என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- உங்களுடைய சிந்தித்தல் எவையும் தாமாக ஏற்பட்டதல்ல.
- சிந்திப்பீர்களேயானால் அதுதான் சிந்தித்தல் ஆகும்.
கணவன்-மனைவியான அவர்கள் இருவருமே டாக்டர்கள்.
அவர்கள் நம்மை சந்திக்க வரும்போது அவர்களுக்கு ஒரேயொரு குழந்தை. ஒன்றரை வயதில் அந்தக் குழந்தை இறந்து விட்டது.
அவர்கள் இருவருக்குமே அது ஆற்றமுடியாத துயரம்.
அந்தக் கணவர் கேட்டார்: "எங்கள் இருவருக்குமே இது சாதாரண துயரமல்ல. எங்களுக்கு இது தாங்கமுடியாத துயரம். ஆனாலும் நான் என்னை எப்படியோ நிலைநிறுத்திக்கொண்டு விட்டேன்...
"ஆனால் இவளால் மட்டும் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அதனையே எண்ணி எண்ணி, ஒருவகையில் மனநோயாளியாகவே மாறிவிட்டாள். இவளை எப்படி சகஜ நிலைக்குக் கொண்டு வருவது?"
அவர்களுக்கும் சிந்தனை என்றால் என்ன, சிந்தித்தல் என்றால் என்ன என்பதை எடுத்துக் கூற நேர்ந்தது.
"அம்மா! சிந்தனை என்றால் என்ன, சிந்தித்தல் என்றால் என்ன என்பதை மட்டும் சற்று வேறுபடுத்திப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தை இப்படி அகாலமாக இறந்தது எவ்வளவு பெரிய சோகம். அதனைச் சந்தித்த எவராவது நிம்மதியாக இருக்க முடியுமா? அது பற்றிய நினைவுகள் அலை அலையாக வந்த வண்ணமே தான் இருக்கும். அது தான் இயற்கை. எவருமே இதற்கு விதி விலக்கு கிடையாது...
"உங்களுக்கு ஏற்பட்ட சிந்தனைகளும், அதனால் உங்களுக்கு ஏற்பட்ட மனத்துயரமும் இயற்கையானதே. ஆனால் அப்படி வந்துவிட்ட சிந்தனைகள் மீது நீங்களாக ஏறி அமர்ந்து கொண்டு நீங்களாக ஏதாவது சிந்திப்பீர்களேயானால், அதுதான் செயற்கையானது.
நாம் இந்த மருந்தைக் கொடுத்ததற்குப் பதிலாக அந்த மருந்தைக் கொடுத்திருக்கலாமோ, நாம் நம்முடைய மருத்துவத்தை நம்பாமல் ஆரம்பத்திலேயே சீனியர் டாக்டர்களைக் கன்சல்ட் பண்ணியிருக்கலாமோ, எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றிய எங்களுக்கு இப்படி ஒரு கொடுமை ஏற்படலாமா என்று நீங்களே என்று சிந்திப்பீர்களேயானால் அதுதான் சிந்தித்தல் ஆகும்...
"எவ்வளவு தான் சிந்தனைகள் வந்தாலும் அவை அனைத்தும் தாமாகவே மறைந்துவிடும். மறைந்து கொண்டிருக்கும் சிந்தனைகள் மட்டுமே நமக்குத் தெரியும். அவற்றை அப்புறப்படுத்துவது சம்பந்தமான எந்த வேலையுமே நமக்குக் கிடையாது. சிந்தனைகள் அனைத்தும் பலமற்றவை. அவற்றால் நம்மை முடக்கிப் போட்டு விட முடியாது. ஆனால் நீங்களாக சிந்திக்கும் சிந்தித்தல் அனைத்தும் பலம் வாய்ந்தவை. சிந்தனைகள் எவையும் உங்களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை அனைத்தும் உங்களையும் மீறி உங்களையறியாமல் ஏற்பட்டவை. ஆனாலும் அவை அனைத்தும் பலமற்றவையே. தாமாக ஏற்பட்ட சிந்தனைகள் யாவும் தாமாகவே மறைந்துவிடும்...
"உங்களுடைய சிந்தித்தல் எவையும் தாமாக ஏற்பட்டதல்ல. நாமாகவே அவற்றைக் கொண்டு வந்துள்ளோம். நாமாகக் கொண்டு வந்து நாமாகவே அவற்றை பராமரித்துக் கொண்டிருக்கிறோம் . நாம் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் அவற்றில் இருந்து விலகிக் கொள்ளலாம்"
-இவ்வாறு அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
அவர்களும் அதனைப் புரிந்து கொண்டு அவர்களது பிரச்சனையில் இருந்து விடுபட்டார்கள். அந்த நாட்டு மன்னருக்கு ஒரு பிரச்சனை. அவர் இளவரசனாக இருந்த போது பக்கத்து நாட்டு இளவரசிக்கும் அவருக்குமிடையே காதல் ஏற்பட்டிருந்தது. அவர்களின் திருமணத்துக்கு இளவரசியின் தந்தை சம்மதிக்கவில்லை. தந்தையின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அது முதல் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக நேசித்து வந்தனர்.

ஸ்ரீ பகவத்
இளவரசனாக இருந்த அவர் மன்னராக பொறுப்பேற்று நல்லாட்சி நடத்தி வந்தார்.
அந்த நிலையில் அவர் மனைவியான அரசி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். மனக்கவலையில் பரிதவித்துக் கொண்டிருந்த அவருக்கு மனச்சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவரது மந்திரி அவரை வேட்டையாட அழைத்துச் சென்றார்.
அவர்கள் இருவரும் வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அரண்மனையில் இருந்த அரசி மரணமடைந்து விட்டார்.
காதல் மனைவியை இழந்த அரசர் பரிதவித்துப் போனார்.
"வேட்டைக்குப் போகாமல் பக்கத்தில் இருந்திருந்தால் எப்படியாவது காப்பாற்றி இருப்பேனே" என்று குமுறிக் கொண்டிருந்தார்
சதா காலமும் மனைவியின் நினைவாகவே இருந்த அவரால் நிம்மதியாக சாப்பிடவும் முடியவில்லை, தூங்கவும் முடியவில்லை. மனைவியின் நினைவே அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அவருடைய மனக்கவலையை தீர்த்து வைக்கக்கூடிய மருத்துவரைத் தேடி வந்தனர். பல மருத்துவர்கள் வந்து மருந்து கொடுத்தும் அவருடைய மனக்கவலை தீர்ந்த பாடில்லை. அதனால் அவருக்கு மருத்துவர்கள் மீதே கோபம் வந்துவிட்டது. அதனால் அவர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார்: "எந்த மருத்துவராவது மருந்து கொடுத்து எனது மனக்கவலை நீங்கவில்லை என்றால் மருந்து கொடுத்த மருத்துவரின் தலையைக் கொய்து விடுவேன். அவருடைய மருந்தினால் என்னுடைய மனக்கவலை நீங்கிவிட்டால், இந்த ராஜ்ஜியத்தில் பாதியையே அவருக்குக் கொடுத்து விடுவேன்."
இந்த அறிவிப்புக்குப் பிறகு எவருமே அவருக்கு மருத்துவம் பார்க்கத் துணியவில்லை.
அந்த நிலையில் அவர் மீது பரிதாபம் கொண்ட ஞானி ஒருவர் தன்னை மருத்துவர் என கூறிக் கொண்டு மருந்து கொடுக்க முன்வந்தார்.
அரசர் அவரையும், "நிபந்தனை தெரியுமல்லவா?" என்று கேட்டு மிரட்டினார்.
அந்த ஞானியும், "நன்றாகவே தெரியும்!" என்று சொல்லி மருந்து பாட்டிலை மன்னரிடம் கொடுத்தார்.
அதனை வாங்கிக் கொண்ட மன்னரும், மருந்தைச் சாப்பிட பத்தியம் ஏதாவது உண்டா என்று கேட்டார்.
அதற்கு அந்த ஞானியும், " பெரிய பத்தியம் ஒன்றும் இல்லை. இந்த மருந்தைச் சாப்பிடும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக்கூடாது! மூன்று நாட்கள் மட்டும் இந்த மருந்தைச் சாப்பிட்டால் போதும் " என்று கூறினார்.
அரசரும், "இது ஒரு பத்தியமா? குரங்கை நினைக்கும் பழக்கமே எனக்குக் கிடையாது. மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாம் சந்திப்போம்" என்று கூறி மருந்தை வாங்கிக் கொண்டார்.
மறுநாள் காலையில் அரசர் மருந்தைச் சாப்பிடுவதற்காக பாட்டிலை எடுத்தார்.
"மருந்தைச் சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்று மருத்துவர் சொன்னாரே" என்று அவரை அறியாமலேயே குரங்கை நினைத்து விட்டார்.
அதனால் அன்று அவரால் மருந்தை எடுக்க முடியாமல் போய்விட்டது. எப்படி மருந்தை எடுப்பது என்பது அவருக்குப் புரியவில்லை. தன்னுடைய மதிமந்திரியிடம் ஆலோசனை கேட்டார்.
மந்திரியும் ஆலோசனை வழங்கினார்:
"அரசே நான் மனோவியல் சம்பந்தமான பல்வேறு நூல்களைப் பயின்றுள்ளேன்.
நமக்கு ஒரு சமயத்தில் ஒரே ஒரு சிந்தனைதான் ஏற்படும் என்று கூறியுள்ளனர். குரங்குகளின் நினைவு வருவதற்கு முன்பே நீங்களாக ஒரு யானையைப் பற்றி நினைத்துக் கொள்ளுங்கள். குரங்கின் நினைவு வராமலேயே போய்விடும்"
அரசருக்கு அந்த ஆலோசனை மிகவும் பிடித்துப்போனது. அதனால் அவர் அடுத்த முறை மருந்தை எடுக்கும் போது குரங்குக்குப் பதிலாக பட்டத்து யானையை நினைத்துக் கொண்டார். ஆனால் என்ன ஆச்சரியம், அவருடைய நினைவில் அந்த யானையானது யானையளவு பெரிய குரங்காக மாறிவிட்டது.
அதன்பிறகு எப்போது மருந்து பாட்டிலைத் தொட்டாலும் யானையளவில் உள்ள குரங்குகளே தோன்ற ஆரம்பித்தன.
இப்படி ஒவ்வொரு நாளும் அவர் மருந்தை எடுக்கும் போதெல்லாம் அவரை அறியாமலேயே குரங்கின் நினைவுகளே வந்துவிட்டன. மூன்று நாட்கள் ஆகியும் ஒரு முறை கூட அவரால் மருந்தை எடுக்க முடியவில்லை.
நான்காவது நாளில் மருத்துவராக வந்திருந்த அந்த ஞானியே அவரைத் தேடி வந்துவிட்டார்.
"அரசே! மருந்தைச் சாப்பிட்டீர்களா? உங்களுடைய நோய் மறைந்து விட்டதா?" என்று கேட்டார். அரசருக்கு கோபம்தான் ஏற்பட்டது.
"வைத்தியரே, நீர் ஒரு மோசடியான எண்ணத்துடன் வந்திருக்கிறீர். குரங்கை நினைக்கும் பழக்கமே எனக்குக் கிடையாது. நினைக்கக் கூடாது என்று சொல்லி என்னை நினைக்க வைத்துவிட்டீர். நீர் எதுவுமே சொல்லாமல் கொடுத்திருந்தால் நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப் போகிறேன்?" என்று கேட்டார்.
"குரங்கை நினைக்காமல் மருந்தை எடுப்பது எப்படி என்று என்னிடம் கேட்டிருந்தால் நான் சொல்லிக் கொடுத்திருப்பேனே!" என்றார் அந்த ஞானி. அரசரும் மருந்தை எடுத்துவந்தவாறே,
"பார்த்தீரா! மருந்து பாட்டிலை எடுக்கவும், நான் கூப்பிடாமலேயே குரங்கின் நினைவு வந்துவிட்டது" என்று கூறினார்.
ஞானி கேட்டார்: "குரங்கின் நினைவு அதுவாக வந்ததா அல்லது நீங்களாக நினைத்தீர்களா?"
"நானாக ஏன் நினைக்கிறேன், அதுவாக அல்லவா வந்துள்ளது" என்று மன்னர் கூறினார். "நீங்களாக தான் குரங்கை நினைக்கக் கூடாது என்று கூறினேனே தவிர, குரங்கைப் பற்றிய நினைவுகள் எதுவாகவும் வரக்கூடாது என்று நான் கூறவில்லையே" என்று கூறி அந்த ஞானி, சிந்தனைக்கும் சிந்தித்தலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக் கூறி புரிய வைத்தார்.
சிந்தனைக்கும் சிந்தித்தலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்ட அரசர் தனது மனக்கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டார்.
மருத்துவராக வந்தவர் மகா ஞானி என்பதையும் புரிந்து கொண்டு அவரையும் நமஸ்கரித்து அவருடைய நல்லாசிகளையும் பெற்றார்.
தொடர்புக்கு - sribagavathji@gmail.com
- உலகில் ஒவ்வொரு நொடியும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- ஞானமே நமக்கு நம்பகமான காவல்.
'நம்பகத்தன்மை இல்லாத ஒரு மனிதன் முற்றிலும் பயனற்றவன்.'
-கன்பூசியஸ்
தினந்தோறும் நம்மைச் சுற்றிலும் பல
விசித்திரமான காரியங்கள் நடத்து கொண்டே தான் இருக்கின்றன. வேடிக்கையாகவும் இருக்கும்; சில விஷயங்கள் வலிகளாகவும் இருக்கும். அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது.
நம் எதிரில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்; நமக்கு முன்னும் பின்னும் யார்யார் நடக்கிறார்கள்; அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள முடியுமெனில், நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், நம் நிலைமை அப்படியா இருக்கிறது!
முகபாவம் முயல்போல் இருக்கும்; உள்ளே பயங்கரமான மிருகம் விழித்துக் கொண்டிருக்கும். சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். தோள்மீது கைபோட்டுத் தோழமை பாராட்டுவார்கள். திடீரென்று வேறுவிதமாக மாறிவிடுவார்கள். நமக்கு எதிராகச் செயல்படுவார்கள். ஏன் என்றே நமக்குத் தெரியாது.
இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எங்கே சென்றாலும் யாருடன் நின்றாலும், நம்மை நாமே காத்துக் கொள்வதற்கான ஞானம் அவசியம். அந்த ஞானமே நமக்கு நம்பகமான காவல்.
மனித சமூகத்தில் மனித நேயத்தைவிட, சுயநலம்தான் உச்சந்தலையில் ஏறி நிற்கின்றது. அது ஒரு போதை. சுயநலம் கண்களை மறைக்கும்போது, நம்பிக்கைத் துரோகங்கள் சகஜமாகிவிடுகின்றன.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நான்கு நண்பர்கள் இணைந்து ஓர்
இலக்கிய அமைப்பை உருவாக்கினோம். அதன்மூலம் கவியரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவுகள் எனப் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவோம்.
உள்ளூர்க் கல்வி நிறுவனங்களில் மட்டுமன்றி, வெளியூர்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம். எனவே, அவ்வப்போது வெளியூர்களுக்குச் சென்றுவருவதும் உண்டு. சென்ற இடங்களில் எல்லாம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். எழுதுவதிலும் பேசுவதிலும் எனக்கிருந்த ஆர்வம், இலக்கிய நிகழ்ச்சிகளில் என்னை அதீத ஈடுபாடு கொள்ளச் செய்தது.
ஒருமுறை எங்கள் இலக்கிய அமைப்பின் சார்பில், தூத்துக்குடியில் சில இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவரச் சென்றிருந்தேன். அங்கே எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு நண்பன். பேருந்து நிலையத்திற்கு வந்து, என்னை அன்புடன் அழைத்துச் சென்றான். அவனின் சக மாணவர்கள் உட்பட, அங்குள்ள மற்ற கல்லூரி மாணவர்களும் அந்த நண்பன் மூலம் எனக்கு நல்ல அறிமுகம்.
அன்று முழுக்க பல இடங்களுக்கு அவன் என்னை அழைத்துச் சென்றான். திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முடிந்தது. அன்று மதிய உணவு என் உறவினரின் வீட்டில். நண்பனும் உடனிருந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்தபின் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு, நெல்லை திரும்புவதற்காக கிளம்பினேன்.
என்னை வழியனுப்பிவைக்கப் பேருந்து நிலையம் வரை அந்த நண்பன் வந்தான். ஆட்டோவில் சென்று இறங்கினோம். என் கைவிரல்களைப் பற்றிப் பிடித்தபடியே நடந்தான். பேருந்து கிளம்புவதற்கு அரைமணி நேரம் இருந்தது. கண்டக்டர் வெளியே நின்று டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் டிக்கெட் வாங்குவதற்குக் கையை நீட்டியபோதுதான் எனக்குப் பகீரென்றது. மனம் படபடத்தது. என் வலது கைவிரலில் போட்டிருந்த மோதிரத்தைக் காணவில்லை.

கவிஞர் தியாரூ
நான் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு வந்ததும், என் பெற்றோர் அன்புடன் எனக்கு அணிவித்த மோதிரம். ஒரு சவரன். அழகிய டிசைன். அதைப் பார்த்துப் பார்த்து நானே ரசிப்பதுண்டு. சில நிமிடங்களுக்கு முன்பு வரை என் விரலில் இருந்த அந்த மோதிரம், இப்போது இல்லை என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் பதற்றத்தையும் படபடப்பையும் என் நண்பன் கவனித்தான்.
'என்னாச்சுடா?'
'என் மோதிரத்தைக் காணலியே!'
'நீ போட்டிருந்தியா?'
'என்னடா இப்படி கேக்குறே... எங்க போச்சுதோ தெரியலியே...'
'நல்லா யோசிச்சிப் பாரு...வேற எங்கேயாவது...'
'இல்ல... மோதிரத்தை நான் கழற்றினதே கிடையாது. ஆட்டோவில் வரும்போதுகூட பார்த்தேனே. அதுக்குள்ள எப்படி...மர்மமா இருக்குதே...' - தளர்ந்துபோய் பக்கத்தில் இருந்த சிமென்ட் திண்டில் உட்கார்ந்தேன்.
ஓடிப்போய் காபி வாங்கிக்கொண்டு வந்து தந்தான். எனக்குக் குடிக்க மனமில்லை. அப்படியே வைத்துவிட்டேன்.
'சரிடா, இங்க நின்னு என்ன பண்றது? நீ ஊருக்குக் கிளம்பு. எனக்கு முக்கிய வேலை இருக்கு. அப்புறம் ஊருக்கு வந்து உன்னை பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
மனபாரத்தோடு ஊர்போய்ச் சேர்ந்தேன். இரண்டொரு வாரம் கழித்து, இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி சென்றேன். அந்த நண்பன் என்னைச் சந்திக்க வரவில்லை. நிகழ்ச்சியை முடித்தபின் மற்றொரு நண்பனிடம், அவனை விசாரித்தேன்.
'அவனுக்கு எல்லா பிரண்ட்ஸ்கிட்டேயும் கடன். என்கிட்ட வாங்கின பணத்தை ஒரு வருஷமா திருப்பிக் கொடுக்கலே. அழுத்திக் கேட்டப்பிறகு போன வாரம்தான், ஒரு மோதிரத்தை வித்துப் பாதி கடனை கொடுத்தான்' என்றான்.
மோதிரத்தைத் தவறவிட்ட வலியைவிட, இவன் சொன்ன தகவல் எனக்குள் அதிக வலியை ஏற்படுத்தியது. அன்று என் விரல்களைப் பற்றிப் பிடித்தபடி நடந்தவன், என் மோதிரத்தை லாவகமாக உருவிச்சென்றதை அப்போதுதான் என்னால் உணர முடிந்தது. அதன்பின் எத்தனையோ ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனும் என்னைச் சந்திக்கவில்லை. நானும் அவனைப் பார்க்க விரும்பவில்லை.
நாம் மேலோட்டமாகவே பார்க்கிறோம். ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் 'இன்னொருவர்' இருக்கிறார். உள்ளிருக்கும் அந்த நபர் எப்படிப் பட்டவர் என்பதுதான் நமக்குத் தெரிவதில்லை.
நயவஞ்சகப் பண்புதான் கொடிய விஷம். அப்படிப்பட்டவர்கள் நல்லவர்கள்போல் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு அதிக பிரயத்தனம் செய்வார்கள். செயற்கைத்தனமாகச் சிரிப்பார்கள். அக்கறைப்படுபவர்போல் பேசுவார்கள். அவையெல்லாம் அவர்களின் இயல்புக்கு முரணானவையாகவே இருக்கும்.
எந்த மிருகத்திடமும் நாம் தாராளமாகப் பழகலாம். அது அன்பிற்குக் கட்டுப்படும். ஆனால், நயவஞ்சகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிஜமுகம் எது, முகமூடி அணிந்த முகம் எது என்பதைக் கண்டறிவதுதான் மிகப்பெரிய சவால்.
ஒருவன் அவனுடைய வார்த்தைகளில் இருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.
ஏதோ ஒன்றிரண்டு முறை அப்படி நடந்தால், அதைப் பெரிது படுத்தாமல் விட்டுவிடலாம். ஆனால், அதையே ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தால் அவன் 'நயவஞ்சகன்'. கபட நாடகம்தான் அவன் வாழ்க்கை.
அத்தகைய அரிதார மனிதர்களை நாம் பார்க்கத்தானே செய்கின்றோம். ஒட்டி உறவாடத் தான் வருவார்கள். அவர்களின் நட்பை நாம் ஏற்றுக்கொண்டால், நம் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை நிச்சயமாகவே நாம் சந்திக்க நேரிடும். உடனடியாக விலகவில்லை என்றால், நம் தயவுதாட்சண்யம் நம்மையே படுகுழிக்குள் தள்ளிவிடும்.
நேர்மை இல்லாதவர்கள் எதிலும் உண்மையாய் இருக்க மாட்டார்கள். உண்மை இல்லாதவர்கள் எதிலும் உறுதியாய் நிற்க மாட்டார்கள். அவஸ்தை அவர்களுக்கல்ல; அவர்களை நம்பியவர்களுக்குதான்.
சிலர் தங்கள் வாழ்க்கையில் இழப்புகளைச் சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களைக்
கேட்டுப் பாருங்கள். அவர்களின் இழப்புகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பெரும்பாலும் மற்றவர்களின் நம்பிக்கைத் துரோகங்களே காரணமாக இருக்கும்.
தென்னைக்கு நீர்வார்த்தால் அது தேங்காயைத் தரும் என்பது நமக்குத் தெரியும். தெருவில் திரிகின்ற நாய்க்குக் கொஞ்சம் சோறு போட்டால், அது நம்மையே கோவிலாகக் கருதி வாசற்படியில் காத்துக்கிடக்கும். நன்மைக்கு நன்மை என்பது இயற்கையின் விதி. ஆனால், இந்த விதி மனிதனுக்கு மட்டும் பொருந்தாது.
எவ்வளவுதான் நல்லது செய்யுங்கள்; சிலருக்கு நன்றியே இருக்காது. பெற்றுக்
கொண்டவைகளை எல்லாம் மறந்துவிடுவார்கள்; இல்லையென்றாலும், அவற்றைப் பற்றிப் பெரிதாகப் பேச மாட்டார்கள். உங்களைத் தள்ளிவிட வகை தேடுவார்களே அன்றி, வழங்கிய கைகளை வாழ்த்துவதற்கு அவர்களுக்கு மனம் வராது.
நண்பர்களை மிகப்பெரிதாகக் கருதி, அவர்களின் வாக்குறுதிகளை நம்பி நஷ்டமடைந்த
தவர்கள் உண்டு. காரணம் என்ன? ஒரு தரப்பின் நம்பிக்கை; மறுதரப்பின் நம்பிக்கைத் துரோகம்.
அறிந்தோ அறியாமலோ சில சமயங்களில் நாம் தவறு செய்துவிடுகின்றோம். நம்பக்கூடாதவர்களை எளிதில் நம்பிவிடுகின்றோம். அதுதான் பலருடைய வாழ்வின் போக்கையே மாற்றிவிடுகின்றது. கடின உழைப்பினால் தொழிலில் படிப்படியாக முன்னேறியவன், ஒரு கட்டத்தில் விறுவிறு என்று வீழ்ச்சி அடைகின்றான்.
காரணம் கேட்டால், 'ஒருவன் சொன்ன வார்த்தைகளை நம்பி, புதிய தொழிலில் பல லட்சங்களை முதலீடு செய்தேன். அவன் என்னை ஏமாற்றிவிட்டான்' என்கிறான்.
இன்றைய இளைய தலைமுனையினர் அறிவு பெருத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். நிறைய சம்பாதிக்கிறார்கள். எனினும், வாழ்க்கையில் பலர் தடுமாறுகிறார்கள். எதையும் சரியாகத் தீர்மானிக்கத் தெரியாமல் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.
லட்ச லட்சமாய் சம்பாதித்து என்ன பயன்! காசு பணம் ஒருபோதும் மனநிறைவைத் தருவதில்லை. செல்வச் செழிப்பினால் வாழ்க்கை பாதுகாக்கப்படுவதில்லை. ஞானம்தான் முக்கியம். அதுதான் நம் வாழ்வுக்கு வேலி. ஞானத்தினால் மட்டுமே நல்லது கெட்டது நாம் உணர முடியும். நல்லவர்கள் யார் நயவஞ்சகர்கள் யார் என்பதை முதலிலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியும். வாழ்வின் பாதுகாப்பு என்பது, நாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வதில்தான் இருக்கிறது.
ஓர் இளைஞனுக்குச் சில நாட்களாக மிகுந்த மன உளைச்சல். காரணம் என்ன என்றே அவனுக்குப் புரியவில்லை. படிப்பில் கவனமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதிலும் நாட்டமில்லை. பெற்றோரிடத்தில் சொல்வதற்கும் தயக்கம்.
அப்போது, தற்செயலாக ஒரு யோகியைப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அவரிடம் தனது மன உளைச்சலைச் சொன்னான். யோகி அவனை உற்றுப் பார்த்தார்.
'சமீபத்தில் ஏதாவது தவறு செய்தாயா?' என்று கேட்டார்.
'இல்லை ஐயா!' என்றான் பணிவுடன்.
நன்றாக யோசித்துப்பார். யாரிடமாவது பொய் சொன்னாயா?'
'வேறு யாரிடமும் சொல்லவில்லை. என் அம்மாவிடம் மட்டும் ஒரு சிறிய பொய் சொன்னேன்'.
'என்ன பொய்?'
'போன வாரம் என் அம்மாவின் பிறந்தநாள். அதற்காக என்னிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து, கோவிலுக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஏழைகளுக்குத் தா்மம் செய்துவிடு' என்றார்கள். எங்கள் காலேஜ் டூர் செலவுக்காக அந்தப் பணத்தை நான் வைத்துக்கொண்டு, தர்மம் செய்துவிட்டதாக அம்மாவிடம் சொல்லிவிட்டேன். வேறெந்தத் தவறும் செய்யவில்லை' என்றான்.
'உன் தாய் உன் வார்த்தையை நம்பிவிட்டாள். அப்படியெனில், நீ செய்தது நம்பிக்கைத் துரோகம் அல்லவா. அது மிகப்பெரிய பாவம். இன்றே அதைத் தர்மம் செய்துவிடு. உன் பிரச்சனை தீர்ந்துவிடும்' என்றார். அவன் தெளிவடைந்தான்.
நம்பிக்கைத் துரோகத்தைப்போல் கொடிய பாவம் வேறொன்று இல்லை. நம்பிக்கைக்கு உரியவர்களாய் நாம் வாழ்வதும், நம்பிக்கைக்கு உரியவர்களை நாடிச் சேர்வதுமே நமக்குப் பெருமை. அதுதானே வாழ்வின் சிறப்பு.
போன்: 9940056332
- உண்மையில் எம்ஜிஆர் இதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி இருக்க வேண்டும்.
- எல்லா மக்கள் மனங்களிலும் இந்தக் கேள்வி ஆழமாய்ப் பதிந்தது.
இரண்டு வரிகளில் இப்படிச் சொல்லலாம் -
அவர் மக்களை நம்பினார்; அவரை மக்கள் நம்பினர்.
1980இல் எம்ஜிஆர் ஆட்சி அநியாயமாகக் கலைக்கப் பட்டது. காழ்ப்புணர்ச்சி தவிர்த்து வேறு காரணம் எதுவும் இல்லை. தில்லியில் தமக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எம்ஜிஆர் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்.
உண்மையில் எம்ஜிஆர் இதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள்.. 'மீண்டும் தேர்தல் நடத்தித் தானே ஆக வேண்டும்..? அப்போது பார்த்துக் கொள்ளலாம்..' என்று தீர்மானமாக இருந்தார்.
சில மாதங்களில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது கூட எம்ஜிஆர் ஆவேசமாக எதுவும் பேசவில்லை. மிகவும் நயமாக மிகவும் நாகரிகமாக பிரச்சாரத்தை மேற்கொண்ட எம்ஜிஆர், தான் சென்ற இடங்களில் எல்லாம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் முன் வைத்தார் - 'நான் என்ன தவறு செய்தேன்..?'

இது மட்டுமே போதுமானதாய் இருந்தது. எல்லா மக்கள் மனங்களிலும் இந்தக் கேள்வி ஆழமாய்ப் பதிந்தது.
'அதானே..? எதுக்காவ கலைச்சாங்க..?' என்று மக்கள் மத்தியில் இருந்து கேள்வி எழுந்தது.
இந்த ஒற்றைக் கேள்வி, அந்தப் பொதுத் தேர்தல் முடிவை நிர்ணயம் செய்தது.
முன்பை விட அதிக இடங்கள் வெற்றி பெற்று எம் ஜி ஆர் மீண்டும் முதல்வர் ஆனார். இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்தக் கணமே ஆட்சிக் கலைப்பு பற்றிய எண்ணத்தை, பேச்சை முற்றிலுமாக அகற்றி விட்டார்.
எதுவுமே நடக்காதது போல இயல்பாக அரசியல், இயல்பாக ஆட்சி நடத்தினார். இதுதான்- எம்ஜிஆர்.

மக்களாட்சித் தத்துவத்தில் முழு நம்பிக்கை கொண்டிருந்த மகத்தான தலைவர் எம்ஜிஆர்.
இன்று அவர் மீது நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சனம் வைக்கிற யாரும், எம்ஜிஆருக்கு இருந்த அபரிமிதமான மக்கள் ஆதரவுக்கான காரணம் அறியாதவர்கள். அவரிடம் குறைகள் இருக்கலாம்; அவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கலாம். ஆனால் மக்கள் மீது அவர் வைத்திருந்த உண்மையான பாசம், கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.
எல்லாருக்கும் தெரிந்ததுதான்- 1977இல் தான் முதல்வராக பொறுப்பு ஏற்ற உடன் எம்ஜிஆர் பிறப்பித்த முதல் உத்தரவு- 'சைக்கிளில் 'டபுள்ஸ்' செல்லலாம்!'
யோசித்துப் பாருங்களேன்... ஆபத்து இல்லாத சிக்கனமான ஏழைகளின் வாகனம் சைக்கிள். அதில் 'டபுள்ஸ்' (இருவர்) செல்வதை சட்டம் அனுமதிக்கவில்லை; மீறிச் சென்றால் அபராதம். அது ஆங்கிலேயர் காலத்துச் சட்டம். ஆனால் சுதந்திரம் கிடைத்து 30 ஆண்டுகள் கழித்து 1977இல் எம்ஜிஆர் வந்துதான் இந்த சட்டத்தை ரத்து செய்தார்.
தான் முதல்வராக இருந்தவரை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொண்டார்;
சின்னஞ்சிறு ஊர்களுக்கும் 'டவுன் பஸ்' அறிமுகப்படுத்தினார்; ரேஷன் கடையில் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்தார்; பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கி அவர்களைப் பள்ளிக்கு 'அழைத்து வந்தார்'; எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு பொறியியல் உள்ளிட்ட 'தொழில்முறை' படிப்புகளை எல்லாருக்கும் திறந்து வைத்தார். 'ஊருக்குள் செருப்பு அணிந்து வரக் கூடாது' என்கிற சமூகக் கொடுமை நிலவிய காலத்தில், ஏழைக் குழந்தைகளுக்கு அரசு மூலம் இலவச காலணி தந்து, அவர்களின் உரிமையை வெகு ஆழமாகக் கொண்டு சேர்த்தார்.
ஊராட்சி நிர்வாகத்தில், 'மணியம்' 'கர்ணம்' என்று இருந்த பரம்பரைப் பதவிகளை ஒழித்தார். அந்த இடத்தில், கிராம நிர்வாக அலுவலர் என்கிற அரசுப் பணியைக் கொண்டு வந்தார்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
முன்னர், மணியம் கரணம் முன்பாகக் கைகட்டி நின்ற மக்களின் புதல்வர்களை புதல்விகளை, அதே பதவியில், கிராம நிர்வாக அலுவலர் என்கிற அரசுப் பணியில் அமர வைத்து அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார். இதற்கு இணையான சமூக நீதி நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியுமா..?
எம்ஜிஆர் பின்பற்றியது- மோதல் அரசியல் அல்ல; ஒரு 'மாடல்' அரசியல்.
தேர்தல் கால அரசியலை அரசின் நடவடிக்கைகளில் நுழைக்க முயற்சித்ததே இல்லை. இலவச சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்பட, மத்திய தொகுப்பில் இருந்து பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்த எம்ஜிஆர், தானே நேரடியாக தில்லிக்கு சென்று மத்திய உணவுத் துறை அதிகாரிகளிடம் பேசி தேவையான உதவியைப் பெற்று வந்தார். 'என் மக்களுக்காகக் கையேந்துவதை நான் அவமானமாகக் கருதவில்லை' என்று வெளிப்படையாக அறிவிக்கும் துணிச்சல் பெற்று இருந்தார்.
மத்திய மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'எம்ஜிஆர் மாடல்' - ஒரு சிறந்த உதாரணம். கண்மூடி ஆதரவு/கண்மூடி எதிர்ப்பு அவரிடம் இருந்ததே இல்லை.
தமிழகத்துக்கு என்ன வேண்டும்; அதனை மத்திய அரசிடம் இருந்து எவ்வாறு பெற வேண்டும்; எங்கே விட்டுத் தர வேண்டும், எங்கே கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்பதை எம்ஜிஆர் நன்கு அறிந்து வைத்து இருந்தார்.
அரசியல் வேறு; அரசு வேறு என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்.
தனது அரசியல் வரலாற்றில் ஒரு முறை கூட, தப்பித் தவறியும், சாதி மதம் மொழி என்று எந்தப் பாகுபாட்டையும் அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் பயன்படுத்தியதே இல்லை. எல்லா மக்களையும் ஒன்றுபோல் பாவித்தார்; எல்லாரையும் ஒன்றுபோல் நேசித்தார்.
அவருக்கு எதிரான பேச்சுகளை எதிர்க்கட்சி முன்வைத்த போதும், அவர்களுக்கு எதிராக, தனிநபர் விமர்சனங்களை எம்ஜிஆர் ஒருபோதும் முன்னெடுத்ததே இல்லை.
ஏளனம் அவமானம் எதிர்ப்பு... அனைத்தையும் ஒரு புன்சிரிப்புடன் கடந்து சென்றார்.
எம்ஜிஆர் மறைந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதி வைத்த உயில் பத்திரத்தைக் காண நேர்ந்தது. ஒருகணம், கண்கள் இமைக்க மறுத்தன. 'அப்ப்ப்பா.. என்ன இது?
புகழின் உச்சியில் இருந்த, அதிகாரம் மிக்க ஒரு திரைப்பட நாயகன், பத்தாண்டு காலம் தமிழக முதல்வர்...
அவரிடம் இருந்த சொத்துகள்! நேர்மையான ஓர் அரசு அலுவலருக்கு எவ்வளவு இருக்கக் கூடுமோ அவ்வளவே அவரிடம் இருந்தது. அதையும் தானம் தந்து விட்டுத் தானும் மறைந்து போனார்! இதுதான் அவரின் பொது வாழ்க்கை சரித்திரம்.
எம்ஜிஆர் - மதுவை ஏற்காத, வன்முறைக்கு எதிரான, காந்தியத்தில் நம்பிக்கை கொண்ட பொதுவுடமைவாதி. எம்ஜிஆர் - கடின உழைப்பின் அடையாளம்.
எம்ஜிஆர் - கலையின் மகத்துவம் அறிந்த கதாநாயகன்.
எம்ஜிஆர் - பொதுமக்கள் நலன் காத்த முதல்வர்.
அனைத்தையும் விட,
எம்ஜிஆர் - மக்களை மறக்காத, மக்கள் மறக்காத ஒரு மாபெரும்....மக்கள் திலகம்!
- கலைகள் எல்லாமே ஒரு சமூகத்தின் பண்பாட்டை குறிப்பதாகவே இருந்திருக்கின்றன.
- காணும் பொங்கலன்று உற்ற உறவுகளை போற்றி மகிழ்கிறோம். அவர்களை கண்டு அன்பை பகிர்ந்துகொள்கிறோம்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை நாம் களிப்புடன் கொண்டாடி மகிழ்ந்தோம். தமிழர்களின் பாரம்பரியமான
போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் திருநாளை காலங்காலமாக நாம் கொண்டாடி வருகிறோம். இன்று உறவுகளை கொண்டாடி மகிழும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் பெருமையும் மேன்மையும் அது கொண்டிருக்கும் நீண்ட நெடிய பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் அது போற்றும் கலைகளை வைத்தே அளவீடு செய்யப்படுகிறது. வெறும் பொருளாதார கூறுகளை வைத்து மட்டுமே கணக்கிடப்படுவதில்லை. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அதனை மீறியும் அந்நாடு கொண்டிருக்கும் நம்பிக்கைகள், கொண்டாடும் விழுமியங்கள், அதன் தொலைநோக்கு பார்வை, இலக்குகள் போன்றவை மறைமுக ஆனால் சக்திவாய்ந்த காரணிகளாக திகழ்கின்றன. இவை எல்லாமே அந்நாடு பின்பற்றும் பண்பாட்டு நெறியை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் அதன் உயரம் அளக்கப்படுவதும் இதை வைத்து தான்.
அத்தகைய கலைகள் மற்றும் பண்பாடு பற்றி நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதனாலேயே கலை மற்றும் பண்பாட்டை போற்றி காக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் மாநில, தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் நிறுவப்பட்டிருக்கிறது.

ஜனவரி 12 அன்று தேசிய இளைஞர் தினம். அன்றைய தினம் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நாம் இளைஞர் தினமாக கடைபிடிக்கிறோம். அதனை முன்னிட்டு மத்திய இளைஞர் விவகாரங்கள் துறை சார்பாக பிரம்மாண்டமான ஒரு நிகழ்வு புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3000 இளைஞர்களிடையே பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கும் ஆளுமைகள் கலந்துரையாடினார்கள். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி எடுக்க வேண்டிய மிக முக்கியமான முன்னெடுப்புகள் குறித்து அவர்கள் பேசினார்கள்.
அவற்றுள் பிரபல மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா பேசிய "பணி நேரம்" தொடர்பான சில கருத்துக்கள் ஊடகங்களில் விவாத பொருளாக வலம் வருகின்றன. அதற்கு அப்பாற்பட்டு அவர் கூறிய சில கருத்துகள் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியவை.
நம் கலை மற்றும் பண்பாடு பற்றிய புரிதல் தான் ஒருவருக்கு ஆழமான, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது என்று அவர் கூறினார். அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முழுமையான சிந்தனை தேவைப்படுகிறது. சிந்தனை எப்போது முழுமை அடைகிறது? அறிவை தெளிவாக்கி, சரியான முடிவுகளை எடுக்க உதவி செய்வது எது? பல்வேறு தரப்பட்ட ஆதாரங்களை திரட்டியும், உலக நடையை உணர்ந்தும், தன் சுற்றத்தை கூர்ந்து கவனித்தும், அன்றாடம் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் ஒருவரால் சிந்திக்க முடிகிறது என்றால் அதுவே முழுமையான சிந்தனை. இப்படி நம்மை சிந்திக்கப் வைப்பதற்கு தான் நம் கலைகளும் பண்பாடும் தேவையான உந்துதலை தருகின்றன. அப்படிப்பட்ட சிந்தை உள்ளவர்களால் தான் முன்னேற்றத்தை நோக்கி தானும் பயணித்து, நாட்டையும் அவ்வழியே செலுத்த முடியும்.
இதற்கு எடுத்துக்காட்டாக அவர் சார்ந்த வாகன உற்பத்தி துறையையே மேற்கோள் காட்டுகிறார்.
ஒரு வாடிக்கையாளர் எத்தகைய வாகனத்தில் பயணம் செய்ய விரும்புகிறார், என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கிறார் என்பதை அறிய வேண்டுமானால் வெளி உலகத்திலிருந்து தரவுகளை சேகரிக்க முழுமையாய் தயாராக வேண்டும். தன் குடும்பத்துடனோ, பிற குடும்பங்களுடனோ பழகி புரிந்து கொள்ளாமல், இவற்றையெல்லாம் அலுவலகத்திலேயே இருந்து கொண்டு எப்படி கற்று கொள்ள முடியும்?
நம் பாரம்பரியத்தின் சிறப்புகள், அது சொல்லும் நெறிகள் இவற்றையெல்லாம் நாம் அறிய முற்பட்டால் மட்டுமே நம்மால் நம் சமூகத்தை அறிந்து கொள்ள முடியும்.
போற்றுதலுக்குரிய நம் பண்டைய வரலாற்றை மறந்துவிட்டு வளர்ச்சியடைந்த இந்தியா - 2047 என்ற கனவை எப்படி நிஜமாக்க போகிறோம்?
கலைகள் எல்லாமே ஒரு சமூகத்தின் பண்பாட்டை குறிப்பதாகவே இருந்திருக்கின்றன. குகைகளில் வரையப்பெற்ற ஓவியங்களும், பாறைகளிலும் கோவில்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கட்டிடகலைகளின் பிரமாண்டங்களும் ஒரு படைப்பாளியின் பார்வையில் பார்வையாளர்களை பார்க்கச் செய்கிறது. சமூகத்தின் பிரதிபலிப்பு என்றே இலக்கியத்தை சொல்வதுண்டு. கலைகளும் அவ்வாறானவையே. கலை மற்றும் பண்பாடுகளே நம் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையிலான ஒரு பாலமாக விளங்குகிறது.
இது போன்று கலைகளை பற்றி அறிந்து கொள்ளும்போது நாம் நம் மண்ணை தெரிந்து கொள்கிறோம். நம் முன்னோர்கள் போற்றிய நெறிகளை புரிந்து கொள்கிறோம். அவற்றின் பெருமைகளை உணர்ந்து கொள்கிறோம்.
இவ்வாறு நம்மை நாமே தெரிந்து கொள்ளும்போது தான் சமூகத்தில் பரஸ்பர புரிதல் ஏற்படுகிறது, ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றவும், தொடர்பு கொள்ளவும் வழிகளை ஏற்படுத்துகிறது. தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் இடையேயும் ஆரோக்கியமான உறவுகளை இதுவே நிர்ணயிக்கின்றது.
மனித வாழ்வின் விழுமியங்கள், நம்பிக்கைகள் மற்றும் கருத்தியலை அவர்கள் போற்றி வளர்க்கும் கலைகளே உலகிற்கு உரக்கச் சொல்லி விடுகின்றன. பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்படும் கலைகள் ஒரு சமூகம் கடந்து வந்த பாதை, எதிர்கொண்ட தடைகள் அதனை மக்கள் ஏற்றுக்கொண்ட, எதிர்த்த முறைகள் என்பன போன்ற பல்வேறு தகவல்களை ஒரு கண்ணாடியை போல் காட்டுகிறது.
இசை, நடனம், கிராமிய கலைகள், ஓவியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை, இலக்கியம், பண்டிகைகள், கலாச்சாரங்கள் என்று வெவ்வேறு வடிவங்களில் கலைகள் காலத்தின் ஓட்டத்தை பதியவைத்துக் கொண்டே தான் செல்கிறது. தமிழர்களின் பன்னெடுங்கால பண்பாட்டு அடையாளமாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை. அதனை கோலாகலமாக கொண்டாடி வரும் இவ்வேளையில் தமிழினத்தின் நன்றிமறவாத நன்னெறியை போற்றி மகிழ்வோம்.

மாற்றத்தை வரவேற்கும் ஒரு மேம்பட்ட சமூகம் என்பதை காட்டுவதே போகி பண்டிகை. ஒரு முற்போக்கான சமூகம் புதிய மாற்றங்களை வரவேற்க தயாராவது போல. நம்மில் படிந்த அல்லவைகளை களைந்து, புதுமையை வரவேற்க கொண்டாடப்படுவது போகி.
தைப்பொங்கல் இயற்கையை நன்றியோடு நினைவு கூறவே. விவசாயத்தை போற்றி வாழ்ந்த நாம் அதற்கு காரணமான சூரியனையும், உதவிய கால்நடைகளையும் கொண்டாட ஏற்றுக்கொண்ட நாள் தான் இது.

மாட்டு பொங்கலன்று மாடுகளை கௌரவப்படுத்தும் ஒரு உன்னதமான பாரம்பரியத்தை நாம் கொண்டிருக்கிறோம். "பிற உயிர்களிடத்தில் அன்பும் கருணையும்" என்று எல்லா மதங்களும் போற்றும் மிக உயர்ந்த நெறியை மாடுகளை அழகுப்படுத்தி, கொண்டாடும் இந்த நாளிலே நிரம்பச் செய்திருக்கின்றோம்.
காணும் பொங்கலன்று உற்ற உறவுகளை போற்றி மகிழ்கிறோம். அவர்களை கண்டு அன்பை பகிர்ந்துகொள்கிறோம். தான் என்ற சுயநலத்தோடு மட்டுமல்லாமல் தன்னை சார்ந்த உறவுகளையும் உடன் இணைத்து கைகோர்கிறோம். இந்திய மண்ணின் பண்டைய நாகரீகமானாலும் சரி, கிரேக்க ரோமானிய நாகரீகங்கள் என்றாலும் சரி குழுவாய் ஒன்று கூடி வாழ்ந்த கூட்டமே தழைத்திருக்கின்றன. விவசாயம், ஆட்சி அதிகாரம், வணிகம், வளர்ச்சி என்றெல்லாம் வரும்போது ஒன்று கூடியே அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சொல்வதே இந்த காணும் பொங்கல் எனும் நன்னாள்.

தீபிகா சதீஷ்
இப்படியாக நாம் தொன்றுதொட்டு கொண்டாடிவரும் பொங்கல் பண்டிகை தமிழர்களின் அறநெறியையும், வீரத்தையும், நன்றிமறவா பண்பையும் எடுத்து கூறுகிறது. இன்றைய உலகின் புவியியல் சார்ந்த சவால்களுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வியலே தீர்வாக பரிந்துரைக்கப்படும்போது, தோன்றிய மூத்த குடியாம் தமிழ்க்குடி இயற்கையை கொண்டாடவே ஒரு திருநாளை கொண்டிருக்கிறது என்றால் அது எத்தனை பெருமை வாய்ந்தது. புதுமைகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் எவ்வாறு போற்றப்படுகின்றனவோ அதை போலவே நம் மரபுகளையும் பண்பாட்டையும் போற்றுவது நம் தலையாய கடமை. நம் முன்னோர்கள் பெருமை கொண்ட நம் பண்பாட்டை இதுவரையிலும் கடத்திச் சென்றிருப்பது போல வரும் இளம் தலைமுறையும் போற்றும் வகையில் அதன் சிறப்புகளை எடுத்துக் கூறுவோம்.
- தாகூர் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
- தாகூர் இயற்றிய ஜன கண மன அதி நாயக ஜயஹே என்ற பாடல் சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதன் முதலில் பெற்ற இந்தியரும் பெரும் கவிஞரும் சிந்தனையாளரும், கல்வியாளருமான ரவீந்திரநாத் தாகூரைத் தெரியாத இந்தியக் குடிமகன் இருக்க முடியாது!
தேசிய விழா ஒவ்வொன்றிலும் ஜனகண மன அதி நாயக ஜெயஹே என்ற தேசிய கீதத்தைப் பாடும் ஒவ்வொருவரும் மறக்க முடியாத பெயர் ரவீந்திரநாத் தாகூர்!
பிறப்பும் இளமையும்: 1861ம் ஆண்டு மே மாதம் 7ம் நாளன்று கல்கத்தாவில் தேவேந்திரநாத் தாகூருக்கும் சாரதா தேவியாருக்கும் மகனாகப் பிறந்தார் ரவீந்திரநாத் தாகூர். இளமையிலேயே தாயார் மறைந்ததால் பணியாளர்களே அவரை வளர்த்து வந்தனர். வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து அவருக்குக் கல்வியைக் கற்பித்தனர். அடிக்கடி தந்தையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தாகூர் நன்கு உலக நடப்புகளைத் தெரிந்து கொண்டார்.
வானியல், சம்ஸ்கிருதம், அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார்.
இயல்பாகவே கவிதையில் நாட்டம் இருந்ததால் தனது எட்டாம் வயதிலேயே கவிதை இயற்றவும் ஆரம்பித்தார். பானுசிங்கோ என்ற புனைபெயரில் அவர் அவற்றை வெளியிட்டார்.
திருமணம்: 1883ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி, மிருணாளினி தேவியாரை அவர் மணந்தார். ஐந்து குழந்தைகள் பிறக்க அவற்றில் இரு பிள்ளைகள் இறந்து விட்டன.
வழக்கறிஞராக விரும்பி லண்டனில் கல்லூரியில் சேர்ந்த அவர் அதில் நாட்டமின்றி வங்கத்திற்கே திரும்பி வந்து தனது படைப்புகளைப் படைக்கத் தொடங்கினார்.
சாந்திநிகேதன்: கல்கத்தாவிற்கு வடக்கே 153 கிலோமீட்டர் தொலைவில் போல்பூர் அருகே ரவீந்திரநாதரின் தந்தையார் தேவேந்திரநாத் தாகூர் 20 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதில் ஒரு விருந்தினர் மாளிகையை அமைத்து அதற்கு சாந்தி நிகேதன் என்ற பெயரைச் சூட்டினார். ரவீந்திரநாத் தாகூர் 1901-ம் ஆண்டு அங்கு சென்று அந்த இடத்தில் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அது பாரம்பரிய முறையிலான புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக விஸ்வ பாரதி என்ற பெயரில் பின்னர் பல்கலைக்கழகமாக பின்னர் ஆனது.
சுதந்திரப் போராட்ட வீரர்: 1905ம் ஆண்டு கர்ஸான் பிரபு வங்கத்தைப் பிரிக்க முடிவு செய்ய அது இந்தியாவையே கொந்தளிக்க வைத்தது. தாகூரும் அதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1915ம் ஆண்டு இவருக்கு ஆங்கில அரசு சர் பட்டத்தைத் தந்து கௌரவித்தது. ஆனால் 1919ம் ஆண்டு ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலையில் பலநூறு பேர் கொலையுண்டதால் தான் பெற்ற சர் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார் அவர்.
தாகூரும் கீதாஞ்சலியும்: தாகூர் இயல்பாகவே ஒரு கவிஞராகத் திகழ்ந்தார். வங்காள மொழியில் அவர் இயற்றிய 157 பாடல்கள் கொண்ட கீதாஞ்சலி என்ற அவரது கவிதைத் தொகுப்பு 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிடப்பட்டது. கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1912ம் ஆண்டு இந்தியன் சொஸைடி ஆஃப் லண்டன் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
கீதாஞ்சலியிலிருந்து 53 பாடல்களையும் இதர நூல்களிலிருந்து 50 பாடல்களையும் தொகுத்து மொத்தம் 103 பாடல்களை இந்த நூல் கொண்டிருந்தது. 1913-ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த நூலுக்கு அளிக்கப்பட்டது. இந்தியர் ஒருவர் இலக்கிய நோபல் பரிசு பெற்றது இதுவே முதல் தடவை என்ற பெருமை தாகூருக்குக் கிடைத்தது.

உலகெலாம் பரவிப் புகழ் பெற்ற ஒரு பாடல் அனைவருக்கும் விழிப்புணர்ச்சியை ஊட்டியது.
பிரிட்டிஷாருக்கு அடிமைப் பட்டிருந்த காலத்தில் எழுந்த இந்தப் பாடல் புத்துணர்ச்சியை இந்திய மக்களுக்குத் தந்தது.
கீதாஞ்சலியில் 35வது பாடலாக அமைந்த அந்தப் பாடல் இதோ;
"எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ
எங்கே தலை தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ
எங்கே உலகமானது குறுகிய உள்விவகாரச் சுவர்களால் துண்டுகளாகச் சிதறாமல் இருக்கிறதோ
சத்தியத்தின் ஆழத்திலிருந்து எங்கே சொற்கள் வருகின்றனவோ
களைப்புறாத முயற்சி, தனது கரங்களை பரிபூரணத்தை நோக்கி எங்கே விரிக்கிறதோ
எங்கே பகுத்தறிவின் தெளிந்த நீரோடை தனது வழியை இறந்தொழிந்த மந்தமான பாலைவன மணலில் தொலைக்காமல் இருக்கிறதோ எப்போதும் விரியும் சிந்தனை, செயலுடன் உன்னை மனம் எங்கே வழி நடத்துகிறதோ விடுதலையின் அந்தச் சொர்க்கத்துக்குள், என் தந்தையே, என் தேசம் விழித்தெழட்டும்."
நோபல் பரிசுக்காகக் கிடைத்த பணத்தைக் கொண்டு அவர் விஸ்வ பாரதி என்ற பல்கலைக்கழகத்தை சாந்திநிகேதனில் நிறுவினார்.
தாகூரும் கவிஞர் ஈட்ஸும்: புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஈட்ஸ் தாகூரின் கவிதையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது கவிதையை ஆங்கிலத்தில் தானே மொழிபெயர்த்த தாகூர் அவரிடம் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்குமாறு கூறினார். ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சுட்டிக்காட்டிய ஈட்ஸ், இதை மாற்ற வேண்டுமோ என்று கேட்டார். பின்னர் மீண்டும் கவிதையைப் படிக்க அந்த வார்த்தையே மிகப் பொருத்தமாக அமைந்திருப்பதைக் கண்டு வியந்து தாகூரைப் பெரிதும் பாராட்டினார். அதற்கு முன்னுரையையும் வழங்கினார்.
தாகூரும் ஓவியமும்: தாகூர் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர். அவரது பல ஓவியங்கள் ஐரோப்பாவில் கண்காட்சியில் வைக்கப்பட்டன. ஆனால் உண்மையில் அவருக்கு சிவப்பு-பச்சை வண்ணங்கள் தெரியாத பார்வைக் குறைவு இருந்தது பலருக்கும் தெரியாது. இந்தக் குறையையும் மீறி அவரது படைப்புகள் பாராட்டைப் பெற்றன.
தாகூரும் விவேகானந்தரும்: விவேகானந்தர் இளமைப் பருவத்தில் நரேந்திரனாக இருந்த சமயம் தாகூர் அவருக்கு தான் இயற்றிய பாடலுக்கு மெட்டமைத்து அதை அவருக்குக் கற்பித்தார். அவரது பாடல்கள் பலவற்றை விவேகானந்தர் பாடியுள்ளார்.
தாகூரும் காந்திஜியும்: ஒரு முறை சாந்தி நிகேதனுக்கு மகாத்மா காந்திஜி விஜயம் செய்தார். ரவீந்திரநாத் தாகூருடன் நெடு நேரம் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார் காந்திஜி. பின்னர் ஓய்வெடுக்கத் திரும்பினார். அப்போது சாந்தி நிகேதனில் தங்கி இருப்போரில் சிலர் காந்திஜியிடம் வந்தனர்.
அவர்கள் மகாத்மாவை நோக்கி, "உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறோம்" என்றனர். "என்ன விஷயம்?" என்று கேட்டார் மகாத்மா.
"தாகூர் ஓய்வே எடுக்க மாட்டேன் என்கிறார். கடுமையாகத் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார். சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார். ஆகவே தான் உங்களிடம் வந்தோம். மதிய உணவுக்குப் பிறகு உடனே வேலை பார்க்கச் சென்று விடுகிறார். நீங்கள் அவரிடம் மதியம் சிறிது நேரமாவது ஓய்வெடுப்பது அவசியம் என்று சொல்லுங்கள்" என்றனர் அவர்கள்.
"என்னிடம் ஏன் இதைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார் மகாத்மா.
"நீங்கள் சொன்னால் அவர் தட்ட மாட்டார். அதனால் தான் உங்களிடம் வந்தோம்" என்றார்கள் அவர்கள் அனைவரும்.
மகாத்மா சிறிது நேரம் கழித்து தாகூரின் அறைக்கு வந்தார். அவரை ஆச்சரியத்துடன் பார்த்த தாகூர், "என்ன ஓய்வெடுக்கவில்லையா?" என்று கேட்டார்.
"ஓ! அதை சொல்லத்தான் வந்தேன். மதியம் உணவுக்குப் பின் நீங்களும் சற்று ஓய்வெடுக்க வேண்டும். உங்கள் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்படுகிறென்" என்றார் மகாத்மா."
"அதை எப்படி என்னால் செய்ய முடியும்? உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்கிறேன். எனக்கு பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பகல் நேரத்தில் ஒரு நாளும் ஓய்வெடுக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். இதுவரை அதைக் காப்பாற்றி வந்துள்ளேன். இன்னும் எத்தனை வருடம் நான் இருக்கப்போகிறேன்? அந்த உறுதிமொழியை நானே ஏன் மீற வேண்டும், சொல்லுங்கள்" என்றார் தாகூர். அவரது பதிலால் மகாத்மா மிகவும் நெகிழ்ந்து விட்டார்.

ச.நாகராஜன்
தேசீய கீதம்: தாகூர் இயற்றிய ஜன கண மன அதி நாயக ஜயஹே என்ற பாடல் சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல அமர் சோனார் பங்களா என்ற அவரது கீதத்தை வங்காள தேசம் தனது நாட்டின் தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டது. இலங்கையின் தேசிய கீதம் அமையவும் அவர் உத்வேகம் அளித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
தாகூரும் ஐன்ஸ்டீனும்: 1930ம் ஆண்டு தாகூர் உலகின் பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை அவரது இல்லத்தில் சந்தித்தார். விதி, மதி பற்றிய அவருடனான உரையாடல் மிகவும் பிரசித்தி பெற்ற உரையாடலாகத் திகழ்ந்தது உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இது பல்லாயிரக்கணக்கானோரால் இன்றும் படிக்கப்படுகிறது. இதையடுத்து ஐன்ஸ்டீன் தாகூரை அவர் இல்லத்தில் மீண்டும் சந்தித்தார்.
தாகூரும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும்: பிரபல கணித மேதையான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஒரு பகுத்தறிவுவாதி. அவருடன் தாகூர் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். தாகூரின் பேச்சுத் திறமையையும் ஒருவரை அவர் எளிதில் தன் கருத்துக்கு இசைய வைப்பதையும் ரஸ்ஸல் நன்கு அறிவார். ஒரு சமயம் இருவரும் கேம்பிரிட்ஜில் பேசியவாறே நடந்து சென்று கொண்டிருந்தனர். வழியில் கிங்ஸ் காலேஜ் அருகில் தேவாலயம் ஒன்று இருந்தது. அங்கு மாணவர்கள் அற்புதமான ஒரு கூட்டு பிரார்த்தனையை இசைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த தாகூர் ரஸ்ஸலிடம், 'அங்கே போகலாமே; உள்ளே போய் கேட்போமே" என்றார்.
"அது தான் நடக்காது! இந்த இசையும் ஊதுபத்தி மணமும் ஜன்னல் வழியே வரும் வண்ணமயமான ஒளிக்கதிர்களும் என் மீது செல்வாக்கு செலுத்தி என் பகுத்தறிவு எதைச் சந்தேகிக்கிறதோ அதை விட்டுவிட ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்' என்றார் நாத்திகவாதியான ரஸ்ஸல்! தாகூர் விழுந்து விழுந்து சிரித்தார். எங்கே தான் அவரை மாற்றி விடுவோமா என்ற ரஸ்ஸலின் பயத்தை அவரால் உணர முடிந்தது.
மறைவு: உடல் நலக்குறைவு காரணமாக தாகூர் 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாளன்று காலமானார்.
அருங்காட்சியகம்: தாகூரின் நினைவைப் போற்றும் வகையில் கல்கத்தாவில் தாகூர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.
அவரது பொன்மொழிகள்: உங்கள் வாழ்விலிருந்து சூரிய ஒளி அகன்று விட்டதென்று நீங்கள் அழ ஆரம்பித்தால், உங்களது கண்ணீர்த் துளிகள் உங்களை நட்சத்திரங்களைப் பார்க்க விடாது தடுக்கும்.
நான் தூங்கி கனவு கண்டு, வாழ்க்கை சந்தோஷமான ஒன்று என்றே நினைத்தேன். ஆனால் தூங்கி எழுந்த பின்னர் வாழ்க்கையே சேவை தான் என்பதைப் பார்த்தேன். அதன்படி நடந்தேன். சேவையே தான் சந்தோஷம்.
- கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை பெரும்பாலான பெண்கள் 21 வயது நிரம்பியவுடன் திருமணம் செய்து கொள்வார்கள்.
- ஒரு கருவில் அடிப்படையான 30 சதவீத குரோமோசோம் குறைபாடுகள் என்பது எந்த வயதிலும் இருக்கலாம்.
பெரும்பாலான பெண்கள் தற்போது வயது அதிகரித்த பிறகே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனையை இப்போது அதிகமான பெண்கள் எதிர்நோக்குகிறார்கள். அதாவது திருமணம் செய்யும் வயது அதிகரித்து வருவது எல்லோருக்கும் தெரியும். அதேபோல் அதிக வயதான பிறகு திருமணம் செய்பவர்கள் கூட, குழந்தை பேறு பெறுவதையும் இப்போது தள்ளிப்போடுவது என்பது மிகவும் பொதுவாக இருக்கிறது.
குழந்தை பேறு விஷயத்தை தள்ளிப்போடும் பெண்கள்:
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை பெரும்பாலான பெண்கள் 21 வயது நிரம்பியவுடன் திருமணம் செய்து கொள்வார்கள். குழந்தை பேறு விஷயங்களை 32 வயதுக்குள் முடித்து விடுவார்கள். இதுதான் எல்லா பெண்களின் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 35 வயதை தாண்டிய பிறகு குழந்தை பேறு பெறுவதை எதிர்நோக்குகின்ற பெண்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.
இதற்கு முந்தைய காலங்களில் 35 வயதில் குழந்தைபேறு பெறும் பெண்களின் எண்ணிக்கை 3 சதவீதமாக இருந்தது. இப்போது அது 30 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் 35 வயதில் குழந்தை பேறை எதிர்நோக்குகிற பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
பெண்கள் இன்றைக்கு நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு போக வேண்டும், நன்றாக சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையில் ஒரு சிறந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அத்துடன் தங்களின் குடும்ப சூழ்நிலைகளையும் ஒரு நல்ல நிலையில் வைத்து விட்டு, அதன் பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற எண்ணம் தற்போது பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தை பேறு விஷயத்தை தள்ளிப்போடுகிறார்கள்.

குழந்தை பேறு விஷயத்தில் தவறான கண்ணோட்டம்:
குழந்தை பெற்றுக் கொள்வதை பெண்கள் ஏன் தள்ளிப்போடுகிறார்கள் என்று ஆய்வு செய்து தரவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு தொடர்பாக பார்க்கும்போது தம்பதிகள் பலர் குழந்தை பேறு விஷயத்தில் தவறான கண்ணோட்டத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது நமக்குத்தான் ஐ.வி.எப். நவீன சிகிச்சை முறை இருக்கிறதே... ஐ.வி.எப். சிகிச்சை செய்து கொண்டால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். எனவே நமது வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, ஐ.வி.எப். மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்கிற கண்ணோட்டம் அவர்களிடம் இருக்கிறது. இந்த கண்ணோட்டம் மிகவும் தவறானது.
அதாவது ஐ.வி.எப். கருத்தரிப்பு முறை, குழந்தை பேறு கொடுக்கும் என்கிற எண்ணத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது குழந்தையின்மைக்கு முழுமையான தீர்வு ஐ.வி.எப். தான் என்கிற அளவில், ஐ.வி.எப். செய்து கொண்டால் குழந்தை வந்துவிடும் என்கிற எண்ணங்கள் இருப்பதன் காரணத்தால் குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகிறார்கள்.

கருவில் ஏற்படும் குரோமோசோம் குறைபாடுகள்:
நான் 31 வருடமாக இது தொடர்பாக சிகிச்சை அளித்து வருகிறேன். இந்த சிகிச்சையில் 10 வருடங்களுக்கு முன்பு குழந்தை பேறு சிகிச்சைக்காக வருகிற பெண்களின் சராசரி வயது 27, 28 ஆக இருந்தது. அவர்களில் பலர் திருமணமாகி 3 அல்லது 4 வருடம் கழித்தும் வருவார்கள். அப்போது 33, 34 வயதில் குழந்தை பேறு சிகிச்சைக்காக வருபவர்கள் மிகவும் அபூர்வமாக இருப்பார்கள்.
ஆனால் இப்போது சராசரியாக 31, 32 என்ற வயதில் தான், குழந்தை பேறு சிகிச்சைக்காக நிறைய பேர் வருகிறார்கள். மேலும் 39, 40, 41 வயதில் குழந்தை பேறு சிகிச்சைக்காக வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இந்த அட்வான்ஸ்ட் மெட்டர்னல் ஏஜ் (மேம்பட்ட தாய்வழி வயது) என்பது எங்களை போன்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். ஏனென்றால் அதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு பெண்ணுக்கு இப்போது நல்ல முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்ய முடியும். அவர்களுக்கு ஏ.ஆர்.டி. செய்யலாம், நவீன முறையில் கருத்தரிப்பு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் முக்கியமாக கருவுறுதல் திறன் என்பது அவர்களுடைய வயதை சார்ந்தது தான். பெண்களுக்கு வயது கூடக்கூட அவர்களின் கருத்தரிக்கிற திறன் குறைவாகிறது.
இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஒரு கருவில் அடிப்படையான 30 சதவீத குரோமோசோம் குறைபாடுகள் என்பது எந்த வயதிலும் இருக்கலாம். ஆனால் இதுவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிப்படையான குரோமோசோம் குறைபாடுகள் 70 சதவீதமாக அதிகரிக்கிறது. அதுவே 40 வயதில் 90 சதவீத குரோமோசோம் குறைபாடுகள் வருகிறது. இதுவே 45 வயதானால் கிட்டத்தட்ட 100 சதவீதமாகிறது.
ஏனென்றால் 45 வயதுக்கு மேலே உருவாகின்ற கரு எல்லாவற்றிலுமே குரோமோசோம் குறைபாடுகள் இருக்கிறது. அதாவது டவுன் சின்ட்ரோம் பேபி உருவாகிறது. 13, 17, 27 குரோமோசோம் பாதிப்பு ஏற்படுகிறது. இவை அனைத்தும் கண்டிப்பாக வயது கூடும்போது கருத்தரிக்கிற பெண்கள் அதிகமாக எதிர்நோக்குகின்ற ஒரு விஷயம் ஆகும்.
அதனால்தான் அட்வான்ஸ்ட் மெட்டர்னல் ஏஜ் ஆன பெண்களுக்கு கருத்தரிப்பு திறன் குறைவாகிறது. அவர்களுக்கு கருமுட்டைகள் எண்ணிக்கை குறைவாவதன் காரணமாக, கருமுட்டைகளின் கருத்தரிக்கும் திறனும் குறைவாகிறது. மேலும் கருப்பையில் கரு ஒட்டி வளரும் தன்மையும் குறைவாகிறது.
30 வயதுள்ள பெண்ணின் கருவையும், 40 வயது பெண்ணின் கருவையும் எடுத்துக்கொண்டால் 30 வயது பெண்களை விட 40 வயது பெண்களுக்கு கருவானது கர்ப்பப்பையை ஒட்டி வளரும் தன்மை திறன் குறைவாகிறது. அதாவது வயது கூடக்கூட பல விஷயங்கள் மாறுபடுகிறது.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
வயதாகும்போது குழந்தை பேறு விஷயங்களில் அதிக கவனம் தேவை:
இப்போது நோயாளிகள் அனைவரும் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்னிடம் வரும் சில பெண்கள் டாக்டர் எனக்கு பிளாஸ்டோசிஸ்ட் பரிமாற்றம் செய்யுங்கள், அதில் வெற்றி விகிதம் அதிகம் என்று எங்களிடம் தெரிவிக்கிறார்கள்.
இந்த பிளாஸ்டோசிஸ்ட் என்பது 5-வது நாள் கரு ஆகும். இந்த 5-வது நாள் கரு கர்ப்பப்பையில் ஒட்டி வளருவதற்கு குறிப்பாக ஒரு சதவீதம் வாய்ப்பு அதிகம் தான். ஆனால் இந்த பிளாஸ்டோசிஸ்ட்டை பார்த்து அது நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் கூட, அந்த பிளாஸ்டோசிசில் மூன்றில் ஒன்று தான் நல்ல கருவாக இருக்கும். அதிலும் 32 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் அப்படி இருக்கும்.
இதுவே 35 வயதான பெண்களுக்கு 5 பிளாஸ்டோசிஸ்ட் இருந்தால் அதில் ஒன்று தான் நன்றாக இருக்கும். 35 வயதுக்கு மேலான பெண்களுக்கு 5 பிளாஸ்டோசிஸ்ட் இருந்தால் அதில் ஒரு ஒரு கருவில் தான் குரோமோசோம் நார்மலாக இருக்கும். ஆனால் அதுவே 40 வயதாகும்போது 10 பிளாஸ்டோசிஸ்ட் இருந்தால் அதில் ஒரு பிளாஸ்டோசிஸ்ட் தான் நன்றாக இருக்கும். எனவே அதில் எவ்வளவு அளவு மாறுபடுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்த பிளாஸ்டோசிஸ்ட்டை பார்க்கும்போது அதனுடைய உருவ அமைப்பு, அதனுடைய பிளாஸ்டோமியோ அளவு எல்லாம் சரியாக இருந்தால் கூட வயதுக்கு ஏற்ப அதன் திறன் மாறுபடுகிறது. இதைவைத்து பார்க்கும்போது பெண்களுக்கு 42 வயதாகும்போது அவர்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்பு 5 சதவீதமாக குறைகிறது. அதனால் தான் வயதாகும்போது குழந்தை பேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே ஐ.வி.எப். முறையிலும் குறிப்பிட்ட வயது வரைதான் குழந்தை பேறு பெற முடியும். அதுபற்றி அடுத்த வாரம் விரிவாக பார்ப்போம்.
- இருபது பேர் கலந்துகொண்டு ஓடுகிற ஓட்டப்பந்தயத்தில் இருபது பேருமா முதலிடத்தை எட்டிப் பிடிக்கிறார்கள்?.
- வலிகளும் துன்பங்களும் எதிர்கொள்ளுகிற மனிதர்களைப் பொறுத்துக், கடினமானதாகவோ அல்லது லேசானதாகவோ அமைகின்றன.
வாழுகின்ற வாழ்க்கையைத் துன்பமின்றி இன்பமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
எல்லாவற்றையும் துறந்து பற்றற்ற நிலையில் காடுகளில் உலவிக்கொண்டு இருக்கின்ற துறவிகளுக்கு மட்டுமல்ல; எல்லா ஆசா பாசங்களோடும் சொந்த பந்தங்களோடும் சுற்றம் சூழ நாட்டில் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற இல்லறவாசிகளுக்கும் வாழ்க்கை என்பது தவம் போன்றதே ஆகும். தவம் என்பது மனிதர் ஒவ்வொருவரையும் நெறிப்படுத்துகிற வாழ்வியல் ஒழுங்குமுறை ஆகும்.
தவம் என்பது, பசி, தாகம், நோய்கள் போன்ற உடலியல் துன்பங்களையும், ஆசை, கோபம், காமம், களவு, பதற்றம் போன்ற மனவியல் துன்பங்களையும் பக்குவமாக எதிர்கொண்டு அவற்றை வெற்றிகண்டு அவற்றிலிருந்து வெளிவருவது ஆகும். தமிழில் 'நோற்றல்' என்னும் அழகான ஒரு தமிழ்ச்சொல் உண்டு. 'நோன்பு' என்கிற சொல்லினை அடியாகக் கொண்டது அச்சொல். எவ்வளவு துன்பம் வந்தாலும் மன உறுதியோடும், உடல் வலிமையோடும் தாங்கிக்கொள்வதே நோற்றல் ஆகும். 'நோன்பு இருத்தல்' என்றால் 'விரதம் இருத்தல்' என்று பொருள். நோன்புக் காலங்களில் உணவுண்ணா நோன்பிருப்பது எல்லாரும் கடைப்பிடிக்கின்ற ஒன்றாகும். பசியினால் வரக்கூடிய வேதனைகளைத் தாங்கிக் கொள்வது விரதமிருத்தல் ஆகும்.
உண்ணா நோன்பிருந்து உடம்பையும் மனத்தையும் வலிபொறுக்கும் பக்குவப்படுத்துவதே தவம் ஆகும். பெரும்பெரும் இலக்குகளோடும் குறிக்கோள்களோடும் இயங்கத் தொடங்கும் மனிதர்களைச் சிறுசிறு துன்பங்களும், தொல்லைகளும் சிறைப்படுத்தி விடக்கூடாது. அதற்காகவே அவர்கள் நோன்பிருந்து நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்கும் பக்குவம் பழகுகிறார்கள். தவம் என்பது துறவிகளுக்கு மட்டுமல்லாது இல்லறத்தார்க்கும் உடனடியாக வசப்பட்டு விடாது. பழகப் பழகவே தவமும் கைகூடும். அதற்கு முதலில் மனம் பழக்க வேண்டும்; அப்போதுதான் பெரிதினும் பெரிதான குறிக்கோள்களை அடைய எண்ணும் எண்ணம் உறுதிப்படும். அடுத்து, உடல் பழக்க வேண்டும்; உண்ணுதல், உறங்குதல், உல்லாச வாழ்வில் திளைக்க விரும்புதல் போன்ற மதிப்புக்குறைந்த உடலியல் ஆசைகளில் விருப்பங்களைச் செலுத்தாமல் அடக்கவும் அடங்கவும் பழக வேண்டும்...
எல்லா மனிதர்களுக்கும் லட்சியங்கள் உண்டு; அன்றாட வாழ்வில் அன்றைய உணவை அல்லாடாமல் பெறுவதே சிலருக்குப் பெரும்பாடாய் இருக்கும். இவர்களால் வாழ்வில் உயர்ந்த சிகரங்களை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. 'தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, நரைகூடிக் கிழப்பருவம் எய்தி மாய்ந்துவிடும் வேடிக்கை மனிதர்களைப் போல' இவர்கள் வீழ்ந்து விடுவார்கள். 'பழகப் பழகப் பாலும் புளிக்கும்' என்பது போலப் 'பழகப் பழக வேம்பும் சுவைக்கும்' எனும்படியாக வலிபொறுக்கும் வாழ்வியல் பழகுபவர்களே, புடம்போட்ட தங்கமாய் ஜொலிக்கத் தொடங்குவார்கள்.
இந்த உலகில், இருப்பவர்கள் அதிகமா? இல்லாதவர்கள் அதிகமா? என்கிற ஒரு கேள்வியைப், படித்தவர், படியாதவர் என யாரிடம் கேட்டாலும், அவர்கள் மாறுபாடு ஏதுமின்றிச் சொல்லக்கூடிய ஒரே பதில், 'இல்லாதவர்தாம் அதிகம்' என்பதாகத்தான் இருக்கும். இப்போது மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் கூட, இந்தக் கேள்விக்கான பதில் இதுவாகவே இருந்திருக்கிறது. இந்தக் கேள்வி பதிலில் என்ன சிறப்பு என்றால்…கேள்வி கேட்டவரும் பேரறிஞர்; பதில் சொன்னவரும் பேரறிஞர்; இருவரும் ஒரே அறிஞர், அவர்தாம் திருவள்ளுவர் என்னும் அறிவுப் பேராசான்.
"இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்
பலர் நோலா தவர்"
இந்த உலகில், இல்லாதவர்களே பலராக இருக்கின்றனர் என்கிற உலகியல் கணக்கெடுப்பைக் குறிப்பிடுகிற திருவள்ளுவர், அதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து நமக்கு விடையும் பகர்கிறார். ஆம், எல்லாருக்கும் லட்சியங்கள் உண்டு; எல்லாருக்கும் குறிக்கோள்கள் உண்டு. ஆனால் கொண்ட குறிக்கோளையும் லட்சியத்தையும் எல்லாருமா அடைந்து விடுகிறார்கள்?. இருபது பேர் கலந்துகொண்டு ஓடுகிற ஓட்டப்பந்தயத்தில் இருபது பேருமா முதலிடத்தை எட்டிப் பிடிக்கிறார்கள்?. இல்லையே! ஓரிருவர் மட்டும்தானே முதலிடம் வர முடிகிறது; மற்றவர்களிடம் என்ன குறை?; நாட்டில் இல்லாதவர்களும் அதிகம் பெருகியிருக்க என்ன குறை?. முறையான பயிற்சியில்லை; வலி தாங்கி, துன்பங்கள் பொறுத்து, தடைகளைத் தகர்க்கிற பக்குவமும் உறுதியும் பெரும்பான்மையானவர்களுக்கு இல்லை. தவம் என்பதே மனத்தையும் உடம்பையும் பழக்கிப் பக்குவப்படுத்தலே ஆகும்.
பக்குவம் என்பது ஒருநாளில் வந்து விடாது; துன்பமாயினும் இன்பமாயினும் பழகப் பழகத்தான் பக்குவம் ஆகும். வாழ்க்கையில் வெற்றிகரமான குடும்பஸ்தராவதும் அவ்வளவு சுலபமில்லை; அதே போலத் துறவறத்திலும் சாமியாராகப் போவதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை. தவம் என்பது, கீழான எண்ணங்கள் தவிர்த்து, ஒருமித்த சிந்தனையில், கொண்ட குறிக்கோளை நோக்கி மனத்தைச் செலுத்துவது ஆகும்.
ஓர் ஊரின் மைதானத்தில் நடைபெற்ற ஒரு பிரபலமான பேச்சாளரின் பக்தி உபன்யாசத்தை மக்களோடு மக்களாக சேர்ந்து அமர்ந்து கவனமாக ஒரு குரங்கும் கேட்டது. தவத்தின் வலிமையையும், அருமையையும், தவமிருக்கும் வழிமுறையையும், சொல்ல வேண்டிய மந்திர ஜெபங்களையும் சொற்பொழிவாளர் வெகு அழகாக எடுத்து விளக்கினார். சொற்பொழிவை முழுமையாகக் கேட்ட குரங்கு, தானும் முயன்று ஒரு தவசீலராக ஆகிவிடவேண்டும் என்று முடிவெடுத்தது. அருகில் இருந்த காட்டிற்குள் சென்று அங்கிருந்த பாறை ஒன்றன்மேல் அமர்ந்து, யோகியரைப்போலக் கண்களை மூடித் தவமியற்றத் தொடங்கியது.
'சரி இடையில் பசித்தால் என்ன செய்வது?' குரங்கின் மனத்திற்குள் ஒரு முக்கியமான கேள்வி ஓடியது; 'உணவு முக்கியமில்லையா?'. தவத்தைச் சிறிதுநேரம் கலைத்துவிட்டுக் காட்டிற்குள் சென்று, மரத்திற்கு மரம்தாவி, நிறையக் கனிகளைப் பறித்துக்கொண்டு மீண்டும் பாறைக்கு வந்தது. பாறையின் ஒரு மூலையில் கனிகளை வைத்துவிட்டுக், குரங்கு உபன்யாசகர் மேடையில் சொல்லிக்கொடுத்த ஜெபத்தை முனுமுனுத்தவாறே தனது தவத்தைத் தொடர்ந்தது. மீண்டும் குரங்கின் மனவோட்டத்தில் ஒரு சிந்தனை,' இப்படி உட்கார்ந்தபடியே ரொம்ப நேரம் தவமிருந்துவிட்டுத், திடீரென்று பசி வரும்போது எழுந்திருக்க முடியாத நிலை உடம்பில் வந்து விட்டால்?'… என்ன செய்வது?. யோசித்த குரங்கு சிறிது ஜெபம் சொல்வதை நிறுத்திவிட்டுப், பாறையின் மூலையில் வைத்திருந்த கனிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு, பாறையின் நடுவில் தாம் தவமிருக்கும் இடத்திற்கருகில் குவித்து வைத்துக்கொண்டு மீண்டும் தவத்தைத் தொடங்கியது.

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
சிறிது நேரத்தில் மீண்டும் குரங்கின் மனவோட்டத்தில் மற்றுமொரு கேள்வி, 'பழங்கள் பக்கத்தில்தான் இருக்கின்றன; இருந்தாலும், பசி வரும் நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுக், கைகால் நீட்ட முடியாத நிலை வந்துவிட்டால் எப்படிச் சாப்பிடுவது? உடம்பை ஊக்கமுள்ளதாக மாற்றுவது?'. அவ்வளவுதான். தன் அருகிலேயே குவித்து வைத்திருந்த பழங்களில் ஒன்றை எடுத்துத் தன் வாய்க்குள் போட்டுச் சுவைக்கத் தொடங்கியது. சுவையாக இருந்ததால் அடுத்தடுத்துப் பழங்கள் குரங்கின் வாய்க்குள் போகத் தொடங்கின. அடுத்தவேளை உணவைப் பற்றி அப்புறம் பார்த்துக் கொள்வோம்; இந்தவேளைப் பசிக்கு இவையனைத்தையும் இப்போதே உண்டு முடித்து விடுவோம் என்று எல்லாப் பழங்களையும் தின்று ஏப்பம் விட்டு, அந்தப் பாறையிலேயே உண்ட களைப்புத்தீர ஒரு குட்டித்தூக்கமும் போடத் தொடங்கிவிட்டது. இனியெங்கே அந்தக் குரங்கு தவம் இருக்கப்போகிறது?.
சின்னஞ்சிறிய தொல்லைகளாக, அன்றாடம் உண்டாகிற தொந்தரவுகளிலேயே கவனம் செலுத்தத் தொடங்கி, நாற்றச் சகதியில் உழலும் ஏதோபோலத் தடுமாறத் தொடங்கிவிட்டால், பாய்ந்து வரும் கங்கையாற்றில் நீச்சலடிப்பது எப்படி?. வானுயர ஆர்ப்பரித்துவிழும் நீரருவிகளில் குளித்து மகிழ்வது எப்படி?. கடலை நீந்திக் கடப்பது என்று லட்சியம் உறுதி செய்து விட்டால், கடற்கரையில் நின்றுகொண்டு அலைகளை எண்ணிப் பார்த்துப், பயந்து கொண்டிருந்தால் எப்படி?. 'எண்ணித் துணிக கருமம்!' என்றுதானே வள்ளுவரும் ஊக்கப்படுத்துகிறார்.
உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு
என்ற திருக்குறளில் தவம் என்பது எப்படியிருக்கும் என்று வார்த்தைகளால் வடிவப்படுத்த முனைகிறார் திருவள்ளுவர், வருகின்ற துன்பமாகிய நோய்களையெல்லாம் தாங்கிக் கொள்ளுதலும், தாம் துன்பப்பட்டாலும் தம்மால் பிற உயிர்களுக்குத் துளியளவும் துன்பம் நேராமல் பார்த்துக்கொள்ளுதலும் ஆகிய இரண்டும்தான் நல்ல தவசீலருக்கு அடையாளம் ஆகும். வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டே நல்ல லட்சியங்களை அடைய முடியாதா? என்று சிலர் கேட்கலாம். உளிவலி ஏற்காமல் பாறைகள் சிற்பங்கள் ஆவதில்லை; மேடுகள் தகர்க்கப்படாமலும், பள்ளங்கள் நிரப்பப்படாமலும் நல்ல பாதைகள் உருவாவதில்லை. பச்சையாக இருக்கின்ற கறிகாய்களும் இறைச்சிகளும் பக்குவமாக, நெருப்பின் துணைகொண்டு சமைக்கப்படாமல் அவை சுவையான உணவுகள் ஆவதில்லை. செய்வதற்கு அரிய செயல்களை அரிதின் முயன்று, வலிகளைப் பொறுத்துக் கொண்டு செய்து முடிப்பவர்களே சாதனையாளர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர். அரிய செயல்களே அருமையான செயல்களாகப் பிற்காலத்தில் போற்றப்படுகின்றன.
வலிகளும் துன்பங்களும் எதிர்கொள்ளுகிற மனிதர்களைப் பொறுத்துக், கடினமானதாகவோ அல்லது லேசானதாகவோ அமைகின்றன. சிலர் துணிந்து எதிர்த்து நின்று போராடி வெற்றி காண்கிறார்கள். சிலர் வலிகளையும் துன்பங்களையும் அவற்றின் போக்கிலேயே போகவிட்டு, எதுவும் தெரியாததுபோல விலகிக் கொள்கிறார்கள்; அல்லது நகர்ந்து கொள்கிறார்கள். இரண்டு விதமான உத்திகளுமே தடைகளை வெல்லும் உத்திகள் தாம். வருகின்ற வலிகளும் துன்பங்களும் தொல்லைகளுமே அவற்றை எதிர்கொண்டு வெல்வதற்கான வழிமுறைகளையும் ஆயுதங்களையும் நமக்கு உணர்த்திவிடுகின்றன. எனவே எதிர்த்துப் போரிடுவது அல்லது தாங்கிக்கொள்வதைக்கூட கடினமானதாகக் கருதாமல் விளையாட்டுப் பாங்காக எடுத்துக் கொண்டால் இருநூறு சதவீதம் வெற்றி நிச்சயம்.
எல்லா ஞானியரும் துன்பம் வரும் வேளையிலே சிரிங்க! என்றுதான் கூறியிருக்கிறார்கள், கஷ்ட காலங்களில் கடகடவென்று வெளிப்படையாகச் சிரித்துக் கொண்டிருந்தால், பார்க்கிறவர்கள் நம்மை ஒருமாதிரிகூடப் பார்க்க நேரிடும். துன்பத்தைப் பார்த்துச் சிரிப்பது என்பது, சலிப்போடு அல்லாமல், மகிழ்ச்சியான மனோபாவத்தோடு எதிர்கொள்வது ஆகும். மகாகவி பாரதி, மரணத்தைக் கூட வெகு லாவகமாகவும் துணிச்சலாகவும், "காலா! வாடா! உன்னைக் காலால் உதைக்கிறேன் வாடா!" என்று பாடி அழைத்திருக்கிறார்.
வாழ்வில், இடையூறுகளும் தடைகளும் இல்லாத தருணங்களே இல்லை. நாம் பெரிதினும் பெரிதான லட்சியங்களை வகுத்துக்கொண்டு அவற்றை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டால், எவ்வளவு பெரிய தடைகளும் தீயினில் தூசுபோலக் காணாமல் போகும். வலி தாங்குதலே தவம்.
தொடர்புக்கு,
9443190098
- ஒருவர் கொண்டு இருக்கும் உயர்ந்த லட்சியம் தான் அவரின் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய் மாற்றுகிறது.
- மனிதனை மனிதன் நேசிக்கிற மனிதநேய உணர்வு தான் ஆன்மீகத்தின் ஆரம்பப் பாடம் என்பதை பாமரர்களுக்கும் புரிய வைத்தார்.
'இளைஞர் சக்தி' - இந்த வார்த்தையை இப்போ நிறைய பேர் பயன்படுத்தறாங்க. ஆனா முதன் முதலா, ஆக்கபூர்வமா இளைஞர்களை ஒன்று திரட்ட இந்த வார்த்தையைப் பயன்படுத்தியவர் - சுவாமி விவேகானந்தர்.
உலகம் எங்கும் உள்ள இளைஞர்களை, இலட்சிய இளைஞர்களாக மாற்றி, உயர்ந்த குறிக்கோளுக்காக, ஒட்டுமொத்த மனித குல வளர்ச்சிக்காக உழைக்கச் செய்தவர்.
வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாள் - ஜனவரி 12 - மிகப் பொருத்தமாக, 'தேசிய இளைஞர் தினம்' என்று இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
ஒரு சமயத் தலைவராக (மட்டும்) அல்லாது, எல்லாப் பிரிவுகளையும், எல்லாத் தரப்பினரையும் ஒன்றிணைத்து அனைவருக்குமான ஆக்கபூர்வ வழிமுறைகளை நெறிமுறைகளை நடைமுறைகளை செயல்திட்டங்களை சுவாமி விவேகானந்தர் மிக வலிமையுடன் முன்னிறுத்தினார்.
'எல்லா வலிமையும் உனக்குள்ளே இருக்கிறது; நம்பு, உன்னால் முடியும்' என்று தீர்க்கமாக எடுத்துச் சொன்னார்.
இறை நம்பிக்கை வேண்டும்; அதே அளவுக்கு, தன்னம்பிக்கை - மிக முக்கியம். இதுவே எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படை என்று தெளிவுபடுத்தினார்.
"ஒரு லட்சியவாதி (ஏதேனும்) ஒரு தவறு செய்கிறான் என்றால், லட்சியம் ஏதும் இல்லாதவன் ஓராயிரம் தவறுகள் செய்கிறான். ஒருவர் கொண்டு இருக்கும் உயர்ந்த லட்சியம் தான் அவரின் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய் மாற்றுகிறது."
ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் உறுதியான ஒரு லட்சிய வேட்கை இருந்தாக வேண்டும். அதுவே அவனை, எல்லா இடர்கள் இன்னல்கள் துன்பங்கள் துயரங்களில் இருந்தும் காப்பாற்றி, மேலும் துணிச்சல் மிக்கவனாக மேலும் கொள்கைப் பிடிப்பு கொண்டவனாக மாற்றி வாழ்க்கையில் அடுத்தடுத்து முன்னேற உறுதியாய் உதவுகிறது. இதுவே வீரத்துறவி விடுத்த செய்தியின் சாராம்சம்.
சுவாமி விவேகானந்தர் ஆற்றிய ஒவ்வோர் உரையும், அவர் உதித்த ஒவ்வொரு சொல்லும் மக்களை, குறிப்பாக இளைஞர்களை, வீறுகொண்டு எழச் செய்தது. மேன்மேலும் கடினமாக உழைப்பதற்கு மக்களைத் தயார் செய்தது.
"எழுமின் விழிமின்" என்கிற வாசகம், "இலக்கை அடையும் வரை நிற்காமல்" ஓடுவதற்கு, களைப்பின்றி சலிப்பின்றி தொடர்ந்து பணியாற்றுவதற்கு மிகுந்த உத்வேகம் தந்தது.
1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்ற 'உலக சமய மாநாடு' சுவாமி விவேகானந்தரை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
"சகோதர சகோதரிகளே..." என்று மதவாதிகள் மத்தியில் சுவாமி விவேகானந்தர் தனது உரையைத் தொடங்கிய அந்தத் தருணம்... உலகம் விழித்துக் கொண்டது! உலக நாடுகள் திரும்பிப் பார்த்தன; உலக மக்கள் நம்ப முடியாமல் வியப்புடன் உற்று நோக்கினர்.
அப்போது தொடங்கியது அந்த வெற்றிப் பயணம்! சுவாமி விவேகானந்தரின் பேச்சு எண்ணம் திட்டம் செயல்... மக்கள் மத்தியில் காட்டுத் தீயாய்ப் பரவி, பரவசப்படுத்தியது.
'கொழும்பு முதல் அல்மோரா வரை' (இந்த தலைப்பிலேயே புத்தகம் கிடைக்கிறது) அவர் ஆற்றிச் சென்ற உரைகள்... இன்றளவும் எண்ணற்றோரை வழி நடத்துகிறது.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய், டாக்டர் அப்துல் கலாம் போன்ற மாபெரும் தலைவர்கள், சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
சென்னையில் 'எனது செயல் திட்டம் / செயல் தந்திரம்' எனும் தலைப்பில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையில் கூறுகிறார்:
லட்சியப் பிடிப்பு மிக்க 100 இளைஞர்கள் போதும்; இந்த உலகை மாற்றி விடலாம்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது - இந்த உலகத்துக்கே நன்மை பயக்கும் ஆன்மீகப் பேரலை சென்னையில்தான் உருவாகப் போகிறது.
இந்திய இளைஞர்கள் மீது சுவாமி விவேகானந்தருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.
'இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக!' என்கிற அவரது அறைகூவல் - எங்கெங்கும் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இன்று நம்முன் உள்ள சவால் என்ன...? இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினை என்ன...? இளைஞர்களை பீடித்துள்ள சோம்பல், முயற்சியின்மை.
சுவாமி விவேகானந்தர் முழங்குகிறார் - நம் நாட்டு இளைஞர்கள் மெல்லிசை கேட்டுக் கேட்டு கோழைகள் ஆகி விட்டனர். நம் நாட்டில் முரசுகள் ஒலிப்பதில்லையா? துந்துபிகள் முழங்குவது இல்லையா...?
சாதிக்க வேண்டிய வயதில் இளைஞர்களுக்கு, கேளிக்கைகள், வெறும் ஆபத்தாகவே முடியும். பேச்சு அல்ல செயலே முக்கியம்; கேளிக்கைகள் அல்ல கொள்கைகளே அவசியம் என்பதை சுவாமி விவேகானந்தர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
செயல்தான் மனிதனின் இயல்பு; செயல்தான் மனிதனை உயர்த்தும்; செயல்தான் உலகத்துக்கு நன்மை செய்யும்.
இந்த உண்மையை உலக மக்களுக்கு உரக்கச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.
ஆன்மீகத் தளத்திலும் சுவாமி விவேகானந்தர் தனது முத்திரையை ஆழமாகப் பதித்தார்.
அர்த்தமற்ற சடங்குகள், மூடப் பழக்க வழக்கங்கள், சாதியக் கொடுமைகள், பெண்ணடிமைத் தனம் ஆகியவற்றுக்கு எதிராக ஆணித்தரமாக பேசி அடுக்கடுக்கான வாதங்களை முன் வைத்தார்.
இறை நம்பிக்கையில் மூடநம்பிக்கைக்கு இடமில்லை; மனிதனை நன்னெறிப்படுத்துவதும் நல்வழிப்படுத்துவதுமே ஆன்மீகத்தின் இலக்கு.
இறைமை எல்லாருக்கும் பொதுவானது. இறைவன் எல்லா மக்களுக்கும் பொதுவானவன். மனிதனை மனிதன் நேசிக்கிற மனிதநேய உணர்வு தான் ஆன்மீகத்தின் ஆரம்பப் பாடம் என்பதை பாமரர்களுக்கும் புரிய வைத்தார்.
வறுமையில் வாடும் வறியவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், நோயுற்று துன்பமுறும் சாமானியருக்கு ஆதரவாய் இருத்தல், அறியாமையில் உழலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதிகாரம் அற்றுக் கிடக்கும் அடித்தட்டு மக்களை அதிகாரம் பெறச் செய்தல்... எல்லாமே, ஆன்மீகப் பணிகளில் அடக்கம் என்று விளங்க வைத்தார்.
உள்ளம் திடமாய் இருக்க, உடல் வலிமையாய் இருந்தாக வேண்டும்.உடல் வலிமையாய் இருக்க நல்ல உணவும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களும் அவசியம் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ளும்படி தானே முன் நின்று ஒரு நல்ல உதாரணமாய் வாழ்ந்து காட்டினார்.
உடை, நடை, பேச்சு, வாழ்க்கை முறை என்று ஒவ்வொன்றிலும் கம்பீரத்தை வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு மனிதனும் சுதந்திரம் ஆனவன். யாருக்கும் யாரும் அடிமை இல்லை. ஆன்மீக அரசியல் பொருளாதார சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்பதில் உறுதியாய் இருந்தார்.
இந்து சமய சாத்திரங்கள் வலியுறுத்திச் சொல்லும் ஒரே நற்குணம் - அச்சமின்மை. அச்சமே எல்லா கவலைகளுக்கும் துயரங்களுக்கும் காரணம். எதற்காகவும் எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம்; எதிர்த்து நிற்கும் துணிவு இருந்தால், எந்தச் சவாலையும் எதிர்கொண்டு எளிதில் வெற்றி அடைய முடியும். இந்தச் செய்திதான் அடிமை நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு உத்வேகம் ஊட்டி உற்சாகம் தந்தது.
வேதங்கள் உபநிடதங்கள் புராணங்கள், கர்ண பரம்பரைக் கதைகள்... என்று ஒவ்வொன்றில் இருந்தும் சிறந்ததை மட்டும் எடுத்து நல்லதை மட்டுமே எடுத்துக் கூறினார்.
கல்வியில் விளையாட்டில் இசையில் தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர்கள் உலகின் தலைசிறந்த நிபுணர்களுக்கு இணையாகத் திகழ வேண்டும்; இதற்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும், தமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆழ்ந்த அக்கறை காட்டினார்.
ஒரு வகையில், பண்டைய பாரதம் - நவீன இந்தியா இடையே ஓர் இணைப்புப் பாலமாக விளங்கினார் சுவாமி விவேகானந்தர்.
மேற்கு வங்க மாநிலம் இரண்டு பெரும் ஆளுமைகளை இந்த உலகுக்கு தந்தது- சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும் - இரண்டு பேரின் தோற்றங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி, மிடுக்காய் கம்பீரமாய் வீரத்தின் துணிச்சலின் அடையாளமாய் இருப்பதை உணர முடியும்.
உண்மையில் இவ்விரு தலைவர்களுமே புரட்சியாளர்கள் தாம்.
பழமையை உடைத்து எறிந்து புதிய பாதையை அமைக்கப் பாடுபட்டவர்கள் இவர்கள்.
இந்தியா என்றாலே எழுத்தறிவு இல்லாத வறுமையில் ஊழலும் நோய்வாய்ப்பட்டவர்களின் நாடு என்கிற எண்ணமே உலக நாடுகள் மத்தியில் இருந்தது. ஓரளவுக்கு இதில் உண்மையும் இருந்தது.
இந்தத் தோற்றத்தை மாற்ற வேண்டும்; இந்த அவல நிலையைப் போக்க வேண்டும்; இந்திய மக்களை அச்சம் அற்றவர்களாய் அறிவார்ந்தவர்களாய் ஆரோக்கியம் ஆனவர்களாய் மாற்றுவதே தமது முதல் கடமை என்று அதை நோக்கியே இவ்விரு தலைவர்களும் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
சுவாமி விவேகானந்தர் ஆற்றிய மகத்தான பணியின் நல்விளைவு, அவரது தன்னலமற்ற சேவையின் நற்பயன்... ஆங்காங்கே நூற்றுக்கணக்கில் தீரம் மிக்க தலைவர்கள் தோன்றினார்கள்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - காந்திய சிந்தனையாளர்
உலகில் வேறு எந்த நாட்டிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு அடுக்கடுக்காய் அடுத்தடுத்து இந்தியாவின் எல்லா பாகங்களில் இருந்தும் வலிமையான திறமையான தலைவர்கள் உருவானார்கள்.
யாருக்கேனும் சமயம் கிடைத்தால் பட்டியலிட்டுப் பார்க்கலாம்..
இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் எத்தனை பேர்...?
வடக்கே காஷ்மீர் தொடங்கி தெற்கே குமரி வரை ஒப்பற்ற தலைவர்கள் தோன்றி வரக் காரணமாய் அமைந்தது - சுவாமி விவேகானந்தர் ஆற்றிய எழுச்சி உரைகள்.
நாடெங்கும் புது ரத்தம் பாய்ச்சினார். மக்களிடையே தாமாக புதிய எழுச்சி பிறந்தது. முக்கியமாய் அவநம்பிக்கை மறைந்து நல்ல நம்பிக்கை வேர் விட்டது. தனி ஒரு மனிதராய் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய இந்தச் சாதனை, மனித குல வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயம். அதனால்தான் இன்றைக்கும் இளைஞர்களின் முன்மாதிரியாய், 'கவர்ச்சி நாயகனாய்' திகழ்கிறார் சுவாமி விவேகானந்தர்!
சாதி, சமயம், இனம், மொழி, மாநிலம், தேச எல்லைகளைக் கடந்து, மனித குலம் முழுமைக்குமான பேராற்றலாக, உலக இளைஞர்களின் உந்து சக்தியாக சுவாமி விவேகானந்தர் தொடர்ந்து நம்மை நல்வழிப்படுத்துவார்.
வளமான செழிப்பான ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு இளைஞர்களின் கலங்கரை விளக்கமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கும் சுவாமி விவேகானந்தரை, தேசிய இளைஞர் தினத்தில் போற்றுவோம்: பின் தொடர்வோம்.
- `உங்களின் உயரத்தையும் உடல்வலுவையும் பார்த்தால் நீங்கள் பெரும் சக்தியுடையவர் என்று தெரிகிறது!` என்றார் சேந்தனார்.
- கருவறையில் களி சிதறிக் கிடக்கும் செய்தியை ஓடோடிப் போய் அரசரிடம் தெரிவித்தார்கள்.
சிதம்பரம் அருகே வாழ்ந்து வந்தார் சேந்தனார் என்கிற அன்பர். அவர் ஓர் எளிய விறகு வெட்டி. விறகு வியாபாரம் செய்து பொருளீட்டி வந்தார்.
விறகுவெட்டியே ஆனாலும் மாபெரும் சிவபக்தர் அவர். விறகு வெட்டும்போதும் வெட்டிய விறகைக் கூவி விற்கும் போதும் எந்நேரமும் சிவனையே மனத்தில் சிந்தனை செய்வார்.
உண்ணும்போதும் உறங்கும்போதும் கூட சிவ சிந்தனை அல்லாமல் வேறு சிந்தனை அவரைத் தீண்டியதில்லை. அவருக்கு வாய்த்த மனைவியும் அவரைப் போலவே சிவ பக்தியுடன் திகழ்ந்தாள்.

சிவ பக்தியில் திளைத்து சிவநெறிப்படி வாழ்ந்துவந்த அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. நாள்தோறும் சிவனடியார் யாரேனும் ஒருவருக்கு உணவளித்த பின்தான் அவர் உணவு உட்கொள்வார்.
சிவனடியார்களைச் சிவ வடிவமாகவே கண்ட அவர், அவர்களுக்கு உணவளிப்பதைச் சிவனுக்கு நிவேதனம் செய்வதாக எண்ணிக் கொள்வார். அவர்கள் தாம் அளித்த உணவை உண்டபின் சிவனே உண்டுவிட்டான் என்ற திருப்தியில், பின்னர் தாம் உணவுண்பார் அவர். அவர் உணவு உண்டபின் அவர் மனைவி உணவு உண்பாள்.
அன்று ஒரு வித்தியாசமான நாள். கடும் மழை. வெட்டி வைத்த விறகுகள் அனைத்தும் மழை பெய்ததால் நனைந்து ஈரமாகி விட்டன. ஈர விறகுகளை யார் வாங்குவார்கள்?
விறகை விற்றால்தான் கொஞ்சமாவது பணம் கிடைக்கும். அதை வைத்து அரிசி வாங்கிச் சோறு சமைக்கலாம். சிவனடியார் ஒருவருக்கு அமுது படைத்தபின் அவரும் அவர் மனைவியும் உணவுண்ணலாம்.
ஆனால் சோதனையாக அன்று விறகு விற்கவே முடியவில்லையே? ஈர விறகு அவர் வயிற்றிலும் ஈரத் துணியைக் கட்டிக்கொள்ளும் நிலைமைக்கல்லவா அவரைத் தள்ளி விட்டது?
இப்போது யாரேனும் சிவனடியார், வழக்கம்போல் தாம் உணவளிப்போம் என்ற நம்பிக்கையோடு தம் வீடுதேடி வந்தால் என்ன செய்வது?
அரிசி வாங்கக் காசில்லாத அவர் இப்போது என்ன செய்வது என மனைவியிடம் வினவினார். வீட்டில் தேடித் தேடிப் பார்த்தாள் மனைவி. கொஞ்சமே கொஞ்சம் கேழ்வரகு இருந்தது.
சிவனடியார் வந்தால் களியையேனும் கொடுப்போம் என்ற எண்ணத்தில் கேழ்வரகில் களி சமைத்து வைத்தாள். சிவனடியார் வந்து களியுண்டபின் நாமும் உண்ணுவோம் என்ற எண்ணத்தோடும் பசியோடும் காத்திருந்தார் சேந்தனார்.
ஆனால் அன்று பார்த்துச் சோதனையாக யாருமே வரவில்லை. களிதான் கிடைக்கப் போகிறது என்று எப்படியோ தெரிந்துகொண்டு களியைச் சாப்பிட வருவானேன் என்று யாரும் வரவில்லையா?
சிவனடியார் ஒருவருக்கு உணவளிக்காமல் தான் எப்படி உண்பது? இன்று பட்டினிதான் போலிருக்கிறது என்று நினைத்தவாறே சிவ சிவ என ஜபித்தவாறு வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார் சேந்தனார். அவர் மனைவியும் சிவநாமத்தை ஜபித்தவாறே சிவனடியார் யாரேனும் களியுண்ண வரவேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

சிவன் தன் பக்தன் பட்டினியோடு இருப்பதை அறிந்தும் சிவனே என்றிருக்க முடியுமா? சிவன் சிவனடியாராக வேடம் புனைந்து கொண்டார். ஒப்பனை செய்துகொண்டு பழக்கப்பட்ட நடனக் கலைஞரான சிவனுக்கு வேடம் புனைந்து கொள்வது எளிதுதானே?
`நீங்கள் ஓர் உண்மைச் சிவனடியார் போலவே தென்படுகிறீர்கள்!` எனப் பார்வதி தேவியிடம் சான்றிதழ் பெற்ற பிறகு, தன் பக்தன் சேந்தன் இல்லம் நோக்கி நடந்தார் சிவன்.
`உண்ண ஏதேனும் உணவு கிடைக்குமா?` எனச் சிவனடியாரின் குரல் வாயிலில் கேட்டதும் துள்ளி எழுந்து ஓடோடி வந்தார் சேந்தனார். மெய்யெலாம் நீறு பூசி கையில் திருவோடு தாங்கி நிற்கும் சிவனடியாரைப் பார்த்து உள்ளம் குளிர்ந்தார்.
அந்தச் சிவனடியாரின் தெய்வீகப் பொலிவு நெஞ்சை அள்ளுவதாக இருந்தது, என்ன அழகு இவர் தோற்றம்!
`உங்கள் தலை சற்று ஈரமாயிருக்கிறதே? மழையில் நனைந்தீர்களோ? துவட்டிக் கொள்ளக் கூடாதா? துவட்டிக் கொள்ளத் துண்டு தரவா?` என அன்போடு கேட்டார் சேந்தனார். சிவன் தலையில் மறைந்திருந்த கங்கை மனத்திற்குள் நகைத்துக் கொண்டாள்.
`எம் தலை எப்போதுமே ஈரமாய்த்தான் இருக்கும்! துவட்டினாலும் ஈரம் போகாது!` எனச் சிரித்தார் சிவனடியார்.
`உங்கள் திருமுகம் பூரண சந்திரனைப் போல் ஒளிவீசுகிறது!` எனப் புகழ்ந்து கைகூப்பினார் சேந்தனார்.
`நீங்கள் பூரண சந்திரனின் எழிலைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் பிறைச் சந்திரனின் அழகே தனி. நான் பிறைச்சந்திரனைத் தான் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவேன்!` என்றார் சிவனடியார்.
`உங்களின் உயரத்தையும் உடல்வலுவையும் பார்த்தால் நீங்கள் பெரும் சக்தியுடையவர் என்று தெரிகிறது!` என்றார் சேந்தனார்.

திருப்பூர் கிருஷ்ணன்
`நான் சக்தி உடையவன் என்பது உண்மைதான்!` என்றார் சிவனடியார்.
`இல்லத்தின் உள்ளே வாருங்கள். எளிய உணவுதான் சமைத்திருக்கிறேன். களியுணவு. தாங்கள் அருள்கூர்ந்து அதை ஏற்று உண்ண வேண்டும்!`
`அதற்கென்ன? எந்த உணவையும் நாம் ஏற்போம். உணவின் பின் உள்ள அன்பைத்தான் நாம் பார்ப்போமே அன்றி உணவின் தரத்தையோ சுவையையோ ஒருபொருட்டாய் நாம் எண்ணுவதில்லை. ஒரு வேடன் தந்த ஊன் உணவையும் அவன் அன்பு கருதி நாம் ஏற்றிருக்கிறோம்! ஒரு கிழவி தந்த பிட்டுக்கும் நாம் ஆட்பட்டு அதை உண்டோம்!`
இப்படிச் சொன்னவாறே சேந்தனார் இல்லத்தில் நுழைந்த சிவனடியார், சம்மணமிட்டுத் தரையில் ஒரு பலகையில் அமர்ந்து கொண்டார். சேந்தனாரும் அவர் மனைவியும் வாழையிலையில் பக்தியோடு படைத்த களியமுதை ரசித்து ருசித்து உண்டார்.
`நீர் அளித்த களியமுதின் சுவை என்னைக் களிகொள்ளச் செய்கிறது!` எனச் சேந்தனாரின் விருந்தோம்பலைப் புகழ்ந்த சிவனடியார், எஞ்சியிருந்த களியைத் தன் அடுத்தவேளை உணவுக்குக் கட்டித் தருமாறு சேந்தனாரின் மனைவியிடம் கேட்டு வாங்கிக் கொண்டார்.
தங்களுக்கெனக் களி எதையும் மீதம் வைக்காமல் அனைத்துக் களியையும் சிவனடியாருக்குக் கட்டிக் கொடுத்தாள் அவள். தான் கட்டிக் கொண்டவள் அப்படிக் கட்டிக் கொடுத்ததை எண்ணி மனம் பூரித்தார் சேந்தனார்.
சிவனடியார் அவர்களிடம் விடைபெற்று இல்லத்தின் வெளியே வந்து நடந்து செல்வதுபோல் போக்குக் காட்டிப் பின் மறைந்தார்.
மறுநாள் காலை தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவிலின் கருவறையைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்! பூட்டியிருந்த கருவறையின் உள்ளே தரையெங்கும் எப்படி இத்தனை களிச் சிதறல்கள் வந்தன?
எந்தக் கள்வன் உள்ளே எப்படி வந்து இப்படியோர் அடாத செயலைச் செய்திருக்கிறான் என அவர்கள் வியந்தார்கள். வந்தவன் உள்ளம் கவர் கள்வனான சிவன்தான் என்பதை அவர்கள் அறியவில்லை.
உடனே கருவறையில் களி சிதறிக் கிடக்கும் செய்தியை ஓடோடிப் போய் அரசரிடம் தெரிவித்தார்கள்.
அரசன் முந்தைய நாள் இரவு தான் கண்ட அரிய கனவொன்றை எண்ணிப் பார்த்தான். கனவில் நடராஜப் பெருமான் தோன்றி தன்னைப் பெரிதும் நேசிக்கும் அடியார் ஒருவர் இல்லத்தில் தான் களியுண்ணச் சென்றதை அறிவித்தானே?
கனவில் கிடைத்த செய்தி உண்மைதான் என்பதை இதோ கருவறையில் உள்ள களித்துகள்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்குக் களியமுது படைத்த அந்தச் சிவனடியார் யார் எனத் தேடுங்கள் என உத்தரவு பிறப்பித்தான் அரசன். ஆனால் எங்கு தேடியும் சேந்தனார் யார் என அறிய இயலவில்லை.
அன்று நடராஜருக்குத் தேர்த் திருநாள். அழகிய தேர் கோலாகலமாக வீதியுலா செல்லப் புறப்பட்டது. மன்னனும் மந்திரி பிரதானிகளும் எண்ணற்ற பொதுமக்களும் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். பொதுமக்களில் ஒருவராய்ச் சேந்தனாரும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழையின் காரணமாக மண் இளகியிருந்தது. இளகிய மண்ணில் தேர்ச் சக்கரங்கள் புதைந்து கொண்டன. எவ்வளவு இழுத்தும் தேர் மேலே நகரவில்லை. என்ன செய்வது இப்போது?
ஆகாயத்தைப் பார்த்த மன்னன், சிவனே, கருணை காட்டு. தேரை எப்படியாவது நகரச் செய்வாய் அப்பா என மனமுருகி வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுதலுக்கு பதிலாக ஆகாயத்தில் இருந்து எழுந்தது ஓர் அசரீரிக் குரல். `சேந்தனே! நாம் தேரை மேலே செலுத்த வேண்டுமானால் என்மேல் பல்லாண்டு பாடு!` எனப் பணித்தது அந்தக் குரல்.
நான் பாடல் பாடி அறியேனே என முதலில் தயங்கிய சேந்தனார், இறைவன் கட்டளை அது என்பதை உணர்ந்து இறையருளால் தாம் பாடலானார். `மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல` எனத் தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என முடித்து மொத்தம் பதின்மூன்று பாடல்கள் பாடினார் சேந்தனார்.
யார் முயன்றும் இதுவரை நகராதிருந்த தேர், பாடல் பாடியவுடன் நகரத் தொடங்கியது. மக்கள் ஆர்ப்பரித்தார்கள். மன்னன் சேந்தனார் யார் எனத் தான் இனம்காணவேண்டிச் சிவன் நடத்திய திருவிளையாடல் இது என்பதைப் புரிந்துகொண்டான்.
சேந்தனார் கால்களில் விழுந்து வணங்கி, அவர் இல்லம் தேடிவந்து களியுண்ட சிவனடியார் உண்மையில் சிவபெருமானே என்பதை அவரிடம் தெரிவித்தான். சேந்தனாரின் விழிகளில் இருந்து பக்திக் கண்ணீர் பெருகியது.
இந்த நிகழ்ச்சி நடந்த நாள் மார்கழி மாதம் திருவாதிரை நன்னாள். இந்நிகழ்வை நினைவூட்டும் விதமாக திருவாதிரைப் பண்டிகை ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்படுகிறது. களியுண்ட சிவனுக்குத் தாங்களும் களிசெய்து படைத்து சிவபெருமானைப் போற்றி அவன் அருளைப் பெறுகிறார்கள் அடியவர்கள்.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com
- அவள் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில், ஓர் இளைஞனுக்கும், அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
- மறுநாள் காலையில், அவள் தற்கொலை செய்து கொண்டதாக, அவளின் குடும்பத்தினரால் ஊருக்குச் சொல்லப்பட்டது.
'நிதானம் தவறும்போது, நீங்கள் இழப்பதற்கு நிறைய விஷயங்கள் வரிசையில் காத்திருக்கும்'.
-சுவாமி விவேகானந்தர்
ஆணவம்தான் ஆத்திரத்தின் ஆணிவேர். ஆத்திரம் நம் கண்களை மறைக்கின்றபோது, என்னென்னவோ விபரீதங்கள் நடந்து விடுகின்றன. நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல், தூண்டிவிடுவதற்கென்றே பக்கத்தில் நாலுபேர் இருப்பார்கள். அவர்களுக்குத் தர்ம நியாயம் தெரியாது. ஒருவனின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டும், அவ்வளவுதான்!
பால் கொதிக்கின்றபோது, அதன்மேல் நீர் தெளித்தால் கொதிப்படங்கிவிடும். அதேபோல், ஒருவன் கொந்தளிக்கும்போது, அவனை அமர்த்துவதற்கு நாலு நல்ல வார்த்தைகள் பேச ஒருத்தர் இருந்தால் போதும். ஆனால், அத்தகைய நல்ல மனிதர்களைக் காண்பது அரிது.
'சண்டை சச்சரவுகள் ஏற்படாதா; தலை ஏதாவது உருளாதா' என்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களுக்கு இரத்தச் சிதறல்கள் மீதுதான் வேட்கை. கலவரங்களுக்கும் விபரீதங்களுக்கும் காரணம் என்ன? நிச்சயமாகப் பகையோ கருத்து வேறுபாடுகளோ அல்ல; தூண்டிவிடுபவர்கள்தான் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.
ஒரு சிறிய கிராமம். விவசாய பூமி. அந்தக் கிராமத்தில் மொத்தமே பதினைந்து தெருக்கள்; நூறு குடும்பங்கள். எளிய வாழ்க்கை நிலை. ஒரு குடும்பம் மட்டும்தான் வசதியில் கொஞ்சம் உயர்ந்தது. அந்தக் குடும்பத்தின் வாலிப மகள், பக்கத்து ஊரிலுள்ள கல்லூரியில் படித்தாள்.
காலையில் ஒரு பேருந்து வரும்; அதுதான் மாலையில் திரும்பி வரும். தங்கள் கிராமத்திற்கு அடுத்திருக்கும் கிராமத்திலிருந்து வரும் அந்தப் பேருந்தில்தான் அவள் கல்லூரிக்குப் போய்வருவாள். அவளுக்கு இரண்டு அண்ணன்மார். காடு, கழனி எல்லாம் அவர்களின் கண்காணிப்பில்தான்.
அவள் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில், ஓர் இளைஞனுக்கும், அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நட்பாக மாறியது. நாட்கள் செல்லச் செல்ல அதுவே காதலாகக் கனிந்தது.
அந்த இளைஞனும் கல்லூரி மாணவன்தான். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவன். காதலானபின் மனதில் துணிச்சல் அதிகரித்துவிடுகிறது. காதலைத் தவிர வேறெதையும் அது பொருட்படுத்துவதில்லை.
இருவரும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். அவர்களின் காதல் விவகாரம், ஒருநாள் அங்குள்ள கிராமவாசி ஒருவன் மூலம் அவளின் வீட்டிற்குத் தெரிந்துவிட்டது. அன்று அவள் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியபோது ஒரு பூகம்பமே காத்திருந்தது. அம்மா ஒரு மூலையில் உட்கார்ந்து தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
'இந்த ஊரில் நம்ம குடும்பத்துக்கு ஒரு மரியாதை இருக்கு. அதுல மண்ணள்ளிப்போட பாக்குறியா? அந்த ஊர்ப்பயலுக்குக் கட்டிக்கொடுக்க நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்ல' என்று அலறியபடி பெல்ட்டை எடுத்து விளாசினார் அப்பா.
அவள் முடியைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் அறைந்தான் மூத்த அண்ணன். 'நீ படிச்சிக் கிழிச்சது போதும். இனிமே காலேஜிக்குப் போகக்கூடாது. சொந்தத்துல ராசாவாட்டம் மாப்பிள்ள இருக்கான். அடுத்த மாசம் உனக்குக் கல்யாணம்' என்று உறுமினான் இளைய அண்ணன்.
வீட்டில் சிறைபட்டாள். கல்லூரிப் படிப்பு நின்றுபோனது. அந்தப் பையனின் வீட்டாரையும் போய் பார்த்து, கடுமையாக மிரட்டிவைத்தனர் அவளின் வீட்டார். எனினும், தோழி ஒருத்தி மூலம், அவர்கள் இருவரும் தகவல்களை இரகசியமாகப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அவளுக்கு அவசர அவசரமாகத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. சொந்த அத்தை மகன்தான் மாப்பிள்ளை. வைபவத்திற்கு இரு தினங்களுக்கு முன்பிருந்தே, வீட்டிற்கு உறவினர்கள் வரத்தொடங்கினர்.
திருமணத்திற்கு முதல்நாள் இரவு கிடா அடித்து விருந்து. எல்லாரும் சாப்பிட்டு முடித்து, கதைபேசிக் கதைபேசித் தூங்கச் செல்வதற்கு நள்ளிரவு ஆகிவிட்டது. விடிந்தால் திருமணம்.
திடீரெனத் தாயின் அலறல் கேட்டு, எல்லோரும் எழுந்துவிட்டனர். அறையில் படுத்திருந்த அவளைக் காணவில்லை. அம்மா மயங்கி விழுந்தாள்.
'அய்யய்யோ... மோசம் போயிட்டோம். சண்டாளி ஓடிட்டாளே... போய் புடிங்கடா' - கூப்பாடு போட்டாள் பெரிய கிழவி.
கிராமமே கூடிவிட்டது. வேல்கம்பையும், அரிவாளையும் தூக்கிக்கொண்டு ஒரு கூட்டம் ஓடி வந்தது.
'இது நம்ம மண்ணோட மானப் பிரச்சினை. ஓடுகாலிகளை புடிச்சி வெட்டிப் பொலி போட்டாதான் நம்ம வம்சத்துக்கு மரியாதை' என்றான் கூட்டத்தில் ஒருவன். வெறி தலைக்கேறி நின்ற அவளின் அண்ணன்மாரின் கைகளில் அரிவாளைக் கொடுத்தான் இன்னொருவன்.
'ஊர் எல்லையைத் தாண்டுறதுக்குள்ள மடக்கிப் புடிச்சிடணும்' என்று ஒரு பெரிய குரல் ஒலிக்க, அந்த நள்ளிரவு வேளையில் கையில் ஆயுதங்களுடன் டார்ச் லைட்டையும் பிடித்துக்கொண்டு திபுதிபு எனக் கிளம்பினர்.
நான்கு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களில் தேடினார்கள். அகப்படவில்லை. அவளின் அண்ணன்மாருடன் இருவர் சோளக்காட்டுப் பக்கம் ஓடினார்கள். சோளக்கதிர்கள் எட்டடி உயரத்திற்கு வளர்ந்திருந்தன. கும்மிருட்டில் காற்றின் இரைச்சல். தூரத்தில் நாய்கள் ஊளையிட்டன. சோளக்கதிர்களுக்கிடையே சரசர எனச் சத்தம்.
'டேய் ரெண்டு பேரும் இங்கதான்டா இருக்காங்க... புடிச்சி வெட்டிச்சாய்ங்கடா' என்று ஒருவன் கத்தினான்.
அண்ணன்மார் விருட்டென்று சோளக் கதிர்களுக்குள் பாய்ந்தனர். அவர்கள் இருவரும் தடதட என்று ஓடத் தொடங்கினர். அவள் நிலைதடுமாறிக் கீழே விழ, அவர்களின் கைகள் அவளின் தலைமுடியைப் பற்றிப் பிடித்திழுத்தன. அவன் எப்படியோ தப்பி ஓடிவிட்டான்.
அவளைத் தரதரவென்று வீட்டிற்கு இழுத்து வந்தார்கள்.
'இவளை அடிச்சிக் கொல்லுங்க. அவனையும் புடிச்சிக் கண்டந்துண்டமா வெட்டிக் கூறுபோடுங்க' என்றது ஒரு மிருகம்.
'த்தூ... நம்ம ஊருக்கே மானக்கேடு' என்று துண்டை உதறிச் சென்றது ஒரு பெருசு.
'பொட்டப்புள்ளைய இப்படியா வளர்க்கிறது... இவளக் கொத்திப் பொதைச்சாலும் இந்த மண்ணு வெளங்காது' என்றாள் ஒரு வம்புக்காரி. ஆளாளுக்கு விஷவார்த்தைகளைத் தூவிவிட்டுச் சென்றனர்.
அவளை வீட்டிற்குள் இழுத்துப்போய் கதவைச் சாத்தினர். பெற்றோர் உட்பட அனைவரும் அரக்கத்தனமாய்த் தாக்கிட, வெகுநேரம் வரையிலும் அவளின் கதறல் சத்தம் கதவுகளுக்கு வெளியே கசிந்து கொண்டிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அடங்கியது. மறுநாள் காலையில், அவள் தற்கொலை செய்து கொண்டதாக, அவளின் குடும்பத்தினரால் ஊருக்குச் சொல்லப்பட்டது.
ஆணவம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். ஆத்திரம் அழிவை ஏற்படுத்தும். மூர்க்க குணத்தினால் வேறென்ன லாபம்! கரடுமுரடான மனதில் கருணை சுரப்பதில்லை. அது யாருக்கும் செவிமடுப்பதுமில்லை. மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதுமில்லை. அதனால்தான் மோதல்களும் விபரீத விளைவுகளும்.
மனிதன் நிதானத்தை இழக்கின்றபோது, சொந்த பந்தங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றான். மற்றவர்கள் மீதான தனது உரிமையின் வரையறையையும் அவன் மறந்துவிடுகின்றான். ஒருவன் தன்னைத்தான் இழந்துவிடுகின்றபோது, அவனிடத்திலிருந்து தீமையைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்!
எல்லாருக்கும் தேவை நிதானம். நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம். நம்மில் எத்தனை பேருக்கு நிதானம் இருக்கிறது. பதற்றப்படாமல் நிதானமாகச் சிந்தித்தால் எத்தனையோ கேடுபாடுகளைத் தவிர்த்துவிடலாம். அதற்குப் பொறுமை அவசியம்.

அதிவேகமாக ஓடுகின்ற விலங்கு சிறுத்தை. சூழலுக்குத் தக்கபடி வேட்டையாடும் தன்மை; வாழ்விடத்துக்குத் தக்கபடி இசைவாகும் குணம்; மணிக்கு 58 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றல்! எனினும், ஒரு கட்டத்திற்குமேல் அதன் உடல் அதிக சூடாகிவிடும். அப்படி சூடாகும்போது, அந்த நொடியே ஓட்டத்தை நிறுத்தக்கூடிய நிதானம் சிறுத்தைக்கு இருக்கிறது. தன் உடலை நிர்வகிக்க அந்தச் சிறுத்தைக்குத் தெரிந்திருக்கிறது. அந்த ஞானம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது.
நிதானம் தவறும்போது நம் பார்வை மயங்குகிறது. பாதை தவறுகிறது. ஒருசில நொடிகளில் வாழ்க்கையே தலைகீழாய் மாறிவிடுகின்றது. ஆத்திரம் ஒருபோதும் நிம்மதியைத் தராது. நிதானமாய்ச் சிந்திக்கின்றவர்களுக்குக் கோபம் வராது. ஆத்திரம் காயப்படுத்தும்; அல்லது காயப்படும்.
வார்த்தைகளால் யார் மனதையும் நாம் புண்படுத்திவிடக் கூடாது. நம் செயல்களால் யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்னும் உறுதிப்பாடு நமக்கு வேண்டும். அதுதான் மனிதத்தன்மை.
ஒளரங்கசீப் மாபெரும் முகலாயச் சக்கரவர்த்தி. அவரின் மகன் அவருக்கு எதிராக ஒரு சேனையைத் திரட்டிப் புரட்சி செய்கிறான். உடனே ஒளரங்கசீப் படைகளை அனுப்பி, தன் மகனைப் பிடித்துவரச் சொன்னார்.
'அவன் உடம்பில் எந்தக் காயமும் ஏற்படக் கூடாது. அடிபடாமல் பத்திரமாக அவனைப் பிடித்து வாருங்கள்' என்று உத்தரவிட்டார்.
நாட்டில் புரட்சியை ஏற்படுத்திய மகன். அவனைப் பிடித்துக் கைது செய்ய வேண்டியது அவசியம். எனினும், அவன்மேல் சிறு காயம்கூட ஏற்படக் கூடாது என்று பெற்ற மனம் நினைக்கிறது.
நிதானம் ஒரு நல்லொழுக்கம். அது எப்போதும் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் முன்னிறுத்துகின்றது. சமநிலை என்பது என்ன? எல்லா தரப்பிற்கும் செவிமடுப்பது; பிடிவாதமாக இல்லாமல் இணக்கமாக இருப்பது; சிக்கலைப் புரிந்து கொண்டு மனிதாபிமானத்துடன் அணுகுவது.

கவிஞர் தியாரூ, 9940056332
பிரச்சினைகள் எதுவாகவும் இருக்கட்டுமே. அதிலிருந்து சற்று விலகி நின்று யோசித்தால், எல்லாம் நன்றாக முடிந்துவிடும். நிதானம் ஒன்றே நம்மை நல்வழிக்குக் கொண்டு செல்லும். எதிலும் பதற்றப்படாமல் சிந்திப்பதுதான் மனப்பக்குவத்தின் அடையாளம்.
நம் ஆத்திரத்தை மேலும் மேலும் தூண்டிவிட்டு, அதனால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளை வேடிக்கை பார்ப்பதற்கென்றே சிலர் நம் அருகில் இருப்பார்கள். நாம் ஜாக்கிரதையாக இல்லை என்றால், இழப்பும் இன்னல்களும் நமக்குதான்.
செயல்படும்போது கடைபிடிக்கப்படும் பொறுமைதான் நிதானம். செயல்படத் தொடங்கு முன் கடைபிடிக்கப்படும் நிதானம்தான் பொறுமை.
நிதானத்தை நாம் இழந்துவிட்டால், வாழ்க்கை வழிதவறிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆணவம், ஆத்திரம், கோபம், வெறித்தனம் எல்லாமே நம் வாழ்வை நொடிப்பொழுதில் அழிக்கும் பொல்லாத விஷயங்கள். எனவே நிதானத்தைக் கடைபிடிப்போம். ஆத்திரமூட்டுபவர்களை அப்புறப்படுத்துவோம். நிம்மதியுடன் வாழக் கற்றுக் கொள்வோம்.
- “தாமாக ஏற்படுபவை அனைத்தும் சிந்தனைகள் (Thought) ஆகும். நாமாக சிந்திப்பவை அனைத்தும் சிந்தித்தல் Thinking ஆகும்...
- “நீங்களாக சிந்திக்காமல் இருக்கும்பட்சத்தில், அலை அலையாக வந்த சிந்தனைகள் யாவும் தாமாகவே சமன்பட்டு விடும்.
அவர் ஒரு வங்கியின் மேலாளர். அவரது பணிகளையெல்லாம் திறம்பட செய்து முடிக்கக்கூடியவர்.
வங்கிகளின் மேலாளர்கள் அனைவருக்குமான ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
அந்த மேலாளரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். தலைமை அதிகாரி ஒருவர் தலைமை தாங்கி, உரையாற்றிக் கொண்டிருந்தார்.
தலைமை அதிகாரி மிகவும் சீரியசாக உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், நமது வங்கி மேலாளரின் செல்போன் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
அப்போது தான் அவருக்கு தனது செல்போனை சைலன்ஸில் போட மறந்து போனது தெரிய வந்தது.

தலைமை அதிகாரி உட்பட அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது. அவர் பதறிப்போய் செல்போனை முழுவதுமாக அணைத்து வைத்து விட்டார்.
ஆனாலும் கோபங்கொண்ட அந்தத் தலைமை அதிகாரி, "செல்போனை ஆப் செய்யாமல் எப்படி நீ கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்?" என்று கேட்டு அவருக்கு, தண்டனையாக பணி மாறுதல் உத்தரவு ஒன்றைப் போட்டுவிட்டார்.
சக மேலாளர்களுக்கு மத்தியில் அவருக்கு மிகுந்த அவமானமாகி விட்டது.
"செல்போனை ஆஃப் செய்யாமல் இருந்தது ஒரு தவறு தான். இருந்தாலும் இந்த ஒரு அற்பமான தவறுக்காக எப்படி என்னை இப்படி ஓர் உத்தரவு போட்டு அவமானப்படுத்தலாம்? நான் எத்தனை ஊழியர்களுக்கு மேலதிகாரியாக இருக்கிறேன். அவர்களெல்லாம் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?"என்று பலவாறாக எண்ணி எண்ணி அந்த மேலாளர் நான்கு நாட்களாக தூக்கம் இல்லாமல் தவித்தார்.
அந்நிலையில் தான் அவர் நம்மிடம் ஆலோசனைக்கு வந்தார். அவர் தனது பிரச்சனையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
"உங்களுக்கு ஆவேசத்தை ஏற்படுத்தும் உத்தரவு போடப்பட்டுவிட்டது. அது உங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த நிலையில் அது சம்பந்தமான பல்வேறு சிந்தனைகளும் உங்களுக்கு ஏற்படுவது இயற்கையே...
இந்த நிலையில் உங்கள் சிந்தனையின் இயக்கம் பற்றிய சில உண்மைகளையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிந்தனைகள் இரண்டு வகையானவை. உங்களை அறியாமல் உங்களுக்கு ஏற்படும் சிந்தனைகள் யாவும் முதலாவது வகையைச் சார்ந்தவை ஆகும். நீங்களாக சிந்திப்பது அனைத்தும் இரண்டாவது வகையைச் சார்ந்தவை ஆகும்...
"தாமாக ஏற்படுபவை அனைத்தும் சிந்தனைகள் (Thought) ஆகும். நாமாக சிந்திப்பவை அனைத்தும் சிந்தித்தல் Thinking ஆகும்...
"சிந்தனைகள் எவற்றுக்கும் நாம் பொறுப்பு கிடையாது. அவை தாமாகத் தோன்றி தாமாகவே மறைந்துவிடுகின்றன. அவை, அலை அலையாகத் தோன்றும் காரணத்தினால், அவை தொடர்ந்து இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விடுகின்றன...
"அவை அனைத்தும் இடி ஓசையைப் போன்றவையே. இடி மின்னல் பற்றி நமக்குத் தெரியும். இடி வேறு மின்னல் வேறு கிடையாது. இரண்டுமே ஒன்றுதான். மின்னல் ஏற்பட்டு மறைந்த சில விநாடிகள் கழித்தே இடியோசை நமக்கு கேட்கிறது. ஒளியின் வேகம் அதிகம். அதனால் அது வேகமாக நம்மை வந்து அடைகிறது. ஒலியின் வேகம் குறைவு. அதனால் அது நம்மை அடைவதற்கு தாமதம் ஏற்படுகிறது.

உண்மையில் இடி என்பது மின்னலோடு முடிந்து மறைந்து விடுகிறது. இடியோசை கேட்கும்போது உண்மையில் இடி என்ற பெயரில் எதுவுமே அங்கு கிடையாது.
சிந்தனைகள் அனைத்தும் இடியோசை போன்றவையே. அவை மறையும்போது தான் அவை வந்ததே நமக்குத் தெரிகின்றது...
"அனைத்து சிந்தனைகளும் நம்மை அறியாமல் தான் நமக்குள் ஏற்படுகின்றன. Unconscious ஆக நமக்குள் ஏற்படுகின்றன. அவை அனைத்தும் மின்னலாகத் தோன்றி, மின்னலாகவே மறைகின்றன. அவை மறைந்திடும் நிலையில் தான் அவற்றை நாம் புரிந்து கொள்கிறோம்...
அப்படி அவை மறைந்திடும் நிலையில், நாம் அவற்றின் மீது நாமாக ஏறி சவாரி செய்து விடுகிறோம்.
இதனால் சிந்தனைகள் அனைத்தும் சிந்தித்தல் ஆக மாறிவிடுகிறது...
"சிந்தனைகள் அனைத்தும் பலமற்றவை. ஆனால் சிந்தித்தல் என்பது அப்படியல்ல. அவை பலம் மிகுந்தவை. உங்களுக்கு நடந்துவிட்ட மோசமான சம்பவம் குறித்த சிந்தனைகள் வருவது இயற்கையே.
அவை அப்படி தான் வரும். ஆனால் அப்படி வந்துவிட்ட சிந்தனைகள் மீது நீங்களாக ஏறி அமர்ந்து கொண்டு, "எப்படி இவ்வாறு உத்தரவு போடலாம்?" என்று நீங்கள் சிந்திப்பீர்களேயானால், பலமற்ற சிந்தனைகள் யாவும் பலமடைந்து விடும். இதனால் தேவையற்ற ஹார்மோன்கள் உங்களுக்குள் சுரந்து உங்களுடைய தூக்கத்தை யெல்லாம் கெடுத்து விடும்...
"ஒரு வேளை நீங்கள் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பினால், நீங்கள் சிந்தித்து தான் ஆக வேண்டும். செயல்படுவதற்காக சிந்திக்கலாம். செயல்படுவதற்கு எதுவுமே இல்லாத நிலையில் சிந்தித்தல் மட்டுமே உங்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமாக ஆகிவிடும்...
"சிந்தனைகள் அனைத்தும் உங்களையறியாமல் ஏற்பட்டவை. அவற்றை உங்களால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் சிந்தித்தல் என்பது தாமாக ஏற்பட்டதல்ல. அது நீங்களாகக் கொண்டு வந்த ஒன்று. அதனால் அந்த சிந்தித்தலில் இருந்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வந்து விடலாம்...
"நீங்களாக சிந்திக்காமல் இருக்கும்பட்சத்தில், அலை அலையாக வந்த சிந்தனைகள் யாவும் தாமாகவே சமன்பட்டு விடும். உங்களுக்கு அது சம்பந்தமாக எந்த வேலையுமே கிடையாது."
இவ்வாறு அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அவர் சிந்தனைக்கும் சிந்தித்தலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டு தனது பிரச்சனையில் இருந்து விடுபட்டார்.

ஸ்ரீ பகவத்
இதுபோல் ஒரு முறை கோவை சென்றிருந்தபோது ஓர் இளம்பெண் தனது பிரச்சனையைக் கூறி தீர்வு கேட்டாள்.
இளைஞன் ஒருவன் அவளோடு நட்புடன் பழகியிருக்கிறான். இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்துள்ளனர்.
ஆனால் அவனோ அவளை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான்.
அதிர்ச்சி அடைந்த அவள் மனம் உடைந்து போனாள். மன உளைச்சலில் இருந்து விடுபட்டு அவளால் வெளியே வர முடியவில்லை.
அவளுக்கும் சிந்தனை என்றால் என்ன, சிந்தித்தல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளும்படிஎடுத்துக் கூறினோம்.
"அம்மா உங்கள் நிலையில் யார் இருந்தாலும் மன வருத்தம் ஏற்படத்தான் செய்யும். அது சம்பந்தமான சிந்தனைகள் ஏற்படத்தான் செய்யும்...
ஆனால், தாமாக ஏற்பட்ட அந்த சிந்தனைகளின் மீது நீங்களாக ஏறி உட்கார்ந்து சவாரி செய்து கொண்டு,
'அவன் எப்படி இவ்வாறு ஏமாற்றலாம்? அவனை சும்மா விடக்கூடாது. அவனை ஏதாவது செய்ய வேண்டும் ' என்று நீங்களாகவே ஏதாவது சிந்திப்பது தான் உங்கள் பிரச்சனையை மேலும் மேலும் சிக்கலாக்குகின்றது...
"நீங்கள் இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகி இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே சட்டபூர்வமான உரிமைகள் எவையும் இல்லை. நீங்கள் இருவரும் எவரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்...
உங்கள் இருவருக்கும் இடையே சட்டபூர்வமான உரிமைகள் எவையாவது இருந்திடும் பட்சத்தில், நீங்கள் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்...
அப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் ஏதாவது எடுத்திட நேர்ந்தால், அது சம்பந்தமாக நீங்கள் சிந்தித்து தான் ஆக வேண்டும். இங்கு அத்தகைய சூழ்நிலை எதுவும் இல்லை. அதனால் நீங்கள் சிந்திக்க வேண்டிய அவசியமும் இல்லை...
சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் கூட, உங்கள் சிந்தனைகளைத் தவிர்க்க முடியாது. உங்களை அறியாமல் அவை வந்து கொண்டே தான் இருக்கும்...
அவற்றின் மீது ஏறி அவற்றை நீங்கள் சிந்தித்தல் ஆக மாற்றாமல் இருந்தால் மட்டும் போதும். தாமாக ஏற்பட்ட சிந்தனைகள் யாவும் தாமாகவே சமன்பட்டு மறைந்துவிடும்."
நாம் சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் திருப்தியான மனநிலையோடு அவள் விடைபெற்றுச் செல்லவில்லை.
மறுநாள் காலையில் அவள் நம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அவளுக்கு இன்னும் கொஞ்சம் ஆலோசனை தேவைப்படலாம் என்று தோன்றியது.
"என்ன வேண்டும் அம்மா?" என்று கேட்கவும் அவள் பேசினாள்:
"அய்யா எனது பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இன்று காலையில் எழுந்தது முதல் எனக்கு ஒரே பரவசமாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறது. பிரச்சனையில் எந்தத் தீர்வும் கிடைக்காமல் எனக்கு இந்த ஆனந்த உணர்வு மட்டும் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
"நமக்கு ஏற்படும் சிந்தனைகளை சிந்தித்தல் ஆக மாற்றாத பட்சத்தில், நமது மன இறுக்கங்கள் தளர்வடைந்து ஒரு வித மனச்சமநிலை ஏற்படுவது அனைவருக்குமே சாத்தியம் தான்.
ஆனால் இந்தப் பெண்ணைப் பொறுத்தவரையில், அவள் மிகவும் அதிகமான மன இறுக்கத்துடன் விட்டிருந்த காரணத்தினால், அவளுடைய மன இறுக்கங்கள் தற்போது தளர்ந்த நிலையானது, அவளுக்கு ஒருவித பரவச நிலையையே ஏற்படுத்தி இருந்திருக்கிறது.
தொடர்புக்கு,
sribagavathji@gmail.com
- பெருமாள் பதில் பேசாமல் அவரை பார்த்தான்.
- எதிர்முனையில் “டேவிட்... நான் திவ்யா பேசறேன்” என குரல் கேட்டது.
"என்ன சார்... என் போன் ட்ரை பண்ணிகிட்டே இருந்திருப்பீங்களே... சுவிட்ச் ஆஃப் ஆனதும், திவ்யாவ நான்தான் ஆள் வெச்சு கடத்திட்டேன்னு எல்லோருமே முடிவு பண்ணி வெச்சுருப்பீங்களே..."
காரை விட்டு இறங்கிய பெருமாள், இப்படி கேட்டதும், அழகர் அதிர்ந்தார்.
"சார்... காலையில திவ்யா காணாமல் போயிட்டதா எங்கப்பா போன் பண்ணிட்டார்..."
அனைவரும் ரங்கராஜனை பார்த்தனர்.
"அவசரமா கிளம்பினதுலே இன்னிக்கு போன் பில் கட்ட கடைசித் தேதின்னு மறந்துட்டேன்... சர்வீஸ் கட் பண்ணிட்டான். வர்ர வழியில இ-மையம் எதும் கண்ணில படலே... அவசரமா வேற செல்ஃப் ட்ரைவுல வந்தேனா, உங்க ஊருக்கு வந்துதான் போன் பில் கட்டிட்டு வரன்... ஏம்ப்பா... நா வந்தேன்னு சொல்லலியா...?"-ரங்கராஜனை பார்த்து கேட்டான் பெருமாள்.
"இல்லப்பா... உன் போன் சுவிட்ச் ஆஃப்னு சொன்னாங்க... காலையில பேசுனவன் ஏன் போன் ஆஃப் பண்ணிட்டான்னு குழம்பி..."
"நீங்களும் ஒரு வேளை பெருமாள்தான் ஆள் வெச்சு திவ்யாவ கடத்தி இருப்பானோன்னு குழம்பி... சைலண்ட் ஆயிட்டீங்க... அப்படித்தானே?"
ரங்கராஜன் தலைகுனிந்தார்.
"உங்க மேல தப்பு இல்லப்பா... அது நம்ம நாட்டு மக்களோட வியாதி... ஒருத்தனை தப்புனு சொல்லிட்டா... என்ன ஏதுன்னு விசாரிக்காம எல்லோரும் அதையே நம்புறது... சாஞ்சா சாயுற பக்கமே சாயுற ஆடுங்க புத்தி..."
எல்லோரும் பார்க்க... பெருமாள் தொடர்ந்தான். "சரி... இன்ஸ்பெக்டர்... இப்ப என் தங்கச்சி நிலமை என்ன... ஏதாவது க்ளு கிடைச்சுதா... இல்ல அரசியல் ரீதியா நான் ஏதாவது ஆக்ஷன் எடுக்கணுமா...?"
"அதெல்லாம் தேவை இல்ல சார்... விசாரணையை இப்பத்தான் தொடங்கி இருக்கோம். கை குலுக்கிற மாதிரி ஸ்டிக்கர் ஒட்டின ஊதா இன்னொவால் கடத்தினதாக லேட்டஸ்ட் நியூஸ். நம்பர வச்சு வண்டிய தேடுறோம்..."
"ட்ரக்ல கடத்துனதா சொன்னாங்க..."

இயக்குநர் A. ெவங்கடேஷ்
"டரக்ல இருந்து, காருக்கு ஷிப்ட் பண்ணி கூட்டி போயிருக்காங்க... ட்ரக் நம்பர் போலின்னு தெரிஞ்சுட்டது..." -இன்ஸ்பெக்டர் சொன்னார்,
"ட்ரக் நம்பர் போலின்னா... ஊதா இன்னொவா நம்பர் மட்டும் ஒரிஜினலாவா இருக்கப் போகுது..."
பெருமாள் பேசிக் கொண்டிருந்த அதே வேளை...
"கருப்பு நிற கியா காருக்கு மாற்றப்பட்ட திவ்யா மயக்க நிலையிலே இருக்க. ஊதா நிற இன்னொவா காரில் வந்த மனோகர் மற்றும் இருவருக்கும் பணம் கைமாறியது. கியாவை ஓட்டி வந்தவன் சொன்னான்."
"முதல்ல காரோட நம்பர் பிளேட்ட மாத்துங்க... கை குலுக்கிற ஸ்டிக்கர கிழிங்க. அடுத்து பக்கத்து ஊருல போங்க. அங்க சர்ச்சுக்கு பக்கத்துல நமக்கு வேண்டிய மெக்கானிக் பேரு பச்சை... அவன் கிட்ட கார் ஷெட் இருக்கு. வண்டிய விட்டுட்டு நீங்க பஸ்ஸ பிடிச்சு சொந்த ஊருக்கு போயிடுங்க... நான் தேவைன்னா கால் பண்றேன்..."
மனோகர் உள்பட மூவரும் தலையாட்ட திவ்யாவுடன், அந்த கருப்பு கார் கிளம்பியது.
"என்னது கை குலுக்கிற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தா அது என் ஃப்ரண்ட்டோட வண்டியா...?"
இன்ஸ்பெக்டர் அழகரிடம் டென்ஷனாய் கேட்டான் பெருமாள்.
"சார்... அந்த வண்டி என் ப்ரண்ட் இசக்கியப்பனோடது. திருநெல்வேலி டவுன்ல சன்னதி தெருவுல இருக்கான். நம்பர் தரேன். பேசுங்க. இந்த ஸ்டிக்கர் ஒட்டின வண்டி வேற யாரோடதோ?"
பேசிக்கொண்டு இருந்தவன் சட்டென்று திரும்பி மொத்த குடும்பத்தையும், டேவிட் நண்பர்களையும் பார்த்தான். பின் இன்ஸ்பெக்டர் அழகரிடம் திரும்பி, "சார்... ஒரு பத்து நிமிஷம் இவங்ககிட்ட சில விஷயங்களை பேசிட்டு வரேன்..."
போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள டீக்கடை பெஞ்சுகளில் எல்லோரும் அமர்ந்திருக்க, டீ குடித்தபடி பெருமாள் பேசினான்.
"இங்க பாருங்க... முதல்ல நீங்க என்னை இந்த சந்தேக பார்வை பார்க்காதீங்க. திவ்யா-டேவிட் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லாம இருந்தது உண்மைதான். ஆனா, அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் என் மனசும் மாறிடுச்சு. சரி, ஊரு, உலகத்துல இல்லாததான்னு நெனச்சு மனச மாத்திகிட்டேன்" குரல் கம்ம பெருமாள் பேசினான். டீயை ஒரு உறிஞ்சி தொண்டையை ஈரப்படுத்தியவன் தொடர்ந்தான்.
"ஆனா... அன்னிக்கு நெல்லை போலீஸ் ஸ்டேஷன்ல என்னை சந்தேகப்பட்டீங்க... கோபமாய் கிளம்பி போயிட்டேன்... மனசு கேட்கலை. மறுபடியும் அப்பாவை சந்திச்சு பேசினேன். என் நிலமையை சொன்னேன்..."
எல்லோரும் ரங்கராஜனை பார்க்க, அவர் "ஆமாம்!" என்பதுபோல் தலையாட்டினார்.
திவ்யா, டேவிட் கிட்ட தப்பா நடந்துகிட்ட ரவுடிகளை பிடிக்க, இந்த இன்ஸ்பெக்டர் அழகர் முனைப்பு காட்டலை'ங்கற கோபத்துல, அவர அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி டிரான்ஸ்ஃபர் பண்ணேன்."
"ஆனா... இன்னிக்கு திவ்யா காணமப்போன கேஸை அதே அழகர்கிட்டயே வந்திருக்கே!" - டேவிட் நண்பர் தியாகு கேட்டான்.
"யெஸ்... அதான் விதி. இப்ப இனிமே திவ்யா கிடைக்கற வரைக்கும் நாம எல்லாம் ஒருத்தர ஒருத்தர் முழுசா நம்பணும். குறிப்பா, நீங்க எல்லாம் என்னை நம்பணும்... என்ன சரியா...?"
எல்லோரும் பார்க்க பெருமாள் சொன்னான்.
"இங்கப் பாரு... கல்யாணத்துல பிரிஞ்ச குடும்பம், கஷ்டம்னா சேரும்னு சொல்லுவாங்க. நம்ம திவ்யா விஷயத்துல அதான் நிஜம். என்னை நம்புங்க... திவ்யாவை கண்டுப்பிடிச்சுடலாம்..."
அனைவரும் சரி என்பதுபோல தலையாட்டினர்.
"சார்... உங்க எல்லோரையும் இன்ஸ்பெக்டர் உடனே கூப்பிடுறார்..."
ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற கான்ஸ்டபிள் இவர்களை கத்தி கூப்பிட்டார். அனைவரும் அவசரமாய் ஸ்டேஷனை நோக்கி விரைந்தனர்.
ஸ்டேஷன் உள்ளே நுழையவும், இவர்களுக்காக காத்திருந்த இன்ஸ்பெக்டர் அழகர், பெருமாளிடம் டெலிபோன் ரீசிவரை நீட்டியபடி சொன்னார்.
"பெருமாள்! உங்க தங்கச்சிய கடத்தினவன் உங்ககிட்ட பேசணுமாம்!"
போனை அவரிடம் இருந்து பிடுங்காத குறைதான். ரிசீவரை பறித்து பெருமாள் காதில் வைத்தான். எதிர்முனை கரகரத்தது.
"என்ன பெருமாள்... தங்கச்சிய நீங்க கடத்தலன்னு எல்லாத்துக்கும் புரிய வைக்க இம்புட்டு நேரமா?"
"டேய்... யார்ரா நீ?"
"அதான் சொல்லிட்டேனே... நல்லவன்!"
"உனக்கு என்னடா வேணும்... எதுக்குடா திவ்யாவ கடத்துன?"
"எமோஷனல் ஆகாத பெருமாள்... இனிமே நான் போன் பண்ண மாட்டேன்... உன் தங்கச்சி உனக்கு வேணும்னா... அந்த டேவிட்டுக்கு அவ பொண்டாட்டி வேணும்னா..."
"என்ன செய்யணும்... சொல்றா... செய்யறோம்..." - பெருமாள் படபடப்பாய் கத்தினான்.
"ஒண்ணும் செய்ய வேணாம்... மூடிட்டு எல்லோரும் ஊருக்கு போயி... அவங்க அவங்க வேலைய பாருங்க..."
போன் கட் ஆனது. இன்ஸ்பெக்டரிடம் திரும்பிய பெருமாள், "என்ன சார்... எதுவும் வேணாம்... உன் தங்கச்சிய தேடுறத விட்டுட்டு எல்லோரும் திரும்பி போங்கன்னு சொல்றான்... சைக்கோ மாதிரி பேசுறான்..."
சேரை விட்டு எழுந்த அழகர், "எஸ்... சைக்கோ மாதிரிதான் இருக்கு அவன் பேச்சு... இவன பிடிக்காம விடக்கூடாது..." என்று கூறி, தன் செல்போனில் சில எண்களை தட்டினார். எதிர்முனை தொடர்புக்கு வந்ததும், "ஹலோ... நம்ம ஸ்டேஷனுக்கு லேண்ட்லைன்ல இப்ப ஒரு கால் வந்தது. அது எந்த நம்பர்ல இருந்து வந்ததுன்னு உடனே ட்ரேஸ் பண்ணி தகவல் கொடுங்க..." - போனை ஆஃப் செய்தார்.
அந்த இடம் ஏறக்குறைய ஒரு பொட்டல் காடு மாதிரி இருந்தது. ட்ரக் மட்டும் நிற்க, அதை போலீஸ் நோ எண்ட்ரி என மஞ்சள் நிற ரிப்பன் கட்டபட்டு இருக்க, ஆங்காங்கே, போலீஸ் மற்றும் தடய நிபுணர்கள் இயங்கி கொண்டு இருந்தனர். மோப்ப நாய்கள் தங்கள் டூட்டியை முடித்த களைப்பில் ஓய்வெடுத்து கொண்டிருந்தன.
மொத்த குடும்பமும், பெருமாள், டேவிட் அவனது நண்பர்கள் உட்பட, குழப்பமாய் இருக்க மற்ற அதிகாரிகளுடன் பேசிவிட்டு இவர்கள் அருகே வந்த இன்ஸ்பெக்டர் அழகர், மீசையை வருடியபடி பேச ஆரம்பித்தார்.
"வண்டி தடயத்தை வெச்சு பாக்குறப்போ இங்க இருந்துதான் ட்ரக்ல இருந்து ஊதா இன்னொவாக்கு திவ்யாவை ஷிப்ட் பண்ணியிருக்காங்க... ஜூஸ் பாட்டல லேப் செக்கப் அனுப்பி கிடைச்ச ரிப்போர்ட்ல மயக்க மருந்து அதுவும் வீரியமான கெமிக்கல்ஸ் அதுல இருந்தது உறுதியாயிருக்கு... இது இந்த டீம் ரிப்போர்ட்"
அப்போது அங்கு வந்த இன்னொரு அதிகாரி அழகரிடம், "சார்... இப்பத்தான் இன்ஃபர்மேஷன் வந்தது... ப்ளு இன்னொவால இருந்து அந்த பொண்ணை வேற வண்டிக்கு மாத்திட்டாங்க..."
அந்த ஆபீசர் நகரவும், மொத்த பேரின் கண்களில் கண்ணீரும், கவலையும் சேர்ந்தது. "திவ்யா கிடைப்பாளா... மாட்டாளா... யார் அந்த நல்லவன்... இப்ப அடுத்தது என்னத்தான் செய்ய....?" திவ்யாவின் அம்மா ராஜேஸ்வரி அழுதபடி கேட்டாள்.
"இருங்கம்மா... என்கொயரி போயிட்டு இருக்கு... கவலைப்படாதீங்க... உங்க பொண்ணு கிடைச்சிடுவாங்க..." அழகர் ஆறுதலுக்காக, அப்படி சொன்னாலும், அனைவருக்கும் அது ஆறுதல் வார்த்தை என்பது அப்பட்டமாய் தெரிந்தது.
டேவிட், அழகரிடம் கேட்டான். "சார்... ஸ்டேஷனுக்கு கால் வந்ததே, அது எங்கேயிருந்துன்னு ட்ரேஸ் பண்ணிடாங்களா சார்!"
"ஆமா... அது இங்கே இருந்து அறுபது கிலோ மீட்டர் தாண்டி இருக்கிற அரிசல்குளம் அப்படிங்கிற ஒரு சின்ன கிராமத்திலுள்ள பெட்டிக்கடை பப்ளிக் போன்ல இருந்து வந்துருக்கு. நம்ம டீம் விசாரணைக்கு போயிருக்காங்க... சீக்கிரம் ரிப்போர்ட் வந்துடும்..."
அதற்குள் பெருமாள் யாரிடமோ போன் பேசிவிட்டு வர, இன்ஸ்பெக்டர் அழகர் "பெருமாள்! தேவையில்லாம இதுக்குள்ள உங்க அரசியல் செல்வாக்கை பிரயோகிக்க வேண்டாம். அப்புறம் தேவை இல்லாத பிரச்சனைகள் உருவாகும்..."
பெருமாள் பதில் பேசாமல் அவரை பார்த்தான். அப்போது டேவிட்டின் செல்போன் சிணுங்கியது. டேவிட் போனை எடுத்து காதில் வைத்தான். எதிர்முனையில் "டேவிட்... நான் திவ்யா பேசறேன்" என குரல் கேட்டது.
(தொடரும்) E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353






