக் கடவுளின் பெருங்கருணையால் பாவம் நீங்கி தேவேந்திரனிடம் சென்று இன்பமாக வாழ்ந்து வந்தது.
இந்திரனும், ஐராவதம் யானையும் திருச்செந்தூருக்கு வந்து முருகனை வழிபட்டு சாபம் நிவர்த்தி பெற்றதை வியாச முனிவர் தனது மகன் சுகமுனிவருக்கு தெரிவித்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.
கந்தவேளின் கருணைக் கொண்(டு) இந்திரன் முந்து பக்கத்து மொய்ம்புடன் சென்றதே என்ற வரிகள் மூலம் திருச்செந்தூர் முருகனின் அற்புதம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இதே போன்று திருச்செந்தூர் முருகன் செய்த மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- நமது தேவைகளே நமது விருப்பங்களை நமக்கு வடிவமைத்துத் தருகின்றன.
- நமது அன்றாட வாழ்வியலே நமது அவ்வப்போதைய மனவிருப்பங்களைச் சார்ந்ததாகவே அமைகின்றது.
ஆசைக்கு அளவு உண்டா? அதற்கும் ஓர் அமைதி உண்டா? என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
உடம்பின் மூலை முடுக்கெல்லாம், நாடி நரம்புகளிலெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன ஆசையின் குரல்கள். நமது ஒவ்வொரு அணுவளவு அசைவுக்கும் ஆசைகளே காரணங்களாக இருக்குமென்றால் நாம் எப்படி ஆசையைச் சாந்தப்படுத்துவது? அமைதியில் ஆழவைப்பது?.
நமது ஆசையே நமது எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று வள்ளுவர் முதலான ஞானிகளும் அறிஞர்களும் தெள்ளத் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளனர்.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்"
எனும் வள்ளுவக் குறள், எந்தெந்தப் பொருள்களின் மீதும் செயல்களின் மீதும் நமக்கு ஆசைகள் இல்லையோ அந்தந்தப் பொருள்களாலும் செயல்களாலும் நமக்குத் துன்பங்கள் இல்லை என்று அனுபவ வார்த்தை பகர்கிறது. துன்பமில்லாத வாழ்க்கை வாழவேண்டுமானால், கடவுளின் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆன்மீகம், "ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்!" என்கிறது. எல்லா ஆசைகளையும் அறுப்பதற்கு, கடவுள்மீது கொண்டுள்ள ஆசையையும் அறுத்து எறியுங்கள் என்பது இதற்குப் பொருள்.
ஆசையில்லாத, பற்றற்ற துறவு வாழ்க்கை என்பது ஒருகாலத்தில் உலக வாழ்வை வெறுத்து வனங்களுக்குச் சென்று தவமியற்றுகின்ற துறவிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய வாழ்வியல் போக்குகளைக் கணிக்கும்போது ஆசையற்ற வாழ்வே அமைதியான இல்லற வாழ்வுக்கும் ஏற்றதாக நினைக்கப் படுகிறது. இன்று உலகமெங்கும் பரபரப்பாகப் பயிற்றுவிக்கப்படுகிற யோக முறைகளும், தியான நிலைகளும் புதுமையான வழிகளில் இதனையே வலியுறுத்தவும் செய்கின்றன.
நமது வாழ்வியல் அசைவுகளின் மற்றொரு பக்கத்தை உற்றுப் பார்த்தால், ஆசைகளே நம்மை வழிநடத்துகின்றன என்பதையும் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அன்றாடம் நமது தேவைகளும் ஆசைகளும் புதிது புதிதாகப் பெருகிக்கொண்டே செல்லச்செல்லப், புதுமையான கண்டுபிடிப்புகளும் வசதி வாய்ப்புகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன.' தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய்' என்பது அழகான ஓர் ஆங்கிலப் பழமொழி.
நமது தேவைகளே நமது விருப்பங்களை நமக்கு வடிவமைத்துத் தருகின்றன. விருப்பங்கள் பெருகப் பெருக அவை ஆசைகளாக உருமாறத் தொடங்குகின்றன. ஆசைகள் நமக்குத் துன்பங்களைத் தரப் போகின்றனவா?
இல்லை இன்பங்களை வாரி வழங்கப் போகின்றனவா? என்பது நாம் நமது ஆசைகளைக் கையாளும் திறமைகளைப் பொறுத்தே அமையும். நமது அன்றாட வாழ்வியலே நமது அவ்வப்போதைய மனவிருப்பங்களைச் சார்ந்ததாகவே அமைகின்றது.

சுந்தர ஆவுடையப்பன்
பசி என்பது நம் உடலின் இயல்பான உணர்வு; பசிக்கிற நேரத்தில் ஊறுவிளைவிக்காத சமைத்த உணவு எதையாவது வயிற்றுக்குள் அனுப்பிவிட்டாலே போதும்; பசி அடங்கிவிடும். ஆனாலும் உணவு வயிற்றைச் சென்று அடைவதற்குமுன் அது வாய்க்குள் புக வேண்டும்; புகுந்த உணவை, உமிழ்நீரோடு பிசைந்து, பற்களால் அரைத்து, நாவின் சுவை நரம்புகளால் சுவைத்து உள்ளே உணவுக்குழாய் வழியே அனுப்பிவைக்க வேண்டும். அப்போது தான் அது உரிய காலத்தில் சீரணமாகும்.
உணவென்று எதைப் பார்த்தாலும் வாயில் உமிழ்நீர் சுரந்து விடுவதில்லை; அந்த நேரத்தில் எதைச் சாப்பிடவேண்டும் என்று முதலில் மனம் தீர்மானிக்க வேண்டும்; அது தீர்மானிப்பதற்கு வசதியாக ஏற்கனவே சுவைத்துப்பார்த்த அனுபவத்தை நாக்கு மனத்திற்குச் சொல்ல வேண்டும்; உணவின் நிறம் மற்றும் நறுமணம் நமது கண்களையும் நாசியையும் சுண்டி இழுப்பதாக இருக்க வேண்டும். அப்படியானால் ஒரு கவள உணவை நாம் உரிய முறையில் உண்பதற்கு ஐந்து புலன்களும் மனமும் ஒத்துழைப்பு நல்குவதாக அமைய வேண்டும். இந்த இடத்தில் தான் விருப்பம் என்பது அரும்ப ஆரம்பிக்கிறது.
உணவு விடுதிக்குள் பசியோடு நுழைந்தாலும், வயிற்றுக்கு இலகுவான நான்கு இட்லிகளை மட்டுமே சாப்பிடவேண்டும் என்று தீர்மானத்தோடு நுழைந்தாலும், மேஜையின் எதிரே ஒருவர் பரோட்டாவையும் சால்னாவையும் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சுவையான காட்சியைப் பார்த்தவுடன், நமது விருப்பத்தை மாற்றி நாமும் பரோட்டாவுக்குத் தாவ நேரிட்டுவிடுகிறது. இது உரிய முறையில் ஒன்றிரண்டு பரோட்டாவோடு நின்று, சீரணமாகிவிட்டால் துன்பமில்லை; ஆனால் விருப்பம் அளவிறந்த ஆசையாகி, எண்ணிக்கை பன்மடங்காகி, சீரணக் கோளாறாகி அடுத்த ஒருவாரத்திற்கு எதுவுமே சாப்பிடமுடியாமல் அவதிப்பட நேர்ந்தால், அதுவே ஆசைதருகிற துன்பமாகிப் போகும்.
மனித விருப்பங்கள் ஆசைகளாகிப் பெருகுவது பெரும்பாலும் உணவு, உடை, உறையுள் எனப்படும் வீடு ஆகிய மூன்று பொருண்மைகளில்தான். அளவான உணவு மருந்தாகி உடம்பைப் பேணிக் காக்கும்; அளவுக்கு மீறிய உட்கொள்கை உணவையே நோய்தரும் மூலங்களாக்கி அல்லல்படுத்தும்; சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, உப்பு போன்றவை உணவின் மீது மனிதன் கொண்டுள்ள அளவிறந்த ஆசையால் விளைந்த துன்ப நோய்கள்; மற்ற நோய்களும் இணைநோய்களாக, உடம்பில் அவ்வப்போது வந்து இருக்கை அமைத்துக்கொள்ளும். உடை என்பது மானம் மறைப்பதற்கும் மரியாதை பேணுவதற்கும் உடுத்தப்படுவது; ஆனால் அளவிறந்த ஆசையால் உருவாகும் உடைமோகம், பொருள் விரயத்தையும், நாகரிக அவலத்தையும் ஏற்படுத்திப் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றது.
அதனால் தான் மனிதன், உணவு உடை விஷயத்தில் அளவோடு வாழ்ந்து ஆசைகளைக் கட்டுப்படுத்திச் செல்வத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நக்கீரர், "உண்பது நாழி உடுப்பவை இரண்டே! பிறவும் எல்லாம் ஓரொக்குமே!" என்கிறார். உறையுள் எனப்படும் வீடு சார்ந்த வீட்டு உபயோகப் பொருள்களின் மீது மனிதனுக்கு இருக்கும் ஆசை எல்லையற்று வளர்ந்துகொண்டே போவதாகும். ராஜபோகம் என்பது ஒருநாட்டில் ராஜா மட்டுமே வாழுகிற ஆடம்பர வாழ்க்கை; ஆனால் இன்றோ மக்கள் அனைவரும் ராஜா போலவே ராஜபோகமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்; மக்களாட்சிக் காலத்தில் எல்லோரும் ஆசைப்படுவதில் தப்பில்லை; ஆசைக்கேற்ற நேர்மையான உழைப்பும் சம்பாத்தியமும் அமையாத பட்சத்தில், உழைப்புக்கும் சம்பாத்தியத்திற்கும் ஏற்ற வகையில் நேர்மையான ஆசைகளை அளவாக அமைத்துக் கொள்வதில் தவறே இல்லை.
ஒரு நாடு வளமிக்க நாடாகத் திகழ்ந்தது; நாட்டை ஆண்டுவந்த அரசருக்குக் குழந்தைகள் கிடையாது; எனவே அவருக்குப்பின் நாட்டில் மன்னராகப் பொறுப்பேற்கப் போவது யார்? என்பது தெரியாமலேயே அரசாங்கம் நடந்து வந்தது. ஒரு நாள் மன்னரும் மரணமடைந்தார்; உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறுநாள் அமைச்சரவை கூடி அடுத்த மன்னரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்கிற ஆலோசனை நடத்தப்பட்டது. வாரிசு இல்லாத நாட்டில் அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுக்கும் பழைய முறையையே இங்கும் கடைப்பிடிப்பது என்று அமைச்சரவையில் முடிவானது.
அதன்படி நாட்டுமக்கள் அனைவரையும் ராஜபாட்டைக்கு வரச்சொல்லி, நாட்டின் பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து உலா வரச் செய்தார்கள். நடந்துவரும் பாதையில் யார்கழுத்தில் யானை மாலையைப் போடுகிறதோ அவரையே மன்னராக ஏற்றுக்கொண்டு பட்டம் சூட்டி ஆட்சிபுரிய வைப்பதெனத் திட்டம். ராஜவீதியின் இருபுறமும் நின்றிருந்த மக்களைப் பார்த்த படியே கையில் மாலையுடன் யானை நடந்து வந்தது. அந்தக் கூட்டத்தில், நடக்கும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பதற்காகக் காட்டிலிருந்து ஒரு துறவியும் வந்து நின்றிருந்தார். யாரும் எதிர்பாராத வகையில், யானை தனது துதிக்கையிலிருந்த மலர்மாலையை அங்கு நின்றிருந்த துறவியின் கழுத்தில் போட்டுவிட்டது.
காவலர்கள் புடைசூழ அமைச்சர்கள் வந்து துறவியை வணங்கி, ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தார்கள். 'நான் துறவி! நமக்கு இதுவெல்லாம் ஒத்து வராது! என்னை விட்டுவிடுங்கள்!' என்று எவ்வளவோ வாதாடிப்பார்த்தும், அமைச்சர்கள் விடுவதாயில்லை; "இது தெய்வத்தின் கட்டளை" என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று துறவிக்குப் பட்டம் சூட்டிவிட்டார்கள். துறவியோ தனது இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ளாமல், ஆசையோ பற்று, பாசமோ எதுவுமின்றி ஆட்சியை நடத்தி வந்தார். நாடும் நல்ல வளத்தோடு செழித்திருந்தது.
'துறவி ஆளும் நாடு செழிப்போடு இருப்பதா?' என்று பொறாமைப்பட்ட பக்கத்து நாட்டு அரசன், சொல்லாமல் கொள்ளாமல் நாட்டைக் கைப்பற்றப் படையெடுத்து வந்து விட்டான். துறவிநாட்டின் தளபதியும் அமைச்சர்களும் அரசனான துறவியிடம் வந்து, "கட்டளயிடுங்கள்! நொடிநேரத்தில் போர்நடத்தி வீழ்த்தி , எதிரிநாட்டு மன்னனைத் தங்கள் காலடியில் பணிய வைக்கிறோம்!" என்று அனுமதி கேட்டார்கள். துறவி ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்,"போர் வேண்டாம்! எனக்கு இருக்கிற நாட்டை நடத்துவதே சிரமமாக இருக்கிறது. இதில் புதிய நாட்டைப் பிடிக்கும் ஆசையே இல்லை; எதிர்க்காதீர்கள்; எதிரிப்படை உள்ளே வந்து நாட்டை எடுத்துக்கொண்டு போகட்டும்!" என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார்.
எதிரி நாட்டு மன்னன் நேராகத் துறவியிடம் வந்தான், " வாருங்கள் சண்டைக்கு!" நேருக்கு நேராக அழைத்தான். துறவி கூறினார், " நான் துறவி!, உலக நன்மையில் மட்டுமே அக்கறை உள்ளவன்!; எனக்குச் சண்டையில் விருப்பமில்லை; உன் நாடு மட்டுமல்ல; இந்தநாட்டையும் சேர்த்துத் தருகிறேன். தாராளமாக எடுத்துச்செல்!. நான் நிம்மதியாகக் காட்டிற்குச் செல்கிறேன்!. நீ உனது ஆசை நிறைவேறிய நிம்மதியில் இந்த நாட்டையும் சேர்த்து ஆண்டு கொள்! " என்றார். துறவியின் பேச்சில் மனம் மாறிய அரசன், " துறவியர் பெருமானே! நானும் மாறிவிட்டேன்!. உங்கள் நாடு எனக்கு வேண்டாம். அதோடு இதுவரை நான் ஆண்ட என்னுடைய நாட்டையும் உங்களிடமே ஒப்படைக்கிறேன்; என்மக்களும் இனி உங்கள் ஆட்சியில் நிம்மதியாக இருக்கட்டும்; காட்டிற்குச் சென்று துறவியாகி நானும் நிம்மதியாக இருக்கிறேன்" என்று கிளம்பிவிட்டான்.
ஆசை வளர்ந்துகொண்டே போகும்! துன்பங்களையும் வளர்த்துக்கொண்டே போகும்; ஆசையின்மை நிம்மதியைப் பெருக்கும்; இல்லாமையை இல்லாமையாகக் கருதாத மன நிறைவை அளிக்கும்.
விருப்பங்களும் ஆசைகளும் உலகியல் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் செயலூக்கிகள். ஆனால் அவற்றை அளவோடு எல்லையறிந்து வைத்துக்கொண்டால் எல்லையற்ற மகிழ்ச்சிதான். புள்ளிகள் இல்லாமல் கோலங்கள் இல்லை; ஆனால் புள்ளிகளே கோலங்களும் இல்லை. ஆசைகள் இல்லாமல் வாழ்வியல் இல்லை; ஆனால் ஆசைகள் மட்டுமே வாழ்வியலும் இல்லை. ஆசைகளை அமைதிப்படுத்துவோம்.
தொடர்புக்கு 9443190098
- மருத்துவரை எந்தச் சிகிச்சையும் செய்ய ரமணர் அனுமதிக்கவில்லை.
- ஆன்மாவே நிலையானது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
ரமணாஸ்ரமத்தில் அனைவர் நெஞ்சங்களும் துயரில் ஆழ்ந்திருந்தன. ஏதோ நடக்கப் போகிறது என்று எல்லோருக்கும் மனத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது. நடக்கப் போவது என்ன என்றும் தெரியும்.
ஆனால் அதை எதிர்கொள்ள யார் மனமும் தயாராக இல்லை. எல்லோரும் யோசனையோடு நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
1950 ஏப்ரல் 13. மகரிஷி ரமணருக்கு நுரையீரல் அடைப்பு. மருந்துகள் கொடுத்து சுவாசத்தைச் சரிசெய்ய வேண்டும். மருத்துவர் ஸ்ரீரமணர் அருகே போனார். ஆனால் மருத்துவரை எந்தச் சிகிச்சையும் செய்ய ரமணர் அனுமதிக்கவில்லை.
''தானே எல்லாம் சரியாகிவிடும்!'' என்றார் ரமணர்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது சிலருக்குப் புரிந்த மாதிரி இருந்தது. ஆனால் அந்த அர்த்தத்தில் அவர் சொல்லியிருக்க மாட்டார் என்பதாக அவர்களே தங்களைச் சமாதானம் செய்துகொள்ள முயன்றார்கள்.
சிலமணி நேரங்கள் மெல்ல நகர்ந்தன. ஸ்ரீரமணர் தன்னைச் சுற்றி இருந்த அனைவரையும் அங்கிருந்து போகச் சொல்லிவிட்டார்.
அவருக்குத் தொடர்ந்து பணிவிடை செய்யும் ரங்கசாமி மட்டும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஸ்ரீரமணர் காலடியிலேயே அமர்ந்திருந்தார். ரங்கசாமி பெற்ற பாக்கியத்தை எண்ணி மற்றவர்கள் மனத்தில் வியந்து கொண்டார்கள்.
மகரிஷி மறுநாள் காலையில் ரங்கசாமியை ஜாடைகாட்டி அழைத்தார். மெல்லிய குரலில் அவரிடம் ''தேங்க்ஸ் '' என்று ஆங்கிலத்தில் சொன்னார். ரங்கசாமிக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே அந்த வார்த்தைக்குப் பொருள் புரியாது விழித்தார்.
மகரிஷி புன்முறுவல் பூத்தவாறே ''தேங்க்ஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையாகத் தமிழில் ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என்றால் சந்தோஷம் என்று சொல்லலாம்'' என்றார். ரங்கசாமி முகத்தில் ஒரு மெல்லிய முறுவல் படர்ந்தது.
என்ன நடக்கப் போகிறதோ என்று காலையிலிருந்து மதியம் வரை அன்பர்கள் மஹரிஷியின் சிறிய அறையை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். எல்லோருக்கும் அவரை எப்படியாவது தரிசித்துவிட வேண்டும் என்று தீராத ஆர்வம் இருந்தது.
ஆனால் ஸ்ரீரமணர் மேனி மிகவும் பலவீனமடைந்து விட்டது. எடை அளவுகடந்து குறைந்துவிட்டது. உடல் சற்றுக் கறுத்துவிட்டதுபோல் தோன்றியது.
என்றாலும் முகத்தின் பொலிவும் கண்களின் ஒளியும் குன்றவில்லை. நோய்வாய்ப்பட்ட சிம்மம் போல் அவர் படுத்திருந்தார்.
மகரிஷி என்பதால் உடல்வலி அவருக்கு இருக்காதா என்ன? யாராயிருந்தாலும் ஆன்மா உடலில் தங்கியிருக்கும் வரை உடல் உபாதைகளை அனுபவித்துத் தானே தீரவேண்டும்?
ரமணருக்குக் கடுமையான வலி இருந்தது. ஆனால் அவர் அதைப் பலர் முன்னிலையில் வெளிப்படுத்தியதில்லை.

திருப்பூர் கிருஷ்ணன்
தனியே இரவுப் பொழுதுகளில் அவர் துன்பத்தால் அவதிப்படுவது தெரிந்தது. மற்றவர்கள் கவனிக்காத போதுதான் அவர் தனது உபாதைகளை, வலிகளை வெளிப்படுத்தினார். சோபாவில் படுத்திருக்கும் அவரிடமிருந்து மெல்லிய முனகல் கேட்பதுண்டு.
அதைப்பற்றி அவரிடம் விசாரத்தாலோ, அதுசரி, வலி ஏற்படுவது உடலின் இயற்கைத் தன்மை தானே, அதனால் என்ன என்பார்.
எப்பேர்ப்பட்ட ஞானியாக இருந்தால்தான் என்ன? உடலில் நோய்வந்தால் அது வலிக்கத்தானே செய்யும்? ஆனால் அந்த வலியை வெளிப்படுத்துவதில்தான் ஞானிகளுக்கும் சாதாரணமானவர்களுக்கும் வித்தியாசம். ஞானிகள் பிறர் அறியத் தங்கள் வேதனைகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். தங்கள் வலிகளை அமைதியாகப் பொறுத்துக் கொள்வார்கள்.
எவ்வளவு வலி இருந்த போதிலும் ஸ்ரீரமணர் பக்தர்கள் தம்மைத் தரிசனம் செய்ய வருவதை ஒருபோதும் தடுக்கவில்லை. தம்மை வந்து தரிசித்த அன்பர்களை அவர் மிகுந்த கருணையோடு பார்த்து அனுக்கிரகம் செய்தார்.
மனிதர்கள்மேல் அவருக்கிருந்த கருணையைப் போலவே ரமணாஸ்ரமத்தில் வாழ்ந்த இதர உயிரினங்களான பறவைகள், விலங்குகள் மீதெல்லாம் அவர் கடைசிவரை அதிக அக்கறையோடிருந்தார்.
அவர் மறைவதற்குச் சில மணி நேரங்கள் முன்பாக ஆசிரமத்தில் அருகே மரங்களில் வசித்த ஏராளமான மயில்கள் உரத்துக் குரல் கொடுத்தன. தன் பக்கத்தில் இருந்தவரைக் கையசைத்து மெல்லக் கூப்பிட்டார் ரமணர்.
மெல்லிய குரலில், ''மயில்களுக்கெல்லாம் உணவு போட்டாச்சா?'' என்று அக்கறையோடு வினவினார். மயில்கள் ஏனோ அவரது அறையைச் சுற்றிச் சுற்றி வந்தன.
பசுக்கள், நாய்கள், குரங்குகள் என அங்கிருந்த எல்லா விலங்குகளுமே நிம்மதியின்றி இருப்பது அனவைருக்கும் கண்கூடாகத் தெரிந்தது. தங்கள் மேல் பேரன்பு செலுத்தும் எஜமானனுக்கு உடல் நலமில்லை என்பதை அவை உணர்ந்து கொண்டன. அவை என்ன செய்வது என்றறியாது திகைத்தன.
ஒரு வெள்ளை மயில் ஆசிரமத்திற்கு அடிக்கடி வரும். மகரிஷியின் அருகே வந்து நிற்கும். அன்று அந்த வெள்ளை மயில் ஸ்ரீரமணர் இருந்த அறையின் கூரைமேல் ஏறி நின்று நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் கத்தியது. அந்த மயிலின் அகவல் எதையோ உணர்த்துவதாக எண்ணிய பக்தர்கள் கண்ணீர் சிந்தினார்கள்.
பல பக்தர்கள் பகவான் ரமணர் மேல் கொண்ட அன்பால் கதறத் தொடங்கினார்கள். ''எங்களை விட்டு நீங்கள் எப்படிப் போகலாம்?'' என்று அவர்கள் பகவானிடம் வினவினார்கள். ஸ்ரீரமணர் வேதனையை மறந்து நகைத்தார்.
''எதற்கு என்னுடைய தேகத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? தேகம் இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் அழிய வேண்டியதுதானே?
உங்கள் குரு இந்த தேகம் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. இல்லவே இல்லை. இந்த தேகம் இல்லாவிட்டாலும் கூட உங்கள் குரு உங்களை விட்டு என்றும் போகமாட்டார்.
ஆன்மாவே நிலையானது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களில் நான் உண்டு, என்னில் நீங்கள் உண்டு. என்னை தரிசித்தாயிற்று அல்லவா? இனி ஆனந்தமாகச் சென்று வாருங்கள்'' என்று துன்பத்தால் பெரிதும் துயருறும் பக்தர்களை அவர் சமாதானம் செய்து அனுப்பி வைக்கத் தொடங்கினார்.
1950 ஏப்ரல் மாதம் பதினான்காம் தேதி. மாலைப் பொழுது. எந்தக் கணத்திலும் ரமணர் தம் பூத உடலில் இருந்து புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பெரிய தலையணைகளில் சாய்ந்து கொண்டிருந்தார். உட்கார்ந்தவாறு தலையைப் பின்புறம் சாய்த்துக் கொண்டிருந்தார். வாய் சிறிது திறந்திருந்தது. சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
சில நிமிஷ நேரங்கள் அவருக்குப் பிராணவாயு செலுத்தினார்கள். அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அதையெல்லாம் எடுத்து விடுங்கள் என்று பகவான் சைகை காட்டினார்.
கடைசி நிமிஷங்களில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (தமிழக முதல்வராக இருந்தவர்) மகரிஷியின் கூடவே இருந்தார். அவர் படும் சிரமத்தைப் பார்த்து ஒரு திரை போட்டு, தரிசிக்க வந்த மக்கள் கூட்டத்தை தரிசனம் வேண்டாம் என்று விலக்கினார்.
மகரிஷி படும் அவஸ்தையை அவரும் கண்ணால் காண இஷ்டப்படவில்லை.
மகரிஷி தன்னை நிமிர்த்தி உட்கார வைக்கச் சொன்னார். 'அருணால சிவா...'' என்று அருகிலிருந்தோர் தியான பாராயணம் செய்தார்கள். மகரிஷி அதை ஆனந்தமாகக் கேட்டார். கண்களை அகலத் திறந்து பார்த்தார். அவர் விழிகள் ஒளி வீசின. அவர் முகத்தில் மெல்லிய முறுவல் படர்ந்தது.
கண்களில் நீர் பெருகி அவரது ஒட்டிய கன்னங்களில் வழிந்தது. பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டார். ஆழ்ந்து ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு அவர் உடலில் எந்த அசைவும் இல்லை. அப்போது நேரம் சரியாக இரவு 8.47 மணி.
அவருக்கு விசிறிக் கொண்டிருந்தவர்கள் விசிறுவதை நிறுத்தினர். விசிறும் சப்தம் கேட்கவில்லை என்பதிலிருந்தே திரைக்கு வெளியே இருந்த அன்பர்கள் விஷயத்தைப் புரிந்து கொண்டார்கள். பகவான் பூத உடலை உகுத்துவிட்டார். அதையறிந்த துயரத்தில் துடித்த இதயங்கள் வெகுநேரம் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தன.
வானத்தில் அன்றிரவு சரியாக 8.47மணிக்கு ஒரு வால் நட்சத்திரம் பளிச்சென்று மின்னி விரைந்து சென்று அருணாசல மலைகள் மேல் பறந்து சிகரத்தின் பின் மறைந்ததைப் பார்த்ததாக பல பத்திரிகைகள் மறுநாள் எழுதின.
இவ்விதம் வால் நட்சத்திரம் ஒன்று ஸ்ரீரமணர் ஸித்தி அடைந்தபோது அதே கணத்தில் தோன்றி வானில் கலந்த சம்பவத்தைக் கல்கி கிருஷ்ணமூர்த்தி தம் கட்டுரையொன்றில் பதிவு செய்திருக்கிறார்.
அப்போது சிறுமியாக இருந்த நடனமணி பத்மா சுப்பிரமணியம் சென்னையில் தாம் குடும்பத்தோடு வெளியே நின்று கொண்டிருந்தபோது அந்த நட்சத்திரத்தைப் பார்த்து வியந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஹென்றி கார்டியர் ப்ரெஸ்ஸன் ரமண பக்தர். அவர் திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தின் அருகே வசித்துக் கொண்டிருந்தவர். அவர் சொல்கிறார்:
''நான் என் வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தேன். அப்போது என்னுடன் நின்ற நண்பர்கள் திடீரெனக் கூச்சலிட்டார்கள். அதோ பார், அதோ பார்! ஆகாயத்தில் ஒரு நட்சத்திம் வால் நீண்டு ஒளிவீசிப் பறந்து செல்கிறது பார்!'' என்று என்னைக் கூப்பிட்டுக் காட்டினார்கள்.
அது மாதிரியான காட்சியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. என் கைக்கடிகாரம் இரவு 8.47 என்று காட்டியது.
கவலையோடு நாங்கள் அனைவரும் தடதடவென்று ஆஸ்ரமத்துக்கு ஓடிச் சென்றோம். எங்கள் மனத்திலிருந்த பயம் உறுதியாகியது. அங்கே சரியாக அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பகவான் ஸ்ரீரமணர் மஹா நிர்வாணம் அடைந்தார் என்று அறிந்து கொண்டோம்.''
வேண்டுதல் வேண்டாமை இரண்டும் இல்லாது வாழ்ந்த ஓர் ஆன்மா, அண்ணாமலையானின் திருவடியில் இரண்டறக் கலந்தது. எங்கும் நிறைந்தார் ஸ்ரீரமணர்.
இப்போது எங்குமுள்ள அவரை அன்பர்கள் அவரவர் இருக்குமிடத்திலேயே பிரார்த்தனை செய்து தங்கள் மனத்தை அவர் அருளால் தூய்மைப் படுத்திக் கொள்கிறார்கள்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- அய்யாவின் அதிசய கிணற்று நீரின் மகத்துவம் அறிந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் மட்டுமின்றி, மேட்டுச்சாதியினரும், அக்கிணற்று நீரை அருந்த வரலாயினர்.
- அன்பின் வழியே உயிர்நிலையை கண்ட ஆன்றோர் அன்பையே தெய்வமாகப் போற்றினர்.
சூழவணியாய் சுற்று மதில் போலே நீளவரங்கு வைத்து நெருங்கப் புரைகள் வைத்து வைத்தோர் திசையில் வாயிலொன்றாக விட்டு குடியிருப்பு மனைகள் அமைத்து சமதர்ம குடியிருப்பு ஒன்றினை முட்டப்பதியில் சுவாமிகள் அமைத்தார். சுவாமிகள் அமைத்த குடியிருப்பு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியது. மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, அவர்களிடையே ஒற்றுமையையும் சமத்துவத்தையும் அறிவுறுத்தி நின்றது. தூய்மையையும், சுகாதாரத்தையும் வலியுறுத்தியது. சுவாமிகளின் சமத்துவப் பணி பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சந்தடியின்றி அமைதியாக அரங்கேறியது.
முத்திரிக்கிணறு
சுவாமிகள் தனது சொந்த ஊரில் கிணறு ஒன்றை ஏற்படுத்தி அனைத்து மக்களும் எவ்வித வேறுபாடுமின்றி அக்கிணற்று நீரினை பயன்படுத்திடச் செய்தார். அக்கிணற்றினை முத்திரிக்கிணறு என சுவாமிகள் வழங்கினார். அக்கிணற்றினை மக்கள் ஓர் அதிசயக்கிணறு எனவே கருதினர். தீண்டாமை நோயில் சிக்கித் தவித்த மக்களுக்கு சுவாமிகள் வழங்கிய அருமருந்தே முத்திரிக்கிணறாகும். பிறப்பின் வழி நின்று உயர்வு, தாழ்வு கற்பித்த சமுதாயத்திற்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் இப்புனித கிணறு மூலமாக சுவாமிகள் புகட்டினார். எல்லா பிரிவு மக்களும் ஒன்றுபட்டு வாழவும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து செயல்படவும் சுவாமிகள் இக்கிணற்றின் வாயிலாக முயற்சி மேற்கொண்டார்.
கிணறுகள், குளங்கள் போன்றவைகள் சாதிமுறையின் கொடூரத்தன்மையினை வெளிக்காட்டுவதாக விளங்கின. யாவர்க்கும் பொதுவாக இருக்க வேண்டிய கிணறு, குளங்கள், மேட்டுச்சாதியாரின் ஏகபோக உரிமையாக இருந்தன. நீர்நிலைகளில் தீர்த்தத்துறைகள் ஒடுக்கப்பட்டோரின் வருகையை அனுமதிக்கவில்லை. சமத்துவ நெறிக்கு சவாலாக கிணறு, குளம், தீர்த்தத்துறைகள், அமைந்திருப்பதை கண்ணுற்ற சுவாமிகள் மாற்று ஏற்பாட்டினை செய்ய முன் வந்தார். சுவாமிகள் உருவாக்கிய முத்திரிக்கிணறு மக்களுக்கு முக்தி அளிப்பதாய் அமைந்தது. எவ்வித வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் அக்கிணற்று நீரைப் பருகிய தன்மை குறித்து அகிலம் பெருமைபடக் கூறுகிறது.
"பதிணெண்சாதிகளும் பண்பாய் ஒரு தலத்தில்
விதிவந்ததென்று மேவிக் குலாவியிருந்தார்
மேவிக் குலாவி மிகவே ஒரு தலத்தில்
ஆவினீருண்டு அகமகிழ்ந்தார் அன்போரே"
ஒரு வீட்டு கிணற்றினை பிறிதொரு வீட்டார் பயன்படுத்தினால் தீட்டுப்பட்டு விடும் என்று கருதிய மேட்டுக்குடி பிற்போக்கு வாதிகளுக்கு பாடம் புகட்டும் விதமாக, எல்லோரும் ஓர் நிறை என்ற சமூக நீதியினை இக்கிணறு வாயிலாக சுவாமிகள் செயல்படுத்தினார். எல்லா பக்கங்களில் இருந்தும் திரள்திரளாக மக்கள் திரண்டு வந்து, முத்திரிக்கிணற்று நீரை குடித்து, குளித்து, தாங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சமையல் செய்து அய்யாவுடன் அமர்ந்துண்டு இன்புற்று திரும்பினர். அய்யா தன் மக்களுக்கு செய்த தர்ம வைத்தியத்தில் முத்திரிக்கிணற்று நீர் பயன்பட்ட பாங்கினை அகிலம்
"மருந்தாக தண்ணீர் மண் ஈந்து
வைத்தியங்கள் செய்ததுவும்...
எனவும்,
...தொல்புவியில் உள்ளோர்க்கு
தண்ணீரால் எந்த சர்வ வியாதி முதல்
மண்ணில் உள்ளோர் யார்க்கும் வாய்த்த
தர்மமாகவே தான் நோய் தீர்த்து..."
எனவும் குறிப்பிடுகின்றது. அய்யாவின் வைத்திய சேவையில் முத்திரிக்கிணற்று நீர் அருமருந்தாக பயன்படும் விதம் கண்டு, மக்கள் முத்திரிக்கிணற்று நீரை ஆவின்பாலெனவே எண்ணிக் குடித்து மகிழ்ந்தனர். இதனை அருள் நூல்
"அதிசயங்கள் வளரும் அரிய
கிணற்றின் பாலை எவரும்
குடிக்கிறாரே சிவனே அய்யா"
என்று கூறுகின்றது.
அய்யாவின் அதிசய கிணற்று நீரின் மகத்துவம் அறிந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் மட்டுமின்றி, மேட்டுச்சாதியினரும், அக்கிணற்று நீரை அருந்த வரலாயினர். 'பிறர் தீண்டா ஈன சாதிகள் கோதிகுடிக்கும் நீரினை நம் மக்களும் கோதிக் குடிக்கின்றார்களே என மனம் குமுறிய மேட்டுக்கு டியார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பலனளிக்காமல் போகவே முத்திரிக்கிணறு நீரில் விஷம் கலந்தனர்.
"நஞ்சிட்ட பாலை மக்கள்
நற்பால் என்றள்ளி உண்ண
நற்பாலாய் இருந்ததையோ"
என்று நஞ்சிட்ட பாலும் நற்பாலாய் இருந்த விதத்தினை அருள் நூல் உரைக்கின்றது. அய்யாவின் முத்திரிக்கிணறு மக்கள் உடல்நோயை மட்டும் தீர்த்திடவில்லை. சமுதாயத்தை தொற்றிவிட்ட தீண்டாமை நோயையும் அகற்றி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உன்னத கோட்பாடுகளை உணர்த்தி, மக்கள் ஒரே சமூகமாக வாழ வழிகாட்டியது. இன்றும் பல்வேறு இடங்களில் இருந்து சுவாமிகளை வழிபடவரும் அன்பர்கள் முத்திரிக்கிணற்றில், சாதி வேறுபாடின்றி, ஒன்றாய் ஒருமித்து நீராடியும், நோய் நீங்கிச் செல்வதுமான காட்சி கண்கொள்ளா காட்சியாகவே திகழ்கின்றது. அய்யாவின் சமதர்ம நெறிக்கு சான்றுரைப்பதாக இன்றும் இக்கிணறு விளங்குகின்றது.
அன்புக்கொடி
அன்பின் வழியே உயிர்நிலையை கண்ட ஆன்றோர் அன்பையே தெய்வமாகப் போற்றினர். அகிலம் சிறக்க வந்த அய்யாவும் அன்பு வழி ஒன்றே உலகம் முழுவதையும் இன்ப வாழ்வில் திழைக்கச் செய்யும் ஆற்றல் பெற்றது என்று நன்குணர்ந்தார்.
"அறிந்த பல சாதி முதல்
அன்பொன்றுக்குள்ளானால்
பிரிந்து மிக வாழாமல்
பெரியோராய் வாழ்ந்திருப்பார்"
என்று அனைத்து மக்களையும் அன்பெனும் குடைக்குள் வாழ வேண்டினார். தனது இயக்கத்திற்கு அன்புக்கொடி ஏற்றி, தன்னை பின்பற்றும் மக்களை அன்புக்குடி மக்கள் என்று வழங்கினார். அய்யாவின் வாழ்க்கைப் பயணமானது அன்பு அழைத்துச்சென்ற புனித பயணமாகும். அகிலம் அய்யாவின் வாழ்க்கையினை அறிமுகப்படுத்துகையில்,
"அன்பு பார்த்தெடுத்து
ஆளடிமைக் கொண்டது"
எனவே அறிவிக்கின்றது.
அனைத்து மக்களும் அன்பால் பிணைக்கப்பட்டு, ஓர் ஒன்றுபட்ட சமுதாயம் மலர வேண்டும் என்பதில் அய்யா மிக்க நாட்டம் கொண்டிருந்தார். அன்பின் வழியாக மக்கள் பிணைக்கப்படின், ஒப்பிலா சமூகம் உதயமாகிடும் என்ற உயரிய எண்ணத்தில் "அன்பு குடி கொண்ட மக்கள்" என்று ஏற்றி கூறினார். தன் அன்போர்க்கு அறிவுரை வழங்குகையில் கூட "என் பெயர் சொல்லி யாதொருவர் வந்தாலும் 'அன்போடு' அவரை ஆதரிக்கும் மக்களே எனக்குரியவர்கள்" என அறிவுறுத்தினார். சமய வாழ்வில் பூசை, புனக்காரங்களை கைவிடுமாறு வலியுறுத்திய சுவாமிகள் ஒரு
'அன்பு' மலரெடுத்து
அனுதினமும் பூசை செய்வாய்
என்று அன்பால் இறைவனுக்கு பூசை செய்யுமாறு பணித்திட்டார்.
அன்பின் வலிமையை பறைசாற்றும் விதமாக தனது இயக்கத்திற்கு அன்பு கொடியை ஏற்றினார். அன்புக்கொடி காவி நிறத்தில் அமைந்துள்ளது. கொடியின் நீள, அகலங்கள் முறையே மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நீளவாக்கில் நுனிப்பகுதியில் மத்தியில் இருந்து நடுப்பக்கம் ஒருபங்கு நீளத்தில், இரு நுனியில் இருந்தும் முக்கோண வடிவில் வெளி அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பகுதியின் நடுவில் ஒற்றை நாமம் தீபவடிவில் தூய வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. காவிநிறம் தியாகத்தையும், வெண்மை நிறம் தூய்மை, அன்பு, அமைதி ஆகியவற்றையும், தீபச்சுடர், மெய்யறிவு, ஈகை, நீதி ஆகியவற்றையும் அறிவுறுத்து கின்றது. ஒளிச்சுடராய் திகழும் பரம்பொருள் ஒன்றே என்ற உண்மையினை நாமத்தின் ஒருமை காட்டுகிறது.
கலிமாசற்ற தூய்மையான உள்ளத்தில் தெய்வீக ஒளியினை காண இயலும் என்பதை நாமத்தின் வெண்மை குறிப்பிடுகிறது. அய்யாவின் சீர்திருத்த இயக்கம் நடைபெற்ற அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்நாட்டின் வட பகுதியில் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அறநெறி இயக்கம் கண்ட அருட்பிரகாச வள்ளலார் (1823-1874), தனது இயக்கத்திற்கு தனிக்கொடி கொண்டிருந்த நிகழ்ச்சியினை பற்றி ஊரன் அடிகள் முன்னைய ஞானிகள் எவரும் தம் கொள்கைக்கு தனிக்கொடி கண்டதில்லை. அடிகள் ஒருவரே தமது மார்க்கத்திற்கு தனிக்கொடி கண்டார்கள் என்று குறிப்பி ட்டுள்ளார். மஞ்சள் வெள்ளை நிறத்திலான சன்மார்க்க கொடியினை வள்ளலார் 1873-ம் ஆண்டில் வடலூருக்கு தெற்காக இரண்டு கல் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பத்தில் அமைந்திருந்த தனது சித்தி வளாகத் திருமாளிகையில் தான் முதன்முதலாக ஏற்றினார். ஆனால் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அய்யா தனது இயக்கத்திற்கு அன்புக்கொடி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்க க்கொடி கண்ட மகான்களுள் வள்ளலாருக்கு முன்னோடியாக அய்யா திகழ்கின்றார். அவர் ஒழுக்கம் கண்டி ப்புக்கு பெயர் போன நிழல் தாங்கல்களையும் அமைத்துள்ளார்.
இதனை அடுத்த தொடரில் காண்போம்.
- ஆன்மா என்பது இகத்தில் உள்ளது. இந்தக் கணத்தில் உள்ளது.
- நம்மைப் பொறுத்தவரையில் நமது உடலாகவும், மனதாகவும் வெளிப்பட்டுள்ளது.
ஆன்மிகம் என்றால் என்ன?
ஆன்மா + இகம் = ஆன்மிகம்.
இகம் என்றால், இங்கேயே இப்போதே என்று பொருள்.
இங்கேயே இப்போதே என்றால் என்ன?
நேற்று என்பது, நடந்து முடிந்து போன ஒன்று. இப்போது, இந்த கணத்தில் அது இல்லை. அது போல் நாளை என்பதும் இந்த கணத்தில் இல்லாத ஒன்று.
நடந்து கொண்டிருப்பது மட்டுமே நிஜமாக உள்ளது; நிகழ்காலமாக உள்ளது.
ஆன்மா என்பது இகத்தில் உள்ளது. இந்தக் கணத்தில் உள்ளது.
அந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதை.
ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர் . அந்த கணவனுக்கு தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அந்த வெளியூர் என்பது அந்த மனைவியுடைய சொந்த ஊர்.
அதனால் அவள் கணவனிடம், " நீங்கள் எங்கள் ஊருக்குப் போகிறீர்கள் . அப்படியே அங்கே இருக்கும் எங்கள் வீட்டிற்கும் சென்று வாருங்கள் " என்று கேட்டுக் கொண்டாள்.
அது போல் அந்த ஊருக்குச் சென்ற கணவனும், தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மாலையில் சென்றான் . அவன் போகும் போது அவனுக்கு நல்ல பசி. மாமியார் வீட்டில் சாப்பிடலாம் என்று தான் அவன் போயிருந்தான்.
அது போல் அவனை தடபுடலாக வரவேற்று உபசரித்தார்கள்.
மாமியாரும் அவனிடம்,
" உங்களுக்குப் பிடித்தமானதைக் கூறினால் அந்த சாப்பாட்டை தயார் செய்து விடுவோம் " எனப் பணிவாகக் கேட்டாள்.
மருமகனல்லவா அவன். அவனும் பெருந்தன்மையாக, "உங்களுக்காக என்ன செய்து வைத்திருக்கிறீர்களோ அதுவே எனக்குப் போதும்" என்று கூறினான்.
மாமியார் வெட்கப்பட்டவாறே, "இன்று ஏகாதசி அல்லவா? அதனால் எங்களுக்கு இன்று உபவாசம் மட்டும் தான். உங்களுக்கு பிடித்ததைச் சொன்னால் அதைச் செய்து கொடுக்கிறோம்" என்று கூறினாள்.
உபவாசம் என்றால் என்ன என்பது அவனுக்குத் தெரியாது. வாசனையான ஏதோ ஒரு வகையான உணவு என அவன் எண்ணிக் கொண்டான். உண்மையில் உபவாசம் என்றால் உண்ணாவிரதம் என்று பொருள்.
உபவாசத்தையுந்தான் இன்று சாப்பிட்டு பார்ப்போமே என்று நினைத்து அவன் "எனக்கும் உபவாசமே போதும்" என்று தீர்மானமாகக் கூறி விட்டான்.
அந்த குடும்பத்தில் உள்ளவர்கள், உபவாசத்தின் போது இடித்த எள் உருண்டை மட்டும் எடுத்துக் கொள்வதுண்டு.
" எள் உருண்டை சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்டார்கள்.

ஸ்ரீ பகவத்
அதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.
உரலில் போட்டு எள்ளை இடித்தார்கள் . உபவாசத்தைதான் தயார் செய்கிறார்கள் என அவன் எண்ணிக் கொண்டான்.
வீட்டில் உள்ளவர்கள் எள் உருண்டையை சாப்பிட்டு விட்டுத் தூங்கி விட்டார்கள்.
உபவாசத்தைக் கொண்டு வருவார்கள் என காத்திருந்த அவன் அலுத்துப் போய்விட்டான். வயிற்றுப் பசி வேறு கண்களைக் கட்டியது.
எழுந்து சென்று பார்த்தால் அனைவரும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ உரலில் போட்டு இடித்தார்களே என்று எண்ணிய வாறே இருட்டுக்குள் உரலைத் தேடிக் கண்டுபிடித்தான்.
என்னதான் இடித்தார்கள் என்று தனக்குள் கேட்டவாறே உரலுக்குள் தலையை விட்டுத் தேடவும், அவனுடைய தலை உரலுக்குள் மாட்டிக் கொண்டதாக இந்தக் கதை தொடர்கிறது.
அவனுடைய கற்பனையில் பட்டினி கிடப்பது,
விருந்து சாப்பிடுவதாக அமைந்து விட்டது.
இவ்வாறுதான் ஆன்மாவின் மீது அதீதமான கற்பனைகளையெல்லாம் இணைத்து,
உண்மையை தவற விட்டு விடுகிறோம்.
ஆன்மா என்பது எளிமையானது; இயற்கையானது. தனிப்பட்ட ஒரு நபரைப் பொறுத்தவரை, அவரிடம் உள்ள உயிர்த்தன்மையை, ஆன்மா அல்லது ஜீவான்மா என்று பெயரிட்டு ஆன்மிக சாஸ்திரங்கள் விளக்கம் கொடுக்கின்றன.
பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கும் உயிர்த்தன்மையை பரமாத்மா அல்லது பிரம்மம் எனப் பெயரிட்டு சாஸ்திரங்கள் அழைக்கின்றன.
ஒரே ஆகாயம் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருப்பதைப் போல், ஒரே பிரம்மமே பல வகைப்பட்ட ஆன்மாக்களாக தோற்றமளிக்கின்றது.
பிரம்மம் என்பது ஒரு ஜடப் பொருள் அல்ல. பிரம்மம் மட்டுமே உயிர்ப் பொருள்.
பிரம்மத்தை நாம் அறியப் போகிறோமா?
பிரம்மத்தையோ, ஆன்மாவையோ நாம் அறியப் போவது இல்லை.
அவற்றை அறியவும் முடியாது.
"பிரக்ஞானம் பிரம்மம்" என்று வேதாந்த சாத்திரங்கள் கூறுகின்றன.
பிரம்மம் என்பது பிரக்ஞை வடிவில் ,
உணரும் தன்மையாக இருக்கிறது என்பது தான் இதன் பொருள்.
உணரும் தன்மையுடைய பிரம்மம் தான்
நம்மைப் பொறுத்தவரையில் நமது உடலாகவும், மனதாகவும் வெளிப்பட்டுள்ளது. அதனால் நமது உடலும் மனமும் உணர்வுடன் இருக்கிறது. நாம் நமது எல்லா செயல்களையும் நமது உடலின் மூலமாக மட்டுமே நிறைவேற்ற முடியும்.
நாம் செய்ய வேண்டிய செயல்களை முறைமைப் படுத்தி செயல்படுத்துவதற்கு உதவியாக அமைந்ததுதான் நமது மனம்.
உடலின் செயல்பாட்டிற்கு மட்டுமே நமது மனம் தேவையாக உள்ளது. நமக்கு சொந்தமாக நகரத்தில் ஒரு பெரிய வீடு ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை ஒருவரிடம் வாடகைக்கு விட்டு விடுகிறோம்.
வாடகைதார் வாடகை தராமலும் , வீட்டைக் காலி செய்து கொடுக்காமலும் இருந்து வருகிறார்.
அவரை எப்படி வீட்டில் இருந்து வெளியேற்றுவது என்பது நமக்குத் தெரியவில்லை.
அவரை வெளியேற்றித் தருகிறேன் என்று சொல்லி நண்பர் ஒருவர் உதவிக்கு வருகிறார்.
வாடகைதார் குடியிருக்கும் வீட்டோடு சேர்ந்த அவுட் அவுசில் தங்கிக் கொள்கிறார்.
நமது அவுட் அவுசில் தங்கிக் கொண்ட நமது நண்பர் சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த வாடகைதாரரை வெற்றிகரமாக வெளியேற்றி அனுப்பி விடுகிறார்.
வாடகைதாரரை வெளியேற்றிய நமது நண்பர், வாடகைதாரர் தங்கியிருந்த வீட்டிலும் குடியேறி அந்த வீட்டை ஆக்கிரமித்து விடுகிறார்.
அந்த வீட்டில் இருந்து நமது நண்பரை வெளியேற்றுவது எவ்வாறு? இவ்வாறு தான் - உடலுக்கு உதவி செய்ய வந்த மனமானது, தனக்கென ஒரு தனி அரசாங்கத்தை நடத்த ஆரம்பித்து விட்டது.
மனம் மனம் என்று கூறுகிறோம்.
இந்த மனம் என்பது என்ன?
புராணக் கதைகள் நிறைய உள்ளன. பின்வரும் இந்தக் கதையை ஒரு வேளை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.
தேவர்கள், அசுரர்கள் என இரு தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் எப்போதும் சண்டை போட்டு வருவதாகவும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்துகொண்டிருந்தது.
அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களுக்கு உதவுவதற்காக யாகம் ஒன்றைச் செய்தார்.
அந்த யாக குண்டத்தில் இருந்து பயங்கரமான பூதம் ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த பூதத்தை அவர்கள் தேவர்களின் மீது ஏவினர். அந்த பூதமும் தேவர்களை அடித்து துவம்சம் செய்தது. பூதத்தை எதிர்க்க முடியாமல் தேவர்கள் தடுமாறினர்.
அந்த பூதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று கேட்டு, தேவர்கள் விஷ்ணு பகவானின் உதவியை நாடினார்கள்.
விஷ்ணு பகவானும், "உங்களால் அந்த பூதத்தை சண்டையிட்டு ஜெயிக்க முடியாது.
ஏனெனில் அந்த பூதத்துக்கு மனம் என்ற எதுவுமே கிடையாது . அதனால் அது உங்கள் அனைவரையும் விட சக்தி வாய்ந்தது...
"ஆனால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். அந்த பூதத்தை எதிர்த்து சண்டையிடுவது போல் சண்டையிட்டு தப்பி ஓடிவந்து விடுங்கள். உண்மையாக சண்டை போட வேண்டாம். இப்படி மூன்று முறை தப்பி ஓடிவந்து விடுங்கள்" என்று கூறி தேவர்களை அனுப்பினார்.
அதன்படி தேவர்களும் மூன்று முறை அந்த பூதத்தை எதிர்த்து சண்டையிடுவது போல் சண்டையிட்டு தப்பி ஓடி வந்தனர்.
அடுத்து என்ன செய்ய வேண்டுமென விஷ்ணு பகவானிடம் ஆலோசனை கேட்டனர்.
பகவானும், "இனி நீங்கள் உண்மையிலேயே அந்த பூதத்தை எதிர்த்து சண்டையிடலாம்"
என்று அனுமதி வழங்கினார்.
அதன்படியே தேவர்களும் பூதத்தை எதிர்த்து சண்டையிட்டு அந்த பூதத்தை அழித்தனர்.
இங்கு என்ன நிகழ்ந்துள்ளது?
தேவர்கள் அந்த பூதத்தை எதிர்த்து ஒவ்வொரு முறை சண்டையிடுவது போல் சண்டையிட்டதும், அது ஒவ்வொன்றும் நினைவுக் குறிப்பாக -- மெமரியாக அந்த பூதத்தினுள் பதிவாகி விட்டது.
நினைவுக் குறிப்புகளின் காரணமாக அந்த பூதத்துக்கும், மனம் உருவாகி விட்டது.
மனம் உருவாகி விட்ட நிலையில் அந்த பூதமும் பலத்தை இழந்து விட்டது . தேவர்களும் சுலபமாக அந்த பூதத்தை அழித்துவிட்டனர்.
மனம் எப்படி உருவாகின்றது என்ற விஞ்ஞானம், புராண காலத்திலேயே விவரிக்கப்பட்டுவிட்டது.
நான் இருக்கிறேன் என்ற உணர்வு நம் அனைவருக்கும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதைத் தான் அறியும் தன்மை அல்லது பிரக்ஞை என்று கூறுகிறோம்.
இந்த உணரும் தன்மையானது,
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களின் மூலமாக வெளிப்படும்போது ஐந்து விதமான புலன் உணர்வுகளாக வெளிப்படுகிறது.
இந்த உணரும் தன்மையே , மெமரி எனப்படும் நமது நினைவுக் குறிப்புகள் வழியாக வெளிப்படும்போது அதுவே மனம் என்ற பெயரில் வெளிப்படுகிறது.
நினைவுக் குறிப்புகள் வாயிலாக ஏதாவது ஒன்று எப்போதுமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால், மனம் என ஒன்று நிரந்தரமாக நமக்கு இருந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.
தொடர்புக்கு - sribagavathji@gmail.com
- மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்றதுக்குக் கூலி எதுக்கு சார்?’ என்றான் கணீரென்று.
- அந்த இளைஞர்களின் கண்ணியமும், உயர்ந்த உள்ளமும் விவரிக்க முடியாதவை.
'நன்மை செய்ய திராணி இருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே'.
- நீதிமொழிகள் 3:27
பண்டிகைக் காலம் என்றாலே பரபரப்புதான். மகிழ்ச்சி, புத்துணர்ச்சி என ஓர் இன்பக் கிளர்ச்சி நமக்குள் ஏற்பட்டுவிடும். வேலைகள், கடமைகள், வியாபாரம், கல்வி, இப்படிப் பலவற்றிற்காக நாள்தோறும் ஓய்வொழிச்சல் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் மனித வாழ்வை, அவ்வப்போது வருகின்ற பண்டிகைகள்தான் புதுப்பிக்கின்றன.
பண்டிகைகளில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ; ஆனந்தம் இருக்கிறது. வாழ்த்துகளையும் அன்புப் பரிசுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் காலம் அதுதான்.
ஒரு மார்கழி மாதம். கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம். பொதுவாக, விழாக்காலங்களில் விமானம், ரெயில், பேருந்து - எதுவாக இருந்தாலும், ஓரிரு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துவிட வேண்டும். இல்லை என்றால், பயணத் திட்டமே பிரச்சினைக்கு உரியதாகிவிடும். அந்நாட்களில், போக்குவரத்து நிலையங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும்.
காரில் பயணிப்பது, எப்போதுமே ஒரு சுகமான அனுபவமாக எனக்குத் தோன்றும். வசதியான நேரத்தில் புறப்படலாம்; இஷ்டப்பட்ட ஹோட்டலில் நிதானமாகச் சாப்பிடலாம்; இனிமையான பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிக்கலாம். இப்படிச் சில சவுகரியங்கள்.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கென, அதற்கு இருதினங்களுக்குமுன் சென்னையிலிருந்து நெல்லைக்குக் காரில் புறப்பட்டோம். ஆனால், அன்று எதிர்பாராத விதமாக உடனடியாக நான் முடித்துக் கொடுக்க வேண்டிய ஒரு முக்கியப் பணி வந்துவிட்டது. பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பரப் படத்திற்கான ஸ்கிரிப்டை அன்று நான் எழுதிக் கொடுத்தால்தான், மறுவாரம் தயாரிப்பு நிறுவனம் அதைப் படப்பிடிப்புச் செய்ய முடியும். எனவே, தவிர்க்க முடியாத நிலை.
அந்தப் பணியை நான் முடித்துக் கொடுத்துவிட்டு, சென்னையிலிருந்து நாங்கள் கிளம்பும்போது மாலை ஆறு மணி. வெளியூர்ப் பயணம் என்றால், அதிகாலையிலேயே கிளம்புவதுதான் எங்கள் வழக்கம். அந்நேரத்தில் பயணத்தைத் தொடங்குவது, மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.
இரவு நேரத்தில் நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணத்தை நான் விரும்புவதில்லை. எனினும், அன்று அப்படித்தான் செல்ல நேர்ந்தது. திருச்சியை நாங்கள் எட்டும்போது நள்ளிரவாகிவிட்டது. இருண்ட நெடுஞ்சாலையில் எங்கள் கார் மட்டும் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்து ஒருமணி நேரம் கடந்து, திருச்சி - மதுரைக்கு இடையே கார் விரைந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு சத்தம். காரின் முன்புற இடது வீல் டயர் பஞ்சர் ஆகி கார் நிலைதடுமாற, சாலையின் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டேன்.
ஒரே இருள். சாலையில் விளக்குகள் இல்லை. இருபுறமும் பொட்டல் காடு. குடியிருப்புப் பகுதிகள் எதுவும் கிடையாது. 'திக் திக்' என்றிருந்தது. மனதை பயம் கவ்விக் கொண்டது. தனிநபராக நிற்பதென்றால் நடுக்காடாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால், மனைவியும் மகளும் உடன் இருக்கிறார்களே. என்ன செய்வது!
நான் காரில் இருந்து இறங்கினேன். டிக்கியில் ஸ்டெப்னி இருக்கிறது; தளவாடங்களும் இருக்கின்றன. ஆனால், எனக்கு வீல் மாற்றிப்போடத் தெரியாது. அதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.
நான் தடுத்தும் கேட்காமல், என் மனைவியும் மகளும் காரிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை எங்களுக்குள் பயம்...பயம். மார்கழிக் குளிர் பெரிதாகத் தெரியவில்லை. அச்சத்தினால் உடலும் மனமும் நடுங்கிக் கொண்டிருந்தன. இருதிசையிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வாகனங்கள் எதுவும் தென்படவில்லை. சில நிமிடங்கள் கழித்து, வெகுதூரத்தில் ஒரு வாகனத்தின் வெளிச்சம் புள்ளிபோல் தெரிந்தது. பேருந்தோ காரோ, அதை நிறுத்தி அவர்களிடம் உதவி கேட்பதுதான் ஒரே வழி. சாலையில் சற்று ஏறி நின்றிருந்தபடி, கையை நீட்டி உதவி கேட்டு அசைத்துக் கொண்டிருந்தேன். அந்த வாகனம் சற்று தூரத்தில் நெருங்கி வந்தபோதுதான், அது மிகப்பெரிய 'டிரக்' என்று தெரிந்தது. அப்போது எனக்குள் வேறொரு பயம் எழுந்தது. அதற்குள் அந்த 'டிரக்' எங்கள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து வேக வேகமாக மூன்று இளைஞர்கள் இறங்கினர். என் இதயம் படபட என்று அடிக்கடி தொடங்கியது.
ஆபத்தில் சிக்கிக் கொண்டோமோ என்று என் மனம் பதறியது. அந்நேரம், அந்த மூன்று இளைஞர்களும் எங்களிடம் வந்துவிட்டனர்.
'என்ன சார் பிரச்சினை?' என்றான் ஒருவன்.
'பிரண்ட் வீல் டயர் பஞ்சர்' என்றேன்.
ஒருவன் டார்ச் லைட் அடிக்க, மற்றொருவன் டிக்கியைத் திறந்து ஸ்டெப்னியை எடுத்தான். ஜாக்கி மற்றும் ஸ்பேனர்களை எடுத்து அடுத்தவனிடம் கொடுக்க, அவன் ஜாக்கியைச் சரியாகப் பொருத்தி வைத்துவிட்டு, ஸ்டெப்னியை உருட்டிக் கொண்டு வந்தான். ஒருசில நொடிகளில் கச்சிதமாக மாற்றி முடித்தான். அந்த மூவரும் வேறு வார்த்தைகள் எதுவும் பேசவில்லை. பஞ்சர் ஆன டயர் மற்றும் ஜாக்கி, ஸ்பேனர் ஆகியவற்றை டிக்கியில் வைத்துவிட்டு நகர்ந்தனர்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களை நிறுத்தி, இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தேன். 'ஒண்ணும் காணும் சார். மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்றதுக்குக் கூலி எதுக்கு சார்?' என்றான் கணீரென்று.
என்ன சொல்வதென்றே எனக்குத் தோன்றவில்லை. உணர்ச்சிவசப்பட்டுத் திக்குமுக்காடினேன்.
'நீங்க செய்த இந்த உதவியை நாங்க மறக்கவே மாட்டோம். ரொம்ப நன்றி' என்றேன்.

கவிஞர் தியாரூ, 9940056332
'பரவாயில்ல சார். இந்த உதவிகூட செய்யலேன்னா மனுஷன்னு சொல்றதுல அர்த்தம் இல்ல. பத்திரமா போங்க சார்' என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக்கூட காத்திராமல், அந்த மூன்று இளைஞர்களும் ஓடிச் சென்று 'டிரக்'கில் ஏறினர். நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட பின்னர்தான், அவர்களின் டிரக் கிளம்பியது.
அந்த இளைஞர்களின் கண்ணியமும், உயர்ந்த உள்ளமும் விவரிக்க முடியாதவை. அவர்களை மனிதர்களாய் அல்ல; தேவதூதர்களாய் எங்கள் கண்கள் கண்டன. மனிதத்தின் புனிதத்தை அவர்களின் ஆத்மார்த்தமான உதவியில் எங்களால் காண முடிந்தது.
ஆபத்தில் பெறுகின்ற உதவிக்கு எந்தப் பொருளும் பணமும் ஈடாகாது. உள்ளார்ந்த அன்போடு ஒருவருக்கொருவர் உதவி செய்வதே மனிதத்தின் மேன்மை. இந்த சத்தியத்தை மனதில் இருத்திக் கொள்வதும், அதன்படி வாழ்வதுமே மானுடச் சிறப்பு.
மனிதநேயத்துடன் மனப்பூர்வமாக நாம் செய்யும் உதவிகளால் எத்தனையோ நன்மைகள் நமக்கு உண்டு. நம் வாழ்க்கை அர்த்தம் பெறுவது உதவும் பண்பினால்தான். நாம் அதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பதவி பெறுவதற்குப் பணம் வேண்டும். உதவி புரிவதற்கு நல்ல மனம் இருந்தால் போதும். பிறர்க்கு நாம் செய்கின்ற உதவி கடுகளவோ கடலளவோ - அதைப் பெறுகின்றவர் அடைகின்ற மகிழ்ச்சிக்கேற்ப அது முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றது.
ஆத்மார்த்தமான உதவி தெய்வீகமானது. அதனால்தான், அதைச் செய்கின்றபோது மனம் நெகிழ்கிறது; உடலில் ஓர் உற்சாகம் பிறக்கிறது; மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது.
தேன் இருக்கும் பூக்களைத்தான் வண்ணத்துப்பூச்சிகள் விரும்புகின்றன. அவற்றையே சுற்றிச் சுற்றி வருகின்றன. அதே போன்றுதான் மனித சமூகம். நல்ல மனம் கொண்டவர்களைச் சுற்றிதான் நட்பும் உறவுகளும் இருக்கும்.
சிலரைப் பார்த்தால், அவர்களை நெருங்குவதற்கே யாருக்கும் மனம் வராது. கடுமையான அதிகாரிபோல் விறைப்புடன் முகத்தை வைத்திருப்பார்கள். காரணம் என்ன? யாரும் உதவி கேட்டுத் தங்களிடம் வந்துவிடக் கூடாது என்பதுதான். ஆனால், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை ஒன்றும் சிறப்பாக இருப்பதில்லை. அதை அவர்கள் உணர்வதும் இல்லை.
அரண்மனை போன்ற பெரிய பெரிய பங்களாக்களில் தனிமையாக வசிப்பவர்கள் இருக்கிறார்கள். கணக்கற்ற பொருட்செல்வங்களைக் கொண்டிருப்பார்கள்; எக்கச்சக்க வசதிகள் இருக்கும். எனினும், யாருக்கும் சிறு உதவிகூட செய்ய மாட்டார்கள். உறவினர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். கடிக்க முடியாத எலும்பைக்கூட தெருநாய்களுக்குத் தூக்கிப்போட, அவர்களின் மனம் சம்மதிக்காது.
அற்ப மனம் என்பது அன்பிற்கு அப்பாற்பட்டது. சுயநலத்திலேயே முடங்கிக் கிடக்கும் மனதில் சுகமிருக்காது. அந்த வாழ்க்கை அர்த்தமற்றது.
ஆற்று நீரில் விழுந்து தத்தளிக்கும் சிற்றெறும்பு, ஒரு குச்சிக்காக ஏங்கித் தவிக்கிறது. குச்சியோ இலையோ கிடைத்துவிட்டால், அது கரையேறிவிடுகின்றது. தக்க சமயத்தில் ஒருவருக்கு நாம் செய்யும் உதவி, அவருக்குப் புதுவாழ்வைக் கொடுத்துவிடக்கூடும். தற்கொலை எண்ணத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றிவிடவும் செய்யும். எல்லாவற்றிற்கும் ஆதாரம் நல்ல மனம்தான்.
பெறுவதில் பெறுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுப்பதில் பெறுகின்ற இன்பம் அலாதியானது. நம்மை நாமே தட்டிக் கொடுப்பதற்கும், பெருமிதம் கொள்வதற்கும், அதைவிட காரணம் வேறொன்று தேவை இல்லை.
ஒரு மிகப்பெரிய செல்வந்தன். அவனிடம் பொன்னும் பொருளும் கொட்டிக் கிடந்தன. நிலபுலன்கள் ஏராளமாய் இருந்தன. செல்வச் செழிப்பில் மிதந்தான். எனினும், அவனிடம் மனநிறைவு இல்லை.
'ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் மனநிறைவு கிட்டும்' என்றார்கள். அப்படியே செய்தான். 'உண்டியலில் பணம் செலுத்தினால் புண்ணியம்' என்றார்கள். அப்படியும் செய்தான். அவன் எதிர்பார்த்த மனநிறைவு எதிலுமே கிடைக்கவில்லை.
மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற ஓர் ஏழை விவசாயியை அவன் கண்டான். அவனிடம் கேட்டான்: 'உங்க மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?'
'மனநிறைவுதான்'.
'மனநிறைவை எப்படி வாங்குறீங்க?'
'அதை வாங்க முடியாது; தானா வரணும். எல்லா உயிருக்குள்ளேயும் ஆண்டவன் இருக்கிறான். நான் நம்புறேன். அதனால எந்த உயிருக்கும் தீங்கு நெனைக்க மாட்டேன். வயக்காட்டுல உழைக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, என்னாலான உதவிகளை மனசார செய்றேன். காசு பணத்த பெருசா நெனச்சா மனநிறைவு கிடைக்குமா. அன்புதான் முக்கியம்' என்று அந்த விவசாயி சொன்னபோதுதான் அவனின் மனக்கண் திறந்தது.
நல்ல மனதோடு பிறர்க்கு உதவி செய்வதில் பெறுகின்ற மகிழ்ச்சிதான் உண்மையான மகிழ்ச்சி. அப்படிச் செய்யும்போது, நம் உள்ளம் விரிவடைகிறது; கருணையினால் கண்கள் ஒளிபெறுகின்றன. மனநிறைவான வாழ்க்கை நமக்கு வசப்படுகிறது. வாழ்வே இன்பமயமாகிறது.
- ரங்கராஜன் மாப்பிள்ளை டேவிட் பேசுவதை ஆச்சரியமாக பார்த்தார்.
- “போங்க… போயி எல்லாரும் ஏதாவது சாப்பிட்டு வாங்க.. திவ்யாவை பத்திரமா மீட்டு விடலாம்… பயப்படாதீங்க..”
எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்ஸ்பெக்டரின் முகம் மட்டும் வினாடிக்கு வினாடி மாறியது. டேவிட் உட்பட அனைவரும் பதட்டத்துடன் போனில் பேசிக்கொண்டு இருக்கும் அவரையே பார்த்தபடி நின்றனர். போனை பேசிய பின்பு, அதை வைத்து, இவர்களை பார்த்தார் இன்ஸ்பெக்டர் அழகர்.
"என்ன சார் சொல்றான்.. அந்த மனோகர்.. அவன்தான் சார்.. என் திவ்யாவை மயக்கமாகி கடத்திட்டு போயிட்டான் சார்!" குரல் உடைந்து டேவிட் பேசினான்.
"பேசுனது கிட்நாபர்தான்.. ஆனால், நீங்க சொல்ற மனோகர் இல்ல.."
அனைவரும் 'ஷாக்காகி' பார்த்தனர். இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்.
"அவன் தன் பேரு நல்லவன்னு சொல்றான்.. உங்க பொண்ணுக்கு ஒன்னும் ஆகாதுன்னு உறுதியா சொல்றான்… வீணா என்ன தேடாதீங்க.. போலீஸ் என்கிட்ட நெருங்கினா, திவ்யா உயிருக்கு நான் பொறுப்பு இல்ல.. நான் திவ்யாவை பணத்துக்காக கடத்தல… எதுக்காக கடத்துனேன்னு நீங்களே கண்டுபுடிங்க… அதுவரைக்கும் இந்த விளையாட்டு தொடரும்னு போனை வச்சுட்டான்.."
அவர் சொல்லி முடிக்கவும் அனைவரிடமும் குழப்பம். 'எதுக்கு கடத்தினான்… பணம் நோக்கம் இல்லன்னா வேற என்ன காரணமாயிருக்கும்…? யோசித்தபோது, இன்ஸ்பெக்டர் சொன்னார்.
"நமக்கு எல்லாம் இப்ப அவன்தான் வில்லன். ஆனா, பேரு வச்சுருக்கான் பாரு நல்லவன்னு"
இடைமறித்த செந்தில், "சார்.. அவன் நிஜப் பேரு வேறு ஏதாவது இருக்கும்.. சும்மா நம்மள ஏமாத்த அந்த பேர சொல்றான்.."
குறுக்கிட்ட டேவிட்..
"சார்… இப்போ பேர் முக்கியமில்ல. அந்த நல்லவன்கிறது யாரு..? அந்த கூலிங்கிளாஸ் டிரைவர் மனோகர் மூலமா எதுக்கு திவ்யாவை கடத்துனான்.. ஐயோ.. ஒண்ணுமே புரியமாட்டேங்குதே..!"
கிட்டதட்ட டேவிட் கத்தினான்.
"ஏன் இப்படி நடக்குது… யாருக்கும் கெடுதல் பண்ணலியே… என் பொண்ணுக்கு எதுவும் ஆயிடக் கூடாது.. ஈஸ்வரா.. " என தளர்ந்து போய் பெஞ்சில் அமர்ந்தாள், திவ்யாவின் அம்மா.
"ஏன் சம்மந்தி… நமக்கோ… இல்ல தனிப்பட்ட முறையில திவ்யாவுக்கோ வேண்டாதவங்க யாரோதான் நம்மள தவிக்க விடணும்னு இப்படி பண்ணிருப்பாங்கன்னு தோணுது.."
தேவசகாயம், திவ்யாவின் அப்பா ரங்கராஜிடம் சொல்லவும் "அப்படி யாருங்க நமக்கு எதிரி?" திருப்பி கேட்டார் அவர்,
"சொன்னா தப்பா நினைக்க கூடாது.."
"பரவாயில்லை சொல்லுங்க…" ரங்கராஜன் கேட்கவும், மேரி குறுக்கிட்டால்.
"அங்கிள்… எங்க அப்பா யார சொல்லுவாருன்னு உங்களுக்கு புரியலை.."
"புரியலேம்மா.. நீ சொல்லு.." ரங்கராஜன் கேட்டார்.

"வேற யாரு உங்க பையன் பெருமாள்தான் இத பண்ணியிருக்கணும். ஆரம்பத்துல இருந்தே திவ்யா - டேவிட் கல்யாணத்துல இஷ்டமில்லாம இருந்தாரு. அன்னிக்கு சென்னையில போலீஸ் ஸ்டேஷன்ல நம்ம எல்லார் மேலயும் வன்மமா பேசிட்டு போனாரு.. அவருதான் கூலிப்படைங்க மாதிரி ஆளுங்கள வச்சு பண்ணி இருக்கணும்…"
"இல்ல.. இருக்கவே இருக்காது.. இருக்கவும் முடியாது.." உறுதியாய் மறுத்தார் ரங்கராஜன்.
"அங்கிள்.. உங்க பையன்னு கண்மூடித்தனமான சப்போர்ட் பண்ணாதீங்க… திவ்யாவுக்கும், டேவிட்டுக்கும் வேலை போனதுக்கு காரணமே அவராத்தான் இருக்கும்னு நாங்க முடிவு பண்ணியிருக்கோம்.."
செந்தில் காட்டமாய் சொன்னான்,
"ஆமாம் அங்கிள்… இப்போ சொந்தமா ஒரு தொழில் பண்ணலாம்னு முதல் கச்சேரி 'புக்' ஆகி கிளம்பினா இப்படி ஆயிடுச்சு... எனக்கும் பெருமாள் மேலதான் டவுட்.."
நெல்சனும் ஆமோதித்தான்.
"வரும்போது திருவிழா காரங்களுக்கு போன் பண்ணி கச்சேரி கேன்சல்னு சொல்றப்போ எனக்கு அழுகையே வந்திடுச்சு அங்கிள்… இதுக்கெல்லாம் காரணம் பெருமாள்தான்… பேசாம அவரு மேல டவுட்டுன்னு ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் அங்கிள்..!"
தியாகு கூறவும், டேவிட் அவனை தோளில் தட்டி, "டேய்.. நீங்க எல்லாம் என் பிரண்ட்ஸ், அதான் உணர்ச்சிவசப்பட்டு பேசுறீங்க.. ஆனா, எனக்கு பெருமாள் மேல சந்தேகம் இல்லடா..!"

இயக்குநர் A. ெவங்கடேஷ்
"என்னடா.. இப்படி மடையன் மாதிரி பேசுற.. பொண்டாட்டிய அர்த்த ராத்திரியில பறிகொடுத்துட்டு பேசுறவன் பேச்சா இது!"
டேவிட்டின் அப்பா தேவசகாயம் உடைந்த குரலில் கோபமாய் பேசினார்.
"கோபப்படாதிங்கப்பா.. இந்த நேரத்துலதான் நிதானமா யோசிக்கணும். பெருமாள் முரடன்தான். ஆனா, ஆள் வச்சு தங்கச்சிய கடத்துற அளவுக்கு மோசமானவன் இல்ல…"
ரங்கராஜன் மாப்பிள்ளை டேவிட் பேசுவதை ஆச்சரியமாக பார்த்தார்.
"கொஞ்சம் வேற மாதிரி யோசிங்க.. நிச்சயமா பெருமாள் சம்மந்தப்பட்டிருந்தா, அந்த மனோகர் என்னை அடிச்சுபோட்டுத்தான் திவ்யாவை கடத்தியிருப்பான். ஆனா, ஒரு கிரிமினல் கேம் ஆடி, அந்த மனோகர் இப்படி பண்ணியிருக்கண்ணா… இதுல வேற யாரோ பின்னாடி இருக்கணும்.."
"போடா… நீ என்ன சொன்னாலும் நாங்க நம்பத் தயாராக இல்லை. மொதல்ல பெருமாள் மேல ஒரு கம்ப்ளையின்ட் கொடுப்போம். போலீஸ் விசாரிச்சு முடிவு எடுக்கட்டும்.. பெருமாள் நல்லவனா.. இல்லையான்னு.."
டேவிட் பதில் சொல்லும் முன், அவனைப் பற்றி கம்ப்ளையின்ட் எழுத ஆரம்பித்தனர்.
"அட.. கத செம டுவிஸ்ட் அடிக்குதே.. பெருமாள் மேலயே கம்ப்ளையின்ட்டா.. சரி.. அவரையும் விசாரிச்சுடுவோம். யோவ் பெருமாள் சாருக்கு போனை போடுய்யா…"
கம்ப்ளையின்டை வாங்கி படித்த அழகர், கான்ஸ்டபிளுக்கு உத்தரவு போட்டார்.
அனைவரும் கான்ஸ்டபிள் பெருமாளிடம் பேச போவதை, கூர்ந்து கவனிக்க, டயல் செய்து போனை சிறிது நேரம் காதில் வைக்க, கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரிடம் இப்படி சொன்னார்.
"சார்.. போன் சுவிட்ச் ஆப்னு வருது சார்!"
அதிர்ச்சியடைந்த ரங்கராஜன், "அவன் போன் எப்பவும் சுவிட்ச் ஆப் ஆகாதே..!" என சொல்ல..
"இருங்க சார்.. அவரு போன் சுவிட்ச் ஆப் ஆனா என்ன… அவரிடம் பேச எங்களுக்கு நிறைய ரூட்டுகள் இருக்கு சார்!"
அழகர் சற்று எகத்தாளமாய் கூறினார்.
கூட்டுரோட்டை விலகி மண் ரோட்டில் ஓடிய அந்த 'டிரக்', ஆள் அரவமற்ற அந்த காட்டுப்பகுதியில் நின்றது.
இன்னும் மயக்க நிலையில்தான் இருந்தாள் திவ்யா. அவளையே, உற்றுப் பார்த்தான் மனோகர். சீரான மூச்சில் ஏறி இறங்கிய அவளது இளமை வனப்புகளும், ஒரு தெய்வச்சிலை போல இருந்த அவளது முக அழகும், அவள் காதில் போட்டிருந்த அந்த ஜிமிக்கி லேசாக ஆடியபடி அவனை 'தொடு.. தொடு...' என அழைத்தன.
மெதுவாக திவ்யாவை தொட கையை கொண்டு சென்றான். அப்போது செல்போன் அலறி, பதறி கைகளை பின்னுக்கு எடுத்து, போனை எடுத்து பார்க்க 'தலைவர்' என ஸ்கிரீனில் மின்னியது. ஆன் செய்து, காதில் போனை வைத்து பவ்யமாய் 'தலைவரே!' என்றான்.
"நல்லவன் பேசுறன்… வந்துட்டியா?" குரல் கேட்டது. "வந்துட்டேன் தலைவரே.. நீங்க நிக்க சொன்ன இடத்துலதான் நிக்கிறேன்…"
"அங்கயே நில்லு… இப்ப ஒரு ஊதா கலர் இன்னோவா வரும். அதுல ரெண்டு பேரு இருப்பாங்க… அவங்களோட சேர்ந்து.. அவளை வண்டியில அள்ளிப்போட்டு.. நீயும் அதே வண்டியில வா.."
"சரிங்க தலைவரே... அப்போ ட்ரக்?"
"அது அங்கையே நிக்கட்டும்.. அத வச்சு எல்லாம் எவனும், எதுவும் புடுங்க முடியாது!"
"சரிங்க தலைவரே… இன்னொவா வந்ததும்… கிளம்பி வந்துடுறேன்.."
"சரி.. அப்புறம் முக்கியமான விஷயம்… அவளை இன்னொவாக்கு ஷிப்ட் பண்றப்ப மட்டும்தான் அவமேல உங்க கையி படனும். அதுதவிர, அவ மேல கையி பட்டுச்சு… தொட்டவன் கை துண்டிக்கப்படும்!"
"சே.. சே.. அப்படியெல்லாம் தொட மாட்டோம் தலைவேரே…"
"அதுதான் நல்லது… பேருதான் நல்லவன்… ஆனா, ரொம்ப கெட்டவன் தெரியும்ல?"
"தெரியும்..!"
எதிர்முனையில் போன் துண்டிக்கப்பட, மனோகர் தலைப்பாகை, கூலிங் கிளாஸை கழட்டினான். திருநீறு, குங்குமத்தை நெற்றியில் இருந்து அழித்தான். திவ்யாவை திரும்பிக்கூட பார்க்காமல் ஊதா நிற இன்னோவாவிற்காக காத்திருந்தான்.
போலீஸ் ஸ்டேஷன்.
"போங்க… போயி எல்லாரும் ஏதாவது சாப்பிட்டு வாங்க.. திவ்யாவை பத்திரமா மீட்டு விடலாம்… பயப்படாதீங்க.."
இன்ஸ்பெக்டர் அழகர் அவர்களிடம் சொல்லவும்,
"எப்படி சார் சாப்பிடறது… அவ எங்க இருக்கா.. என்ன நிலையில இருக்கானு தெரியாம.. சாப்பாடு எப்படி தொண்டையில இறங்கும்..?"
திவ்யா அம்மா ராஜேஸ்வரி அழ…
"சார்.. அவங்கள சமாதானப்படுத்துங்க.." ரங்கராஜனிடம் கூறிய இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிளை பார்த்து " எல்லாருக்கும் டீயாவது சொல்லுய்யா.." என்று சொல்லிவிட்டு தளர்வாய் சேரில் அமர்ந்தார். டேவிட்டை பார்த்து ,
"என்ன சார்… பெருமாள் போன் சுவிட்ச் ஆப். எங்க இருக்கார்னு கண்டுபிடிக்க முடியல. அவனோட சுத்துற ரவுடிங்க யாருக்கும் அவரு எங்கன்னு தெரியல. எல்லோரும் சந்தேகப்படுற பெருமாள் எங்க இருக்கார்னு தெரிஞ்சாதான்… அடுத்த 'மூவ்' என்னன்னு நான் முடிவு எடுக்க முடியும்.."
அவர் சொல்லி முடிக்கவும், போன் அடிக்கவும் சரியாய் இருந்தது. எடுத்து பேசின கான்ஸ்டபிள், பதட்டமாய் ரிசீவரை இன்ஸ்பெக்டர் அழகிரிடம் நீட்ட, அவர் பிடுங்காத குறையாய், போனை வாங்கி காதில் வைத்தார். "அப்படியா… குட்.. சரி.. இப்பவே கிளம்பி வரோம்.. நீங்க ஸ்பாட்டுக்கு போங்க.. நாங்க வந்துடுறோம்.. என போனை வைத்தார்.
"என்ன ஆச்சு சார்..?" டேவிட் கேட்டான்.
"மேலூர் கூட்டுரோட்ல இருந்து பிரிஞ்சு போற மண்ரோட்டுல டிரக் போன தடயம் இருந்துருக்கு... அதை லோக்கல் போலீஸ் பாலோ பண்ணி கண்டு புடுச்சுட்டாங்களாம். அந்த மண்ரோடு பிரிஞ்சு போன இடத்துல இருந்து 23 கிலோ மீட்டர் தள்ளிதான் டிரக் நிக்குதாம்.."
"சார்.. திவ்யாவை கண்டுபுடுச்சுட்டாங்களா.."
கிட்டத்தட்ட ஒருமித்த குரலில், எல்லோரும் கேட்க, இன்ஸ்பெக்டர் அழகர், அவர்களை ஒருவித பரிதாப பார்வை பார்த்தார்.
"ஐயோ.. என்ன சார் எதுவும் சொல்லாம அப்படி பாக்குறீங்க. டிரக்கை கண்டுபிடுச்சா, திவ்யாவும் கிடைச்சுருப்பாளே சார்.. ஏன் சார் எதுவும் சொல்லாம அப்படி பார்க்குறீங்க.."
திவ்யாவின் அப்பா ரங்கராஜன் மூச்சு வாங்க பேச பேச, இன்ஸ்பெக்டர் அவர் பேசுவதையே மவுனமாய் பார்த்தவர், டேவிட் பக்கம் திரும்பி, "டேவிட்… இப்படி வாங்க!"
அவர் டேவிட்டை மட்டும் தனியே அழைத்துப்போக… எல்லோர் முகத்திலும் பயம் அப்பியது… (தொடரும்)
E-Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353
- இளமையில் குறும்புக்காரராக இருந்த ததேய்ஷி நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொண்டார்.
- ‘என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. அதற்குப் பதில் அதை நான் எப்படிச் செய்வது’ என்று பார்.
பழைய காலம் போல வங்கியில் கியூ வரிசையில் நின்று காசோலையைக் கொடுத்து பணத்தை வாங்குவது போய், நினைத்த நேரத்தில் நமக்கு மிக அருகில் உள்ள இடத்தில் உள்ள பூத்துக்குப் போய் ஒரு கார்டைச் செருகி வேண்டுமென்ற பணத்தை நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள வழி செய்யும் ஏ.டி.எம் எனப்படும் ஆடோமேடட் டெல்லர் மெஷினைப் பெருமளவில் உருவாக்க வழி வகுத்தவர் யார்?
ஆரோக்கியம் பெற ஏராளமான எலக்ட்ரானிக் கண்காணிப்பு சாதனங்களைப் பெருமளவில் தரத்துடன் உற்பத்தி செய்ய வழி வகுத்தவர் யார்? இவற்றை விட ஊனமுற்றவருக்காக வியத்தகும் சேவையைச் செய்தவர் யார்? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் காசூமா ததேய்ஷி என்பது தான்!
பிறப்பும் இளமையும்: ஜப்பானில் உள்ள குமாமோடோ என்ற நகரில் 1900ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி குமானோசுகே - ஐ ததேய்ஷி தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார் காசூமா ததேய்ஷி. இந்தக் குடும்பம் பாரம்பரியமாக ஜப்பானியர் பயன்படுத்தும் கோப்பைகளைத் தயாரித்து வந்தது. இவைகள் பரிசுப் பொருள்களாகக் கொடுக்கப்பட்டு வந்தன.
1908ம் ஆண்டு மார்ச் 26ம் நாள் ததேய்ஷியின் தந்தை மறைந்தார். உடனே குடும்பத்தின் வியாபாரம் குறைய ஆரம்பித்தது. ததேய்ஷியின் தாயார் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பப்பள்ளியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாலும் அவர் குடும்பத்தின் நிலைமையைக் கருதி செய்தித்தாள்களை விநியோகிக்க ஆரம்பித்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ததேய்ஷியின் பாட்டி குடும்பத்தைப் பார்த்துக் கொண்டதோடு அவருக்கு ஒழுக்கம், விஸ்வாசம், சுதந்திரமாக இருத்தல் போன்ற நற்பண்புகளை ஊட்டினார்.
இளமையில் குறும்புக்காரராக இருந்த ததேய்ஷி நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொண்டார். 'இளமைக்கால அனுபவங்கள் பின்னால் எனக்குப் பெரிதும் உதவியது' என்றார் அவர்.
டிரவுஸர் பிரஸ்: ஆரம்பகால தொழில்நுட்பப் படிப்பை குமாமோடோ தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் துறையில் முடித்துப் பட்டம் பெற்ற அவர் ஹையாகோ பிரீபெக்சுரல் அரசு நிறுவனத்தில் மின்னியல் பொறியாளராக வேலை பார்க்கத் தொடங்கினார். அவரது நண்பர் ஒருவர் அவரை இண்டக்ஷன் டைப் ரிலேயைத் தயாரிக்கத் தூண்டினார். இது அவருக்கு மின் சாதனங்களைத் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தது.
1929-ல் அமெரிக்காவில் வால் மார்ட் பெரும் வீழ்ச்சியை அடைந்தது. இது ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தையும் பாதித்தது. ததேய்ஷி தனது ராஜிநாமாவைச் சமர்ப்பித்து தனியாகத் தொழிலைத் தொடங்கினார்.
முதலில் டிரவுஸர் பிரஸ் ஒன்றை அவர் தயாரித்தார்.டிரவுஸர் பிரஸ் என்பது நாம் அணியும் சூட்டில் உள்ள சுருக்கங்களை மின்சார இயக்கத்தால் நீக்கும் மின் சாதனமாகும்.
பின்னர் 1932ல் எக்ஸ் ரே விற்பனையாளர்காக இருந்த தனது நண்பரின் தூண்டுதலால் எக்ஸ் ரே மெஷினுக்கான டைமர் ஒன்றைத் தயாரித்தார்.
தனது தொழில் வளர்ந்து வருவதை உணர்ந்த அவர் ஒஸாகா நகரில் உள்ள ஹிகஷினோடா என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினார். 'ததேய்ஷி எலக்ட்ரிக் மானுபாக்சரிங் கம்பெனி' என்று ஆரம்பிக்கப்பட்ட அது உலகமே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டமான ஓம்ரான் நிறுவனமாக உயர்ந்தது.
ஓம்ரான் கார்பொரேஷன்: கியோடோ நகரில் உள்ள ஒரு பகுதிக்கு ஓமுரோ என்று பெயர். அதிலிருந்து ஓம்ரான் என்ற வார்த்தை உதித்தது. இயந்திரங்கள் தனது வேலையைச் செய்யட்டும்; மனிதனோ இன்னும் அதிகம் படைப்பாற்றலைச் செய்யட்டும்' என்றார் ததேய்ஷி. எல்லா சாதனங்களையும் தானியங்கி முறையில் அவர் உருவாக்க ஆரம்பித்தார். ஏடிஎம் எனப்படும் ஆடோமேடட் டெல்லர் மெஷினை முதன்முதலில் பெருமளவில் அவர் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். ஒரு கார்டைச் செருகி மெஷினிலிருந்து பணத்தை எடுப்பதைக் கண்ட நடைமுறையை உலகமே முதலில் பார்த்து வியந்தது. இப்போது இது சகஜமாக ஆகி விட்டது. அவரது இன்னொரு நிறுவனமான ஓம்ரான் ஆயில்பீல்ச் அண்ட் மரைன் என்ற நிறுவனம் ஏசி மற்றும் டிசியால் இயங்கு, சாதனங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது. 120 நாடுகளில் ஓம்ரான் தனது தயாரிப்புகளை இப்போது வழங்கி வருகிறது.
வீட்டில் உபயோகப்படுத்தப்படும் சாதனங்களையும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய கண்காணிப்பு சாதனங்களையும் ஓம்ரான் தயாரிக்க ஆரம்பித்தது. இரத்த அழுத்த கண்காணிப்புக் கருவிகள், டிஜிடல் தெர்மாமீட்டர், பாடி காம்போஸிஷன் மானிடர், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர்கள் உள்ளிட்ட ஏராளமான சாதனங்கள் இந்த தயாரிப்பில் அடங்கும்.
யடாகா நகாமுரா என்ற டாக்டர் ஜப்பானில் நடந்த பாராலிம்பிக்ஸில் போட்டிகள் முடிந்த பின்னர் ஜப்பான் வீரர்கள் மட்டும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்பதைக் கண்டார். வருத்தம் கொண்டார். தனது மனப்பான்மை போலவே உள்ள ததேய்ஷியுடன் இணைந்து அவர் 1972-ல் ஒம்ரான் டையோ என்ற நிறுவனத்தையும் 1985-ல் ஓம்ரான் டையோ எலக்ட்ரிக் கம்பெனி லிமிடட் என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்தார். அவர்களது ஒரே கொள்கை: "தர்மம் அல்ல; வாய்ப்பு தான்" (Not a Charity but a Chance). ஊனமுற்றோருக்கான விசேஷ சாதனங்களை இந்த நிறுவனங்கள் தயாரித்தன.
ஊனமுற்றோருக்கு நல் வாழ்வு: உலகின் உன்னதமான மனித குல சேவை ஒன்றைச் செயலில் காட்டியவர் காசூமா ததேய்ஷி.
உலகில் உள்ள நாடுகளில் ஐரோப்பாவில் 14 சதவிகிதமும், 12 சதவிகிதம் அமெரிக்காவிலும் ஜப்பானில் 4 சதவிகிதமும் உடலில் குறை உள்ளோர் வாழ்கின்றனர்.
கியோடா நகர்புற எல்லையில் இருக்கும் அவரது தொழிற்சாலையில் ஒரு அரிய காட்சியைக் காண்பவர் வியந்துபோவார்கள்.
உடல் ஊனமுற்றவர்களையும் மனதளவில் மன வளர்ச்சி குன்றியவர்களையும் இந்த சமுதாயம் ஒதுக்கி வைக்கவே முனையும். அவர்களைத் தொழிற்சாலைகளில் வேலை செய்ய பொதுவாக தொழில் அதிபர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் ஓம்ரான் நிறுவனரான ததேய்ஷி படைப்பாற்றல் திறனுடன் அதி நவீன தொழில்நுட்பங்களை இந்த ஊனமுற்றவர்களுக்காகவும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காகவும் உரிய முறையில் மாற்றி அமைத்தார்.
சிஸ்டம்ஸ் தியரி என்ற தொழில்நுட்பக் கொள்கையானது வெவ்வேறு பாகங்கள் ஒருங்கிணைந்து எப்படி ஒரு முழு பொருளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்கிறது. சைபர்னெடிக் எஞ்ஜினியரிங் என்ற தொழில் நுட்பமும் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே ஒரு புதிய தொடர்பை உருவாக்கும் தொழில்நுட்பமாகும்.
ஆக இந்த தொழில்நுட்பங்களை நன்கு அறிந்து கொண்ட ததேய்ஷி உடல் ஊனமுற்றவர்கள் கூட சிக்கலான அசெம்பிளி லைனில் திறம்பட வேலை பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அவர்கள் திறனுக்கு ஏற்றபடியும் உடல் வலிமைக்கு ஏற்றபடியும் அவர் இயந்திரங்களைத் தயாரிக்கச் செய்தார். அவர்கள் எவ்வளவு திறன் உடையவர்கள் என்பதை நன்கு கணித்து மீதி திறனை இயந்திரங்களே செய்ய உரிய வழி வகைகளை அவர் உருவாக்கினார்.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த வேலையை நிச்சயம் செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
ஓம்ரான் சன் ஹவுஸ் தொழிற்சாலையில் உள்ள அசெம்பிளி லைனில் உள்ள இயந்திரங்கள் உடல் ஊனமுற்றோர் அமர்ந்திருக்கும் வீல் சேர் அளவு கீழே இறங்கி வரும். ஒரு கையை இழந்த ஒருவர் இன்னொரு கையால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்காக கருவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.
உடல் வலுவே இல்லாத ஒரு பெண்மணி எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு ஒரு பாக்கேஜிங் மெஷின் உருவாக்கப்பட்டது. அந்தப் பெண்மணி இலேசாக தன்னிடம் உள்ள சிறு பெட்டியை உள்ளே தள்ளி விட அந்த பாக்கேஜிங் அதை ஏற்றுக் கொண்டு மிக வேகத்துடன் தன் உள்ளே இழுத்துக் கொள்ளும்.
தொழிற்சாலையில் உள்ள அனைத்து விளக்குகளையும் லிப்டுகளையும் இவர்கள் தங்கள் வீல் சேரிலிருந்தே இயக்கலாம்.

ச.நாகராஜன்
அவர்களுக்கு உரிய ஊதியத்தைக் கொடுத்து கண்ணியமாகவும் பிறர் மதிக்கும் படி மரியாதையுடன் வாழவும் அவர் வழி வகை செய்தார்.
உடல் ரீதியாக குறைகள் உள்ளவர்கள், மன ரீதியாக குறைகள் உள்ளவர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு குறைகள் உள்ளவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் ஓம்ரான் நல்ல வாய்ப்புகளையும் பயிற்சியையும் தந்தது.
பெரிய வணிக வியாதி: ஒரு நிறுவனம் வளர்ந்து வரும் போது அங்கு பிக் பிசினஸ் டெலிஸ் எனப்படும் "பெரிய வணிக வியாதி" என்று ஒன்று உருவாகி நிறுவனத்தின் கட்டுக்கோப்பை சிதைக்கச் செய்வதைக் கண்ட ததேய்ஷி தனது பெரும் நிறுவனத்தைப் பல பகுதிகளாகப் பிரித்தார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உரிய ஒரு மேலாளரை நியமித்தார். அவர்கள் கம்பெனியின் தலைவர் போல இருக்க வேண்டும் என்று அவர் உணர்த்தினார். நிறுவனத்தை மிகச் சிறப்பாக நடத்த உள்ள வழிமுறைகளை அவர் சுட்டிக் காட்டினார்.
உற்பத்திப் பிரிவே தொழிற்சாலைக்கு இதயம் போன்றது என்பதால் அங்கு மதிய இடைவேளையின்போது முதலில் தொழிலாளர்களுக்கே உணவு முதலில் பரிமாறப்படும். கடைசியில் தான் மேலாளர்கள் சாப்பிடலாம். இது போன்ற பல சிறப்பு விதிகள் தொழிலகத்தை மிக அழகுற நடத்த வழி வகுத்தது.
"உங்களுக்குப் பிடித்த ஒரு நல்ல விளைவானது நிறுவனத்தில் ஏற்பட வேண்டுமென்றால் அது நிச்சயம் நடைபெறும் என்பதற்கான நல்ல சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்க வேண்டும்" என்று அடிக்கடி அவர் கூறுவார்.
ததேய்ஷி எழுதிய நூல்: ததேய்ஷி 'தி எடர்னல் ஸ்பிரிட் ஆப் எண்டர்பிரெய்னர்ஷிப்' என்ற நூலை 1985ல் எழுதினார். இது சீன, ரஷிய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் விற்பனையைக் கண்ட நூலாக ஆனது.1991ல் ததேய்ஷி தனது 91ம் வயதில் மறைந்தார்.
பொன்மொழிகள்: முக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் வணிகமானது சமூகத்தில் ஒரு மதிப்பை உருவாக்க வேண்டும்.
ஒரு நிறுவனம் சமூகத்திற்கு லாப நோக்கில் அல்லாமல் பெரிய அளவில் நல்லனவற்றை வழங்கும் போது அது மிக்க சக்தி வாய்ந்ததாக ஆகிறது.
'என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. அதற்குப் பதில் அதை நான் எப்படிச் செய்வது' என்று பார். முயற்சி செய்து அதைச் செய்து முடிக்கும் வழியைப் பார்.
முதலில் முயற்சி செய் என்பதே மந்திரம்!
உலகம் வியக்கும் ததேய்ஷியின் வாழ்க்கைத் தத்துவமே மொத்தம் மூன்றே வார்த்தைகளில் அடங்கியுள்ளது.
"முதலில் முயற்சி செய்!" என்பது தான் அந்த மூன்று வார்த்தை மந்திரமாகும்!
அன்றாடம் ஆரோக்கியம் சம்பந்தமான எலக்ட்ரானிக் சாதனங்களை வீட்டில் உபயோகிக்கும் போது நாம் மனதிற்குள் நன்றி சொல்ல வேண்டிய ஒரு பெயர் காசூமா ததேய்ஷி!
- வாடகைத்தாய் முறை என்பது கர்ப்பப்பை இல்லாத பெண்கள், குழந்தை பேறு பெறுவதற்கான ஒரு வழிமுறை மட்டும் தான்.
- வாடகைத்தாய் முறையில் என்னென்ன சட்ட திட்டங்கள் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான நடைமுறை சரோகசி (Surrogacy) எனப்படும் வாடகைத்தாய் முறை ஆகும். வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.
வாடகைத்தாய் முறை என்றால் என்ன?
வாடகைத்தாய் என்பது ஒரு பெண், தன் உடல் திறனால் குழந்தை பெற முடியாத நிலையில், அவர்களுக்காக இன்னொரு பெண் கர்ப்பத்தை சுமந்து குழந்தை பெற்றுத் தருவதாகும். இதை மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணின் குழந்தை வளருவதற்கு மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.
அதாவது சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இருக்காது. சில நேரங்களில் அவர்களுக்கு கர்ப்பப்பை இருந்தாலும் கூட அது சரியாக செயல்படாத நிலையில் இருக்கும். ஒருவேளை கர்ப்பப்பையில் செயல்பாடு இருந்தால் கூட அதில் சரியான முறையில் குழந்தை வளர்வதற்கு தேவையான சூழல்கள் இல்லாத நிலை இருக்கும். இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்களுடைய மரபணு வழியிலான குழந்தையை வளர்த்து பெற்றெடுப்பதற்கு ஒரு வழிமுறைதான் வாட கைத்தாய் என்பதாகும்.

இந்த வாடகைத்தாய் முறையில் எந்த தம்பதிக்கு வாடகைத்தாய் வேண்டுமோ, அவர்களை கமிஷனிங் தம்பதி என்று சொல்கிறோம். அதாவது அவர்கள் தான் அந்த குழந்தைக்கு தாய், தகப்பன். வாடகைத்தாய் என்பவர் கர்ப்பப்பையை மட்டும் தான் இந்த குழந்தைக்கு கொடுப்பார்.
எனவே இந்த குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான். அந்த தம்பதியின் முட்டை யையும், விந்தணுவையும் சேர்த்து கருவாக்கம் செய்து, அந்த கருவை வேறொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து குழந்தை பெற்றெடுக்கும் முறைதான் வாடகைத்தாய்.
இந்த வாடகைத்தாய் முறை என்பது, ஐ.வி.எப். சிகிச்சை அளிக்க தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகவே பலவிதமான ஆலோசனைகள், விமர்சனங்கள், விவாதங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.
ஏனென்றால் வாடகைத்தாய் முறையில், குறிப்பாக குழந்தை தேவைப்படுகிறவர்கள் மட்டும் இல்லாமல், சில சமூக காரணங்களுக்காகவும், பிரபலங்கள் என்ற முறைகளிலும், சிலர் தாங்கள் குழந்தை பெற்றால் தங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும், அல்லது அந்த கர்ப்பத்தை சுமப்பதால் தங்களின் வாழ்க்கை பாதிப்ப டையும் என்பது போன்ற சூழ்நிலைகளால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள வாடகைத்தாய் சட்டம்:
இதையடுத்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாடகைத்தாய் முறையானது தற்போது சில விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் வாடகைத்தாய் சட்டம் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி வாடகைத்தாய் முறைகளுக்கு பலவிதமான சட்ட திட்டங்களும், வழிமுறை களும், வரையறைகளும் இந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. அதாவது, 2022-ம் ஆண்டு வரை இந்த வாடகைத்தாய் என்பது ஒரு வணிக ரீதியிலான வாட கைத்தாய் முறையாகவே இருந்தது. 2022-ம் ஆண்டு அமல்படுத்தபட்ட சட்டத்தின் படி வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.
வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை என்றால் என்ன என்று பார்த்தால், தங்கள் குழந்தை வளருவதற்காக, ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்து அவர்களின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும். இதன் மூலம் சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் அதாவது, ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள், பணம் மற்றும் பொருளுக்காக மட்டும் வாடகைத்தாயாக இருந்தனர்.
அவர்களை வாடகைத்தாயாக தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. வாட கைத்தாய் முறைக்கு உட்படுத்தப்படக்கூடிய பெண்கள் பலர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
எனவே அதுபோன்ற ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வாடகைத்தாய் முறையால் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதித்து 2022-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
வாடகைத்தாய் முறை பற்றிய தவறான கருத்து:
எனவே இந்த சட்டத்தின்படி தற்போதைய வாடகைத்தாய் முறையை எப்படி செய்யலாம் என்பதை குழந்தையின்மை சிகிச்சைக்கு வருபவர்கள் உள்ளிட்ட அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் எங்களிடம் வரும் நோயாளிகளுக்கு பல வருடங்களாக நாங்கள் ஐ.வி.எப். செய்து கொண்டிருக்கிறோம். நாங்களும் இதற்கு முன்பு வாடகைத்தாய் முறையை செய்திருக்கிறோம். ஆனால் நிறைய பேர் வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறு எளிதாக வந்துவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள். வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் என்று நினைக்கிறார்கள். இது தவறானதாகும்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
வாடகைத்தாய் முறை என்பது கர்ப்பப்பை இல்லாத பெண்கள், குழந்தை பேறு பெறுவதற்கான ஒரு வழிமுறை மட்டும் தான். ஏனென்றால் இதற்கு இன்னொரு சிகிச்சை முறை கருப்பை மாற்று சிகிச்சையாகும். இந்த கருப்பை மாற்று சிகிச்சையை கடந்த 2012-ம் ஆண்டு உலக அளவில் சுவீடனில் டாக்டர் மட்ஸ் பிரான்ஸ்ட்ரோம் என்பவர் முதல் முறையாக செய்து குழந்தை பேறு பெறப்பட்டது.
கருப்பை மாற்று சிகிச்சையில் அதிக பாதிப்பு, செலவு:
இந்த கருப்பை மாற்று சிகிச்சை இன்றும் உலகத்தில் பல நாடுகளில் செய்தாலும் கூட இதில் கருப்பை தானம் செய்பவர், தானம் பெறுபவர் மற்றும் குழந்தை பேறு பெறுதல் ஆகியவற்றில் ஆபத்தும் உள்ளது. மேலும் இதனுடைய வெற்றி விகிதம் என்பது ரொம்ப வும் குறைவாக இருக்கிறது. இதற்கான செலவுகளும், பாதிப்பு காரணிகளும் அதிகமாக இருப்பதால் இந்த முறை இன்றும் ஒரு தோல்வியடைந்த முறையாகத்தான் கருதப்படுகிறது.
மற்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளான இருதயம், கல்லீரல், சிறுநீரகம் மாற்று சிகிச்சை போல கருப்பை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கிறது. ஏனென்றால் கருப்பையில் ஒரு குழந்தை வளர வேண்டும், அந்த குழந்தை வளரும்போது, மாற்றப்பட்ட கருப்பையானது குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த கருப்பை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் இந்த சிகிச்சையானது மிகவும் குறைவான அளவிலான வெற்றியையே தரக்கூடியது.
ஆனால் வாடகைத்தாய் முறை என்பது குழந்தையின்மை சிகிச்சையில் மிகவும் எளிமையானது, ஆரோக்கியமானது, குழந்தைக்கு கண்டிப்பாக பாதுகாப்பானது. அதே நேரத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தையை பெற்று கொடுக்க உட்படுத்தப்படுகிற பெண்கள் பலரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளை சந்தித்ததே இந்த சட்டம் வருவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்த வகையில் வாடகைத்தாய் முறையில் என்னென்ன சட்ட திட்டங்கள் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற நினைப்பவர்கள், யாரை வாடகைத்தாயாக தேர்வு செய்ய வேண்டும்? அவர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
- இந்திய பெருங்கடலில், அந்தமான் தீவு- இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவு இடையே, ஆழ்கடலில் 26-12-2004 காலை 7 மணியளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ரிக்டர் அளவுகோலில் 9.19.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், சர்வதேச அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று.
சுனாமி...
பேர கேட்டவுடனே சும்மா அதிருதில்ல. கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்னர் நம்மில் பலருக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே தெரியாது. 2004-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த பெயரை தெரியாதவரே இல்லை.
அந்த அளவுக்கு மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றழித்தது.
26-12-2004 இந்த நாளை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது.
வான் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் வாரிச்சுருட்டிச் சென்ற உயிர்கள், சொத்துகளின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. பலர் தங்களது உறவுகளை இழந்து மாறாத சோகத்துடன் இன்றும் கண்ணீருடன் வாழ்கிறார்கள்.
தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. எத்தனை ஆண்டுகளானாலும் சுனாமி தந்த வடு மாறாது.
அன்று நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
இந்திய பெருங்கடலில், அந்தமான் தீவு- இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவு இடையே, ஆழ்கடலில் 26-12-2004 காலை 7 மணியளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.19.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், சர்வதேச அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று.
புவியியல் ரீதியில் கூற வேண்டுமென்றால் இந்த நிலநடுக்கம், இந்திய தட்டு மற்றும் பர்மா தட்டு இடையே நடந்தது. இந்த கொடூர நிலநடுக்கத்தால், இந்திய தட்டு பர்மா தட்டின் கீழ் சரிந்து, கடலடியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. அப்போது 10 மீட்டர் உயர்ந்த பாறைகளால் கடலின் அடிப்பகுதி திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதனால் கடலடிப் பகுதி திடீரென உயர்ந்தும், தாழ்ந்தும் கடல் நீரை அசைத்தது. இந்த மாற்றம், கடல் நீரை வேகமாக நகர்த்தி ராட்சத அலைகளை உருவாக்கியது. இதுவே சுனாமி என அழைக்கப்படும் ஆழிப்பேரலை எழ காரணமாகும்.

கடலில் உருவான சுனாமி பேரலை.
இந்த சுனாமி, கடலின் ஆழத்தில் மணிக்கு 700 கி.மீ வேகத்தில் பயணித்தது. கடற்கரை அருகே வந்தபோது, கடலில் ஆழம் குறைந்து இருந்ததால் அலைகளின் உயரம் அதிகரித்தது. இந்த உயரமான அலைகள் கரையில் மோதி பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது.
இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மியான்மர், சோமாலியா, தான்சானியா, கென்யா, மலேசியா, வங்காளதேசம் ஆகிய 11 நாடுகளில் இந்த சுனாமி பாதிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தோனேசியா, இந்தியா, மற்றும் இலங்கையில் தான் பேரழிவு மிக அதிகமாக இருந்தது. இந்த நாடுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். அதில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். இலங்கையில் 35 ஆயிரம் பேரும், இந்தியாவில் 12 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.
இந்தியாவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். தமிழத்தின் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி கடலூர், காரைக்கால் சென்னை ஆகிய கடற்கரைகளில் சுனாமி பேரலைகள் சரியாக 9 மணிக்கு தாக்க தொடங்கின. அதிகபட்சமாக 6 அடி உயர கடல் அலைகளை கண்ட இந்த கடற்கரைகள், முதன் முதலில் 40 அடிக்கு மேலான அலைகளை கண்டது. அப்போது கடலில் மகிழ்ச்சியாக குளித்து கொண்டும், கடற்கரையில் நடந்து சென்று கொண்டும் இருந்த மக்களை, அந்த சுனாமி பேரலை வாரிச் சுருட்டிக் கடலுக்குள் இழுத்து சென்றது.
அதுமட்டுமல்ல பேரலைகள், கடற்கரையைத் தாண்டி சுமார் 2 கி.மீ. தூரம் ஊருக்குள் புகுந்து, அங்கு இருந்த கட்டிடங்கள், வீடுகள், மரங்கள் அனைத்தையும் அழித்தன. குறிப்பாக கடற்கரை ஒரங்களில் இருந்த மீனவ குடியிருப்புகளை சுனாமி பேரலை, வாரிச் சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதனால் அங்கு வசித்த மீனவ குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
சுனாமி பேரலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்குள், அது தனது கோராதாண்டவத்தை ஆடி முடித்து விட்டது. பகல் 12 மணி வரை சுனாமி அலைகள் தமிழகத்தின் கடற்கரை பகுதிகளை சூறையாடி விட்டன. அதன்பின் கடல் வழக்கம் போல் அமைதியானது. ஆனால் கடற்கரைகள் எல்லாம் மயான பூமி ஆகி விட்டன.

நாகையில் சுனாமி தாக்கியதால் உருக்குலைந்த மீன்பிடி படகுகள்.
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுனாமிக்கு பலியானார்கள். காவிரி டெல்டாவின் கடைகோடி மாவட்டமான நாகையில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர்.
பல இடங்களில் குப்பைகள் போல் உடல்கள் குவிந்து கிடந்தன. அவற்றை எல்லாம் சேகரித்து ஒன்றாக ஒரே இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டதை அழுவதற்கு கூட தெம்பு இன்றி பார்த்த உறவுகளின் சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.
கடலூரில் சுனாமிக்கு பலியானவர்களின் உடல்கள் ஒன்றாக புதைக்கப்பட்ட சில்வர் கடற்கரை இன்றும் தன் சோக கீதத்தை, காற்றோடு காற்றாக வீசி வருகிறது.
மீனவர்களை வாழ வைக்கும் கடல், அன்று ஒரே நாளில் அவர்களது உயிரையும் குடித்தது. சுனாமி பேரலையில் உயிர் தப்பிய பலரும் தங்களது குடும்பத்தை இழந்து நிர்கதியாகி நின்றனர்.
இயற்கையின் பெருங்கருணையாக வழிபடப்படும் கடல் அன்னை அன்று ஒருநாள் சற்று இரக்க முகம் காட்டி இருக்கலாம்! வழக்கம்போல குழந்தைகளின் கால் நகங்களுக்கு கிச்சுமுச்சு காட்டி இருக்கலாம்!
என்ன செய்வது. எல்லாம் இயற்கையின் விளையாட்டு.
காலங்கள் போனாலும், மாற்றங்கள் வந்தாலும் மறக்க முடியுமா? சுனாமி ஏற்படுத்திய இழப்பை.






