என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • திருமணமான முதல் மூன்று ஆண்டுகள் பொங்கப்படி வெகு விமர்சையாக வரும்.
    • பெற்றோர் காலத்துக்கு பின்னர் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் தங்கள் சகோதரிகளுக்கு அவர்களின் இறுதி காலம் வரை கொடுப்பார்கள்.

    பண்டிகைகளில் பொங்கல் சிறப்பான பண்டிகை ஆகும். மற்ற பண்டிகைகள் ஏதேனும் கடவுள் அவதரித்த நாட்களாக இருக்கும் அல்லது கடவுள் கையால் அசுரன் அழிக்கப்பட்ட நாளாக இருக்கும். ஆனால் பொங்கல் என்பது மக்கள் வாழ்வியலோடு இணைந்த பண்டிகை ஆகும்.

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற கூற்றின்படி உலகோர்க்கு உணவளிக்கும் விவசாயத்தை கொண்டாடும் நிகழ்வே பொங்கல் பண்டிகை எனலாம்.

    கரும்போடு ஒட்டிப் பிறந்து கிளை விரிப்பதை கணு என அழைப்பார்கள்.

    தன்னோடு பிறந்த உறவுகளோடு நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு கரும்போடு ஒட்டிப்பிறந்த கணுவின் நினைவாக கணுப் பொங்கல் என்ற பெயரில் பொங்கலுக்கு அடுத்த நாளை கொண்டாடுகின்றனர்.

    விவசாயத்தில் தன்னோடு இணைந்து உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடுகின்றனர்.

    மற்றைய பண்டிகைகள் பண்டிகை தினத்தில் மட்டுமே பரபரப்பாக இருக்கும்.

    பொங்கல் பண்டிகையோ துவங்கும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே சீர் வரிசை கொடுப்பது, வீடுகளுக்கு வெள்ளை அடிப்பது, மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசுவது என களை கட்டத் துவங்கி விடும்.

    தன்னோடு உடன் பிறந்த சகோதரிகளுக்கு தான் விளைவித்த விவசாயப் பொருட்களோடு வேறு சில பொருட்களையும் பொங்கல் விழாவைக் கொண்டாட விவசாயி சீராகக் கொடுப்பதே பொங்கல் சீர்வரிசை என்பார்கள்.

    பொங்கல் வைப்பதற்காக பச்சரிசி, மண்ட வெல்லம், சிறுபயறு, புத்தாடை, மஞ்சள்கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, வாழைக்குலை, காய்கறிகள், புழுங்கல் அரிசி, தேங்காய், படியாக கொடுப்பதற்கு பணம் போன்றவற்றை தான் பொங்கல் சீர் என அழைப்பார்கள்.

    தென் மாவட்டங்களில் பொங்கல் சீர்வரிசை வழங்குவதை பொங்கப்படி கொடுப்பது என அழைப்பார்கள். வடமாவட்டங்களில் இதனை பொங்கல் சீர் என்றழைக்கிறார்கள்.

    மரக்கன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் நடும்போது அதனுடைய பிறந்த இடத்து மண்ணோடு சேர்த்து எடுத்து வைத்தால் தான் செழிப்பாக வளரும்.

    பெண்களும் அது போலத்தான்...

    மணமாகி புகுந்த வீடு சென்று வருடங்கள் பல ஆனாலும் பிறந்த வீட்டு நினைப்பை மறவாமல் மனதிற்குள் வைத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

    பொங்கல் துவங்கும் ஒரு வாரத்திற்கு முன்பே பொங்கப்படி கொடுப்பது களை கட்டத் துவங்கும்.

    கிராமங்களில் அம்பாசிடர், டிரக்கர், ஆட்டோவின் மேற்புறம் கரும்புத் தோகையோடு கட்டப்பட்டு நுழைந்தாலே அது பொங்கப்படி கொண்டு செல்லும் வண்டி என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள்.

     

    பொங்கப்படி வரும் தோரணையை வைத்தே எத்தனையாவது பொங்கப்படி என்று கிராமங்களில் பெரியவர்கள் கணித்துச் சொல்வார்கள்.

    திருமணமான முதல் மூன்று ஆண்டுகள் பொங்கப்படி வெகு விமர்சையாக வரும்.

    முதல் வருட பொங்கல் படியை தலைப் பொங்கல் படி என அழைப்பார்கள்.

    இந்த தலைப் பொங்கல் படியை கிராமங்களில் முந்தைய தலைமுறை காலத்தில் மகேந்திரா வேனில் புதிய பித்தளை அல்லது செம்பு பானை, ஒரு கட்டு கரும்பு, மஞ்சள் குலை, 25 கிலோ அரிசி, புதுத்துணி, எல்லா வகை காய்கறிகளிலும் ஒரு கிலோ, பனங்கிழங்கு, இனிப்பு சகிதம் பெண்ணைக் கட்டிக் கொடுத்த பெற்றோர்கள் உறவினர்கள் சூழ தங்கள் மருமகன் வீட்டிற்கு தலைப்பொங்கல் படியைக் கொண்டு செல்வார்கள்.

    இரண்டாம் வருட பொங்கல் படியை அம்பாசிடர் காரில் உறவினர்கள் இல்லாமல் பெற்றோர்கள் மட்டும் அரைக்கட்டு கரும்பு, பத்து கிலோ அரிசி, வெல்லம், பயறு என முந்தைய வருடத்தை விட குறைவான பொருட்களை பொங்கப்படியாக பெண் வீட்டிற்கு கொண்டு செல்வார்கள்.

    மூன்றாம் வருட பொங்கல் படியை பெண்ணின் பெற்றோர்களில் யாராவது ஒருவர் அல்லது அண்ணன் தம்பியில் ஒருவர் ஆட்டோவில் அல்லது பைக்கில் 5 கிலோ அரிசி, மூன்றாக வெட்டிய முழுக்கரும்பு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ பயறு, ஒரு கிலோ வெல்லம் என்ற அளவில் பொங்கப் படியை கொண்டு செல்வார்கள்.

    மூன்று வருடங்கள் தாண்டிய பின் பொங்கலிட தேவையான அளவு பொருட்களை வாங்கி கொடுப்பார்கள்.

    பெற்றோர் காலத்துக்கு பின்னர் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் தங்கள் சகோதரிகளுக்கு அவர்களின் இறுதி காலம் வரை கொடுப்பார்கள்.

    சில வீடுகளில் பையனைப் பெற்ற அம்மாக்காரி தலைப் பொங்கலுக்கு இன்னென்ன பொருட்கள் வேண்டும் என்று மருமகளிடம் லிஸ்ட் கொடுத்து விடுவார்.

    இதில் ஏதாவது குறைவாக பொங்கல் படியாக வந்தால் பொங்கப் படிக் கொடுக்கக் கூட வக்கத்த வூட்டுல போய் பொண்ணை கட்டிட்டு வந்துட்டான் பொசக்கெட்டப் பய என மகனை திட்டுவது மாதிரி மருமகள் வீட்டை ஜாடையாக மாமியார் சொல்வதுண்டு.

    மாமியார் இந்த டைப் என்றால் சில மணம் முடித்த பெண்கள் வேறு ரகமாக இருப்பார்கள்.

    தன் கணவனின் தம்பி அதாவது தனது கொழுந்தன் மனைவியை விட தனக்கு பொங்கல் படி அதிகமாக வந்திருக்கின்றது என்று புகுந்த வீட்டில் தனது பிறந்த வீட்டுப் பெருமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக பொங்கப்படி பட்டியலை தானே பட்டியல் போட்டு தகப்பனார் வீட்டிற்கு அனுப்பி விடுவாள்.

    தான் அனுப்பிய பட்டியல் பொருட்களை குறைவாக வாங்கி கொண்டு வந்து விடுவார்களோ!! தனது ஓரகத்தியிடம் தனது வீட்டு பொங்கப்படி பவுசை காட்ட முடியாதோ!! என எண்ணி போனை டயல் செய்து தனது அம்மாவிடம்...

    யம்மோவ்!! நான் அனுப்பிவிட்ட பொருள்களில் ஒரு பொருளாவது குறைவா வந்துச்சுன்னா என்னோட மாமியார் குத்தல் குத்தலா நம்ம வீட்ட பத்தி குறைச்சு பேசுவாவ!!...

    என எதையும் பேசாத நல்ல மாமியாரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நல்ல மாமியாரை பொல்லாத மாமியாராக தனது தாய் வீட்டில் சொல்லும் மகள்களும் உண்டு.

    தன்னுடைய அம்மாவின் மீது வீண் பழியை சுமத்தி மனைவி அவளுடைய தாய் வீட்டில் இப்படி பட்டியல் போட்டு பொங்கப் படி வாங்குவதை கணவன் அறிந்து மனைவியிடம்...

    என் மீதும் என்னுடைய அம்மா மீதும் வீணாக பழி சுமத்தி இப்படி அதிகமாக பொங்கப்படி வாங்குகிறாயே!!

    உங்களது வீட்டில் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என மனைவியிடம் கேட்டால்...

    ந்நேருங்க! உங்க வேலைய பாத்துட்டு இருங்க!! உங்களுக்கு ஒன்னும் தெரியாது !!! இப்படிக் கேட்டாத்தான் பொங்கப்படி எங்க வீட்டுல இருந்து வரும் எனக் கணவன் வாயை அடைத்து விடும் பெண்களும் உண்டு.

     

    எல்லோர் வீட்டுக்கும் பொங்க படி வந்து விட்டதே!! அப்பா கொண்டு வருவார்களா!!! மாட்டார்களா!! என ஏக்கத்தோடு வாசலையும் தெருவையும் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் தனது வீட்டில் இருந்து வரும் பொங்கப்படியை கொண்டு வரும் தாய், தந்தையைப் பார்த்ததும் அவர்கள் மனதில் ஏற்படும் சந்தோஷ உணர்வுகளை அவர்களால் மட்டுமே விவரிக்க முடியும்.

    புகுந்த வீட்டில் எல்லா வசதிகளும் இருந்து, மாமனார் வீட்டில் இருந்து பொங்கல் படி வருவதைப் பற்றி எதிர்பார்க்காத மருமகன் கணவனாக கிடைத்தும்..

    இந்தா மக்களேய்!!! பொங்கப்படியா இதை வைச்சிக்க எனச் சொல்லி திருமணம் முடித்து பதினைந்து ஆண்டு கழிந்த பின்பும் அஞ்சு கிலோ அரிசிப் பையோடு ஐநூறு ரூபாயை கையில் திணித்துச் செல்லும் தனது தந்தை சென்ற பின்...

    நமக்குப் பின் திருமணம் முடித்த உங்களது தங்கைக்கு உங்களது வீட்டில் இருந்து நீங்க பொங்கப் படி கொண்டு போகவில்லை.

    எங்க அப்பாவ பாத்தியாளா!! மொவளை மறக்காம பொங்கப் படி தந்துட்டு போறாவ!! என கர்வத்தோடு கணவனோடு சொல்லும் பொழுது அந்தப் பெண்ணிடம் தெரிவது நிச்சயமாக பிறந்த வீட்டு பெருமையை பேசும் குணம் அல்ல!! மாறாக தன் மீது தன் தகப்பன் வைத்திருக்கும் பாசத்தை பெருமையோடு சொல்வது ஆகும்.

    பொங்கப்படி என்பது சின்ன வெங்கல பானையும், பச்சரிசியும், கரும்பு துண்டுகளையும் சேர்த்து ஏதோ ஆயிரம் ரூபாய் மதிப்பான பொருட்கள் தானே!! இதற்காகவா இத்தனை பில்டப் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும்.

    அதை கொண்டு வரும் அப்பா, அண்ணணின் பாசத்தை மகளால், தங்கையால் மட்டுமே உணர முடியும்.

    பொங்கப்படி அது உறவுகளை இணைக்கும் உறவுப்படி...

     

    முன்பெல்லாம் சேலை, தாவணி போன்ற பாரம்பரிய உடை அணிந்து வீட்டு முற்றத்தில் விறகு அடுப்பில் தென்னம் பாளை, பனை ஓலையைப் பயன்படுத்தி சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படைத்து கடவுளை வணங்குவார்கள்.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருக்கும் நாங்கள் விறகு அடுப்புக்கு எங்கே போவது!!! மார்பிள், கிரானைட் போட்ட தளத்தில் விறகு அடுப்பை பயன்படுத்த முடியுமா என எதிர் கேள்வி கேட்டு...

    இரவு நேர உடையை அணிந்து கொண்டு சமையலறை கேஸ் அடுப்பில் சின்ன எவர் சில்வர் பானையில் வேக வைத்த பச்சரிசி வெந்ததும் சிறு கிண்ணத்தில் எடுத்து ஹேப்பி பொங்கல் என்று கணவனுக்கு மனைவி கொடுக்கும் அவசர வாழ்வியல் சூழலில் பெரும்பாலானோர் இருக்கின்றோம்.

     

    சுரேஸ்வரன் அய்யாப்பழம் (சில்வண்டு)

    நகரங்களில் இருக்கும் அத்தனை பேரும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தானே.

    எனவே பொங்கல் விடுமுறைக்கு அவரவர் சொந்தக் கிராமங்களுக்கு சென்று பாரம்பரிய முறைப்படி தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடுவோம்.

    பண்டிகைகளும் பாரம்பரியங்களும் இன்றளவும் கிராமங்களில் உயிர்ப்போடு தான் இருக்கின்றன!

    தொடர்புக்கு:

    isuresh669@gmail.com

    • வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீர் தரும் ஒன்றாகத்தான் மண்பானை இன்றைய தலைமுறைக்கு தெரியும்.
    • உணவளிக்கும் உழவைக் கொண்டாடும் திருவிழா பொங்கல் மட்டுமே.

    "ஏனமெல்லாம் எவர்சில்வர் இருந்து விட்டால் அவர் செல்வர்

    ஏழைப்பெண்களும் வேண்டும் என்று சொல்வர் - கணவர்

    இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்"

    இது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ஒரு பாடல்.

    எவர்சில்வர் பாத்திரங்கள் அதிகமாக புழக்கத்தில் வரத்துவங்கிய காலகட்டமாக இருக்கவேண்டும்.

    அப்படின்னா எதுல சோறு பொங்குவீங்க...? என இளசுகளின் குரல் கேட்கிறது.

    எவர்சில்வருக்கு முன்னால் ஈயம்... பித்தளை... தாமிரம் என பாத்திரங்கள் புழங்கின.

    அதிலும் அன்றாடத்துக்கு ஈயம்...

    அதற்கடுத்து பித்தளை...

    அப்புறம் துட்டுப்பானை.

    இந்தப் பாத்திரங்களை புழங்குவதை வைத்தே ஏழையா...பணக்காரரா என கணித்து விடலாம்.

    அப்படியெல்லாம் கணிக்க விடாமல் எல்லோரும் சமமாக புழங்கிய பாத்திரம் ஒன்று இருந்தது...

    அது மண்பானை!

     

    வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீர் தரும் ஒன்றாகத்தான் மண்பானை இன்றைய தலைமுறைக்கு தெரியும்.

    ஆனால்.. முன்பெல்லாம் மண்பானைதான் சகலமும்.

    கீழ பெரிய்ய பானை...

    அதுக்கு மேல அத விட சின்னது...

    அதுக்கும் மேல அத விட சின்னது...

    இப்படி நாலஞ்சு அடுக்குப் பானைதான்...

    அந்தக்கால வைப்பறை...!

    ஒன்னுல தானியம்... தவசு.

    ஒன்னுல கருப்பட்டிச் சில்லு...

    ஒன்னுல மாவடு...

    ஒன்னுல கருவாடு...

    இதுக்கிடையில ஏதோவொரு பானையில அம்மாவோட சிறுவாட்டுக் காசு.

    எல்லா வீட்டு மூலையிலையும் இப்டி ஒரு அடுக்குப்பானை வரிசை இருந்தது.

    உண்மையில் சோற்றை விட... கூழுக்கே மண்பானை ஏற்றது.

    கூழ்ப்பானை... சோத்துச்சட்டி...

    என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

    அரிசி சோறு வரும்போதே தன்னோடு ஈயச்சட்டியையும் கூட்டிக்கொண்டே வந்திருக்கும் போல.

    இன்றைக்கு எல்லாம் காலையில் பொங்கின சோறை மத்தியானம் சாப்பிடுவதில்லை.

    சுடச்சுட சூடான உலகம் இது.

    ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சோறு பொங்கி, அதை மறுநாள் அதே நேரம் வரை வைத்திருந்து சாப்பிட்ட கடைசித் தலைமுறை நாம்தான்.

    காடு கண்ணிகளுக்கு போய்ட்டு வந்து...

    பொழுதடைய சோறாக்க உட்கார்ந்தா...

    நல்லா இருட்டுன பிறவுதான்... சோறு கிடைக்கும்.

    அந்த மண் பானை நிறைய்ய சோறாக்கி...

    சாப்பிட்ட பிறகு... தண்ணி ஊத்தி வச்சு...

    அந்த நீச்சத்தண்ணிய காலையில குடிச்சுட்டு..

    மிச்சம் இருக்குற நீச்சத்தண்ணியில கிடக்குமே அதுதான் ஊற வச்ச சோறு. அதன் மகிமையே தனி...!

     

    கூழ்... சோறு மட்டுமல்ல... தொட்டுக் கொள்ளும் வெஞ்சனத்திற்கும் மண்பானையே ருசி தரும்.

    கைநிறைய்ய மிளகாய்ப் பழத்தை கிள்ளிப்போட்டு...

    அஞ்சாறு புளியம்பழத்தை அதுல போட்டு...

    அதுக்குத்தக்கன உப்பையும் சேர்த்து...

    மண்பானையில மூனு நாளு ஊற வச்சு...

    அதை கூழுக்கு கடிச்சுக்கிட்டா...

    அட அட... கொண்டா கொண்டானு கூழ்ப்பானை காலியாகும்.

    வாழ்வோடு ஒன்றிணைந்திருந்தது மண்.

    பிறந்த ஊரை விட்டு வெளியே போகும்போது ஊரின் எல்லையில் மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு போவது...

    விளையாடும்போது கீழே விழுந்து அடிபட்டால் அங்கேயே கொஞ்சம் மண்ணை அள்ளி காயத்தில் போடுவது...

    வெளியூரில் உள்ள குலசாமி கோயிலில் பிடி மண்ணெடுத்து...

    அந்த மண்ணை கலந்து சொந்த ஊரில் குலசாமிக்கு கோயில் கட்டுவது...

    பாவம் செய்தவர்களை மண்ணையள்ளித் தூற்றி சாபமிடுவது... என மண்ணோடு உறவாடிய சமூகம் நாம்.

    நாம் மட்டுமல்ல உலகின் எத்திசையிலும் உள்ள மரபார்ந்த இனக்குழுக்களும் இப்படித்தான்.

    அந்த மண் நம்கூடவே குடிக்கும் நீரில்... உண்ணும் உணவில்...

    ருசியேற்றி நம்மை வளர்ந்தெடுத்தது மண்பானை வடிவில்.

    இன்றைக்கு மண்பானைகளை இழந்து நிற்கிறோம்...

    சரியாகச் சொன்னால் மண்ணையே இழந்து கொண்டிருக்கிறோம்...!

    நீர்... நிலம்... நெருப்பு காற்று... வெளி... இப்படி பஞ்சபூதங்களில் ஈர்க்கும் சக்தி உள்ள ஒரே இயற்கை மண்.

    பிறந்த மண்ணை வைத்தே நம் குணமும் இருக்கும்.

    உலகின் பெரும்பாலான பண்டிகைகள் அவரவர் மண்ணை மையமிட்டே இருக்கும்.

    அப்படியான பண்டிகைகளில் தலையாயது நம் பொங்கல்.

    எல்லா பண்டிகைக்கும் மதம் சார்ந்த கதைகள் பின்புலம் உண்டு.

    அப்படியெல்லாம் எந்த மதப்பின்புலமோ... சாதிப்பின்புலமோ இல்லாமல்,

    இயற்கையை...

    உணவளிக்கும் உழவைக் கொண்டாடும் திருவிழா பொங்கல் மட்டுமே.

    இன்னும் சரியாகச் சொன்னால் தீட்டுகளுக்கு. சடங்குகளுக்கு அப்பாற்பட்டது பொங்கல்.

    பொங்கல் சமயத்தில் வீட்டில் இறப்பு நிகழ்ந்துவிட்டாலும் கூட விரைவாக இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு.. பொங்கலுக்கு தயாரான மரபு நமக்கு உண்டு.

     

    பொங்கல்...

    சொல்லும்போது மட்டுமல்ல. நினைக்கும் போதே தமிழர் உள்ளமெல்லாம் தித்திக்கும்.

    வாழ்வின் அன்றாடச் சலிப்பிலிருந்து நம்மை மீட்டெடுக்கவே பண்டிகைகளும்... கொண்டாட்டங்களும். ஆனால் பொங்கல் பண்டிகை நம்மை சலிப்பில் இருந்து மீட்பது மட்டுமல்ல...

    நம் மரபை நம் அடையாளத்தை நமக்கு மீட்டெடுக்கிறது.!

    அதென்ன நம் மரபு...?

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

    உழவே தலை...

    நன்றி மறப்பது நன்றன்று...

    இவை நம் மரபின் சில கூறுகள்.

    உழவுக்கு துணைநிற்கும் இயற்கைக்கு எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி நன்றி கூறி கொண்டாடுவதே பொங்கல்.

    எளிமையாகச் சொன்னால்...

    அந்தப் பகுதி மண்ணில்...

    அந்தப் பகுதி தண்ணீரைக் கலந்து... மண்பானை செய்து...

    அந்தப் பகுதி வெயிலில் காயவைத்து...

    அங்கு விளையும் காய்கறிகளை...

    கிழங்குகளைப் படைத்து...

    இயற்கையை வணங்கி...

    அங்கிருக்கும் மாடுகளை அழகுசெய்து.

    கொண்டாடி மகிழ்வதே பொங்கல்.

    இன்றைக்கு வேறு வேறு வடிவங்களில் பொங்கல் மாற்றமடைந்திருக்கிறது.

    அதில் முக்கியமான மாற்றம்... மண்பானை பொங்கல் பண்டிகையிலிருந்து தள்ளி நிற்பது.

    அது நடக்கத் துவங்கிய காலம்தான்... இக்கட்டுரையின் துவக்கமான பாவேந்தர் பாடல்.

    ஒரு காலகட்டம் வரை சமையல் முழுமைக்கும் மண்பானைதான்.

    அதிலும் மீன் குழம்பிற்கும் மண்பானைக்கும் அப்படியொரு பொருத்தம்.

    சோத்துப்பானை, குழம்புப்பானை...

    அதுக்கு தனி... இதுக்கு தனி...

    என மண்பானைகள் உண்டு.

    பொங்கலுக்கு முதல்நாளே புதிதாக மண்பானை வாங்கி நன்கு கழுவி... வெயிலில் காயவைத்து விடுவார்கள்.

    பானையின் கழுத்துக்கு

    பூ அணிசெய்து...

    பொட்டிட்டு...

    வீட்டின் முன்பு கோலத்தின் மையத்தில்... வைத்து

    விறகடுப்பில் மண் பானையை ஏற்றும்போது குலவையிடுவர்.

    அடுப்பேற்றி பொங்கல் பொங்கி வருகையில் மண்பானையின் வாயிலிருந்து பொங்கி வருவது பேரழகு.

    அதுவும் பொங்கல் வைக்கும் பெண்ணின் வலது புறமாக பொங்கி வருவது பெருமகிழ்ச்சிக்கு உரியது.

    அப்படி மண்பானையில் பொங்கும் பொங்கலுக்கு தனி ருசி உண்டு.

    இன்றைக்கு நம் மரபின் பல கூறுகள் பொங்கலில் உள்ளன.

    மாடுபிடி... சல்லிக்கட்டு...

    கரும்பு... காய்கறி... கிழங்கு படைத்து இயற்கையை போற்றுதல்.

    பாரம்பரிய உடை அணிதல் என பலவற்றை நாம் மறக்கவில்லை.

    நாம் கைவிட்ட முக்கிய மரபு மண்பானை.

    இன்றைக்கு பெரும்பாலான இடங்களில்... உணவகங்களில மண்பானை சமையல் என அறிவிப்பு காணப்படுகிறது.

    அதற்கு காரணம் அதன் ருசி.

     

    கண்மணி ராசா, 8903543802

    சமைக்கப்படும் உணவின் தன்மைக்கேற்ப... மண்பானை அதை ருசியூட்டுகிறது.

    நிறைய இடங்களில் மண்பானைத் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால்... உழவிற்கு உறுதுணையான நிலத்திற்கு... நீரிற்கு...

    நெருப்பிற்கு... காற்றிற்கு நன்றி கூறும் பொங்கலில் மண்பானை இல்லாமலிருப்பது சற்றுக் குறையே.

    இந்தப் பொங்கல் திருநாளை மண்பானையில் வைப்போம்.

    அதன் தனித்த ருசி எல்லாச் சமையலுக்கும் மண்பானையை பயன்படுத்த நம்மை நகர்த்தும்.

    மண்பானையைக் கொண்டாடுவோம்.

    அதன் வழியே...

    மண்ணைக் கொண்டாடுவோம்

    அதன் வழியே...

    மக்களைக் கொண்டாடுவோம்.

    வாழிய பொங்கல்...

    வாழிய நற்றமிழ் நாடு.!

    • மருத்துவமனைகள், வாடகைத்தாய் சட்டப்படி குழந்தை பேறு பெறுவதற்கு அனுமதி பெற்ற மருத்துவமனையாக இருக்க வேண்டும்.
    • எல்லோருக்கும் வாடகைத்தாய் முறை என்பது முடியாத ஒன்று, தேவையில்லாத ஒன்று.

    குழந்தையின்மையால் பாதிக்கப்படும் ஒரு பெண், ஏதோ ஒரு காரணத்தால் தனது கர்ப்பப்பை மூலம் குழந்தையை சுமந்து பெற முடியாத நிலையில், அந்த தம்பதிக்காக இன்னொரு பெண், அவர்களின் கருவை சுமந்து வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொடுக்க முடியும். வாடகைத்தாய் முறையை எப்படி பயன்படுத்த வேண்டும்? வாடகைத்தாய் முறையில் ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுவது எப்படி என்பதை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

    வாடகைத்தாய் மூலம் குழந்தை பேறு பெறுவதற்கான வழிமுறைகள்:

    வாடகைத்தாய் முறையில் முதல் முக்கியமான விஷயம், வாடகைத்தாயாக இருக்கும் பெண்ணின் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் வாடகைத்தாயாக வருகிறவர்களின் உடல் நலன் மற்றும் மன ஆரோக்கியத்தை முதலில் பரிசோதிக்க வேண்டும்.

    அதன்பிறகு அவரது கர்ப்பப்பை வலுவாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். கர்ப்பத்தை தாங்கும் திறன் கர்ப்பப்பைக்கு இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இவை சீரான முறையில் இருந்தால் தான் அந்த பெண்ணை வாடகைத்தாயாக பயன்படுத்த முடியும். அந்த பெண்களுக்கு இதில் ஏதாவது ஒரு குறை இருந்தால் வாடகைத்தாயாக பயன்படுத்த முடியாது.

    வாடகைத்தாய் முறையில் குழந்தை பேறு பெற விரும்பும் கமிஷனிங் தம்பதியை ஐ.வி.எப். மையத்துக்கு வரவழைத்து பெண்ணின் கருமுட்டைகளை எடுத்து, கணவர் விந்தணுவுடன் சேர்த்து கருவாக்கம் செய்து, வாடகைத்தாயாக இருக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்தப்படும். இதன் மூலமாக அந்த தம்பதிக்கு குழந்தைப்பேறு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சுருக்கமாக சொன்னால் இதுதான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பேறு பெறுவதற்கான வழிமுறைகள்.

    அனுமதி பெற்ற மருத்துவமனையாக இருப்பது அவசியம்:

    இந்த வாடகைத்தாய் முறையில் குழந்தை பேறு பெறுவதை பல்வேறு மருத்துவமனைகளிலும் செய்யலாம். ஆனால் அந்த மருத்துவமனைகள், வாடகைத்தாய் சட்டப்படி குழந்தை பேறு பெறுவதற்கு அனுமதி பெற்ற மருத்துவமனையாக இருக்க வேண்டும்.

    பொதுவாக இந்த வாடகைத்தாய் முறையில் குழந்தை பேறு பெறுவதற்கு திருமணமாகி குறைந்தது 5 வருடமாவது இருக்க வேண்டும். தனியாக வசிக்கும் பெண் என்றால் 22 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அவருடைய கணவர் இல்லையென்றால் கூட, தானம் அளிப்பவரிடம் இருந்து விந்தணுவை எடுத்து, முட்டையுடன் சேர்த்து கருவாக்கம் செய்து, கர்ப்பப்பையில் வைத்து, குழந்தைப்பேறு பெற முடியும்.

    இவை அனைத்தும் தான் அந்த வாடகைத்தாய் மற்றும் கமிஷனிங் தம்பதிக்கான விதிமுறைகள். எனவே வயது, அவர்களின் முட்டைகளின் எண்ணிக்கை, முட்டைகளின் வளர்ச்சி சீராக இருந்து, கர்ப்பப்பை நன்றாக இருந்தால் கண்டிப்பாக இதன் மூலம் குழந்தைப்பேறு பெற வாய்ப்புகள் உண்டு.

    வாடகைத்தாய் சட்டப்படி வாடகைத்தாயாக இருப்பவர்கள், எந்த காரணத்தை கொண்டும் அந்த தம்பதியின் ஒப்புதல் இல்லாமல் குழந்தையை அழிப்பதோ, குறை பிரசவத்துக்கு அனுமதிப்பதோ அல்லது குழந்தை வேண்டாம் என்றோ கண்டிப்பாக சொல்லக்கூடாது. கமிஷனிங் தம்பதியாக வரும் பெண்ணுக்கு கர்ப்பப்பை இல்லாத நிலை, கர்ப்பப்பை பாதிப்படைந்த நிலை, பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டு கர்ப்பப்பை கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை இழந்த நிலையில் அவர்களால் குழந்தையை சுமந்து பெற முடியாது. மேலும் அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களின் கர்ப்பப்பை வலுவிழந்து திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கலாம். சில நேரங்களில் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம். இந்த மாதிரி ஏதோ ஒரு காரணத்துக்காக கர்ப்பப்பையில் அவர்கள் அறுவை சிகிச்சை செய்தி ருந்தால் அவர்கள் குழந்தை பேறு பெறுவதில் ஒரு பிரச்சனை வரலாம். இந்த வகையான பிரச்சனை ஏற்பட்டால் இவர்களுக்கு முறையான பரிசோதனை செய்து என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அந்த காரணத்துக்கான தீர்வு தான் இந்த வாடகைத்தாய் முறையாக இருக்க வேண்டும். எனவே எல்லோருக்கும் வாடகைத்தாய் முறை என்பது முடியாத ஒன்று, தேவையில்லாத ஒன்று.

     

    வாடகைத்தாய் முறைக்கான தகுதி சான்றிதழ்:

    எனவே ஒரு தம்பதி வாடகைத்தாய் முறையை தேர்ந்தெடுக்கும்போது அந்த பெண்ணுக்கு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் இருந்து ஒரு தகுதி சான்றிதழ் பெற வேண்டும். அதாவது, இந்த பெண் குழந்தை பேறு பெறுவதற்கு வாடகைத்தாய் முறைதான் தேவை, வாடகைத்தாய் முறைக்கு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.

    அதேபோல் வாடகைத்தாயாக வர விரும்பும் பெண்ணும் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் தகுதி சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு முன்பு அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்து உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதாக சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகு அவருக்கான தகுதி சான்றிதழை மாவட்ட சுகாதார அதிகாரி கொடுப்பார்.

    இந்த தகுதி சான்றிதழை வைத்து வாடகைத்தாய்க்கு ரூ.5 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸ் தொகை, கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பிறகு அவருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிகிச்சை செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். அதன்பிறகு மாவட்ட சுகாதார அதிகாரி கொடுக்கின்ற தகுதி சான்றிதழை வைத்து கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மூலமாக ஒரு அத்தியாவசிய சான்றிதழ் (எசென்சியாலிட்டி சர்டிபிகேட்) வாங்க வேண்டும். இந்த அத்தியாவசிய சான்றிதழ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை வைத்து இவர்களுக்கு மாநில அளவிலான வாடகைத்தாய் வாரியம் அனுமதி கொடுக்கும். இந்த அனுமதி கிடைத்த பிறகுதான் வாடகைத்தாய் மூலமான குழந்தைபேறு சிகிச்சையை தொடங்க முடியும்.

    வாடகைத்தாய் முறைக்கு அனுமதி பெற்ற ஒவ்வொரு ஏ.ஆர்.டி. கிளினிக்குகளும், இந்த சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி தான் வாடகைத்தாய் முறையை செயல்படுத்த முடியும். அதேபோல் வாடகைத்தாய் எந்தவித லாபமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் இந்த வாடகைத்தாய் முறைக்கு உடன்பட வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

     

    தொடர்ச்சியாக முயன்றால் குழந்தைபேறு வாய்ப்புகள் அதிகம்:

    வாடகைத்தாய் முறையில் இருக்கும் எல்லோருக்கும் 100 சதவீதம் வெற்றி வருமா என்று கேட்டால் அந்த மாதிரியான எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனென்றால் ஒருமுறை வாடகைத்தாய் முறையை முயற்சிக்கும் போது வெற்றி விகிதம் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரலாம். ஆனால் இதுவே தொடர்ச்சியாக முயற்சி செய்யும்போது வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் கர்ப்பப்பையே இல்லாத பெண்கள், கர்ப்பப்பை பாதித்த பெண்கள், கர்ப்பப்பையில் புற்றுநோயோ அல்லது கட்டிகளோ ஏற்பட்டு சிதைந்து செயல் இழந்த பெண்களுக்கு இது தான் வழிமுறை. இந்த வழிமுறைகளை கடைபிடித்து வாடகைத்தாய் முறையில் கருத்தரிக்க முடியும். முறையான சட்டத்துக்கு கீழ் சரியான வழிமுறைகளுடன் செய்தால் இந்த வாடகைத்தாய் முறை மூலமாக குழந்தை பேறு பெற முடியும்.

    எல்லோருக்கும் வாடகைத்தாய் முறையில் கருத்தரிப்பு சிகிச்சை செய்ய முடியாது. தேவையில்லாத சமூக காரணங்களுக்காகவோ அல்லது குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, ஆனால் வாடகைத்தாய் மூலமாக பெற்றுக்கொள்வேன் என்பவர்களுக்கோ இது சரியான வழிமுறை இல்லை. இதுதான் வாடகைத்தாய் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

    இதனை தெளிவாக தெரிந்து கொண்டு தம்பதியோ, தனியாக வசிக்கும் பெண்ணோ, விதவையோ அல்லது தனியாக வசிக்கும் ஆண்களோ, குழந்தை பேறு பெற விரும்பினால் இந்த சட்டத்தின்படி தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் நல்ல ஒரு ஆரோக்கியமான குழந்தை பேறு பெற முடியும்.

    • முருகனுக்குரிய மந்திரத்தையும் பிரம்மனுக்கு திருமால் சொல்லிக் கொடுத்தார்.
    • பல சித்தர்கள் அவரை வணங்கும் பொழுது பல மந்திரங்களை உருவேற்றினார்கள்.

    திருச்செந்தூர் தலம் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்த்தப்பட்ட தலமாகும். மும்மூர்த்திகளின் குறைகளும் இந்த தலத்தில் தீர்ந்துள்ளன. ஆன்மிக புண்ணிய தலங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் தலம் அவற்றில் முதன்மையானது என்பதற்கு இதுவே சான்றாகும்.

    மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனுக்கு நல்ல பக்குவத்தை கொடுத்த இடம் திருச்செந்தூர். பிரம்மன் தனது 5-வது தலையை இழந்து வருந்திய போது அதற்கு நிவாரணம் கிடைத்த இடமும் திருச்செந்தூர் தான். அதன் பின்னணியில் உள்ள வரலாற்றை தெரிந்து கொண்டால் திருச்செந்தூரின் தலச்சிறப்பு உங்களுக்கு புரியும்.

    பிரம்மாவுக்கும் திருமாலிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உண்டானது வேதமும் பிரணவமும் சிவனே இருவரிலும் உயர்வானவர் என்று கூறிய பின்னும் இருவரின் சண்டையும் தொடர்ந்தது. இதை தேவர்கள் மூலம் அறிந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி தந்தார். அதனைக் கண்ட திருமால் தன்னைவிட சிவபெருமான்தான் பெரியவர் என்று அமைதியானார். ஆனால் பிரம்மா அதை ஏற்காமல் இன்னும் செருக்குடன் இருந்தார்.

    சிவனுக்கு ஐந்து முகங்கள். இருப்பது போலவே தமக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் நானே பெரியவன் என்ற அகந்தை பிரம்மாவுக்கு உண்டானது. (பிரம்மாவுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தது). பிரம்மனது அகந்தையை போக்க எண்ணிய சிவபெருமான் பைரவராக மாறி அவருடைய தலைகளில் ஒன்றினை கொய்தார்.

    இதனால் பிரம்மா நான்கு முகத்துடன் நான்முகன் என்று பெயர் பெற்றார். பிரம்மாவின் ஆணவமும் அழிந்தது. ஆணவம் மிகுந்த பிரம்மாவின் தலைகளில் ஒன்றினை கொய்த சிவபெருமானின் திருவுருவம் பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானின் இந்த பேராற்றலை திருஞானசம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் தேவாரங்களில் போற்றி புகழ்ந்து பாடி உள்ளார்கள். திருஞானசம்பந்தர் சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களில் இதுவும் ஒன்று என்று பாடியதோடு இவ்வீர செயலை பற்றி தேவாரங்களில் 29 இடங்களில் சிறப்பாக பாடியுள்ளார்.

    சிவபெருமான் பைரவராக மாறி பிரம்மாவின் தலையை கொய்ததால் பிரம்மாவுக்கு நிம்மதி இல்லாமல் போய்விட்டது. தலையிழந்த பிரம்மன், புலம்பியபடி அலைந்தார். தனக்கு மீண்டும் தலை கிடைக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தார்.

    திருமாலை சந்தித்து பேசினால், நல்ல யோசனை சொல்வார் என்று பிரம்மனுக்கு தோன்றியது. உடனடியாக திருமாலை சந்தித்து தனது தலை பறிபோனதை பற்றி மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். அதற்கு திருமால், ஆறுதல் கூறினார்.


    சிவபெருமான் மூலம் இழந்த தலையை அவரது மகன் ஆறுமுகம் மூலம் பெற்றுவிட முடியும் என்று பிரம்மனுக்கு நம்பிக்கையூட்டினார். இதைக் கேட்ட பிரம்மன், "முருகனின் அருளைப் பெற தான் என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு திருமால், "முருகனை உரிய மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். திருச்செந்தூருக்கு சென்று நான் சொல்லும் முருகனின் மந்திரத்தை தினமும் சொல்லி தவம் செய். உனது 5-வது தலை நிச்சயமாக கிடைக்கும்" என்றார்.

    முருகனுக்குரிய மந்திரத்தையும் பிரம்மனுக்கு திருமால் சொல்லிக் கொடுத்தார். அதை ஏற்று பிரம்மன் திருச்செந்தூருக்கு வந்தார். முருகனை மனதார வழிபட்டு மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.

    முருகப் பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. பல சித்தர்கள் அவரை வணங்கும் பொழுது பல மந்திரங்களை உருவேற்றினார்கள். அந்த மந்திரங்களையும் அதன் பலன்களையும் பிற்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருந்தார்கள்.

    அப்படி பல மந்திரங்களை பெற்ற முருகப் பெருமானின் மூல மந்திரம் என்று நாம் கூறுவது "ஓம் சரவணபவ" இந்த மந்திரத்தை முறையாக கூறினால் இந்தப் பிறவி மட்டுமல்லாமல் நம்முடைய ஏழேழு பிறவிகளுக்கும் அதைத் தாண்டி இறைவனின் திருவடியை அடைவதற்கும் உதவி புரியும்.

    சரவணபவ- இந்த மந்திரத்தை உச்சரித்தால் சர்வமும் வசமாகும்.

    ரவணபவச- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருளும் நம்மை வந்து சேரும்.

    வணபவசர- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்கு தெரிந்த எதிரிகள் மற்றும் மறைமுகமாக நமக்கு இருக்கும் எதிரிகள் என்று அனைத்து வகையான எதிரிகளையும் நம்மால் வெல்ல முடியும்.

    ணபவசரவ- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்கு இருக்கக்கூடிய எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும் அந்த நோய்கள் அகன்று விடும்.

    பவசரவண- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நாம் செய்யும் தொழிலில் நமக்கு சிறந்த ஞானத்தை முருகப்பெருமான் அருள்வார்.

    வசரவணப- இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும்.

    இந்த மந்திரத்தை தினமும் குறைந்தது ஆறு முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிப்பட வேண்டும். பிறகு குருதட்சணையாக ஒரு ரூபாயை முருகப்பெருமானுக்கு அல்லது விநாயகப் பெருமானுக்கு எடுத்து வைத்து விட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

    இவ்வாறு கூறும் பொழுது அந்த மந்திரத்திற்கு உரிய பலனை மட்டும் நாம் பெறாமல் முருகப் பெருமானின் அருளையும் பெற்று பிறவா நிலையை அடைவோம் என்பது சித்தர்களின் வாக்கு.

    முருகனை வழிபட அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்த மாகிய பொழுதிலே எழுந்து ஒரு நெய் தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி, தீபத்தின் முன் அமர்ந்து "ஓம் முருகா" என்றோ "ஓம் சரவண பவ" என்றோ "ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி" என்றோ "ஓம் சரவணஜோதியே நமோ நம" என்றோ முருகப்பெருமானின் நாமங்களை மனம் உருகி சொல்லி பூஜித்திட வேண்டும்.

    வாழ்வில் ஒரு முறையேனும் இப்படிப்பட்ட புனிதமான வழிபாடாகிய ஜோதி வழிபாட்டினை ஒருவன் செய்து வருவானேயானால் அவன் செய்த அந்த ஒரு வேளை ஜோதி வழிபாட்டின் பலன் என்னவெனில் கடுமையான விரதமிருந்து 100 ஆண்டு தவம் செய்ததற்கு ஒப்பான தவப் பயனை பெறுவார்கள் என்பது உண்மையாகும்.

    ஏனெனில் வேறெந்த விதமான விரதமுறை வழிபாட்டிலும் வெளிப்பட முடியாத முருகப்பெருமான் அருள்ஜோதி வழிபாட்டில் அவர்கள் ஏற்றும் ஜோதியில் உடனே தோன்றி அருள் செய்வதினாலே ஜோதி வழிபாடு உடனடியாக முருகனது ஆசிகளை பெற்றுத்தர வல்ல வல்லமை மிக்கதான வழிபாடாகும்.

    * முருகப்பெருமானை முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும்.

    * எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பில் இருந்து காக்கப்படுகிறார்கள்.

    * திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

    * கணவன்-மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும்.

    * நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

    * வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும்.

    * தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.

    "ஓம் சரவண பவ மந்திரத்தில் "ச" என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது "ர" என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது "வ" என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது. "ந" என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது. "ப" என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது. "வ" என்பது நம் வாழ்வின் எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.

    இந்த மந்திரம் முருகனின் அருளை பெற சிறந்த மந்திரமாகும், வெள்ளிக்கிழமை நாளில் விரதம் இருந்து இந்த மந்திரத்தை சொன்னால் நம் எண்ணங்கள் பூர்த்தியாகும், நினைத்தது நிறைவேறும்.

    "சரவணபவ" என்கிற மந்திரத்தை மட்டும் 1008 முறை ஒருவர் தினமும் சொன்னால் அவருக்கு பொன் பொருள் சேர்ந்து வேண்டியது வேண்டிய வண்ணம் நிறைவேறும், இந்த வழி பாட்டை செவ்வாய்க்கிழமைகளில் தொடங்குவது சிறப்பு, அது முருகனுக்கு பிடித்த நாளாகும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜபித்து இனிப்பான பாலில் குங்குமப்பூ கலந்து முருகனுக்கு நைவேத்யமாக படைத்தால், வாழ்வில் பல சிறப்புகளை அடையலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    இத்தகைய சிறப்பான மந்திரத்தை திருச்செந்தூரில் தினமும் உச்சரித்தார் பிரம்மன். இதனால் மகிழ்ச்சியடைந்த முருகப் பெருமான் பிரம்மன் முன் தோன்றினார். அவரிடம் பிரம்மன் தனது குறையை தெரிவித்தார்.

    பிரம்மன் மீது முருகப் பெருமானுக்கு இரக்கம் உண்டானது. ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கும்படி அறிவுறுத்தினார். அவ்வாறே, பிரம்மாவும் லிங்க பிரதிஷ்டை செய்து அத்தி, மா, முட்கிளுவை, முல்லை, வில்வம் ஆகிய 5 வகை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார்.

    இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் பிரம்மன் முன்தோன்றி ஆசிர்வதித்தார். முருகப் பெருமான் கேட்டுக் கொண்டதால் பிரம்மனுக்கு அவரது 5-வது தலையை கொடுக்க முடிவு செய்தார். திருச்செந்தூர் தலத்தில் உள்ள மூகாரம்பத் தீர்த்தத்தில் நீராடி முருகனை 3 முறை சுற்றி வா. உனக்கு 5-வது தலை தானாக வந்துவிடும் என்றார்.

    அதன்படி முருகப் பெருமானை பிரம்மன் 3 முறை சுற்றி வந்தார். அப்போது முருகனுக்குரிய மந்திரத்தையும் உச்சரித்தார். உடனடியாக அவருக்கு இழந்த தலை மீண்டும் கிடைத்தது. மகிழ்ச்சியடைந்த அவர் முருகனுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் தனது பணிகளை தொடங்கினார்.

    இதே போன்று திருச்செந்தூரில் நடந்த இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்...

    • கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.
    • குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது பொது தொண்டு காரியங்களில் தன்னை ஈடுபடுத்துவார்கள்.

    ராசி சக்கரத்தின் 16-வது நட்சத்திரம் விசாகம். இதன் அதிபதி குருவாகும் இதில் நீச்சமடையும் கிரகம் சந்திரன். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சுப்பிரமணியர். இதன் வடிவம் முறம், குயவன் சக்கரம், அல்லது தோரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் நீச்சமடையும் கிரகம் சந்திரன். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும் நான்காம் பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்துள்ளது. இது முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகாகவும், அறிவாகவும் சிந்திக்கும் திறன் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

    விசாக நட்சத்திரத்தின் பொதுவான பலன்கள்

    இது குருவின் நட்சத்திரம் என்பதால் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பொறுப்பாகவும், வசதியாகவும், புகழ் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பிறருக்கு எப்பொழுதும் ஆலோசனை கூறிக் கொண்டே இருப்பார்கள். அழகான ஆடம்பரமான ஆடை அணிவதிலும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலும் விருப்பம் அதிகம் உள்ளவர்கள்.

    புகழ், அந்தஸ்து சுயகவுரவம் இவர்களது தாரக மந்திரம். அறநெறியில் விருப்பம் உடையவர்கள் உண்மை விளம்பிகள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள். பிறரால் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்கள். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். குறுக்கு வழியில் செல்வது பிடிக்காது.

    உற்றார், உறவினர்களுக்கும் தன்னை நம்பி வருவோர்க்கும் நிச்சயம் உதவி செய்வார்கள். பழைய சாஸ்திரங்கள், பழக்க வழக்கங்களின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் உள்ளவர்கள். எனவே கட்டுப்பாடுகளை மீறமாட்டார்கள். இவர்கள் பேசும்போது இறைவன், விதி, நியாயம், மனசாட்சி, நேர்மை போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். குறுக்குவழியில் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளத் தயங்குவார்கள். சுதந்திரமாக வாழ விரும்புவார்கள்.

    வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள்.

    அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். பிறரிடம் யாசகம் பெற விரும்பாதவர்கள்.

    பிறருக்கு உபதேசம் செய்யக்கூடிய ஆற்றல் உண்டு. பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். தர்ம காரியங்கள் செய்யும் வாய்ப்பு கிட்டும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு தனித்திறமையுடன் பிரகாசிப்பார்கள்.

    அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்க பலர் விரும்புவார்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவதில் வல்லவர்கள். குல தெய்வ கடாட்சம் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது பொது தொண்டு காரியங்களில் தன்னை ஈடுபடுத்துவார்கள்.

    கல்வி

    குரு தசா இவர்களுக்கு கல்வியில் மேன்மையைத் தரும். சனி தசாவில் சிலருக்கு மந்த தன்மை அதிகமாகும். அல்லது ஆரோக்கிய பாதிப்பால் கல்வியில் கவனக்குறைவு ஏற்படலாம். பொருளாதாரம், திரைப்படம், தொலைக்காட்சி, இயல், இசை, நாடகம், நடிப்பு, அழகு கலை, ஆடை, ஆபரணம், நெசவு, சட்டம், நீதித்துறை, நிதித்துறை, சார்ந்த கல்விகள், பொறியியல், கனிமம், சுரங்கம், சுங்கச்சாவடி, விவசாயம், மின்னனுவியல், ஆசிரியர், பொருளாதாரம், அறிவியல் சார்ந்த அனைத்து துறை படிப்புகளையும் படிக்கலாம்.

    தொழில்

    இவர்கள் அறிவைத் தூண்டும் தொழில்களான ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள், மத போதகர், அர்ச்சகர், தத்துவ மேதைகள், மந்திரி, கவுரவமான தொழில், நீதிபதிகள், அரசு துறை, நீதித்துறை, வங்கி அதிகாரிகள், ஆலோசகர் பதவி, எழுத்துத்துறை, ஜோதிடம், பேச்சுத்தொழில், நுண்ணிய சாஸ்திர ஆராய்ச்சியாளர்கள், புத்தக விற்பனை பள்ளிகள் நடத்துதல், பேப்பர் கடை, அச்சுத் தொழில், எழுத்து பணி போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோயில்நிர்வாகம், ஊர்த்தலைமை, போன்றவற்றில் கௌரவப் பதவி வகிப்பார்கள். அரசியல் ஈடுபாடும் உண்டு. அதில் நன்கு பிரகாசிப்பார்கள். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள்.

    தனம், வாக்கு குடும்ப ஸ்தானம்

    இவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நல் வாய்ப்புகள் எப்பொழுதும் தேடி வரும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தன்னை சார்ந்த குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்கும் அதிக முயற்சி செய்வார்கள். தன்னை சார்ந்தவர்களின் பொருளாதாரத்தில் வாழ மாட்டார்கள். சுய உழைப்பில் பொருளாதார உயர்வு உண்டு.

    கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக சிரமத்தை சந்திப்பார்கள். இந்த நட்சத்திரம் கால புருஷ 7-ம் வீடான துலாத்திலும், 8-ம் வீடான விருச்சிகத்திலும் இருப்பதால் திருமண வாழ்க்கை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அடிக்கடி குடும்பத்தை பிரிந்து வாழ்வார்கள். அல்லது குடும்பத்தில் கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும். பெற்றோர்கள், மனைவி மக்களிடம் அதிக பாசம் வைப்பார்கள்.குடும்ப உறுப்பினர்களின் உணர்விற்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் இவரின் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

    சொத்துக்கள் விஷயத்தில் உடன் பிறந்தவர்களுக்கு விட்டுக்கொடுத்து எதார்த்தமாக இருப்பார்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

     

    தசா பலன்கள்:

    குரு தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 16.

    பிறந்த கால நேரத்திற்கு ஏற்ப இதன் தசா வருடம் இருக்கும். விசாகம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 12- 16 வருடமும், விசாகம் 2-ம் பாதத்தில் 8-12 வருடமும், விசாகம் 3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4-8 வருடமும், 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 1-4 வருடமும் பிறப்பு கால குரு தசா நடக்கும். ஜாதகருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். பூர்வீகம் சம்பந்தமான விஷயங்கள் முடிவிற்கு வரும். பெற்றோர்கள் கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். தடைபட்ட சுப விசேஷங்கள் நடக்கும். பல வருடங்களாக திருமணத் தடையை சந்தித்த தாய்மாமாவிற்கு திருமணத்திற்கு வரன் வரும். பெற்றோர்கள் கடன் வாங்கி சொத்து சுகம் அமைப்பார்கள்.

    சனி தசா: இது தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 19.

    பிறப்பில் குரு தசா அதிக காலம் இருந்தால் ஜாதகர் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து நிலையான தொழில், உத்தியோகத்திற்கு செல்வார்கள். ஜாதகரும் அவரின் குடும்பமும் மேன்மையான பலன்களை அடைவார்கள். கடன் நிவர்த்தியாகக் கூடிய வகையில் வருமானமும் வாழ்வாதாரமும் உயரும் பலர் திருமணம், குழந்தை என வாழ்வில் செட்டிலாகுவார்கள். சுய ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் ஸ்திர சொத்துக்கள் சேரும். இதன் தசா வருடம் அதிக காலம் என்பதால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அடைவார்கள். சிலருக்கு கவுரவப் பதவி, அரசியல் ஆதாயம் என சமுதாய அந்தஸ்து உயரும் .

    புதன் தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 17. சனி தசாவை பள்ளி, கல்லூரி படிப்பில் கடந்தவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். சனி தசாவில் இளம் வயதில் திருமணம் நடந்த சிலருக்கு விவாகரத்து வழக்கு வரும் அல்லது பொருள் இழப்புகள் இருக்கும் அல்லது வாழ்வில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும். குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரும். நம்பியவர்களே துரோகியாக மாறுவார்கள். பாம்பு என்று தாண்டவும் முடியாது. பழுது என்று மிதிக்கவும் முடியாது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய சிரமம் இருக்காது. நீண்ட கால பெரிய தசா என்பதால் திட்டமிட்டு செயல்பட்டால் வாழ்க்கை லதுவாக இருக்கும்.

    கேது தசா: இது நான்காவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசா வாகும். இதன் தசா வருடம் 7 ஆண்டுகள்.

    புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாழ்க்கை வளமாகும். கட்ட முடியாத வீட்டை கட்ட முடியும். விற்க முடியாத சொத்தை விற்க முடியும். தொழில், வியாபார அபிவிருத்தி, பண வரவு என அனுகூலமான பலன்களை பெறுவார்கள். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். விட்டதை பிடிக்கும் நேரம் என்று கூட கூறலாம். கடன்கள் நிவர்த்தியாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ முடியும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் எதிர்பாராத உதவிகளும் உங்களை மகிழ்விக்கும் காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்த தகுந்த வைத்திய உதவிகள் கிடைக்கும்.

    சுக்ர தசா: இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 20. எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்காமல் வாழ வேண்டிய காலகட்டம். பங்காளிகள் தகராறு பிள்ளைகளால் மன உளைச்சல் ஏறபடலாம்.

    பரம்பரை வியாதிகளால் உடல் நலம் குன்றும். எந்த வயதினராக இருந்தால் சுக்ர தசா எதிர் பாலின பிரச்சனையை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் சனி பலம் பெற்று தசா நடந்தால் அடுத்தடுத்து வரக் கூடிய எந்த தசாவைப் பற்றியும் விசாக நட்சத்திரத்தினர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வீண் பேச்சை குறைத்தால் பிரச்சனைகள் இருக்காது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது முக்கியமாகும்.

    நட்சத்திர பட்சி: செங்குருவி

    யோகம்: சித்தி

    நவரத்தினம் : புஷ்பராகம்

    உடல் உறுப்பு: ஸ்தனங்கள்

    திசை : மேற்கு

    பஞ்சபூதம் : நெருப்பு

    அதிதேவதை: சுப்ரமணியர்

    நட்சத்திர மிருகம்: பெண் புலி

    நட்சத்திர வடிவம்: குயவன் சக்கரம், தோரணம்

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    நன்மை தரும் நட்சத்திரங்கள் :

    சம்பத்து தாரை : அனுஷம், உத்திரட்டாதி, பூசம்

    சேம தாரை : மூலம், அசுவினி, மகம்

    சாதக தாரை: வத்திராடம், கிருத்திகை, உத்திரம்.

    பரம மிக்ர தாரை : சதயம், திருவாதிரை, சுவாதி

    விசாக நட்சத்திரத்தின் சிறப்புகள்

    சுக்கிரனுடைய ராசியையும் செவ்வாயின் ராசியையும் இணைக்கும் நட்சத்திரம் விசாகம் என்பதால் விசாக நட்சத்திரம் நாளில் விரதம் இருந்து மாலை நேரத்தில் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் கணவன்-மனைவி ஒற்றுமை ஏற்படும். கருத்து வேறுபாடு நீங்கும்.

    பெண்கள் செவ்வாய்க்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் விரதம் இருந்து முருகன் வழிபாடு செய்தால் தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். கருத்து வேறுபாடு நீங்கும். வெள்ளிக்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் ஆண்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் திருமணத் தடை அகலும். மனைவி அன்பாக பேசுவாள்.

    இந்த நட்சத்திரம் விவாகம், கர்ப்ப தானம், நிஷேகம் போன்றவற்றிற்கு உகந்த நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திர நாளில் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணத் தடைகள் அகலும். நினைத்த, விரும்பிய நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

    விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கந்தகுரு கவசம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும். ஜென்ம தாரையில் இருந்து 6-வது தாரையான உத்திராடம் நட்சத்திர நாளில் சிவ வழிபாடு செய்வதுடன். சிவனடியார்களுக்கு தான, தர்மங்கள் வழங்க வேண்டும்.

    • மம்முட்டிக்கு தன்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை என்று போக மறுத்து விடுவார்.
    • சினிமாவில் புகழ்பெற காரணம் எனது பள்ளித்தோழன் சீனிவாசன் தான் என அந்த முடிதிருத்தும் தொழிலாளியை புகழ்ந்து பேசுவார்.

    மலையாளத்தில் இமாலய வெற்றி பெற்ற ஒரு படம் தமிழில் இப்படி சிக்கி சிதறி போகும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை.

    இது தான் அந்த மலையாள படம். கதா நாயகன் சீனிவாசன். அவருக்கு ஜோடி நான். சீனிவாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல. மிகச் சிறந்த கதாசிரியர். சிறந்த வசனகர்த்தாவும் ஆவார். முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார்.

    யதார்த்தமான கதை. ஆனால் வலுவான கதை. கேரளாவில் மேலுகாவு என்ற கிராமத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக இருப்பார் சீனிவாசன்.

    உயர் சாதியை சேர்ந்த அழகான பெண்ணான நான் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வேன். எங்களுக்கு 3 குழந்தைகள். சிறிய முடி திருத்தும் கடை வைத்து அதில் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடத்த முடியாமல் தவிப்பார். ஸ்ரீதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நான் வீட்டுக்குள் எப்ப பார்த்தாலும் சட்டி, பானைகளை தூக்கி போட்டு உடைப்பேன்.

    ஷூட்டிங்கின் போதும் பானைகளை அவ்வப்போது உடைத்து விடுவதால் டைரக்டர் என்னிடம் 'மீனா.. பார்த்தும்மா... எத்தனை பானையைத்தான் உடைப்பே. எத்தனை பானைதான் வாங்குவது? என்பார்.

    எங்கள் குழந்தைகளில் ஒரு பையன் 'நான் மட்டும் ஏன்மா கருப்பா இருக்கிறேன்?' என்பான். அதை உன் அச்சனிடம் (அப்பா) போய் கேளு என்பேன்... நான். முடி திருத்தும் தொழிலாளி சீனிவாசனின் பள்ளி தோழர் மம்முட்டி. அவர் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பார். ஆனால் மம்முட்டியை தனது தோழன் என்று முடிதிருத்தும் தொழிலாளியான சீனிவாசன் வெளியே சொல்ல மாட்டார். இந்த நிலையில் அந்த கிராமத்தில் 10 நாள் படப்பிடிப்புக்காக மம்முட்டி வருவார். அவரை போய் பார்க்கும் படி குடும்பத்தினர் வற்புறுத்துவார்கள். ஆனால் மம்முட்டிக்கு தன்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை என்று போக மறுத்து விடுவார்.

    இதற்கிடையில் முடிதிருத்தும் தொழிலாளியும் சூப்பர் ஸ்டாரும் நண்பர்கள் என்பதை கிராமத்தினர் எப்படியோ கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் முடிதிருத்தும் தொழிலாளியிடம் வந்து எப்படியாவது சூப்பர் ஸ்டாரை பார்க்க அழைத்து செல்லும் படி கெஞ்சுவார்கள். இதனால் அவருக்கு மரியாதை கூடும்.

    ஆனால் படப்பிடிப்பு நடந்த போது சூப்பர் ஸ்டாரான மம்முட்டி அங்கு சென்ற சீனிவாசனை கண்டு கொள்ளவில்லை என்பதை அறிந்ததும் மீண்டும் மக்கள் சீனிவாசனை கேலி, கிண்டல் செய்ய தொடங்கி விடுவார்கள். அப்போது அங்குள்ள பள்ளி விழா ஒன்றுக்கு சூப்பர் ஸ்டார் மம்முட்டி வந்திருப்பார். அந்த விழாவில் பேசும் போது, தான் இந்த அளவுக்கு சினிமாவில் புகழ்பெற காரணம் எனது பள்ளித்தோழன் சீனிவாசன் தான் என அந்த முடிதிருத்தும் தொழிலாளியை புகழ்ந்து பேசுவார்.

    அதை கேட்டு கூட்டத்தில் இருந்த முடிதிருத்தும் தொழிலாளி ஆனந்த கண்ணீர் வடிப்பார். பின்னர் நண்பர்கள் சந்திப்பில் அந்த ஏழை முடி திருத்தும் தொழிலாளியின் வாழ்க்கையே மாறிவிடும். இது தான் கதை. அற்புதமான கதை. படமும் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பார்த்ததும் தமிழ் மற்றும் தெலுங்கிலும் தயாரிக்க முன்வந்தார்கள். அந்த இரண்டு மொழிகளிலும் ஹீரோயின் வாய்ப்பு எனக்கே கிடைத்தது.

    ஒரே படம். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் சந்தோசப் பட்டேன்.

    அந்த படம் தான் தமிழில் 'குசேலன்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. படத்துக்கு கால்ஷீட் கேட்டு வந்தபோது கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றார்கள். ஆனால் போக போக கதையில் ஏன் அப்படி பல மாற்றங்களை செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஒரு வேளை ரஜினி சார் இருந்ததால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்து அப்படி மாற்றினார்களா என்றும் தெரியவில்லை.


    ஆனால் படம் முழுக்கவும் ரஜினி சார் வரவில்லை. கவுரவ தோற்றத்துக்கான முக்கியத்துவமும் அவருக்கு இல்லை. மலையாளத்தில் நான் ரசித்து மிகுந்த ஈடுபாட்டோடு நடித்த அதே படம் தமிழில் தயாரான போது ஏன் தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டோம் என்று வருத்தப்படும் நிலைக்கு ஆளானேன். பட ஷூட்டிங் ஆரம்பத்திலேயே சொதப்பியது. ஏனெனில் முதல் காட்சியாக கிளை மாக்சை உடுமலைபேட்டையில் படமாக்கினார்கள். அதை பார்த்தபோதே ஒரு மாதிரி இருந்தது. கதை, காட்சி ஒவ்வொன்றையும் அப்படி, இப்படி என்று மாற்றி மாற்றி தயார் செய்ததை பார்த்து ரஜினிசாரும் நிச்சயம் அதிருப்தி அடைந்திருப்பார்.

    படத்தில் ரஜினி சாரும் இருந்ததால் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை அந்த படம் நிறைவேற்றவில்லை என்பதும் உண்மை.

    ஒரே நேரத்தில் தெலுங்கிலும் ஷூட்டிங்கும் நடந்ததால் நான் மட்டும் மாறாமல் செட்டில் இருப்பேன். தமிழ் காட்சி முடிந்ததும் தெலுங்கு காட்சிக்காக கதாநாயகன் மட்டும் மாறி வருவார். ஷூட்டிங் ஜாலியாக நடந்து முடிந்தது.

    குசேலனை விளம்பரப்படுத்தியதிலும் கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை. கடைசியில் படமும் வெற்றியடையவில்லை. ரஜினிசார் நடித்த படத்தில் நானும் நடித்தேன் என்ற பெருமை மட்டும் தான் மிஞ்சியது. ' திடீரென்று ஜப்பானுக்கு போக கிடைத்த வாய்ப்பும் அங்கு சந்தித்த இன்பமயமான அனுபவங்களையும் அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்)...

    • உங்களின் உடல் நலத்தினை சரி செய்யும் சாவி உங்கள் உடலில்தான் இருக்கின்றது.
    • பொரித்த உணவு, பாஸ்ட்புட் இவை அனைத்துமே நம்முடன் உறவாடி கெடுக்கும் பகையாளிகள் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

    சமீப காலமாக மனிதனின் உணவுக்குழாய், ஜீரண மண்டலம் இதனைப் பற்றி ஆய்வுகள் கூடுதலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. ஆரோக்கியமான, நீண்ட கால வாழ்விற்கு ஜீரண மண்டல ஆரோக்கியம் மிக முக்கியமானது என ஆய்வுகள் கூறுகின்றன.

    பல மருத்துவர்கள் குறிப்பாக ஜப்பானிய மருத்துவர்கள் 100 வயதினைத் தாண்டி வாழ்கின்றனர். அத்தோடு மட்டுமல்ல தொடர்ந்து மருத்துவ சேவைகளும் செய்து வருகின்றனர். குடல் ஆரோக்கியம் என்பது உணவில் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளே அனைவருக்கும் ஏற்றது.

    அதிக சிகப்பு அசைவம் ஜீரணத்திற்கு கடினமானது. மீன் உணவு மிகவும் ஏற்றது ஆகும்.

    உடற்பயிற்சி என்பதோடு கூட நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 20 நிமிடம் உடற்பயிற்சி செய்து பின் நாள் முழுவதும் அசையாது ஓரிடத்தில் அமர்ந்தபடி இருப்பது குடலினை ஆரோக்கியமாக வைக்காது. உடல் உழைப்பு அதிகம் இல்லாது இருந்தால் மலச்சிக்கல் ஏற்படும்.

    உங்களின் உடல் நலத்தினை சரி செய்யும் சாவி உங்கள் உடலில்தான் இருக்கின்றது. அதனால்தான் உங்கள் குடல் உங்களின் "இரண்டாவது மூளை" என்று சொல்லப்படுகின்றது. ஜீரணம் மட்டுமல்லாது பல வேலைகளை குடல் செய்கின்றது. பொதுவில் 'ஆரோக்கியம் குடலில்தான் தொடங்குகின்றது என்பர். தவறான உணவு, அளவுக்கு அதிகமான உணவு, சத்தற்ற உணவு இவை ஆரோக்கியம் கெட முதல் காரணம் ஆகின்றன. இவை நச்சுகளை வெளியிட்டு உடல் உறுப்புகளை பாதிக்கின்றன.

    இவற்றினை தடுத்தாலே 90 சதவீதத்துக்கு மேல் உடல் நலம் சீராக இருக்கும். இதனால் உங்கள் மன நலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் நன்றாக இருக்கும். நமது குடலில் என்டெரிக்நேரே சிஸ்டம் என்று இருக்கின்றது. இது தானே இயங்குவது. ஜீரணம், சில ரசாயனங்களை வெளியிடுதல் போன்றவை இதனால் ஏற்படுகின்றது.

    நம்மை மகிழ்வாக வைக்கும் 'கெரடோனின்' எனும் ரசாயனப் பொருள் 90 சதவீதம் குடல் மூலம்தான் பெறுகின்றோம். குடலும், மூளையும் தொடர்புடையவை. பேசிக் கொள்பவை. உங்கள் மனநிலை, படபடப்பு ஏற்படும்போது வயிறு சங்கடமாய் இருக்கின்றது என கூறுவது இதனால்தான்.

    70 சதவீதம் நோய் எதிர்ப்பு செல்களை குடலே கொண்டுள்ளது. வைரஸ், பாக்டீரியா இவற்றினை எதிர்த்து போராடுகின்றது. குடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து கெட்ட பாக்டீரியாக்கள் தொடர்ந்து கூடி இருக்கும்போது எடை கூடுதல், சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், மறதி நோய் இவைகளின் பாதிப்பு கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    அதிக கனமான உணவுகளை உண்ணும்போது ஜீரணமாகி கழிவுகள் வெளியேற அதிக காலம் ஆகின்றது. இது உடலில் நச்சுக்களை உருவாக்கி வீக்கத்தினை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நச்சுக்களை உருவாக்கி பாதிப்பு ஏற்படுத்துவதில் சர்க்கரை உணவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் காரணமாகத்தான் சர்க்கரை, மைதா இவைகளை தவிர்க்கச் சொல்லி வலியுறுத்தப்படுகின்றது.

    சிகப்பு அசைவம், அதிக கொழுப்பு, சோடா, வறுத்த, பொரித்த உணவுகளை இந்த 2025-வது புது வருடத்தில் இருந்தாவது விட்டு விடுவோமே.

    இப்படி செய்யும்போது உடல் தன்னை தானே ஏற்றுக்கொள்ளும்.

     

    அதிக பால் சார்ந்த உணவுகள், வெஜிடபிள் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மது, பதப்படுத்தப்பட்ட அசைவம், அதிகம் பொரித்த உணவு, பாஸ்ட்புட் இவை அனைத்துமே நம்முடன் உறவாடி கெடுக்கும் பகையாளிகள் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

    இன்றைய கால கட்டம்- உலகளவில் ஒரு கண்ணோட்டமாக பார்க்கும்போது பல மேலை நாடுகளில் இளம் தம்பதியினர் குழந்தையே எங்களுக்கு வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கின்றனர். பல இடங்களில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் விதமாக பல மருத்துவமனைகள் பணியாற்றுகின்றன. இதனை நாம் அதிகம் பார்க்கின்றோம். அப்படி இருக்கும் இதே கால கட்டத்தில்தான் எங்களுக்கு குழந்தை பேறு வேண்டாம் என்றும் பலர் இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் கூறுவது:

    * இன்று குழந்தை வளர்ப்பது என்பது வாழ்வின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.

    * பெற்றோர்கள் இருவர் சம்பாதித்தாலும் படிப்பு கட்டணம் என்பது ஏணி போட்டு ஏறி நிக்குது.

    * பொறுப்புத் தன்மை அதிகம் கூடுவதால் தனக்கென்ற ஒரு வாழ்க்கையினை அடியோடு தியாகம் செய்ய வேண்டி உள்ளது.

    * கடைசி காலத்தில் பிள்ளைகளால் ஏமாற்றங்கள்தான் அதிகம் ஏற்படுகின்றன.

    இப்படி அவரவர் மனதில் தோன்றும் காரணங்களைக் கூறுகின்றனர். இதனைப் பற்றி சில நாடுகள் கவலைகளைக் கூட தெரிவிக்கின்றனர். இந்த நிலை இப்படி இருக்க மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக முதியோர்களின் ஆயுட் காலமும் நீண்டு இருக்கின்றது. ஆக புதிய பிறப்புகள் குறைந்தாலும், வயதானோர் ஆயுட் காலம் நீண்டும் உள்ள நிலை வெகு சீக்கிரத்தில் வரலாம்.

    சரி. இந்த முதியவர்களை பார்த்துக் கொள்வது யார்? உதவுவது யார்? என்ற கேள்வியும் எழுகின்றது. இதற்காக வெளிநாடுகளில் ரோபோட்டினை உருவாக்கும் முயற்சியும் தீவிரம் அடைந்துள்ளது.

    இது இப்படியே இருக்கட்டும். நம்ம ஊருக்கு வருவோம். உடல் நலம், சொத்து என இருந்தால் 100 வயதானாலும் வாழ்க்கை தடபுடலாகத்தான் இருக்கும். மாடாய் உழைத்து தேய்ந்த உடம்பு, கையில் காசில்லை, நோய் என்றாகி விட்டால் முதுமை நரகமாகி விடுகின்றது. பிள்ளைகள் ஒரு டீ, காபிக்குக் கூட கணக்கு பார்க்கும் நிலை என்று வருவதால் மனிதன் நொந்து விடுகின்றான். உயிரினை போ என்றால் போய் விடுமா என்ன? இல்லை கொஞ்ச நாள் இரு என்றால்தான் கேட்டு விடுமா? ஆக இதற்கு ஒரே தீர்வு உடலினை ஆரோக்கியத்தோடு பராமரிப்பது ஒன்றுதான். முதுமையில் பிறர் தயவில்லாமல் தன் வேலைகளை தானே செய்து கொள்வதே மிகப்பெரிய வரம் தான். அதற்கு நம்முடைய முயற்சியும் வேண்டும்.

     

    60-70 வயதாகி விட்டதா, நீங்களே உங்கள் நடையினை கவனியுங்கள், நடை தளர்ந்து விட்டதா? தள்ளாடுகின்றதா? மெதுவாக மட்டுமே நடக்க முடிகின்றதா, கால் முட்டி, பாதங்களில் வலி உள்ளதா?

    இதனை வெளிநாட்டில் ஒரு பல்கலைக்கழகம் 34,000 நபர்களை கொண்டு ஆய்வு செய்ததாம். அதன் முடிவாக அவர்கள் கூறியுள்ளது. நடையின் வேகம் அவர்களின் ஆரோக்கியம், ஆயுளுடன் இணைந்து உள்ளது என்பதுதான். 18 வயது போல் ஓடவோ, குதிக்கவோ வேண்டாம். சற்று நன்கு நடப்பவர்கள் ஆரோக்கியத்துடன், கூடுதல் ஆயுளுடனும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். இன்றே கூட

    * நடைப்பயிற்சி ஆரம்பிக்கலாம். நிதானமாய், பொறுமையாய் அன்றாடம் செய்யும் பொழுது கால் தசைகள் வலு பெறத்தொடங்குகின்றன.

     

    கமலி ஸ்ரீபால்

    * நீங்கள் மருத்துவரிடம் செல்லும் பொழுது மருத்துவர் தன் விரல்களை உங்கள் கையால் முடிந்த வரை இறுகப் பிடியுங்கள் என்பார். இது உங்கள் கை தசைகளின் வலுவினை காட்டும் ஒரு பரிசோதனை ஆகும். இருதய ஆரோக்கியத்தைக் கூட அறிகுறி காட்டுதலாக அறிய முடியும்.

    * ஆன்மீக ரீதியாக மன பக்குவப்பட்டவர்களுக்கு தனிமை ஒரு பரிசு. ஆனால் யதார்த்த மனிதர்களுக்கு தன் குடும்பம், சுற்றம், நட்பு இவை மகிழ்ச்சி தருவது மட்டுமல்ல. உடல் நலத்தினையும் காப்பதாகும். ஆக உங்கள் மன பக்குவத்திற்கேற்ப வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளுங்கள்.

    * முதுமையில் தூக்கமின்மை என்பது சாதாரணமாக நாம் கேள்விப்படும் ஒன்றுதான். ஆனால் அது சாதாரணமானது அல்ல. 7 மணி நேர தூக்கம், ஆழ்ந்த தூக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. இது இல்லையெனில் கடுமையான நோய்களின் பாதிப்பு ஏற்படும்.

    * ஒரு மனிதனுக்கு ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தம் மட்டும் இருந்தால் போதும். அவன் வாழும் காலமே நடைபிணம் ஆகி விடும். இதனை இளம் வயதில் இருந்தே தூக்கி எறிந்து (மனதில் இருந்து) வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கையினை கடத்த முடியும். இது பெரிய மாற்றத்தினை காட்டும். தியானம், யோகா இவை இரண்டும் மன அழுத்தத்திற்கு சிறந்த தீர்வு.

    ஒரு காலை சற்று தூக்கி மற்றொரு காலால் 10 செகண்ட் நிற்க முடிகின்றதா? தயவு செய்து சோபா, நாற்காலி இதனைப் பிடிக்காமல் இந்த வீர முயற்சியினை செய்ய வேண்டாம்.

    விழுந்து எலும்பு முறிவு ஏற்படலாம். இதனை பயிற்சியாளர் உதவியுடன் மட்டுமே செய்ய வேண்டும். எந்த வயதினராலும் இந்த அறிவுறுத்தலை அவசியம் பின்பற்ற வேண்டும். 50 வயதை தாண்டியவர்கள் அருகில் ஒரு ஆள் இல்லாமல், நாற்காலி போன்றவை பிடித்துக் கொள்ள இல்லாமல் இதனை செய்யவே கூடாது. இவை அனைத்தும் முதுமையிலும் அதிகம் பிறரைச் சாராது முடிந்தவரை நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் முயற்சிகளே.

    • தென்திருவிதாங்கூர் சமய சமூக வரலாற்றில் இத்தாங்கல்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.
    • சுவாமிகளால் தூண்டப்பட்ட உரிமைப் போராட்டம் அவரது காலத்தில் வெற்றி காண முடியவில்லை.

    அய்யா ஏற்றிய அன்புக்கொடி முக்கியப்பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் நடைபெறும் விழாக்களின் போது அன்பர்களால் ஏற்றப்பட்டு, விழாக்கள் தொடங்கப்படுவது வழக்கமாகும். அய்யாவின் அவதார தினத்தன்று நாகர்கோவில் முதல் சாமிதோப்பு வரை நடைபெறும் ஊர்வலத்தில் அன்புகொடி மக்கள் ஏந்தி வரும் காட்சி கண்ணுக்கினிய கவின்மிகு காட்சியாகும். ஒற்றுமை உணர்வினை வளர்த்திடவும், தன்னுடைய போதனைகளை பரப்பிடவும் வைகுண்ட சுவாமிகள் பல நிழல்தாங்கல்களை நிறுவினார்.

    இத்தாங்கல்கள் இணந்தாங்கல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. வெளித்தோற்றத்தில் இத்தாங்கல்கள் யாவும் சிறுகுடிசைகள் போன்று ஆரம்ப காலத்தில் அமைந்திருந்தன.

    சுவாமிகள் தானே நேரில் சென்று செட்டிக் குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், பாலூர், கண்டவிளை, வடலிவிளை, கடம்பன்குளம், பாம்பன்குளம், பாஞ்சாலங்குறிச்சி முதலிய இடங்களிலும் நிழல் தாங்கல்களை நிறுவினார். இந்த நிழல்தாங்கல்களை தொடர்ந்து, ஏராளமான நிழல் தாங்கல்கள் அய்யாவின் ஆதரவாளர்களால் தோற்றுவிக்கப்பட்டன. தென்திருவிதாங்கூர் சமய சமூக வரலாற்றில் இத்தாங்கல்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.

    எல்லா மக்களையும் ஒன்றாக தன்னகத்தே கவர்ந்து சுவாமிகளின் அறிவுரைகளை செவிமடுக்கச் செய்ததுடன், கல்விக் கூடங்களாகவும் செயல்பட்டன. 'பகர்த்து எழுதி வைத்து பள்ளி கூடங்கள் தோறும் கொடுத்து நீங்கள் போய் சொல்லுங்கள்' என்று தனது சீடர்களை சுவாமிகள் அறிவுறுத்தினார். தன் கோட்பாடுகளைப் பரப்பிட பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்ட பண்டாரங்களுள், சித்தி பெற்றவர்களும் இருந்தனர். சுவாமியின் காலத்திற்கு பின்னர் தாங்கல்களில் தங்கி மக்கள் தொண்டாற்றினர்.

    சில கிராமங்களில் அண்ணாவிகளால் செயல்படுத்தப்பட்டு வந்த திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இத்தாங்கல்களில் வைத்து நடத்தப்பட்டன. நிழல் தாங்கல்களில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிலவ வேண்டும் என்பதில் சுவாமிகள் கண்டிப்புடன் இருந்தார். தனது அறிவுரைகளை தவறாது போற்றி நடக்குமாறும், மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவர் எனவும் அழுத்தமாக உரைத்தார். சுவாமிகள் தனது காலத்தில் இந்நிழல்தாங்கல்களை இணைத் தாங்கல்களாகச் செயல்படச் செய்து, சாமிதோப்பு தலைமைப் பதியில் இருந்து, தான் இடுகின்ற கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றச் செய்தார்.

    இன்று நாராயண சுவாமி கோயில் எனவும், நாராயண சுவாமிப்பதி எனவும் பெயர் தாங்கி நிழல்தாங்கல்கள் ஆயிரக்கணக்கில் காட்சி அளிக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமின்றி உயர் வகுப்பினரும் ஏற்றத்தாழ்வு இல்லாது இத்தாங்கல்களுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இத்தாங்கல்களில் சிலைகளோ வேறு வகையான உருவங்களோ இல்லை. சமய வழிபாட்டில் வீண் உபசாரங்களை தவிர்த்து ஒரு புதிய சமய வாழ்வினை இத்தாங்கல்கள் தோற்றுவித்துள்ளன. ஆண்டிற்கொரு முறையோ இருமுறையோ இப்பதிகளில் அன்னதானம் செய்வதுவே தலையாய சமய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகின்றது. "பால் வைப்பு விழா" என்ற பெயரில் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகின்றது. விழாக்களில் தர்ம பரிபாலனமே சிறப்பான இடம் வகிக்கின்றது.

    சுவாமிகளின் அன்புக்கொடி மக்கள் பிற இந்துக் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் இல்லை. அங்குச் சென்று காணிக்கை, காவடி எனக் கொடுப்பதுமில்லை. உருவமற்ற இறைவனை உருவ வழிபாட்டில் காண்பது தவறானது எனவும், பல்லுயிர்களின் நாயகனாக விளங்கும் பரமனுக்கு அவன் படைத்திட்ட உயிரினங்களையே பலியாக்குவது பண்பற்ற செயல் எனவும் தெள்ளத்தெளிந்து எளியோராய், இரக்கச் சிந்தை கொண்டு செய்திடும் வழிபாட்டினை வைகுண்டர் காட்டிய பாதையில் நடத்தி மன நிறைவு அடைகின்றனர். பிரம்மனின் வாரிசெனக் கொண்டு, தங்களுக்கே அனைத்தையும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட பிராமணர்கள், தென்திருவிதாங்கூர் சமுதாய வானில் பெரும்பான்மையோரின் தாழ்வு நிலைக்குக் காரணமாய் இருந்ததை சுவாமிகள் வெளிப்படையாகவே தாக்கினார். பிராமணர்களைப் பயம் காட்ட நாம் வருவோம் என பிராமண ஆதிக்கத்தில் கட்டுப்பட்டிருந்த காலத்தில் பகிங்கரமாக தனது அன்பர்களுக்குத் திடம் கூறினார். பிராமணர்களின் ஆதிக்கம் நிலையானதல்ல; அது வெகுவிரைவில் அழிந்தே தீரும் என நம்பிக்கை ஊட்டினார்.


    பூநூல் முடித்தவர்கள் இப்புவியில் இருக்க மாட்டார் என்று பூநூல் அணிந்து, பூமாதேவியின் மடியில் புனித போர்வையுடன் விளங்கிய பிராமணர்களின் பூநூல் மகத்துவம் இல்லாமல் போய்விடும், அவர்களின் ஆதிக்கம் இனி அழிந்துவிடும் என எச்சரிக்கை செய்தார். எல்லா உரிமைகளும் கொண்டு விளங்கிய பிராமணர்களின் ஏகபோக நிலையினை எல்லா மக்களும் அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தாழ்த்தப்பட்டோரை விழிப்புணர்வு பெற ஊக்கம் ஊட்டினார். நாள் முழுக்க கடுமையாக உழைத்த போதிலும் உண்ண உணவின்றி, பசியையும், பட்டினியையும் தனதாக்கி கொண்டு தென்திருவிதாங்கூர்வாழ் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் பரிதவித்தனர். பிஷப் சாமுவேல் மாற்றீர் இப்பெண்களின் துயர் நிலை கண்டு, 'இப்பகுதியில் பெண்ணாகப் பிறப்பதே ஒரு கொடிய பாவமான செயல்' எனக் கூறுகின்றார். அரசாங்கம் விதித்திருந்த வரியினை செலுத்த முடியாத நிலையில் தன்னை இம்சைப்படுத்திய வரி வசூலிப்போனிடமே தனது மார்பகத்தைத் தானே அறுத்து அளித்திட்ட அவல நிலையில் திருவிதாங்கூரில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் வாழ்ந்தனர்.

    'ஆடையில்லாதவன் அரை மனிதன்' என இகழ்ந்துரைத்த நாட்டில் ஆடையில்லாது திரிந்த அமணர்களை அவதூறு கூறி நாட்டில் தோற்றத்திலேயே "ஒடுக்கப்பட்டவர்கள்" என்பதை கண்டறியும் விதத்தில் மேட்டுக்குடியினரின் கெடுபிடி காரணமாக அரை மனிதர்களாக அரைகுறை ஆடையுடன் ஒடுக்கப்பட்டவர்கள் நடமாடினர். பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணிந்திட பிற்போக்கு எண்ணம் கொண்ட மேட்டுக்குடியினர் இடம் தரவில்லை. " இடுப்பில் குடம் எடுத்துச்செல்லவும் உரிமையற்றவர்களாய் அவர்கள் வாழ்ந்தனர். ஒடுக்கப்பட்ட சமூகப்பெண்களின் நிலைகண்டு வருந்திய சுவாமிகள்'

    "பெண் பாவம் பாராதே

    பேணியிரு என்மகனே"

    என அறிவுறுத்தி அவர்களின் இழிநிலையினை அகற்றிடப் பணித்தார். தன்னைத் தேடி வந்த மக்களிடத்தில் தோள் சேலை அணியவும் இடுப்பில் குடம் எடுத்துச்செல்லவும் கோரிக்கை விடுத்தார். அய்யாவின் அருளுரையினை ஏற்று பெண்கள் தங்கள் வழக்கத்தினை மாற்றி, மேட்டுக்குடியினரைப் போன்று ஆடை அணிந்து வெளி வரலாயினர். ஒடுக்கப்பட்ட ஆனால் மேட்டுக் குடியினர், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் மாறுதலான பழக்க வழக்கம் கண்டு வெகுண்டெழுந்து தாக்குதல் நடத்தி அச்சுறுத்தினர். அருள் நூல் இதுபற்றிக் கூறுகையில்,

    "பூமக்கள் நீதமுடன் போட்ட

    தோள்சீலை தன்னைப் போடாதே

    என்றடித்தானே சிவனே அய்யா

    என் மக்கள் சான்றோர்கள்

    இடுப்பில் எடுத்தகுடம் ஏண்டி

    இறக்கென்றானே சிவனே அய்யா"

    எனக் குறிப்பிடுகின்றது. சுவாமிகளால் தூண்டப்பட்ட உரிமைப் போராட்டம் அவரது காலத்தில் வெற்றி காண முடியவில்லை. எனினும் அவர் மறைந்த சில வருடங்களுக்குள் தோள்சேலைப் போராட்டம் என ஒரு மாபெரும் போராட்டமாக மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்து வெற்றி கண்டது. பெண்களின் கற்புநெறி தவறா வாழ்க்கையினைச் சுவாமிகள் வலியுறுத்தினார். சோழநாட்டுப் பெண்களின் நிலை பற்றிக் கூறுகையில் 'கனிவான பெண்கள் கற்புநிலை மாறாமல் வாழ்ந்தனர்' எனக் கூறி "கல்கதவு போல கற்புமனக் கதவு" என்று கற்பின் திண்மையைப் பெருமைபட கூறினார்.

    மேலும் திருவிதாங்கூரில் தவறான ஆட்சிபுரிந்து மக்களுக்குப் பெருஞ்சுமையாக தோன்றிய நீசனின் ஆட்சியினை அகற்றிட உரிமைக்குரல் எழுப்பிய சுவாமிகள், "நல்ல பெண்ணின் கற்பே உன் நாட்டை அழித்து விடும்" என்று கற்பையே ஒரு சக்திமிக்க ஆயுதமாக குறிப்பிடுகின்றார். எனவே தான் துறவை தவிர்த்து இல்லறத்தை நல்லறமாக போற்றினார் அவர். அது ஏன்? பார்ப்போம் அடுத்த தொடரில்.

    • என் மனித உடலோடு சொர்க்க லோகத்திற்கு என்னை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும்! நீங்கள் நினைத்தால் அது முடியும்!`
    • விஸ்வாமித்திரரின் தவ ஆற்றல் காரணமாக சொர்க்கவாசல் யாரும் திறக்காமல் தானே திறந்து கொண்டது.

    கோசல நாட்டின் குலகுருவான வசிஷ்டரது தவச் சக்தியின் மேல் கடும் பொறாமை கொண்டிருந்தார் மகரிஷி விஸ்வாமித்திரர்.

    வசிஷ்டரைப் போலவே தானும் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்றும் தவ ஆற்றலால் வசிஷ்டரை வெல்ல வேண்டும் என்றும் ஆசை கொண்டார். அதே லட்சியத்தோடு கடுமையான தவத்தில் ஈடுபட்டார்.

    அவர் செய்த தவம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. ஒரு நாளைக்குப் பதினைந்து மணி நேரத்திற்கு மேல் தவத்தில் ஈடுபட்டார் அவர். கண்மூடி தவம் செய்யத் தொடங்கினால் பல மணிநேரங்களுக்குப் பிறகு எப்போதாவதுதான் கண் திறப்பார்.

    ஆண்டுகள் செல்லச் செல்ல அவரின் தவத்தின் காரணமாக விளைந்த பேராற்றல் அவரிடம் மிக அதிகம் கூடியிருந்தது. அவரது கடும் தவத்தின் உஷ்ணம் இந்திர லோகத்தையும் தகித்தது.

    ஒருநாள் அவரை நாடிவந்தான் கோசல நாட்டு மன்னன் திரிசங்கு. விஸ்வாமித்திரர் தவம் செய்யும் தவச் சாலையில் அமைதியாக அவர் முன் அமர்ந்து கொண்டான். கொக்கு மீனுக்காகக் காத்திருப்பதைப் போல், அவர் கண் விழிப்பதற்காகப் பொறுமையோடு காத்திருந்தான்.

    அன்றைய தவத்தை அப்போதைக்கு நிறைவு செய்து மெல்லக் கண்விழித்த விஸ்வாமித்திரர், தன் எதிரே தலையில் கிரீடத்தோடு மன்னன் திரிசங்கு பணிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர் மனம் வியப்பில் ஆழ்ந்தது.

    அவன் வசிஷ்டரின் பிரதான சீடனல்லவா? அப்படியிருக்க அவன் தன்னை நாடி வந்த காரணமென்ன?

    தனக்கும் வசிஷ்டருக்கும் இடையே இணக்கமான போக்கு இல்லை என்பதை அவன் அறியவில்லையா? தன்னை நாடி இவன் வந்திருக்கிறான் என்றறிந்தால் வசிஷ்டர் சீற்றமடைவார் என்பதை அவன் உணரவில்லையா?

    விஸ்வாமித்திரர் விடையறிய முற்பட்டார். திரிசங்குவிடம் `தன்னை அவன் தேடி வந்த காரணம் என்ன?` என்று பரிவோடு வினவினார்.

    திரிசங்குவின் விழிகள் கண்ணீரில் பளபளத்தன. அந்தப் பளபளப்பில் நிறைவேறாத ஆசையின் ஏக்கம் புலப்பட்டது. ஏன், வசிஷ்டரைப் பற்றிய சலிப்பும் கூடத் தென்பட்டது. அவன் தன் ஆசையை விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தான்:

    `முனிவரே! நான் இந்த உடலோடு இப்படியே சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புகிறேன். என்னுடைய நெடுநாள் ஆசை இது. இதை என் குலகுரு நிறைவேற்றி வைப்பார் என நம்பினேன்.

    வசிஷ்டரிடம் என் ஆசையைத் தெரிவித்தேன். ஆனால் அவர் சொர்க்கத்திற்கு மனித உடலோடு போவதா? அதெல்லாம் நடக்காது, இப்படியெல்லாமா ஆசைப்படுவது? உன் பைத்தியக்காரத்தனமான ஆசையை விட்டுவிடு என்று கூறி என்னை விரட்டிவிட்டார்.

    கடும் சோர்வில் ஆழ்ந்த எனக்கு உங்கள் நினைப்பு வந்தது. உங்களின் அபாரமான தவச்சக்தி பற்றி அறிவேன். உங்களைத்தான் இந்த உலகம் முழுவதும் புகழ்கிறதே? நீங்கள் மட்டும் மனம் வைத்தால் என் குரு வசிஷ்டரால் முடியாததை நீங்கள் முடித்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    அந்த நம்பிக்கையில்தான் இதோ இங்கு வந்து உங்களைச் சரணடைந்துள்ளேன். என்னை வசிஷ்டரின் சீடன் என்று புறக்கணிக்காமல் என்மேல் தாங்கள் கருணை கொள்ள வேண்டும்.

    இப்படியே இந்த என் மனித உடலோடு சொர்க்க லோகத்திற்கு என்னை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும்! நீங்கள் நினைத்தால் அது முடியும்!`

    திரிசங்குவின் பேச்சைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்தார் விஸ்வாமித்திரர். முதலில் இது ஏதாவது தன்னைச் சிக்க வைக்கும் சூழ்ச்சியோ என சந்தேகம் கொண்டார். ஆனால் ஞான திருஷ்டி மூலம் இது சூழ்ச்சியல்ல என்பதையும் உண்மையிலேயே திரிசங்குவின் நீண்டநாள் ஆசை என்பதையும் உணர்ந்து கொண்டார்.

    வசிஷ்டரால் இயலாததை, தான் செய்து வெற்றி பெற வேண்டும் என நினைத்தது அவர் உள்ளம். வசிஷ்டரை விடவும் தான் உயர்ந்தவன் என்பதை நிரூபிக்க இது ஓர் அருமையான சந்தர்ப்பம் அல்லவா? குலகுருவால் கைவிடப்பட்டவனை நாம் ஆதரிப்போம் என எண்ணிய விஸ்வாமித்திரர் ஒரு முடிவு செய்தார்.

    `திரிசங்கு! கவலைப்படாதே. போய் உன் அரசாங்கக் கடமைகளை விரைவில் முடி. உன் மகனுக்குப் பட்டம் கட்டி அவனை மன்னனாக்கு. பிறகு என்னிடம் வா. நான் என் தவ வலிமையினால் யாகம் செய்து உன்னை உன் உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்! வசிஷ்டர் நிறைவேற்றாத உன் வேண்டுகோளை நான் நிறைவேற்றுகிறேன்` என்றார் அவர்.

    மனநிறைவடைந்த திரிசங்கு தன்னுடைய கோசல நாட்டுக்குத் திரும்பினான். தன் மகனுக்குப் பட்டம் சூட்டி அவனை மன்னனாக்கினான்.

    பின் மந்திரி பிரதானிகளிடமும் குடும்பத்தாரிடமும் மக்களிடமும் விவரத்தைச் சொல்லி விடைபெற்றான். விஸ்வாமித்திரரிடம் மறுபடி வந்து சேர்ந்தான். எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றிவிட்டேன் எனச் சொல்லி அவர்முன் கைகட்டி நின்றான்.

    பாராளும் மன்னன் தன் குலகுரு வசிஷ்டரை நிராகரித்துவிட்டுத் தன்முன் பணிவோடு நிற்பதை எண்ணி விஸ்வாமித்திரரின் மனம் பெருமிதம் கொண்டது. விஸ்வாமித்திரர் திரிசங்கு தன் மனித உடலோடு சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற சங்கல்பத்தோடு அக்கினி மூட்டி யாகம் வளர்க்கலானார்.

    மன ஒருமைப்பாட்டோடு தொடர்ந்து மந்திரங்களை ஜபிக்கலானார். அவர் மந்திர உச்சாடனம் செய்யச் செய்ய வேள்விக் குண்டத்தில் யாகத் தீ திகுதிகுவெனக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மந்திரங்கள் தங்கள் பலனைத் தர ஒருபோதும் தவறுவதில்லையே?

    அப்போதுதான் அந்த வியக்கத்தக்க சம்பவம் நடைபெற்றது. மந்திரங்களின் ஆற்றல் காரணமாக சொர்க்கத்தில் இருந்து ஒரு விமானம் தானே பூமிக்கு இறங்கி வந்தது. விமானத்தைப் பார்த்த விஸ்வாமித்திரர் மகிழ்ச்சி அடைந்தார்.

    `திரிசங்கு! இந்த விமானத்தில் ஏறி நீ சொர்க்கத்திற்குச் செல்!` என கம்பீரமாக உத்தரவிட்டார்.

    அவர் பாதங்களைப் பணிந்து விடைபெற்று விமானத்தில் ஏறினான் திரிசங்கு. அடுத்த கணம் விமானம் விர்ரென்று விண்ணில் பறக்கத் தொடங்கியது. சொர்க்கத்தின் முன் போய் நின்றது அது.

    விஸ்வாமித்திரரின் தவ ஆற்றல் காரணமாக சொர்க்கவாசல் யாரும் திறக்காமல் தானே திறந்து கொண்டது.

    சொர்க்கத்தின் உள்ளிருந்த தேவர்கள் சொர்க்க வாசல் தானே திறக்கும் அதிசயத்தைப் பார்த்துத் திகைத்தார்கள். திறந்த வாசல் வழியே ஒரு மானிடன் சொர்க்கத்தின் உள்ளே நுழைய எத்தனிப்பதைப் பார்த்தார்கள்.

    யார் இவன்? ஆன்மாதானே சொர்க்கத்திற்கு வரும்? இவன் தன் மானிட உடலோடு வந்திருக்கிறானே? இது எப்படி சாத்தியம்?

    இதை அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் பின்னர் இப்படியெல்லாம் மானிடர் அடுத்தடுத்து வரத் தொடங்கினால் சொர்க்கத்தின் மதிப்பு என்னாவது? இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.

    யோசித்த தேவர்கள் தங்கள் அரசனான தேவேந்திரனிடம் விஷயத்தைச் சொல்லி முறையிட்டார்கள். அதிர்ந்து போன தேவேந்திரன் கட்டளையிட, அனைத்துத் தேவர்களும் சொர்க்க வாசலில் வந்துநின்ற திரிசங்குவை விமானத்தில் இருந்து கீழே பிடித்துத் தள்ளினார்கள்.

    தடதடவென பூமியை நோக்கி விழத் தொடங்கினான் திரிசங்கு. `விஸ்வாமித்திரரே! அபயம் அபயம்!` என அவன் கதறிய கதறல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது.

    ஆகாயத்தைப் பார்த்த விஸ்வாமித்திரர் என்ன நடந்தது என்பதை உடனே புரிந்துகொண்டார். கடும் சீற்றமடைந்தார்.

    `என் தவச் சக்தியின் மீது ஆணை! திரிசங்கு! நில் அங்கே!` என உரத்த குரலில் கட்டளையிட்டார். கீழே விழுந்து கொண்டிருந்த திரிசங்கு அவரின் தவ ஆற்றல் காரணமாக அடுத்த கணம் வானில் நடுவே அப்படியே கீழே விழாமல் நின்றான்!

     

    இடைப்பட்ட ஆகாயத்திலேயே தம் தவச் சக்தி மூலம் புதிதாய் ஒரு சொர்க்கத்தைப் படைக்கத் தொடங்கினார் விஸ்வாமித்திரர். விறுவிறுவென்று இன்னொரு சொர்க்க லோகம் வானத்தின் நடுவே உருவாகத் தொடங்கியது. அதைப் பார்த்து தேவலோகம் கதிகலங்கியது.

    சொர்க்கத்தின் மதிப்பு குறையும் எனக் கருதி ஒரு மனிதன் மனித உடலோடு சொர்க்கத்திற்கு வருவதைத் தடுத்தோம். ஆனால் இப்படிப் புதிதாகவே இன்னொரு சொர்க்கம் உருவாக்கப்பட்டால் ஏற்கெனவே உள்ள சொர்க்கத்தின் மதிப்பு என்ன ஆகும்?

    தேவர்கள் மும்மூர்த்திகளிடம் போய் முறையிட்டார்கள். சிந்தித்த பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முன்மூர்த்திகளும் விஸ்வாமித்திரரைத் தேடி வருவதற்கும் முன்பாக வசிஷ்டரைத் தேடிச் சென்றார்கள்.

    இன்னொரு சொர்க்கத்தைப் படைப்பது இந்திரனை அவமதிப்பதாகும் என்றும் அந்த எண்ணத்தைக் கைவிடுமாறு விஸ்வாமித்திரரிடம் அவர் சொல்ல வேண்டும் என்றும் வசிஷ்டரைக் கேட்டுக் கொண்டார்கள்.

    மும்மூர்த்திகளுக்குப் பணிந்த வசிஷ்டர் தன்மேல் பொறாமை கொண்டிருந்த விஸ்வாமித்திரரைத் தாமே தேடிச் சென்றார். சொர்க்கம் படைப்பதை அவ்வளவில் நிறுத்திக் கொள்ளுமாறும் மும்மூர்த்திகள் அதை விரும்பவில்லை என்றும் எடுத்துச் சொன்னார்.

    தவத்தால் யாரை வெல்ல நினைத்தாரோ அந்த வசிஷ்டரே தன்னைத் தேடிவந்து கேட்டுக் கொண்டதை எண்ணி மகிழ்ந்தது விஸ்வாமித்திரரின் மனம். புதுச் சொர்க்கம் படைப்பதைத் தொடராமல் அவ்வளவில் நிறுத்திக் கொண்டார் அவர்.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    அந்தரத்தில் நிறுவப்பட்ட இடைச் சொர்க்கத்தில் திரிசங்கு வானகத்திலும் இல்லாமல் பூமியிலும் இல்லாமல் அந்தரத்திலேயே வாழலானான்.

    விஸ்வாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால் திரிசங்கு தனது கோசல நாட்டின் அரசாட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு வந்தார் அல்லவா? அந்த மகன்தான் அரிச்சந்திரன். பொய்யே பேசாமல் உண்மையை மட்டுமே பேசி அதனால் வந்த அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தவன்.

    இதுதான் திரிசங்கு சொர்க்கம் என்று இன்னொரு சொர்க்கம் உருவான கதை.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • காலத்தின் ஓட்டம் நம் கையில் இல்லை.
    • நம் கனவுகள் அர்த்தமற்றவை ஆகிவிடும்.

    'எண்ணங்கள் அனைத்தும் உயர்வாக இருக்க வேண்டும். அவற்றை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அவற்றின் மூலம் சாதனைகள் படைக்க வேண்டும்'.

    -அப்துல் கலாம்

    பட்டம் வானில் பறந்தாலும், அதனை ஏற்றுவதும், இறக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது. எனவே, நம்மை மீறி அது வேறெங்கும் சென்றுவிட முடியாது. ஆனால், காலத்தின் ஓட்டம் நம் கையில் இல்லை. நதியைப்போல் அது முன்னோக்கியே விரைகிறது.

    நம் கையில் கடிகாரத்தை நாம் கட்டிக் கொண்டாலும், காலம் நம் முன் கைகட்டி நிற்பதில்லை. அது யாருக்காகவும் காத்திருப்பதும் இல்லை. போகிற வேகத்தில் அது எத்தனையோ பாடங்களை நமக்குச் சொல்லிச் செல்கின்றது. எனினும், மிகச்சிலர்தான் காலத்தின் அருமையை உணர்ந்து செயல்படுகிறார்கள். அதை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    உருப்படியான சிந்தனை எதுவும் இல்லாமல் பொழுதை எல்லாம் வீண்டித்துக் கொண்டிருப்பவர்கள், திடீரென ஒருநாள் விழித்துக் கொள்ளும்போதுதான் தங்களின் காலம் கடந்துவிட்டதை உணர்கிறார்கள். வாழ்வின் விளிம்பில் வந்து நிற்கும் தருணத்தில், கடந்து போனதை எண்ணுவதில் என்ன பயன்!

    சிலருக்குக் காலத்தின் வேகம் புரிவதே இல்லை. வீண்கதைகள் பேசிப் பேசியே வாழ்நாளைக் கடத்திவிடுகின்றனர்.

    என் எழுத்துப்பணி சார்ந்த ஒரு முக்கியமான டிஸ்கஷன். துறை சார்ந்த இரண்டு நண்பர்களுடன் 'கபே காபி டே' யில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, எங்களுக்குப் பின்புற இருக்கைகளில் இரண்டு பேர், திரைப்படங்கள் தொடர்பான விஷயங்களை அலசிக் கொண்டிருந்தனர். அந்த இருவரில் ஒருவரின் குரல் சற்று தூக்கலாகவே ஒலித்தது.

    'இந்தப் படத்துல ஹீரோயின் செலக்ஷன் சரியில்ல. கொஞ்சம் கிராமியத்தனமான முகஜாடை அவசியம். அது ரொம்ப மிஸ்சிங். கேமரா மேன் நல்ல அனுபவசாலி. ஆனா அவரை சரியா பயன்படுத்திக்கலியே. நீ என்ன நினைக்கிறே?'

    'எனக்கும் அப்படித்தான் தோணுது'.

    'புதுமையான கதை. ரொம்ப சிறப்பா பண்ணியிருக்கலாம். ஆனா, டைரக்டர் ஸ்கிரீன் பிளே பண்ணத் தெரியாம பண்ணி சொதப்பிட்டாரே. போகட்டும் போகட்டும். என்கிட்ட ஒரு சூப்பர் கதை இருக்கு. டயலாக், ஸ்கிரீன் பிளே எல்லாம் பண்ணிட்டேன். புரொடியூசர் கிடைச்சதும் படத்தை ஸ்டார்ட் பண்ணிடுவேன். அப்புறம் பாரு...நான்தான் நம்பர் ஒன் டைரக்டர்'.

    இப்படியே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அந்த நபர் தமது மேதாவித்தனத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். சினிமா நுணுக்கங்களை எல்லாம் விரல்நுனியில் அவர் வைத்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

    நான் எனது டிஸ்கஷனை முடித்துவிட்டு எழும்பிய அதே நேரத்தில், அந்த நபர்களும் எழுந்தனர். திரைப்பட நுணுக்கங்கள் பற்றி விலாவாரியாகப் பேசிய அந்த நபர் எழுந்து என் பக்கமாகத் திரும்பிய போது, ஏற்கனவே எப்போதோ பார்த்த முகம்போல் இருந்தது.

    தலைமுடி பாதி நரைத்திருந்தது. தடிமனான மூக்குக் கண்ணாடி. கொஞ்சம் தளர்வான தேகம். கூர்ந்து பார்த்தேன். இருபது வருடங்களுக்கு முன், எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த குடும்பத்தின் பையன்தான் அவன் என்பதைக் கண்டு கொண்டேன்.

    கவிஞர் தியாரூ

    அப்போதே அவனுக்குள் சினிமா மோகம்தான். பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, 'சினிமா டைரக்டர் ஆகப்போகிறேன்' என்று சொல்லிக்கொண்டு, தினந்தோறும் அதற்காக அலைந்து திரிவான். பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை.

    தன்னிடமுள்ள கதைகளைச் சிலாகித்துப் பேசுவான். 'அடுத்த வாரமே ஷூட்டிங். இந்த வருஷம் என்னோட படம்தான் சூப்பர் ஹிட்' என்பான். ஓரிரு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினான். அப்போது வரை, அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அதன்பிறகு, வேறொரு பகுதியில் வீடு பார்த்து அவர்கள் சென்றுவிட்டனர்.

    நீண்ட கால இடைவெளிக்குப்பின் எதிர்பாராதவிதமாக என்னைப் பார்த்ததும், அவன் கொஞ்சம் சங்கடப்படத்தான் செய்தான். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, என் கைகளைப் பற்றினான்.

    'எப்படி இருக்கீங்கண்ணே. வீட்ல எல்லாரும் சவுக்கியமா?'

    'எல்லாரும் சவுக்கியம் தம்பி. அப்பா அம்மா நல்லாருக்காங்களா?'

    'பரவாயில்லண்ணே. அப்பாவுக்கு உடம்புக்கு முடியல'.

    'அப்படியா... உனக்கு எத்தனை குழந்தைங்க?'

    'அண்ணே எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. சினிமா டைரக்டர் ஆனப்புறம்தான் கல்யாணம்னு ஒரு முடிவோடு இருக்கேன். சூப்பர் கதை வச்சிருக்கேன். இன்னும் ஒரு மாசத்துல ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவேன். இந்த வருஷம் என்னோட படம்தான் சூப்பர் ஹிட்' என்று சொல்லிவிட்டு மெல்ல நழுவினான் அவன்.

    இந்த ஒரே டயலாக்கை சொல்லிச் சொல்லி இருபது வருடங்களை வீண்டித்துவிட்டானே. நாற்பத்தைந்து வயதாகியும்கூட, தனது எதார்த்த நிலை பற்றிய உணர்வு கொஞ்சமும் இல்லையே. அவன் மீது எனக்குக் கோபம்தான் வந்தது.

    இப்படி ஏதோ ஒரு கனவுலகில், பலர் தங்கள் வாழ்க்கையைக் கரைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேலைக்குச் செல்ல மனமிருக்காது. சம்பாத்தியத்தைப் பற்றிய கவலையும் இருக்காது. ஆனால், எதையோ சாதிக்கப்போவதைப்போல் மனக்கோட்டை கட்டிக் கொண்டிருப்பார்கள்.

    லட்சியம் முக்கியம். அதனை அடைவதற்குக் காலத்தின் அருமை குறித்த ஞானமும், உண்மையான உழைப்பும் மிக முக்கியம். அவர்கள் தங்கள் லட்சியத்தில் தோற்றுப்போவதே இல்லை. ஆனால் சிலர், லட்சியம் என்ற போர்வையில் வாழ்க்கையை விரயம் செய்து கொண்டிருப்பார்கள்.

    ஞானம் இல்லாத உழைப்பு பயன்படாது. காலம் அறியாத காத்திருப்பு பலன்தராது.

    நமது இலக்கு; அதை அடைவதற்கான கால அளவு; வழிவகை - இவற்றைப் பற்றிய தெளிவு நமக்குத் தேவை. இல்லையெனில், இலக்கு என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்.

    தங்கள் கனவு நிறைவேறுமா என்பதை அறிந்து கொள்வதற்கு ஜோதிடர்களைத் தேடிச் செல்பவர்கள் உண்டு. கஷ்டப்படாமல் சுலபமாக அதனை அடைவதற்கு உபாயம் ஏதும் உண்டா என்றெல்லாம்கூட கேட்பார்கள்.

    'உங்களுக்கு இப்ப நேரம் சரியில்ல' என்று அவர் சொல்லிவிட்டால், அதையே காரணம் காட்டி ஏழரை வருஷம் சும்மா சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

    காலம் கடந்தபின் வாழ்ந்திட ஆசைவரும்; ஆனால் வாழ்க்கை வராது. பார்வை இழந்தபின் பார்த்திட ஆவல் வரும்; ஆனால் காட்சிகள் தெரியாது.

    ஏதோ ஒன்றை உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, 'இதை முடித்தபின்தான் மறுவேலை' என்றிருப்பவர்களில் பலர், தங்கள் வாலிபத்தை இழந்துவிடுகிறார்கள். காலம் தன் கால்களில் சலங்கை கட்டி மேடையில் ஆடிக் கொண்டிருப்பதில்லை; அது ஓடிக்கொண்டிருப்பது. அந்த உணர்வு நமக்கு இல்லை என்றால், நம் கனவுகள் அர்த்தமற்றவை ஆகிவிடும்.

    நம் இலக்கு என்பது நம் ஆற்றல் சார்ந்ததாக இருக்க வேண்டும். நமக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தில் இறங்குவதும், எதுவுமே புரியாமல் பின்னர் விழிபிதுங்கி நிற்பதும் அறிவுடைய செயல் அல்ல.

    ஆர்வம் கொள்வதில் தவறில்லை. தெரியாததைத் தெரிந்து கொண்டு, அதில் தேர்ச்சி பெற விரும்புவது நல்ல விஷயம்தான். ஆனால், தனக்கு வரவே வராது என்று தெரிந்த பின்னும், அதையே பற்றிக்கொண்டு நேரத்தைப் பாழாக்குவது நியாயமில்லை. சிலரின் வாழ்க்கையே தோல்வியாகிப் போவதற்கு இதுதான் காரணம்.

    தண்டவாளமே இல்லாத ஊரில், ரெயிலுக்காகக் காத்துக் கொண்டிருப்பவன் என்றைக்கு ஊர்போய்ச் சேர்வான்! விதைநெல், நாற்று, நடவு என்பன பற்றிய விபரம் எதுவுமே தெரியாதவன், வயற்காட்டில் இறங்கி என்ன செய்யப் போகிறான்!

    தன்னைத்தான் அறிதல் என்பதே, ஒருவன் தன் ஆற்றலை அறிதல் என்பதுதான். நமக்குள் இறங்கிப் பார்க்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய ஆழம் நமக்குத் தெரியவரும்.

    எந்த விஷயம் நமக்குக் கைவருமோ, அந்த விஷயத்தில் நாம் சாதிக்க முடியும். சவாலான எந்த விஷயத்தை நம்மால் வசப்படுத்த முடியுமோ, அதில் தனிச்சிறப்புடன் நாம் உயர்ந்து நிற்க முடியும். எல்லாவற்றிற்கும் தேவை தீர்க்கமான பார்வை; விரயமாகாத உழைப்பு.

    ஒருவன் விறுவிறு என முன்னேறிக் கொண்டிருப்பான். 'அவன் பிறந்த நேரம் அப்படி' என்று சிலர் சொல்வார்கள். அதுவா காரணம்? இல்லை! அவனின் திட்டமிடல் அப்படி! அவனின் செயல்திறன் அப்படி! அவனின் உறுதிப்பாடு அப்படி!

    ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, இளவதிலேயே ஒருவன் மாவட்ட ஆட்சியர் ஆகிவிடுகிறான். அது என்ன சாதாரண விஷயமா? அந்த உயர்வுக்குப் பின்னால் எத்தனை பெரிய உழைப்பு இருக்கிறது! ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிவிடாத கவனமும், ஒவ்வொரு நொடியையும் வெற்றிப்படியாக பயன்படுத்துகிற சாமர்த்தியமும் அல்லவா சாதிக்க வைக்கின்றன.

    செலவுக்குத் தினந்தோறும் தந்தையின் கையையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு, அதைத் தாண்டி எந்தச் சிந்தனையும் இருக்காது. அவரிடம் பணத்தை உரிந்து, ஊதாரித்தனமாய் ஊர்சுற்றுவதுதான் அவனைப் பொறுத்தவரையில் சாதனை.

    'ஆள் செய்யாததை நாள் செய்யும்' என்றொரு பழமொழி உண்டு. அப்படி ஏதாவது தானாக வந்துவிடாதா என்னும் எதிர்பார்ப்புடன் சும்மா உட்கார்ந்திருப்பவன், தன் வாழ்நாள் முழுவதும் அப்படியேதான் இருப்பான். ஓர் அங்குல அளவுகூட உயர மாட்டான்.

    படித்து முடித்துப் பட்டம் பெற்ற ஓர் இளைஞன். வேலை தேடுவதில் அவனுக்கு நாட்டம் கிடையாது.

    வருமானம் ஈட்டுவதைப் பற்றிய எண்ணமும் இல்லை. ஆனால், வசதியுடன் நல்ல நிலையில் இருப்பவர்களைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சுவிடுவான். இவர்களுக்கு மட்டும் இவ்வளவு காசு பணம், கார், பங்களா எப்படி என்று புலம்புவான்.

    அந்த ஊரில் பிரசித்தி பெற்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவரிடம் சென்றான்.

    'சிலர் வசதி மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி அவ்வளவு கிடைத்தன?' என்று கேட்டான். அந்தப் பெரியவர் சிறிது நேரம் மவுனமாக இருந்தார். பின்னர் அவனைப் பார்த்து, 'உனக்கு மிகவும் பிடித்த பழம் எது?' என்று கேட்டார். 'மாம்பழம்' என்றான்.

    'மாடியிலுள்ள அறைகளில் ஏதோ ஒன்றில்தான் மாம்பழம் இருக்கிறது. போய் எடுத்துக்கொள்' என்றார்.

    மாடியில் பல அறைகள். ஒவ்வொன்றிலும் தேடி, இறுதியில் மாம்பழத்தைக் கண்டுபிடித்துச் சுவைத்தான். தேவாமிர்தத் தித்திப்பு.

    'மாம்பழம் உன் கைக்கு எப்படிக் கிடைத்தது?' என்று கேட்டார் பெரியவர்.

    'நான் போய் தேடிப் பார்த்தேன், கிடைத்தது' என்றான் அந்த இளைஞன்.

    'எதுவுமே தானாக நம் கையில் வந்து சேர்ந்திடாது. தேடிச் சென்றால் கிடைக்கும்' என்று சொல்லிப் புன்னகைத்தார் பெரியவர். அந்த இளைஞன் அப்போதுதான் அந்தப் பேருண்மையை உணர்ந்தான்.

    வளர்ச்சி, வெற்றி, மகிழ்ச்சி ஆகியவற்றில் எதுவும் யோகத்தினால் வருவதல்ல; நம் உயர்ந்த எண்ணங்களால், உழைப்பினால் வருவது. இதை நாம் பின்பற்றினால் போதும். லட்சியம் வெல்வது நிச்சியம்.

    போன்: 9940056332

    • மன நிம்மதிக்காக, காட்டில் வசித்து வந்த ஒரு மகானைத் தேடிச்சென்றார்.
    • பயணக் களைப்புடன் சென்ற அந்த வியாபாரியை வரவேற்று உபசரித்தார் அந்த மகான்.

    ஆன்மா என்றால் என்ன என்பதை எவராலும் சரிவர அறிந்து கொள்ள முடியாது. நமக்குள்ளே அப்படி ஒன்று உள்ளது என்பதும் வெளிப்படையாக அறிய முடியாத ஒன்றாக உள்ளது.

    ஆனால் மனம் என ஒன்று நமக்கு இருப்பது நம் அனைவருக்குமே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

    அந்த மனம் மகிழ்ச்சியோடு இருப்பதும் தெரிகிறது; நிம்மதியை இழந்து வருத்தத்துடன் இருப்பதும் நமக்குத் தெரிகிறது.

    பிரச்சனைகள் எவையுமே இல்லாமல் வாழவேண்டும் என்று நம்முடைய மனம் தான் கோரிக்கை விடுக்கிறது.

    பிரச்சனை, பிரச்சனை என்று கூறுகிறோம். பிரச்சனை என்றால் என்ன?

    அவர் ஒரு பெரிய வியாபாரி. நிறைய வர்த்தக நிறுவனங்களை நடத்தி வந்தார். எல்லா தொழில்களிலும் உள்ளது போன்ற பிரச்சனைகள் அவரது தொழில்களிலும் இருந்தன.

    இதனால் மன நிம்மதியை இழந்து தவித்தார். அவர் நிம்மதியாகத் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டன.

    மன நிம்மதிக்காக, காட்டில் வசித்து வந்த ஒரு மகானைத் தேடிச்சென்றார்.

    பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று அந்த மகானுடைய ஆசிரமத்தை அடைந்தார். அவர் செல்லும் போது சூரியன் அஸ்தமனம் ஆகத் தொடங்கி விட்டது.

    பயணக் களைப்புடன் சென்ற அந்த வியாபாரியை வரவேற்று உபசரித்தார் அந்த மகான்.

    அந்த வியாபாரியிடம் அவரது பிரச்சனைகள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார் அந்த மகான்.

    பிறகு அவர் அந்த வியாபாரியிடம்,

    "நீ மிகுந்த பயணக் களைப்பில் வந்திருக்கிறாய். இன்று இரவு நீ நிம்மதியாக படுத்துத் தூங்கு. நாளைக்கு காலையில் உனது பிரச்சனைகள் அனைத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்...

    "நீ மிகவும் வசதியாக வாழ்ந்தவன். இங்கு என்னுடைய படுக்கை மட்டுமே நல்லதாக இருக்கும். நீ என்னுடைய படுக்கையில் படுத்துக் கொள். எனக்கும் வெளியே சற்று வேலை இருக்கிறது"

    என்று கூறி, தனது படுக்கையை அந்த வியாபாரியிடம் ஒப்படைத்தார்.

    அந்தப் படுக்கை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

    ஸ்பிரிங் வைத்து தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட மெத்தை அது.

    அவர் புரண்டு படுத்த போதெல்லாம் அந்த படுக்கையும் நெளிந்து கொடுத்தது.

    ஸ்ரீ பகவத்

    பயணக் களைப்பில் இருந்த வியாபாரியும் தன்னை மறந்து தூங்கிவிட்டார்.

    வெகு நாட்களாக தூக்கம் இல்லாமல் இருந்த அவர், அன்றுதான் தன்னை மறந்து தூங்கிவிட்டார்.

    இரவு 2 மணி இருக்கும். யாரோ கதவைத் தட்டியது போல் இருந்தது.

    தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அவர் எழுந்துசென்று கதவைத் திறந்தார். அங்கே அந்த மகான் தான் நின்று கொண்டிருந்தார்.

    "என்ன சுவாமி இந்த நேரத்தில்...?

    இந்த படுக்கை உங்களுக்கு வேண்டுமா? நீங்கள் இங்கே படுத்துக் கொள்ளுங்கள் சுவாமி. நான் வேறு எங்காவது படுத்துக் கொள்கிறேன் சுவாமி" என்று கேட்டுக் கொண்டார் அந்த வியாபாரி.

    அந்த மகானும்,

    "நீ வேறு எங்கும் செல்ல வேண்டாம். நீ இங்கேயே படுத்துக் கொள்ளலாம். நான் தான் அவசரத்தில் என்னுடைய செல்லப் பிள்ளையை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்.

    அவன் மிகவும் நல்ல பிள்ளை. உனக்கு எந்த தொந்தரவும் செய்திருக்க மாட்டான். இப்போது தான் அவனுடைய நினைவு வந்தது. அதனால் தான் அவனை எடுத்துப் போக வந்தேன்" என்று கூறியவாறே,

    அந்த வியாபாரி படுத்திருந்த படுக்கையைத் தூக்கி, அங்கே இருந்த பெரிய கருநாகப் பாம்பு ஒன்றை உருவி எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டார்.

    "இனி நீ நிம்மதியாக படுத்துத் தூங்கு!" என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து போய்விட்டார்.

    அதன் பிறகும் அந்த வியாபாரி அந்தப் படுக்கையில் தான் படுத்துக் கொண்டார்.

    அவர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் எதுவும் வரவில்லை. புரண்டு படுக்கும் போதெல்லாம், பாம்பு நெளிந்து கொடுத்ததாகவே தோன்றியது.

    மறுநாள் அவர் அந்த மகானை சந்தித்தார்.

    "நன்றாக தூங்கினாயா?" என்று அந்த மகான் கேட்டார்.

    "இரவு 2 மணி வரை நன்றாக தான் தூங்கினேன். எப்போது நீங்கள் உங்கள் செல்லப் பிள்ளையை எடுத்துச் சென்றீர்களோ, அதன் பிறகு எனது தூக்கம் முற்றிலுமாக மறைந்து விட்டது!" என்று அந்த வியாபாரி கூறினார்.

    இப்போது அந்த மகான் கேட்டார்:

    "இரவு 2 மணி வரை நீ அந்த பாம்புக்கு மேலேதான் படுத்திருந்தாய். ஆனால் நிம்மதியாக நீ தூங்கிவிட்டாய்.

    அதற்குப்பிறகு பாம்பு எதுவுமே அங்கு கிடையாது. ஆனால் உனக்கு தூக்கம் இல்லாமல் போய் விட்டது. இப்போது உன்னிடம் ஒரு கேள்வி. உன்னுடைய தூக்கத்தைக் கெடுத்தது எது?

    பாம்பு தான் உனது தூக்கத்தைக் கெடுத்ததா? அல்லது அந்த பாம்பைப் பற்றிய நினைவுதான் உனது தூக்கத்தைக் கெடுத்ததா?"

    இப்படி நாம் நமது வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கிறோம்.

    அந்தப் பிரச்சனைகள் தான் பிரச்சனையா அல்லது அந்த பிரச்சனைகளைப் பற்றிய நினைவுதான் பிரச்சனையா?

    பிரச்சனைகள் அனைத்தும் நிஜமானவை. அந்த பிரச்சனைகளைப் பற்றிய நினைவுகள் அனைத்தும், வெறும் நிழல்களைப் போன்றவையே.

    நிஜம் தான் நம்மை பயமுறுத்துகிறது என்று எண்ணுகிறோம்.

    ஆனால் நிஜம் நம்மை பயமுறுத்துவது இல்லை.

    பிரச்சனைகள் சம்பந்தமான நினைவுகள் தாம் நம்மை பயமுறுத்துகின்றன.

    நிஜம் நம்மை பயமுறுத்தவில்லை; நிழல் தான் நம்மை பயமுறுத்துகிறது.

    ஒரு பெரிய மரத்தின் மீது ஏற வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

    அப்படி மரத்தில் ஏறி நமக்குப் பழக்கம் இல்லை.

    மரத்தில் ஏறுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. என்ன செய்வது?

    மரத்தில் ஏறுகிறோம். பாதி உயரம் ஏறி விட்டோம். கீழே பார்த்தால் பயமாக இருக்கிறது. நழுவி கீழே விழுந்து விடுவோமோ, கிளை முறிந்து கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து கொண்டே மரத்தில் ஏறுகிறோம்.

    நாம் பயந்தபடியே நாம் பிடித்துக்கொண்ட கிளை முறிந்து, கிளையுடன் சேர்ந்து நாமும் கீழே விழுந்து கொண்டிருக்கிறோம் .

    இப்போது நமக்கு என்ன விதமான உணர்வுகள் ஏற்படும்?

    பயம் ஏற்படுமா?

    சில விநாடிகள் அவகாசம் எடுத்து சிந்தித்துப் பாருங்கள்.

    என்ன உணர்ச்சி ஏற்படும்?

    பயம் ஏற்படுமா?

    நிச்சயமாக பயம் ஏற்படாது.

    நாம் கீழே விழும் போது நம்மை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியும் அதற்குத் தேவையான உணர்வுகளும் தான் ஏற்படும்.

    மரத்தில் ஏறும் போது கீழே விழுந்திடுவோமேயானால் அது தான் உண்மையான பிரச்சனை.

    அந்தப் பிரச்சனை நிகழும்போது பயம் ஏற்படுவதில்லை. அது நிகழ்ந்து விடுமோ என்ற எண்ணம் தான் நம்மை பயமுறுத்துகிறது.

    அந்த பிரச்சனைகளைப் பற்றிய நினைவுகள் நமக்குள்ளே இருக்கின்றனவா அல்லது நமக்கு வெளியே இருக்கின்றனவா?

    உண்மையான பிரச்சனைகள் அனைத்தும் நமக்கு வெளியே இருந்தாலும் கூட,

    அது சம்பந்தமான நமக்குள்ளே இருக்கும் நினைவு அம்சம் மட்டுமே நம்மைப் பொறுத்தவரையிலும் பிரச்சினையாக உள்ளது.

    அரசவை கூடி இருந்தது. அரசரும், மந்திரிப் பிரதானிகளும் கூடி இருந்தார்கள்.

    அந்த அரசவைக்கு ஞானி ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

    அவையிலுள்ளோர் அனைவரும் தங்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறி, தீர்வு கேட்டனர்.

    அந்த ஞானியும், "உங்களது பிரச்சனைகளை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். அவற்றை எல்லாம் தீர்த்து வைக்கிறேன்!" என்று கூறினார்.

    அனைவரின் சார்பாக மன்னர் பேசினார்:

    "சுவாமி! பிரச்சனைகள் வெளியே இருந்தால் அவற்றை எல்லாம் உங்களிடம் சுலபமாக ஒப்படைத்துவிட முடியும். ஆனால் அந்தப் பிரச்சனைகள் அனைத்தும் எங்கள் மனதுக்குள்ளே அல்லவா இருந்து கொண்டிருக்கின்றன. மனதுக்குள்ளே இருந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை உங்களிடம் எப்படி சுவாமி ஒப்படைப்பது?"

    அந்த ஞானியும், "வெளியே இருக்கும் பிரச்சனைகளை என்னிடம் ஒப்படைப்பது சுலபமானது தான். மனதிலுள்ள பிரச்சனைகளை என்னிடம் ஒப்படைப்பது கடினம் தான். உண்மையிலேயே உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் மனதினுள்ளேதான் இருக்கின்றனவா?" என்று கேட்டார்.

    "எங்களால் நிச்சயமாக சொல்லமுடியும். எங்கள் மனதுக்குள்ளே தான் எங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் உள்ளன. ஆனால் அவற்றை உங்களிடம் எப்படி ஒப்படைப்பது என்றுதான் தெரியவில்லை" என்று அரசர் கூறினார்.

    அந்த ஞானியும், "அந்த பிரச்சனைகள் உங்கள் மனதினுள் இருக்குமேயானால், அவை உங்கள் மனதில் எங்கே தங்கி இருக்கின்றன என்பதை மட்டுமாவது கண்டுபிடியுங்கள். நான் அவற்றை அங்கு வந்தே சரி செய்கிறேன்" என்று கூறினார்.

    அரசரும், தனது பிரச்சனைகள் தனது மனதினுள் எங்கே தங்கி இருக்கின்றன என்று தனக்குள்ளேயே ஆழ்ந்து உற்று நோக்கினார். பிறகு அவர்,

    "சுவாமி! உள்ளே எட்டிப் பார்த்தால் எதுவுமே காணப்படவில்லையே!"என்று கூறினார்.

    இப்போது அந்த ஞானி கேட்டார்:

    "நீ தான் பிரச்சனை இருக்கிறது என்று கூறினாய். அதுவும் உனது மனதுக்குள்ளே இருக்கிறது என்று கூறினாய். இப்போது உள்ளே எதுவுமே காணப்படவில்லை என்று கூறுகிறாய். உண்மையிலேயே பிரச்சனை என்று ஏதாவது இருக்கிறதா அல்லது இல்லையா? இருக்கிற பிரச்சினைக்கு தீர்வு கேட்கிறாயா அல்லது இல்லாத பிரச்சனைக்கு தீர்வு கேட்கிறாயா?" ஏகப்பட்ட பிரச்சனைகள் நமக்கு இருப்பதாகத் தோன்றுகிறது.

    ஆனால் அருகில் சென்று பார்த்தால் எதுவுமே இல்லாமல் போய் விடுகிறது.

    உண்மையில் பிரச்சனை என்றால் என்ன? அது உண்மையில் இருக்கிறதா அல்லது இல்லையா?

    தொடர்புக்கு - sribagavathji@gmail.com

    • அழகர் போனுடன் வாசலில் ஓரமாய் ஒதுங்கினார்.
    • ஆமா... இவளை எதுக்கு கடத்துனாங்க. பணம் பறிக்கவா?” டிரைவர் பக்கத்து சீட்காரன் கேட்டான்.

    மொத்த குடும்பமும் போலீஸ் ஸ்டேஷனில், ஒரு பகுதியில் பயத்துடன் நின்று கொண்டு பார்த்து கொண்டிருக்க, டேவிட்டை தனியே அழைத்து சென்று, வாசல் ஓர ஜன்னல் அருகே நிற்க வைத்தார் இன்ஸ்பெக்டர் அழகர். டேவிட் பதைபதைப்புடன் அவரையே பார்க்க, மிகவும் சன்னமான குரலில் இப்படி சொன்னார் அழகர்.

    "டேவிட்... அங்க 'டிரக்' மட்டும்தான் நிக்குதாம். உள்ள இருந்த திவ்யா, அப்புறம் அந்த டிரைவர் மனோகர் யாருமே இல்லையாம்!"

    டேவிட் அதிர்ச்சியானான்...

    "அதுமட்டுமில்ல டேவிட்... போலீஸ் விசாரணையில அந்த 'டிரக்'கே திருடினதுதான், நம்பர் போர்டு போலி. ஓனர் கூட செங்கல்பட்டு தான். ஹைவேஸ்ல ஒய்வுக்கு நின்ன டிரக் ட்ரைவரை கட்டி போட்டுட்டு டிரக்கை திருடி ஓட்டிட்டு வந்திருக்கான்..."

    "அதெல்லாம் சரி சார்... இப்ப என் திவ்யாவோட நிலைமை என்ன?"

    "பதறாதீங்க... அந்த ஏரியாவுல லோக்கல் போலீஸ் விசாரணை போயிட்டுருக்கு... இன்னும் கொஞ்ச நேரத்துல, நாமளும் அந்த ஸ்பாட்டுக்கு போறோம்! உங்க பேமிலியில கலந்து பேசி யாரெல்லாம் வர்றீங்கன்னு முடிவு பண்ணி வைங்க. நான் எஸ்.பிக்கு தகவல் சொல்லிட்டு வரேன்..."

    அழகர் போனுடன் வாசலில் ஓரமாய் ஒதுங்கினார். டேவிட் தன் குடும்ப உறுப்பினர்களுடனும், நண்பர்களுடனும் பதட்டமாய் இன்ஸ்பெக்டர் சொன்னதை விவரிக்க தொடங்க...!

    அதே நேரம், அதே வினாடிகளில் அந்த ஊதா கார் ஆள் நடமாட்டம் இல்லாத, தார் ரோட்டில் போய்க்கொண்டிருந்தது. உள்ளே, பின்சீட்டில் இன்னும் மயங்கிய நிலையில், இடது ஓர ஜன்னல் கதவில் சாய்ந்தபடி திவ்யா இருக்க, பக்கத்தில் மனோகர், வலது ஒர ஜன்னல் கதவில் சாய்ந்தபடி இருந்தான். முன்னாள் ஒருவன் காரை ஓட்ட, இன்னொருவன் கேட்டான்... "இந்த பொண்ணு மயக்கம் தெளிஞ்சு எழுந்திரிச்சுடமாட்டாளே?"

    "இன்னும் மூணு மணிநேரம் முழிக்க மாட்டா... கொஞ்சம் அதிகமாகத்தான் மருந்து ஜூஸில் கலந்து கொடுத்தேன்..." மனோகர் சொன்னான்.

    "ஆமா... இவளை எதுக்கு கடத்துனாங்க. பணம் பறிக்கவா?" டிரைவர் பக்கத்து சீட்காரன் கேட்டான்.

    "நமக்கு எதுக்கு கேள்வி எல்லாம். சொன்ன இடத்துல ஒப்படைச்சுட்டு, காச கையில வாங்கிட்டு போயிட்டே இருப்போம்... அவனுங்க என்ன பண்ணா என்ன... நாம ஒன்லி டெலிவரி பாய்ஸ்... சொன்னபடி டெலிவரி பண்ணா மட்டும் போதும்..." மனோகர் சொல்ல போன் அடித்தது. எடுத்து காதில் வைத்தான்.

    'சார்... இன்னும் ஒரு மணி நேரத்துல நீங்க சொன்ன இடத்துல நாங்க இருப்போம்..."

    "............." எதிர்முனை


    "சரிங்க சார்... இப்ப கூட போலீஸ் செக் போஸ்ட் இல்லாத சிங்கிள் ரோடா பார்த்து கொஞ்சம் ஜாக்கிரதையாதான் வர்றோம்..."

    "............." எதிர்முனை

    "கவலைப்படாதீங்க சார்... பத்திரமா ஒப்படைக்கிறோம்... சுண்டுவிரல் கூட மேல படாது சார்...!"

    பதில் சொல்லி போனை அணைத்தான் மனோகர்.

    "எதுக்கு பொண்ணை தொடக்கூடாதுன்னு அடிக்கடி சொல்றான்..." வண்டி ஓட்டினவன் கேட்டான்.

    "அவன் அந்த விசயத்துல கண்டிப்பா இருக்கிறத பார்த்தா, பொண்ணு அவனுக்கு ரொம்ப வேண்டப்பட்டவளா இருக்கும்னு நெனைக்குறேன். என் யூகம், இவளை நாம ஒப்படைக்கபோற ஆளு இவளை பணத்துக்காக கடத்தல..."

    மனோகர் சொல்லி முடிக்கவும், ஒரு கருப்பு நிற கியா கார் அவர்களின் காரை மறித்து நின்றது. ஊதா கார் இன்னோவா குலுங்கி நின்றது. கியா காரை பயத்துடன் பார்த்தான் மனோகர்.

    போலீஸ் ஸ்டேஷன்,

    "என்னங்க இது... மொத்த குடும்பமும் வரேன்னு சொல்றீங்க... அட்லீஸ்ட் ஆம்பளைங்க மட்டுமாவது வாங்க..."

    அழகர் கூறவும், ரங்கராஜன் முன்னாடி வந்தார்.

    "சார்... என் மனைவி, டேவிட்டோட அம்மா, தங்கச்சி மேரி, மொத்தம் மூணு பேருதானே அடிஷ்னலா வராங்க. காணாமப்போன பொண்ணு கிடைக்கணும்ன்ற பதட்டம் அவங்களுக்கு இருக்கிறது சகஜம்தானே சார்...!"

    அழகர் யோசித்தார், "சரி... வரட்டும்... ஆனா ஒன்னு எப்போ லேடிஸ்லாம் வேண்டாம்னு நான் சொல்றேனோ... அப்போ கிளம்பிடனும் புரிஞ்சதா..." என கண்டிப்பான குரலில் சொன்னார். அனைவரும் ஆமோதித்த மாதிரி தலையாட்டினர். அப்போது ஒரு கான்ஸ்டபிள் வேகமாய் நுழைந்தார். அழகர் 'என்ன' என்பதுபோல் பார்க்க, "சார்... அந்த திவ்யா பொண்ணை ஒரு 3 பேர் ஒரு ஊதா கலர் இன்னொவாவில் கடத்திப்போவதை பார்த்ததா... சாட்சி ஒருத்தர் வந்திருக்கார் சார்!"

    இன்ஸ்பெக்டர் அழகர் உட்பட, அனைவரும் அதிர்ச்சியாக, "யாருய்யா அது வர சொல்லு!" அழகர் சொல்லவும், உள்ளே நுழைந்தது ஒரு 18 வயது பையன். கூடவே ஒரு புதிய கான்ஸ்டபிள். அழகரின் புருவம் நிமிர்ந்தது.

    "நீங்க நம்ம ஸ்டேஷன் கான்ஸ்டபிள் கிடையாதே...?"

    "ஆமா... சார்... கூட்ரோடு சீமந்தபுரம் ஸ்டேஷன் சார்! இந்த பையன் ஊதா இன்னொவாவை பார்த்து இருக்கிறான். எங்க ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தான் பையனை இங்க நேர்ல அழைச்சுட்டு போக சொன்னாரு..."

    வந்த புது கான்ஸ்டபிள் கூறவும், அழகர் பார்வை பையனிடம் திரும்பியது.

    "தம்பி.. உன் பேரு என்ன?"

    "ராஜாராம் சார்...?"

    "சொல்லு... என்ன பார்த்த!"

    "சார்... நான் படுச்சுகிட்டே பார்ட்டைமா பேப்பர் போடுறேன் சார்... காலையில நாலு மணிக்கு கூட்டு ரோட்டுல பேப்பர் பார்சல் வரும். பிரிச்சு கொடுப்பாங்க... நான் சீமந்தபுரம் சுத்தி இருக்குற ஏரியாக்களுக்கு சைக்கிள்ல போயி, வீடு வீடாய், கடை கடையாய் பேப்பர் போடுவேன். அப்படி போட்டுக்கிட்டு வரப்போ ஒரு ஐஞ்சு மணி வாக்கில, சீமந்தபுரம் குறுக்கு ரோடு வழியா ஒரு ஊதா கலர் இன்னொவா போச்சு. உள்ள ஒரு பொண்ணு தூங்கிட்டிருந்தாங்க... கூட மூணு பேரு இருந்தாங்க..."

    இயக்குநர் A. ெவங்கடேஷ்


    "உனக்கு இத ஏன் போலீஸ்ல சொல்லணும்னு தோணுச்சு..." அழகர் மடக்கினார்.

    "சார்... நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கிறேன். பொண்ணுக்கும், கார்ல இருந்த தடியன்களுக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி பார்த்த உடனே தோணுச்சு... அப்புறம் ஊருக்குள்ள போலீஸ் விசாரிச்சப்போ சொன்னேன்.."

    அந்த பையன் ராஜாராம் தெளிவாக பேசினான்.

    "கார் நம்பர் நோட் பண்ணியா...?"

    "ஆமா சார்... சந்தேகப்பட்டதால நம்பர் பார்த்து வச்சேன்..."

    கூட வந்த கான்ஸ்டபிள் குறுக்கிட்டார். "சார்.. அந்த நம்பர எல்லா டோல்கேட், எல்லா ஸ்டேஷனுக்கும் கொடுத்து தகவல் சொல்லியாச்சு... காரை மடக்கின உடனே இன்பார்ம் வரும் சார்..."

    அழகர் பையனை கூர்மையாக பார்த்தார்.

    "தம்பி... அந்த பொண்ணை அவங்க கடத்துனாங்கன்னு எப்படி கணிச்ச...?"

    "சார்... பொண்ணு தூங்கும்போது, மத்த மூணு பேரும் பேசிட்டு போறப்போ... என்னை பார்த்த பார்வையும், கார் என்னை தாண்டி போன பிறகும், அவங்க என்னை திரும்பி பார்த்த பார்வையும் ஏதோ தப்பா தோணுச்சு சார்..."

    பையன் முதுகில் தட்டி கொடுத்தார் அழகர்.

    "இன்னிக்கு பசங்க எல்லாம் ரொம்ப எக்ஸ்பட்டா... தெளிவா இருக்காங்க... சரி... பையனை கூட்டிட்டு போங்க.."

    அழகர் சொல்லவும், வந்த கான்ஸ்டபிள் பையனை அழைத்துக் கொண்டு, டூவீலரில் ஏற்றி கொண்டு கிளம்ப தயாரானார். அப்போது, திடீரென்று டேவிட் ஓடி வந்து வண்டியை நிறுத்தினான். அழகர் உட்பட அனைவரும் பார்க்க, பையனிடம் டேவிட் கேட்டான்.

    "தம்பி... ராஜாராம்... அந்த வண்டியில நம்பர் தவிர வேறு ஏதாவது வித்தியாசமா பார்த்தியா...?"

    பையன் குழப்பமாய் பார்த்தான். டேவிட் மீண்டும் தெளிவாய் கேட்டான்.

    "அதான் தம்பி... முன்பக்கம் அல்லது காரோட பின்பக்கம், சைடுல.. ஏதாவது எழுத்து இல்ல… ஸ்டிக்கர் இப்படி…?"

    டேவிட் முடிக்கும் முன்பே பையன் குறுக்கிட்டான்.

    "ஆமா சார்... காரோட பின் கண்ணாடியில 'ரெண்டு கை குலுக்குற' மாதிரி ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது..."

    டேவிட் முகம் பிரகாசம் ஆனது. "சரி தம்பி... நீங்க போங்க..." கான்ஸ்டபிள் பையனோட திரும்பி போனார்.

    ஒரு நம்பிக்கையுடன், இன்ஸ்பெக்டர் அழகரிடம் வந்த டேவிட் சொன்னான்.

    "சார்... நிச்சயமா சொல்றேன். திவ்யாவோட அண்ணன் பெருமாளோட ஆளுங்கதான்... திவ்யாவை கடத்தியிருக்காங்க..."

    அழகர் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

    "எப்படி இவ்வளவு உறுதியா சொல்றிங்க...?"

    பெருமாளின் அப்பா ரங்கராஜன் கேட்டார்.

    "இல்ல மாமா... நான் திவ்யாவை கல்யாணம் பண்ண கூட்டிட்டு போனப்போ, பெருமாள் எங்களை பிடிக்க கார்ல துரத்திட்டு வந்தான்ல... அந்த கார்ல இந்த மாதிரி "கை குலுக்கிற" ஸ்டிக்கர் ஒட்டியிருந்துச்சு..."

    டேவிட் நண்பர்கள் "அதானே... இருந்துச்சுல்ல" என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    "அதனால்தான் சொல்றன்... அன்னிக்கு பெருமாளுக்கு யார் கார் கொடுத்து உதவுனாங்களோ, அவங்களோட கார்லதான் இன்னிக்கும் திவ்யாவை கடத்திட்டு போயிருக்காங்க..."

    "வெரிகுட்... எல்லோரும் கிளம்புங்க... நாம் உடனே கூட்டு ரோடு போயி, சம்பவ இடத்துல விசாரிச்சுட்டு அப்படியே எஸ்.பி ஆபிஸ் போலாம். அதுக்குள்ளே அந்த ஊதா இன்னோவாவ மடக்கிடுவாங்க. இல்லன்னா எஸ்.பி ஆபிஸ்ல பெருமாள் மேல சந்தேகம் இருப்பதா சொல்லி பெருமாள் எங்கிருந்தாலும் தூக்கலாம்.."

    இன்ஸ்பெக்டர் சொல்லி, கிளம்ப எத்தனிக்கவும் அந்த ஸ்டேஷனில் வந்து நின்றது, ஒரு வெள்ளை நிற கார். காரின் பின் கண்ணாடியில் "கை குலுக்கும்" ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. எல்லோரும் 'யார்?' என பார்க்க, காரில் இருந்து இறங்கினான் பெருமாள்!

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com /வாட்ஸப் 7299535353

    ×