என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • மருத்துவ உலகில் ஏ.ஐ. மிக அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது.
    • எந்த ஏ.ஐ. செயல்பாட்டிற்கும் அளவு, வரைமுறை இருக்க வேண்டும்.

    செயற்கை நுண்ணறிவு என்பது எந்திரங்களால் மனித உதவியுடன் செய்யக்கூடிய நுண்ணறிவு ஆகும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எந்திரங்கள் மூலம் கற்கவும் சிக்கல்களைத் தீர்க்கவும், செயல்களை திட்டமிடவும், சிந்திக்கவும் முடியும் என்கின்றனர்.

    மனித நுண்ணறிவினை எந்திரங்களால் உருவகப்படுத்துவது தான் செயற்கை நுண்ணறிவு.

    தொழில் நுட்பத் துறையில் ஏ.ஐ. எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவால் மிக உயர்ந்த வளர்ச்சியினை கண்டுள்ளது மனித சமுதாயம். இன்னும் கொஞ்ச காலத்தில் ஏ.ஐ. மனித வாழ்க்கையினையே மாற்றிவிடலாம். பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தொழில் நுட்பம் விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு புரட்சி. செயற்கை நுண்ணறிவு இன்று நுழையாத இடமில்லை எனலாம். மனிதன் மூளை ஓடும் ஓட்டத்திற்கு அவனுக்கு நேரத்தினையும் உழைப்பினையும் மிச்சப்படுத்திக் கொடுக்கின்றது இந்த தொழில் நுட்பம்.

    விவசாயத் துறையில்-நோய், சத்து குறைபாடு, தட்ப வெப்ப நிலை, தண்ணீர் தேவை, மண்வளம் என எதனையும் ஏ.ஐ. மூலம் அறிய முடியும்.

    இன்றைய கால கட்டத்தில் வங்கிகளின் உள் மனதினை (சைபர் கிரைம்) பயன்படுத்தி மக்களை ஏமாற்றி எடுக்கும் மோசடிகளைக் கூட இந்த ஏ.ஐ. மூலம் வங்கிகள் கண்காணிக்க முடியும்.

     

    மருத்துவ உலகில் ஏ.ஐ. மிக அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. நாம் உணராமலேயே எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன் என நாம் உபயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். புற்றுநோய், எலும்பு முறிவு இவைகளின் நுண்ணறிவினைக் கொண்டுதான் நோய்களை கண்டறிவது எளிதாகிறது.

    பயாப்சி முறையில் கண்டறிவதும் இவ்வாறுதான். இனிவரும் காலங்களில் ஒரு நோய்க்கு ஒரே விதமான மருந்து என்பது கூட மாறி ஒவ்வொரு தனி மனிதனின் பாதிப்பு, உடல் தேவைக்கேற்ற அளவில் கூட மருந்துகள் வழங்கப்படும். இது ஒருவரின் உடல்நல முன்னேற்றத்திற்கு எளிதாக இருக்கும்.

    மேலும் ஏ.ஐ. மூலம் ஒருவருக்கு குறிப்பிடப்பட்ட நோய்கள், பாதிப்புகள் ஏற்படுவதனைக் கூட கண்டறிய முடியும்.

    உடலில் நச்சு (செப்சிஸ்) ஆபத்து நெருங்கும் நிலை இவைகளை ஏ.ஐ. மூலம் முன்னதாகவே அறிய முடியும்.

    * ரோபோட் செயல் திறனே ஏ.ஐ. தானே

    * இன்று நுணுக்கமான அறுவைச் சிகிச்சைகளைக் கூட இதன் திறன் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.

    * ஒருவரின் முழு ரெகார்டுகளை சேமித்து நிர்வகித்து வைக்க முடியும்.

    இன்று எப்படி கணினி இல்லாமல் மனிதனால் வாழ முடியவில்லையோ. அது போல் வருங்காலத்தில் ஏ.ஐ. இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்படும்.

    இன்று வெளிநாடுகளில் காரில் அமர்ந்து ஒருவர் தான் செல்ல வேண்டிய இலக்கினை பதிவு செய்து விட்டால் போதும். அவர் எதுவும் செய்யத் தேவையில்லை. அதுவே சாலையில் சிக்னல், வேகம் இவற்றினை கண்காணித்து செல்ல வேண்டிய இடத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

    போன்களில் முக அங்கீகாரம், சிரி, விளையாட்டுகள் என இவையெல்லாம் ஏ.ஐ.யின் தனி மனிதனுக்கான சிறு வெளிப்பாடுதான்.

    செயற்கை நுண்ணறிவின் தந்தை ஜான் மென்கார்தி ஆவார். இவர் அமெரிக்க கணினி விஞ்ஞானி ஆவார்.

    ஏ.ஐ. இதனை ஆக்கப்பூர்வமாக பார்க்கும் பொழுது மிக துரிதமாக துல்லியமாக எந்த வேலைகளையும் செய்ய முடியும். மனிதன் செய்யும் பொழுது ஏற்படும் தவறுகள் குறையும்.

    * பல சேகரிப்புகளை கணித்து துல்லியமான முடிவுகளை சொல்ல முடியும். இது மருத்துவம், பண முதலீடு, வியாபாரம் போன்ற பிரிவுகளில் பேருதவியாக இருக்கும்.

     

    * மருத்துவ துறையில் நோய் கண்டுபிடிப்பு, சிகிச்சை முறை, நோயாளிக்கு செலுத்தப்பட வேண்டிய கவனிப்பு, பராமரிப்பு இவைகளை இது துல்லியமாக சொல்லும்.

    * தொழில் இடத்தில் உற்பத்தி கூட, பிரச்சினைகள் தீர வழி வகுக்கும்.

    * பேரழிவு காலங்களில் மனிதனுக்கு கடினமான வேலைகளை ஏ.ஐ. கொண்டு செய்ய முடியும்.

    ஆனால் ஒவ்வொன்றுக்கும் மறுபக்கம் என்ற ஒன்று இருக்கும் அல்லவா? அது போல் ஏ.ஐ.க்கான மறுபக்கத்தினைப் பார்ப்போம்.

    * மிகப்பெரிய பிரச்சினையே மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைந்து விடும். விவசாயம் முதல் உயிர் காப்பது வரை பொது மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரிய பிரச்சினை தான்.

    * ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட விஷயங்கள், சூத்திரம் இவை இருக்காது.

    * பாதுகாப்பு இருக்காது

    * பிளாக் பாக்ஸ் எனப்படும் - மனிதனுக்கே சவாலான சில முடிவுகளை ஏ.ஐ. எடுக்கலாம்

    * இதனை உபயோகித்து தவறான செய்திகளை உட்புகுத்தலாம்.

    * மனிதன் இல்லாமலே ஆபத்தான ஆயுதங்களை இயக்குதல், மனித அழிவு இவற்றினை ஏற்படுத்தலாம்.

    * டிரோன்ஸ், ரோபோட் போன்றவை மனித கட்டுப்பாட்டில் இல்லாமல் தானே முடிவுகள் எடுத்து செயல்படலாம். இது பல நாடுகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியலாம். இன்று உலக நாடுகள் ஏ.ஐ.பற்றிய சில கவலைகளைக் கொண்டுள்ளன.

    * வேலையில்லா திண்டாட்டம் பற்றியது

    * ஏ.ஐ.யினை தவறாக பயன்படுத்தக் கூடிய அபாயம் பற்றியது

    * இன்று சீன நாட்டில் யுத்தத்தில் சண்டையிட ரோபோட்களை உருவாக்கி வருகின்றனர். இது மனிதனின் கட்டுப்பாடின்றி தீயனவற்றை தாக்குமாறு அவைகளுக்கு கட்டளையிட்டு உருவாக்கி வருகின்றனர். இதுவே அதே ரோபோட் சுயமாக தன் போக்கில் இயங்கும் ஆபத்தும் ஏற்படலாம்.

    * இது போலவே டிரோன்கள் மூலம் அதிக கவனிப்பினை ஏற்படுத்திக் கொள்ளுதல், வானில் தானே இயக்குதல் இவற்றினை உருவாக்குவதிலும் அதிக பண முதலீட்டினை செய்து வருகிறது.

    * மிலிடரி, முப்படை இவற்றிலும் இவ்வாறே ஏ.ஐ. கொண்டு பல புதிய முயற்சிகளை கையாளுவதற்கு அதிக முதலீடு செய்கின்றனர். எந்த நாடும் இப்படி பல்வேறு பிரிவுகளில் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் ஏ.ஐ. மூலம் பல செயல்களில் ஈடுபடும் போது முறையற்ற போக்குகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

    இரண்டு ரோபோட்கள் அவர்களுக்குள் ஒரு மொழியினை உருவாக்கி பேசியதையும், அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதையும் ஒரு செய்தியாக கேள்விப்பட்டேன்.

    இவையெல்லாம் ஏ.ஐ. கேட்க நீ யார்? என மனிதனை தூக்கியெறியும் காலமும், அழிவும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. என்ற சந்தேகமும் விஞ்ஞானிகளிடம் உள்ளது என்கின்றனர்.

    * இப்படிப்பட்ட ஏ.ஐ. எந்திரங்களை உடனே அழிக்கும் கண்ட்ரோல் முறை மனிதனிடம் இருக்க வேண்டும்.

    * எந்த ஏ.ஐ. செயல்பாட்டிற்கும் அளவு, வரைமுறை இருக்க வேண்டும்.

    * ஏ.ஐ. கற்கும் முறையில் ஒரு கட்டுப்பாட்டினை கொண்டு வர வேண்டும்.

     

    கமலி ஸ்ரீபால்

    * மனித பாதுகாப்பே முதல் முக்கியம்

    * அடிக்கடி ஏ.ஐ. எந்திரங்களை பரிசோதனை செய்ய வேண்டும். தவறும் பொழுதோ (அ) வேண்டுமென்றே தவறு செய்யும் பொழுதோ 'எந்திரன்' படத்தில் நடந்த நிகழ்வுகள் நிஜ வாழ்வில் நிகழலாம் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

    ஏ.ஐ. என்பது நம் இயற்கையான மூளை திறனிலிருந்து செயற்கையான மூளை திறனை உருவாக்குவதாகும். அப்படி என்றால் மனித மூளையில் இன்னும் எத்தனை திறன்கள் தான் புதைந்து உள்ளன.

    * ஆனால் நாம் கண்டுபிடிப்புகளின் பின்னால் ஓடுகின்றோம். நம்மால் நம்மை பற்றி கூட ஒரு சிறப்பினை உருவாக்க முடிவதில்லை.

    * வெளியே எங்கெங்கோ மகிழ்ச்சியினை தேடி அலைகின்றோம். நம்முள் நம்மால் தேட முடியவில்லை.

    * கண்ட 'ஆப்'களையும் இறக்கி வைத்து அதனுள் மூழ்கி சோர்வடைகின்றோம்.

    * டிசைனர் துணிகள் மீது இருக்கும் மோகம் மலையேறும் முயற்சியில் இல்லை.

    * குப்பைகளை தலைக்குள் ஏற்றி குவித்து வைக்கின்றோம்.

    * நம் உடல் நம் மனம் நம் திறன் என எதற்கும் முக்கியத்துவம் இல்லை.

    * குடும்ப உறவுகள்-குறிப்பாக பெற்றோர்களுடன் கூட நேரம் செலவழிப்பது இல்லை.

    * அதிக வசதிகளை தேடுகின்றோம். இதுவும் ஒருவகை போதை தான்.

    * வாழ்க்கை என்றாலே போராட்டம். நடுவே ஆங்காங்கே ஆனந்தம். அவ்வளவே!.

    * ஒருவரது உணர்ச்சிகளை விட உணர்வுகள் மிக வலுவாக இருந்தால் சாதிக்க முடியும்.

    * நம்மால் முடியாது என்ற எண்ணமே இருக்கக் கூடாது.

    * கர்மாவிற்கு நமது முகவரி மிக சரியாக தெரியும். நாம் அனுப்புவது எதுவோ அதுவே வந்து சேரும்.

    * இன்று கூட தாமதம் இல்லை. உடனே எந்த முயற்சியினையும் ஆரம்பிக்கலாமே!

    * இயலாமை என்பது மனதில் தான் உள்ளது. உடலில் அல்ல.

    * வாழ்க்கை ஒரு சிறிய காலமே. அதனை நம் மூளை கொண்டு அற்புதங்களை செய்யலாமே.

    • வாவ்... கடலின் மேற்பரப்பை பார்ப்பதற்கும் உள்ளே பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்.
    • ஆக்லாந்து நகரத்தின் மையப்பகுதியில் 635 அடி உயர கோபுரம் ஒன்று உள்ளது.

    கோல்டு கோஸ்ட் கடற்கரையில் இருந்து அந்த மினி கப்பல் புறப்பட தயாரானது. கப்பலில் நான், மற்றும் இரண்டு வெளி நாட்டு சாகச பயணிகள்...

    இந்த கடற்கரை ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரங்களில் ஒன்று.

     

    இங்கு கடலில் அலைச்சறுக்கு விளையாட்டுகளும், ஆழ்கடலுக்குள் சென்று குதித்து சாகச பயணம் செய்வதும் பிரபலம். அந்த ஆழ்கடல் சாகசத்துக்குத் தான் நானும் தயாராகி கப்பலில் இருந்தேன்.

    எங்களை கமந்து கடலுக்குள் கப்பல் பயணித்து கொண்டிருந்தது. கடலுக்குள் சென்ற பிறகு சுவாசிப்பதற்கு ஏதுவாக ஆக்சிஜன் மாஸ்க் முகத்தில் பொருத்தப்பட்டது. தண்ணீருக்குள் சென்ற பிறகு தெளிவாக பார்க்கும் வகையிலான கண்ணாடியுடன் கூடிய தலைக்க வசத்தால் ஆன பிரத்யேக உடையை அணிந்து கொண்டேன்.

    பார்ப்பதற்கு விண்வெளி பயணத்துக்கு செல்லும் வீராங்னை போல் இருந்தேன். இந்த சாகச பயணம் என்பது நடுக்கடலில் சென்றதும் அந்த கப்பலில் இருந்து குதிக்க வேண்டும்.

    குதித்து கடலின் ஆழமான பகுதிக்கு சென்று தரையை தொட்டு விட்டு வரவேண்டும். கொஞ்சம் ஆபத்தான பயணம் என்பதை மறுப்பதற்கில்லை.

    கடலுக்குள் சென்ற பிறகு எப்படி நீந்தி செல்ல வேண்டும். சுவாசிப்பதில் ஏதாவது பிரச்சனை உள்பட வேறு என்ன பிரச்சனைகள் ஏற்பட்டால் கைகளில் எவ்வாறு சைகை காட்ட வேண்டும் என்பதை பற்றியெல்லாம் பயிற்சியாளர் கற்று தந்தார்.

    சுமார் அரைமணி நேரம் இந்த பயிற்சி வகுப்பு நடந்தது. எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொண்டேன். அதற்குள் கப்பலும் நடுக்கடலை வந்தடைந்தது.

    எல்லோரும் குதிப்பதற்கு தயாரா? என்று கேட்டதும் உரத்த குரலில் கட்டை விரலை உயர்த்தி உற்சாகமாக ஆமாம்... என்றோம்.

     

    கடலுக்குள் குதித்து பல அடி ஆழத்துக்குள் சென்று கொண்டிருந்தேன். வாவ்... கடலின் மேற்பரப்பை பார்ப்பதற்கும் உள்ளே பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்.

    நிலத்தில் பார்க்கும் சூரிய வெளிச்சத்தை உள்ளே பார்க்க முடியாது. நீருக்குள் ஒரு வித்தியாசமான உலகம் தெரிந்தது.

    கடல் வாழ் தாவரங்கள்... விதவிதமான மீன்கள்.. அவைகளுக்கு இடையே ஒரு மனித மீனைபோல் நானும் நீந்தி கொண்டிருந்தேன். பெரிய மீன்கள் அருகில் வந்தபோது தான் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் என்னடா இது நம் இனத்துக்குள் ஒரு புது இனம் நடமாடுகிறதே... பார்க்கவும் வினோதமாக தெரிகிறதே என்று அந்த மீன்கள் நினைத்ததோ என்னவோ பயந்து ஒதுங்கி சென்றது.

    சிறிய மீன்களை தொட்டுப்பார்க்க ஆசை. ஆனால் அவை அருகே சென்றதும் லாவகமாக நழுவி நீந்தியது. வித்தியாசமான தாவரங்கள்.. அவைகளை தொட்டு ஸ்பரிசித்தது புதுமையான அனுபவமாக இருந்தது. கடலின் தரையை தொட்டு பார்த்ததும் சூப்பர்.

    கடலுக்குள் நாங்கள் நீந்தி கொண்டிருந்தபோது 2 வீரர்களும் எங்களை கண்காணித்தபடி எங்களுடன் கடலுக்கடியில் நீந்தி கொண்டிருந்தார்கள்.

    சுமார் ஒரு மணி நேரம் சாகச பயணத்தை முடித்துக் கொண்டு கடலின் மேற்பரப்புக்கு வந்து மீண்டும் குட்டிக்கப்பலில் ஏறிக் கொண்டோம். அந்த பயணம் என்றுமே மறக்க முடியாத சாகச பயணம். இந்த மாதிரி சாகச பயணம் செல்வது.. சாகசங்கள் செய்வது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அப்படித்தான் ஒரு முறை நியூசிலாந்துக்கு சென்றிருந்தேன்.

     

    அங்கு 'பம்கி ஜம்பிங்' ரொம்ப திரில்லிங்காக இருக்கும். அதாவது மலை முகட்டில் இருந்து கால்களில் கயிறு கட்டி கொண்டு சுமார் 600 அடி ஆழத்தில் தலைகீழாக குதிக்க வேண்டும்.

    கீழே ஆழத்தில் தண்ணீர் ஓடி கொண்டிருக்கும். மேலிருந்து குதித்து தண்ணீரை சென்றடைய 25 செகன்டுகள் வரை ஆகும்.

    தண்ணீரை தொட்டு விட்டு அதே கயிற்றில் ஆடியவாறு மீண்டும் மலை முகட்டை அடைய வேண்டும். அவ்வளவு தான்.

    எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் குதிப்பதற்கு முன்பு ஒரு படிவத்தில் எழுதி வாங்குவார்கள். அதாவது முக்கியமான அறுவை சிகிச்சைகளின்போது பாதிக்கப்பட்ட நோயாளியை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்லும்போது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் டாக்டரோ நிர்வாகமோ பொறுப்பல்ல என்று எழுதி வாங்கி கொள்வார்கள். அதேபோல் அங்கும் எழுதி வாங்கினார்கள்.

    அதை படித்து பார்த்ததும் அம்மாவுக்கும் பயம் வந்து விட்டது. இப்படி ஒரு சாகசமெல்லாம் நீ பண்ண வேண்டாம் என்று கூறி விட்டார்.

    நானும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். ஆனால் அம்மா சம்மதிக்கவில்லை.

    கரணம் தப்பினால் மரணம் என்ற கதை தான். உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனும் போது எந்த தாய் தான் சம்மதிப்பார்?

    வேறு வழியில்லை... அந்த வீர சாகச விளையாட்டை கைவிட்டு விட்டேன்.

    ஆனால் ஆக்லாந்து நகரத்தின் மையப்பகுதியில் 635 அடி உயர கோபுரம் ஒன்று உள்ளது. அதிலும் இதே போன்ற பம்கி ஜம்பிங் நடப்பதை கேள்விப்பட்டு அங்கு சென்றேன்.

    அண்ணாந்து பார்த்தால் தலை சுற்றும் உயரம். அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து தான் குதிக்கப்போகிறோம் என்றதும் ரொம்ப திரில்லிங்காக இருந்தது.

    கோபுரத்தின் உச்சிக்கு சென்றதும் அங்குள்ள ஏற்பாட்டாளர்கள் வழிகாட்டுதல்படி கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்தேன்.

    அந்தரத்தில் இருந்து கீழ் நோக்கி பறவை போல் வந்தபோது வாவ்...

    கீழே வந்து விழும்போது அடிபடாமல் இருப்பதற்காக மிகப்பெரிய போம் மெத்தை போல் ஒன்றை தரையில் அமைத்து இருந்தார்கள். அதில் வந்து விழுந்ததும் வாவ்... சூப்பர் என்றபடி எழுந்து வந்தேன்.

    அடுத்த வாரம் இன்னொரு புதிய தகவலுடன் வருகிறேன்..

    (தொடரும்...)

    • நம் கண்முன்னே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலம்.
    • வாழ்வில் இனிமை சேர நிகழ்காலத்தை நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும்.

    எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பில் எப்போதும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் இனிமையான வாசகர்களே! வணக்கம்.

    காலங்களைக், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று நிலைகளில் பிரிக்கலாம். கடந்த காலம் என்பது நாம் கடந்து வந்த காலம்! அல்லது நம்மைக் கடந்து போன காலம்! என்று குறிப்பிடலாம்; இதனை இறந்த காலம் என்றும் கூறுவர்; அதாவது இறந்துபோன காலம்!; அதனை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டுவர முடியாது; நாம் செய்த தவறுகள், நாம் சாதித்த சாதனைகள், நாம் சந்தித்த சோதனைகள், நாம் அனுபவித்த இன்பங்கள், நாம் அனுபவித்த துன்பங்கள்... என ஒட்டு மொத்தமாக நாம் வாழ்ந்த வாழ்க்கையின் கூட்டுக் கலவையாகக் கடந்தகாலம் திகழுகிறது. கடந்த காலத்தைத் திரும்பப் பார்க்கத்தான் முடியுமேயொழிய, அதற்குள் சென்று திருந்திய வாழ்க்கையை வாழ்வோமென்று திரும்பப் புகவே முடியாது.

    நிகழ்காலம் என்பது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிற காலம்; நம் கண்முன்னே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலம். நேற்றுப் போட்டு வைத்த திட்டங்கள் படி இன்று எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தால், நிகழ்காலம் மகிழ்ச்சிமயம் என்று மகிழலாம். நினைத்தது ஒன்றாகவும் இன்று நடப்பது வேறாகவும் அமையும் பட்சத்தில் நிகழ்காலம் துயர இசைக் காலமாகவே கழிந்து கொண்டிருக்கும்.

    நேற்றுவரை கையிருப்பில் இருந்த மகிழ்வும் செல்வமும் அதே போலவே இன்று தொடர்ந்தாலோ அல்லது அதற்கு மேலான நிலைகளில் வளர்ச்சிநிலை கண்டாலோ நிகழ்பொழுது சிறப்பான பொழுது என்று போற்றப்படும். அல்லது நிலைமை தலைகீழாக மாறித், தோல்விகளே தொடர்ந்துவந்து கொட்டிக் கொண்டிருந்தால், நிகழ் காலம் நம்மைச் சோர்வடைய வைத்துத் தளர்வடையச் செய்யலாம். அல்லது நடந்தவரை தோல்விகள் போதும்!, இனியாவது விழித்துக் கொள்வோம்! என்று புதிய நம்பிக்கைகளோடு கிளம்பினால், அதே நிகழ் காலம் நம்மைக் கிளர்வடையவும் செய்யும்.

    எதிர் காலம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கிற காலம்!; நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிற காலமும்கூட. எப்போதுமே யாருமே சந்தித்திராத, சந்தித்து அனுபவித்துப் பார்த்திராத ஒரு கற்பனைக் காலம் அது. அங்கே நிகழமுடியாத வியப்புகள் நிகழ்வதற்கும் வாய்ப்புகள் உண்டு; தோல்விகளும் மறுபக்கத்தில் உண்டு. என்றாலும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கைகளும் லட்சியங்களும் அபரிமிதமான வெற்றிகளை நோக்கிய எதிர்பார்ப்புகளாகவே இருக்கின்றன.

    "நேற்று என்பது உடைந்த பானை!; இன்று என்பது கையில் உள்ள வீணை!; நாளை என்பது மதில்மேல் பூனை!" என்பது மூன்று காலங்கள் குறித்த ஓர் அழகான பழமொழி. நேற்று என்பது நம்மால் உருவாக்கப்பட்ட அழகான பானையாக இருக்கலாம்; அந்தப் பானை பல பயனுள்ள செயல்களுக்குப் பயன்பட்டும் இருக்கலாம்; ஆனால் இன்றோ அது பயன்பாட்டுக்கு எந்த வகையிலும் ஒத்துவராத உடைந்த பானையாக மாறிவிட்டது. கடந்த காலம் நமக்கு நினைவுகளாகச் சில வழிமுறைகளைக் கற்பிக்கலாமேயொழிய, இன்றைய நமது செயல்பாடுகள் நிகழ்காலத்துக்கு ஏற்புடையதாக இருக்கும் வகையில் அது உதவ முடியாது. அதனால் தான் இன்றைய நிகழ் காலத்தைக் 'கையிலுள்ள வீணை' என்று கூறுகிறார்கள். வாசிக்க முடிந்த அளவுக்கு வாழ்வில் இனிமை சேர நிகழ்காலத்தை நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும்.

    'எதிர் காலம் என்பது மதில்மேல் பூனை' என்கிற வாசகம் ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. மதில்மேல் இருக்கிற பூனை எப்பக்கம் வேண்டுமாயினும் தாவக்கூடிய தன்மை வாய்ந்தது. நம்முடைய எதிர்காலமும் அத்தகையதே!. நாம் நம் அறிவையும் கற்பனையையும் கொண்டு, அறிவியலோடு கூடிய அழகியலாய், நமது எதிர்காலம் குறித்துப் பல கற்பனைகளை உருவாக்கி வைத்திருக்கலாம். ஆனால் அவை பலன் தருமா? தராதா? என்பது மதில்மேல் பூனை நிலைமைதான். எதிர்காலத்தின் பலன் வெற்றியாகவும் இருக்கலாம்; தோல்வியாகவும் அமையலாம்; நிகழப்போகிற காலத்தில் மட்டுமே அதன் இயல்புத் தன்மையை அறியமுடியும்.

    சுந்தர ஆவுடையப்பன்

    பொதுவாகவே எதிர்காலம் குறித்த கணிப்பு எல்லாருக்கும் நேர்முறையானதாகவும் நம்பிக்கையானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் மனிதன் தனது கடந்த கால வாழ்வில் சந்தித்திருக்கிற தொடர் துன்பங்களும், நிகழ்காலத்திலும் அவற்றிலிருந்து மீடேறி வரமுடியாமல் தவிக்கின்ற தோல்வி அனுபவங்களும் அவனுக்கு எதிர் காலம் குறித்து நம்பிக்கையூட்டாமல் அச்சமூட்டு வதாகவே அமைந்து விடுகின்றன.

    கடந்த காலத்திலும் பெரியதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை!; நிகழ் காலத்திலும் சொல்லிக்கொள்ளும்படி, நினைத்தது எதுவும் நினைத்தபடி நடக்கவில்லையென்றால் , எதிர்காலம் குறித்து மகிழ்வதற்குப் பதில் அச்சப்படவே எல்லாரும் செய்வார்கள். ஒவ்வொரு மனிதனும் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் குறித்து என்ன மனநிலையிலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எதிர்கொள்ளப்போகிற எதிர்காலம் குறித்து இரண்டு விதமான மனநிலையில் மட்டுமே அவன் செயல்படமுடியும். ஒன்று 'எதிர்காலம் என்ன ஆகுமோ?' என்று அச்சப்படுவது; மற்றொன்று என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று நம்பிக்கையோடு துணிந்து எதிர்கொள்வது.

    அச்சப்படுவதும், துணிந்து நிற்பதுமாகிய இரண்டுவித மனோபாவங்களுமே ஒருவகையில் எதிர்காலம் குறித்த நேர்முறை நிகழ்வுகளுக்கு வழி திறப்பவையாகவே அமையும். எப்படியென்றால், நிகழ்காலம் தான் தோல்விமயமாக இருக்கிறதே; எதிர்காலம் என்னாகுமோ? என்று அச்சம் வந்து பற்றிக்கொண்டால், அந்த அச்சத்தையே மூலதனமாகக் கொண்டு, நிகழ்காலத்திலேயே கவனமாகச் செயல்படத் தொடங்கிவிடுவோம்!; பிறகு வாய்க்கிற எதிர்காலம் நன்மைகளை வழங்குகிற பொற்காலமாகவே அமைந்து விடும்.

    மற்றொரு கோணத்தில், கடந்த காலமும் நிகழ்காலமும் கசப்பான அனுபவங்களின் காலமாக அமைந்துவிட்ட பட்சத்தில், எதிர்காலமும் சொல்லிக்கொள்ளும்படி நன்மையானதாக அமையாவிடினும், அதனை நமக்கேற்றபடி, மாற்றியமைத்துக்கொள்ளும் நம்பிக்கையையும் துணிச்சலையும் பெற்றுவிடுகிறோம். அப்படித் துணிச்சலோடு செயல்படத் தொடங்கும்போது எதிர் காலத்தில் எந்தத் துன்பமும் எதிர்த்து நிற்கமுடியாமல் தூள் தூளாகிப் போகும்.

    எல்லா மனிதர்களுக்கும் எதிர்காலம் குறித்த ஓர் அழகான கற்பனை உண்டு; அந்த அழகான கற்பனையை நிஜமாக்கிக் காட்டுவதும், வெறும் கனவாக்கிக் கலைத்திடுவதும், நாம் எந்த அளவுக்கு நேர்மையுடனும் உண்மையுடனும் பாடுபடுகிறோம் என்பதைப் பொறுத்தே வாய்க்கும்.

    கவுதம புத்தர் வாழ்ந்த காலத்தில் ஒரு பயங்கரக் கொலை, கொள்ளைக்காரன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் மனம் திருந்தி துறவறம் மேற்கொள்வது என்று ஆசைப்பட்டான். புத்தரை அவரது மடத்தில் சந்தித்து, பாவமன்னிப்புப் பெற்றுக்கொண்டு சந்நியாசி யாகத் துறவு வாழ்க்கையைத் தொடங்குவது என்பது அவனது எண்ணம். நேராகப் புத்தரைச் சந்திக்க அவரது மடத்துக்குச் சென்றான். இவனைப் பற்றி அங்குள்ள சீடர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் மடத்துக்குள் விட மறுத்து விட்டார்கள். சற்றும் தளராமல் மடத்தின் சுற்றுச்சுவர் ஏறித்தாவிக் குதித்து மடத்துக்குள் சென்று விட்டான்.

    அந்த நேரத்தில் புத்தர் பிச்சைக்காக மடத்திற்கு வெளியே சென்றிருந்தார். மடத்துக்குள் தாவிக்குதித்த கொலைகாரனைச் சீடர்கள் பிடித்தனர். புத்தருக்கு அடுத்த நிலையிலிருந்த சாரிபுத்தனிடம் அவனைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். 'புத்தரைப் பார்த்து தீட்சை பெறுவதற்காக வந்துள்ளேன்' என்றான். அவனைப் பார்த்த ஒருசில நொடிகளிலேயே அவனது ஜாதகம் முழுவதையும் மனதால் வாசித்து முடித்து விட்டார் சாரிபுத்தன்.' அவன் இந்தப்பிறவியில் பல கொலைகளையும் கொள்ளைகளையும் செய்தவன்; அதுமட்டுமல்ல, இதுவரை பிறந்த எந்தப் பிறவியிலும் அணுவளவுகூட நல்லவனாக இருந்ததில்லை' என்பதைத் தெரிந்துகொண்டார் சாரிபுத்தன்.

    "புத்தரை நேருக்கு நேராகத் தரிசிக்கும் தகுதிகூட இந்தத் தீயவனுக்கு இல்லை; புத்தர் வருவதற்குள் இவன் கழுத்தைப் பிடித்து மடத்துக்கு வெளியே தள்ளிவிட்டு வாருங்கள்!" என்று சீடர்களைப் பார்த்துக் கட்டளையிட்டார் சாரிபுத்தன். "என்னது? பகவான் புத்தரைப் பார்க்கிற அருகதை கூட எனக்கு இல்லையா? பிறகு எதற்கு நான் உயிரை வைத்துக் கொண்டு இந்த உலகில் இருக்க வேண்டும்?" என்று கேட்டுவிட்டு அங்கே மடத்தில் இருந்த சுவற்றில் தன் தலையைக் கொண்டு மோதி உயிர்விடும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினான்.

    அப்போது, வெளியில் சென்றிருந்த புத்தர் மடத்துக்குள் வந்துவிட்டார். உயிரை விடுவதற்காகச் சுவற்றில் மோதிக்கொண்டிருந்த அந்தக் கொடியவனின் தலையைத் தனது கரங்களால் தாங்கிப் பிடித்து அவனது தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். நடந்தவற்றைச் சாரிபுத்தன் புத்தருக்கு எடுத்துரைத்தான். "அந்தக் கொலைகாரனின் இந்தப் பிறவியிலுள்ள கடந்த காலம் மட்டுமல்ல; கடந்த பிறவிகள் அனைத்திலுமே அவன் கொடியவனாகவே இருந்திருக்கிறான். நிகழ்காலத்திலும் அவன் கொடியவன் தான். அவன் இப்போது உங்களிடம் தீட்சை பெற்றாலும் எதிர்காலத்திலும் அவன் தீயவனாகவே வாழ்வானேயொழிய நல்லவனாகத் திருந்தி வாழ வாய்ப்பே கிடையாது" என்று தனது அனுமானத்தை எடுத்துரைத்தார் சாரிபுத்தன்.

    புன்னகைத்தவாறே புத்தர் பேசினார், " சாரிபுத்தா நீ இந்தக் கொலைகாரனின் இறந்தகாலத்தைப் பற்றியே ஜாதகம் கணித்தாய்!. இறந்தகாலம் எப்போதும் இறந்தகாலம்தான். அது எதிர்காலம் குறித்த மாற்றங்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை; இவனை என்னிடம் விடு!; ஒரு வாரத்தில் இவனைத் திருந்திய மனிதனாக மாற்றிக் காட்டுகிறேன்; வாழ்க்கையில் நல்லவர்களைவிட வெகு சீக்கிரத்தில் கெட்டவர்கள் திருந்தி விடுவார்கள். கடந்தகாலம் எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் திருந்தி நேர்மையுடன் வாழ முயற்சிக்கும் எல்லாருக்கும் எதிர்காலம் நல்ல காலம்தான்!" என்று கூறி அவனைச் சந்நியாசி ஆக்கித் தன்னோடு சேர்த்துக்கொண்டார்.

    எதிர்காலம் என்பது எழுதப்படாத காகிதம் போன்றது; அதில் நாம் அழகிய சித்திரங்கள் வரையலாம். வரைந்த சித்திரங்களைச் சிதைக்கவும் செய்யலாம். சிலர் எதுவுமே எழுதாமல் வெற்றுத் தாள்களாகவே வைத்திருக்கலாம். மதிப்புடைய அழகிய வாழ்க்கையை வாழ்ந்து சாதனைச் சுவடுகளைப் பதிக்க நினைப்பவர்களுக்கு எதிர்காலம் எப்போதும் ஏற்றம்தரும் காலமாகவே அமையும்.

    'அச்சமே கீழ்களது ஆசாரம்' என்று குறிப்பிடும் திருவள்ளுவர் அச்சமின்மையே மேன்மக்களாக வாழத் துடிப்பவர்களின் செயலாயுதம் என்பதை வலியுறுத்துகிறார். அவரே, 'எண்ணித் துணிக கருமம்!' என்று கூறி எச்செயலையும் துணிச்சல் குன்றாத சிந்தனையூக்கத்துடன் எதிர்கொள்ளப் பழகச் சொல்கிறார். எதிர்காலம் குறித்த அச்சம், எல்லாருக்கும் முதலில் தோன்றுவது இயல்பானது என்றாலும், அந்த அச்சத்தைக் கவனப்படுத்தும் செயல்முறையாக்கித், துணிச்சலை ஆயுதமாக்கி எதிர்கொண்டால் எதிர்காலம் என்றும் நல்ல காலமே!.

    தொடர்புக்கு - 9443190098

    • சுவாமிகளின் இயக்கத்தில் மூல மந்திரமாய் ஒலித்தது தர்மம் ஆகும்.
    • மக்களின் எண்ணிக்கை சரிவர அறியப்படவில்லை.

    வைகுண்ட சுவாமிகள் புகுத்திய தலைப்பாகை அணியும் வழக்கம் இன்றும் அன்புகொடி மக்களின் வழிபாட்டின்போது காண முடிகின்றது. மேலும் அவரது அன்பர்கள் தங்கள் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து விசேஷங்களிலும் தலைப்பாகை அணிந்தே கடமை செய்வது, அய்யாவின் புரட்சியின் நிலைத்த தன்மையையே வெளிப்படுத்துகின்றது. சுவாமிகளின் இயக்கத்தில் மூல மந்திரமாய் ஒலித்தது தர்மம் ஆகும். சுவாமிகளை வணங்கி தர்மம் செய்ய வந்தவர்கள், தர்மம் பெற வந்தவர்கள் என ஏராளமான மக்கள் வந்தனர். தர்மம் பெற வந்தவர்களுள் பஞ்சத்துக்கு ஆண்டி வேடமிட்டு பலர் இருந்தனர். அழுக்குத் துணிகளுடன் ஆண்டிகள் அலைந்து திரிந்ததை தடுக்கும் விதமாக, அவர்கள் நன்றாக துவைத்து, குளித்து பந்தியில் இருந்திட சுவாமிகள் கட்டளையிட்டார்.

    உணவுக்காகவே இவர்கள் வருகிறார்கள் என்பதை கவனித்த சுவாமிகள், அவர்களின் குறிக்கோளற்ற வாழ்க்கையை மாற்ற 'சட்டம்' கற்றுக்கொடுத்தார். சட்டம் என்பது நீதிநெறிகளையும், ஒழுக்க விதிகளையும் புகட்டும் பாடமாகும். இதனையே சுவாமிகள் 'சட்டம் மறவாதே' என்று அம்மானையில் பல இடங்களில் கூறுகின்றார். சட்ட வரிகளை ஏட்டோலைகளில் தினந்தோறும் வீட்டிலிருந்து எழுதி, காலையில் சட்டாம் பிள்ளைகளிடம் ஒப்புவிக்கும் வழக்கம் அன்றைய கல்வியில் ஒரு பகுதியாக இருந்தது. 'வைகுண்ட சுவாமிகள் பண்டாரங்களை குனிய நிறுத்தி சட்டம் படிப்பித்தது போல' என்ற உவமானம் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கூட மக்களிடையே வழங்கியது. சட்டத் தேர்ச்சியில் தகுதி பெற்றவர்கள், சுவாமிகளின் முதல் தேர்வு நிலையில் தேறியவர்களாக கருதப்பட்டனர். சுவாமிகள் அவர்களை தவ வாழ்விற்கு இட்டுச்செல்லும் விதமாக துவையல் பந்திக்கு அழைத்துச்சென்றார். சுத்தத்தால் சோறு போட்டிடவும், ஒழுக்கத்தால் விழுப்பம் பெற்றிடவும் முடியும் என்பதனை நன்குணர்ந்திருந்த சுவாமிகள் தூசு படிந்து கிடந்த சமூகத்திற்கு துவையல் நடத்தி ஏற்றம் அளித்திட விழைந்ததின் விளைவே துவையல் பந்தியாகும்.

    துவையல் என்பதற்கு ஆடை வெளுக்கை எனவும், துவைத்தல் என்பதற்கு சேர்த்து வைத்தல் எனவும், பந்தி என்பதற்கு கூடுதல் அல்லது ஆன்மாவைப் பந்தத்துக்குள்ளாக்குதல் எனவும் தமிழ் அகராதி பொருள் விளம்புகிறது. இவ்வடிப்படையில் சுவாமிகளின் துவையல் பந்தியினை இரு வேறு கண்ணோட்டத்தில் நோக்கலாம். சமுதாய நோக்கினில் பார்க்கும்போது, அழுக்கு படிந்த ஆடைகளை கசக்கிக்கட்டி தூய்மையாக வாழ்வதுடன் மட்டுமல்லாது ஒன்றுபட்டு வாழ்ந்திட வழிகாட்டியது எனவும், ஆன்மீக நெறியினில் பார்க்கையில், தனித்தோடிக் கிடந்த ஆன்மாக்களை மேலோனிடத்தில் பந்தத்துக்குள்ளாக்கி, பக்தி வாழ்வினில் ஈடுபடச் செய்தது எனவும் கொள்ளலாம்.

    துவையல் பந்தியில் மக்களை ஆன்மீக நெறிப்படுத்த, தவ வாழ்க்கையில் பக்குவப்படுத்தியதுடன் சமுதாயத்தில் உயரிய வாழ்வு வாழ்ந்திடவும் சுவாமிகள் அழைத்துச்சென்றார். சமூகவியலார் பார்வையில் நோக்கினால், உயர் சாதியினரின் வாழ்வியல் முறைகளை பின்பற்றி ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையை மேன்மைபடுத்திட முயற்சி மேற்கொண்டார்.


    இந்தியாவில் உயர்சாதியினர் வரிசையில் இடம் பெற்றவர்கள் தங்களை தூய்மையாக வைத்துக்கொண்டும், உணவு வகைகளில் புலால் உணவை விடுத்து 'சைவ' உணவு உட்கொண்டும் இருந்தவர்களே." வைகுண்ட சுவாமிகள் மக்களின் தூய்மை வாழ்க்கையிலும் உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்தினார். துவையல் பந்தியில் பங்கு கொள்ள வந்த மக்களை பற்றி கூறுகையில் "மூணு நேரம் துவைத்து உச்சியொரு நேரமதாய்

    வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும்

    வேக வைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டு

    தாகமில்லாமல் தவசிருக்க வேணுமென்று

    வந்தனர்" என அகிலம் குறிப்பிடுகின்றது. தவசிருக்கச் சென்றவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவு வகையில் சில ஒழுகலாறு களை கற்பித்து, எப்போது மீனுண்டென்றே மிகப் பார்த்து அப்போததை வேண்டி யரக்குர காயவைத்து வாயிலெடுத்திட்டு வயிறு வளர்க்கும் மக்களுக்குப் புதியதோர் மாற்றத்தினை சுவாமிகள் கொடுக்க முயன்றார்.

    துவையல் பந்தியில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை சரிவர அறியப்படவில்லை. மனைவி மக்களுடன் அன்பர்கள் கலந்து கொண்டனர் என அகிலம் அறிவிக்கின்றது. எழுநூறு குடும்பங்கள் கலந்து கொண்டதாகக் கூறுவர்.

    "வஸ்து வகை தானிழந்து

    வீடுமனை மறந்து விற்று விலைகள் செய்து

    ஒண்ணிலரைப் பாதியென ஒக்கவிற்றார் சொத்ததனை

    மண்ணும் மறந்து மாடாடு தான் மறந்து

    ஆண்ட பண்டமெல்லாம் மிக மறந்து

    வைகுண்டரின் பாதமே தஞ்சம்" என நினைத்து, அவர் காட்டிய நெறியில் வாழ விருப்புடனே வந்தனர். தவமிருக்க மக்கள் வந்த பாங்கினைப் பற்றி அகிலம் கூறுகையில்,

    "மண்ணுடன் மனைகளாசை மாடுடன் வீடு ஆசை

    பெண்ணுடன் பொருளினாசை பூதலப்பொன்னினாசை

    எண்ணுடன் எழுத்தினாசை யிறடு பொல்லாசை வேசை

    ஒண்ணுடனாசை நீக்கி யுடையவனாசை கொண்டார்!"

    எனக் குறிப்பிடுகின்றது.

    கன்னியாகுமரியிலிருந்து சுமார் மூன்று கல் தொலைவில் கிழக்கு கடற்கரையோரமாக அமைந்துள்ள வாகைப்பதியில் தான் சுவாமிகள் துவையல் பந்தியை ஆரம்பித்தார். காலை, நண்பகல், மாலை என தினந்தோறும் மூன்று வேளை நன்றாக குளித்து, துவைத்து, நண்பகல் ஒரு வேளை பச்சரிசி, சிறுமணி (பாசிப்பயிறு), நன்றாக வேகவைத்து கஞ்சியாக்கி உண்டு வாகைப்பதியில் தவமிருந்தனர். உச்சிப்படிப்பு, உகப்படிப்பு பத்திரம், சிவகாண்ட அதிகார பத்திரம் போன்ற சமயநெறிப் பாடங்களையும், சட்டங்கள், தாம்பத்திய நெறி, சான்றாண்மை வாழ்வு நெறி, உலக நெறி முதலிய அறச்சார்பு கருத்துக்களையும் சுவாமிகள் அவர்களுக்கு போதித்தார்.

    வாகைப்பதியில் அவர்களின் தவவாழ்வு ஆறு மாத காலமே நீடித்தது. தவமேற்கொண்ட மக்களை நோய் தாக்கியதால் சிலர் உயிரிழக்கவும் நேர்ந்தது. எனவே எல்லோரும் வாகைப்பதி விடுத்து முட்டப்பதி ஏகி தவ வாழ்வினை தொடர்ந்தனர். நாடோறும் தூய நீரில் மூன்று வேளை குளித்து, காலையும், மாலையும் பகலவனை தொழுது, சைவ உணவினையே உண்டு தவம் புரிந்த மக்களை கண்ட மேற்சாதியினர் வாயடைத்து நின்றனர்.


    "எப்போது மீன் வரும் என மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து, அப்போது அதை வேண்டி அரை குறையாய் வேகவைத்து வாயில் போட்டு வயிறு வளர்க்கும் இம்மக்கள், புகையிலையும் மறந்து, ஆணும் பெண்ணும் ஒருமனதாய் இருப்பது பண்டிலமைத்ததுவோ!" என வியந்து நின்றனர். உயர்சாதி மக்கள், சுவாமிகள் நடத்திய துவையல் பந்தியை சிதறடிக்க முயன்றனர். பந்தியில் கலந்து கொண்ட அன்பர்களை அல்லல் படுத்தினர்.

    "பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்

    கொண்டாடி நன்றாய் குளித்து துவைத்தனை

    கண்டு மாபாவி கலைத்து அடித்தனன்"

    என அகிலம் குறிப்பிடுகின்றது. எனினும் துவையல் முடங்கவில்லை. தினந்தோறும் சேவிப்பதும் உகப்பாட்டு ஓதுவதுமாய் இருந்தனர். துவையலை வெற்றியுடன் முடித்த துவையற்காரர்களை சுவாமிகள் வாழ்த்தி அனுப்பினார். தவ வாழ்வில் தகுதி பெற்ற துவையற்காரர்களை 'வானலோக தேவர்களோ!' என மக்கள் வியந்து போற்றினர். அவர்களை தத்தம் ஊர்களில் வரவேற்று அன்னமும் ஆடையும் கொடுத்து மக்கள் அன்புடன் அமுதூட்டினர்.

    அன்று அவர்களுக்கிட்ட கஞ்சி தர்மமே காலம் காலமாக தொடர்ந்து இன்றும் நிழல் தாங்கல்கள் தோறும் "தவணைக்கஞ்சி" என்ற பெயரில் தர்மமாக வழங்கப்பட்டு வருகிறது. தவவாழ்வின் போது வைகுண்டர் கற்பித்த போதனைகளையும், சான்றாண்மை நெறிகளையும் துவையற்காரர்கள் ஊர்தோறும் சென்று மக்களிடையே பரப்பி வந்தனர். வைகுண்ட சுவாமிகள் மக்களின் வீட்டமைப்பு முறையிலும் மாற்றம் ஏற்படுத்திட விழைந்தார். மாடி வீடுகள் கட்டுவதற்கும், ஓடு வேய்ந்த வீடுகள் அமைப்பதற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமையற்றவர்களாக இருந்தனர்.

    சாலை ஓரங்களில் வீடு கட்ட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் குடியிருப்புகள் கம்பு, மண்சுவர், தென்னை ஓலை போன்றவற்றால் எழுப்பப்பட்ட சிறு சிறு குடில்களை உள்ளடக்கியதாகவே காணப்பட்டன. அவர்களின் வீடுகள் ஆங்காங்கே விளைக்கொன்றாக சிதறிக்கிடந்தன. தவிரவும் எவ்வித ஒழுங்குமின்றி சரிவர திட்டமிடாது இங்கொன்றும் அங்கொன்றுமாக அமைந்திருந்தன. சுவாமிகள் தன் அன்பர்களிடம் பல அறைகளையுடைய வீடுகள் கட்டவும். வீடுகளை ஒன்றுக்கொன்று அடுத்தாற்போல் அமைக்குமாறும் வரிசையாகவும், ஒரே திசையில் முன் வாயில் அமைத்து கட்டுவிக்குமாறும் வற்புறுத்தினார்.

    நான்கு பக்கமும் கதவுகள் இட்டு, சன்னல்களும் அமைத்து காற்றோட்டமாக வீடுகள் கட்டிடுமாறு பணித்தார். குடியிருப்பு அமைப்பில் கூட ஒழுங்காகவும், நெருக்கமாகவும் வீடுகள் அமைக்கப்படுமானால் மக்களிடையே நெருங்கிய தொடர்பும், ஒருமைப்பாட்டுணர்வும் நிலவும் என்பதை கருத்திற் கொண்டு மாற்றம் ஏற்படுத்தினார். அடுத்த பதிவில் முக்தி தரும் முத்திரி கிணறு கண்ட சுவாமிகளின் அருளை காண்போம்.

    • பாவைப் பாடல்கள் மதுர பாவனையை ஆதாரமாகக் கொண்டவை.
    • முற்கால அடியவர்கள் பலர் மதுர பாவனையில் பக்தி செய்திருக்கிறார்கள்.

    பன்னிரண்டு தமிழ் மாதங்களில் மார்கழி மிகவும் விசேஷமானது. மாதங்களில், தான் மார்கழியாக இருப்பதாகக் கிருஷ்ண பகவான் குறிப்பிடுகிறார். அதனால் மார்கழி தேவர் மாதம் எனப்படுகிறது.

    ஆண்டவனுக்கு உகந்த மார்கழி மாதத்தில் பக்தி செய்வதன் மூலம் இறைவனை எளிதாக அடையலாம் என்கிறார்கள் சமயச் சான்றோர்கள். இறைவனை நினைப்பதற்கான மாதமாக இது கருதப்படுவதால், இந்த மாதத்தில் திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப் படுவதில்லை.

    வைணவ நூலான ஆண்டாளின் திருப்பாவை, சைவ நூலான மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இரண்டுமே மார்கழியில் அன்பர்களால் நாள்தோறும் ஓதப்படுகின்றன.

    இந்த நூல்களைப் பாராயணம் செய்வதன் மூலம் மனம் தீய நினைவுகளிலிருந்து விடுபட்டுத் தூய நினைவுகளில் ஆழ்கிறது. இந்த இரு பாவை நூல்களும் பாவை நோன்பு நோற்கும் பெண்களைப் பற்றிப் பேசுகின்றன.

    ஐயப்பனுக்கு விரதமிருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடுவது, செருப்பு அணிந்துகொள்ளாமல் இருப்பது, அசைவ உணவைத் தவிர்ப்பது, கறுப்பு ஆடை உடுத்திக் கொள்வது போன்ற நியமங்களைப் பின்பற்றுவதைப் பார்க்கிறோம்.


    அதுபோலவே பாவை நோன்பு நோற்கும் பெண்களுக்கும் அவர்கள் அனுசரிக்க வேண்டிய சில நியமங்கள் உள்ளன.

    பாவை நோன்பில் ஈடுபடும் பெண்கள் நோன்புக் காலத்தில் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது, பால் அருந்தக் கூடாது, அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும், கண்களில் மை இட்டுக்கொள்ளக் கூடாது, கூந்தலில் மலர் சூடிக் கொள்ளுதல் போன்ற அலங்காரங்கள் எதையும் செய்து கொள்ளக் கூடாது.

    `நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்`

    என்றெல்லாம் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் வரும் வரிகள் பாவை நோன்பின் விதிமுறைகளை விவரிக்கின்றன.

    பாவைப் பாடல்கள் மதுர பாவனையை ஆதாரமாகக் கொண்டவை. தொன்று தொட்டு வரும் பக்தி மரபில் ஒன்றுதான் மதுர பாவனையில் பக்தி செய்தல். கோபிகைகள் கண்ணனை பக்தி செய்தது மதுர பாவனை முறையில்தான்.

    இறைவனாகிய பரமாத்மா மட்டுமே ஆண் என்றும், உலகில் உள்ள மற்றைய ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெண் என்றும் கருதி பரமாத்மா மேல் ஜீவாத்மா காதல் கொள்வதான பாவனையில் பக்தி செய்வதே மதுர பாவனை எனப்படுகிறது.

    முற்கால அடியவர்கள் பலர் மதுர பாவனையில் பக்தி செய்திருக்கிறார்கள். அண்மைக்கால அடியவரான பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர், சிறிதுகாலம் மதுர பாவனையை அனுசரித்து பக்தி செய்தார் என்பதை சுவாமி சாரதானந்தர் எழுதிய குருதேவரின் ஆராய்ச்சிபூர்வமான வாழ்க்கை வரலாற்று நூல் தெரிவிக்கிறது.

    பாவைப் பாடல்கள், பக்தர் தம்மைக் காதலியாகவும் தாம் வழிபடும் இறைவனைக் காதலனாகவும் பாவித்துக் கொண்டு பாடும் மரபைச் சார்ந்தவை.

    திருப்பாவை, திருவெம்பாவை இரண்டுமே பாவை நோன்பு நோற்று இறைவனை அடைதலை வழியாகக் கொண்டவை. இறைவனே தங்களுக்குக் கணவனாக வரவேண்டும் என மகளிர் வேண்டிக் கொள்வதாகப் பாவைப் பாடல்கள் அமைந்துள்ளன. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் கருக்கல் நேரத்தில் எழுந்து நீராடி இறைவனைத் தொழுது அனுசரிப்பதே இந்நோன்பு.

    அதிகாலையில் பெண்கள் ஒருவர் இல்லத்திற்கு மற்றொருவர் சென்று, ஒருவரை ஒருவர் துயில் எழுப்பிக் கொண்டு பாவை நோன்பை அனுசரிக்கும் பொருட்டு குளத்தில் நீராடச் செல்வார்கள்.

    அவ்விதம் செல்லும் பெண்கள் தங்கள் தோழியரின் இல்லத்திற்குச் சென்று காலையில் தோழியரைத் துயிலெழுப்புவதாகப் பாவைப் பாடல்கள் அமையும்.

    திருப்பாவை திருவெம்பாவை ஆகிய இரண்டு பாவை நூல்களிலும் இந்த உத்தியிலேயே பாடல்கள் அமைந்து அவை திருமாலையும் சிவபெருமானையும் போற்றுகின்றன.

    அதிகாலையில் உறக்கத்திலிருந்து எழுப்புவது என்பது வெறும் துயிலெழுப்புதல் அல்ல. அதற்கு தத்துவ ரீதியாக ஆழ்ந்த பொருள் உண்டு.

    ஜீவான்மா மாயை என்ற இருளில் சிக்கிக் கிடக்கிறது. தான் சென்று சேரவேண்டிய இடம் எது என்று அறிய இயலாமல் அறியாமை இருள் அதை மூடியுள்ளது.

    ஜீவான்மாவை எழுப்பி அதற்கு பரமான்மா என்கிற ஒளியை அறிமுகப்படுத்துவதே பாவை நோன்பின் நோக்கம்.

    வைணவ நூலான திருப்பாவையின் பெருமையைத் தான் செல்லுமிடங்களில் எல்லாம் பேசி அதன் புகழைப் பரப்பியவர்களில் முக்கியமானவர் சைவத் துறவியான காஞ்சிப் பரமாச்சாரியார்.

    சைவ வைணவ ஒற்றுமைக்கு திருப்பாவை திருவெம்பாவை என்ற இரண்டு நூல்களுமே வழிகாட்டுகின்றன என்றார் அவர்.

    திருப்பாவையின் முதல் பாடல், `மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்` என மாணிக்க வாசகரின் முதல் எழுத்தில் தொடங்குகிறது என்றும், திருவெம்பாவையின் முதல் பாடல் `ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்` என ஆண்டாளின் முதல் எழுத்தில் தொடங்குகிறது என்றும் இந்த இரு நூல்களையுமே மார்கழி மாதத்தில் பக்தர்கள் ஓதுவதன் மூலம் நிறைந்த ஆன்மிகப் பயன்களைப் பெற முடியும் என்றும் குறிப்பிட்டார் அவர்.

    திருப்பாவையை அருளிய ஆண்டாள் சிறு குழந்தையாக துளசிச் செடியின்கீழ் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். புனிதமே வடிவானவர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார்களில் இவர் மட்டுமே பெண்.

    திருப்பூர் கிருஷ்ணன்


    பெருமாள் கோயில்கள் பலவற்றில் ஆண்டாளுக்கென்று தனிச் சன்னிதி உண்டு. திருமாலைப் பாடித் திருவரங்கத்தில் திருமாலுடன் கலந்து தெய்வமாகவே மாறிய ஆண்டாளைச் சிலை வடிவில் வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

    ஆண் அடியவர்கள் மதுர பாவனையின் பொருட்டுத் தங்களைப் பெண்ணாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஆனால் ஆண்டாளுக்கோ அவரே பெண் என்பதால் மதுர பாவனையில் பக்தி செய்வது மிகவும் இயல்பாயிற்று.

    தன்னைக் கண்ணனின் காதலியாகக் கருதி ஆண்டாள் எழுதிய பாசுரங்கள்தான் திருப்பாவை எனப் போற்றப் படுகின்றன. திருப்பாவையின் ஒவ்வொரு பாடலும் பக்தி இலக்கியத்தின் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றது.

    திருப்பாவையைப் பாராயணம் செய்தால் பாகவதம், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட புனித நூல்கள் அனைத்தையும் பாராயணம் செய்த பலன் கிட்டும் என்பதுண்டு.

    காரணம் அந்தப் புனித நூல்களில் உள்ள பல புராணச் செய்திகள் திருப்பாவையில் இடம்பெற்றுள்ளன.

    ஆண்டாள் `திருப்பாவை, நாச்சியார் திருமொழி` என்ற இரண்டு கவிதை நூல்களின் ஆசிரியர். ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களையும் அவரது நாச்சியார் திருமொழி நூற்று நாற்பத்து மூன்று பாடல்களையும் கொண்டது.

    நாச்சியார் திருமொழியில் கண்ணனைத் திருமணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனவைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள் நாச்சியார்.

    `வாரணமாயிரம் சூழ வலம்வந்து

    நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்

    பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

    தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழிநான்.`

    `மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

    முத்துடைத் தாமம் முறைதாழ்ந்த பந்தர்க்கீழ்

    மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்

    கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்...`

    `கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

    திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ

    மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண்சங்கே!`

    இப்படியெல்லாம் வரும் பாடல்கள் ஜீவான்மா பரமான்மாவோடு கலக்கவிரும்பும் வேட்கையின் உச்சத்தைப் புலப்படுத்துகின்றன.

    ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் வேதங்களுக்கு நிகரானவை என அன்பர்களால் கொண்டாடப் படுமளவு பெருமை படைத்தவை.

    திருவெம்பாவையை அருளியவர் மாணிக்க வாசகர். திருவாசகம் எழுதிய பெருமைக்குரியவர். திருவாசகத்தின் ஒரு பகுதியாகவே திருவெம்பாவை இடம் பெற்றுள்ளது.

    திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டவர் இராமலிங்க வள்ளலார்.

    `வான்கலந்த மாணிக்க வாசக!நின் வாசகத்தை

    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து

    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!`

    என்ற பாடல் மூலம் மாணிக்கவாசகரின் பெருமையை வள்ளலார் உரத்துச் சொல்கிறார். மாணிக்கவாசகர் திருவாசகம் தவிர திருக்கோவையார் என்ற நூலையும் படைத்துள்ளார்.

    மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. மாணிக்கவாசகர் திருவண்ணாமலையைத் தரிசிக்கும்போது அருளிய பாடல்கள் அவை. `அருட்பெருஞ்சோதி, அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கொரு மருந்து, வேத விழுப்பொருள்` என்றெல்லாம் சிவன் திருவெம்பாவையில் போற்றப்படுகிறார்.

    மாணிக்கவாசகரே எழுதிய திருப்பள்ளியெழுச்சி பத்துப் பாடல்களைக் கொண்டது. வைணவர்கள் மார்கழி மாதம் திருப்பாவை முப்பது பாடல்களைப் பாடுவது போன்றே திருவெம்பாவையின் இருபது பாடல்கள் திருப்பள்ளி எழுச்சியின் பத்துப் பாடல்கள் இரண்டையும் சேர்த்து முப்பது பாடல்களாகச் சைவர்கள் ஓதுகின்றனர்.

    தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டு விழாவின்போது திருப்பாவை திருவெம்பாவை ஆகிய இரண்டும் பாடப்படுகின்றன.

    திருப்பதி வேங்கடவன் சன்னிதியிலும் மார்கழி மாதத்தில் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருமாலின் காதலியான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஒலிக்கிறது.

    பெருமாள் கோயில்கள் அனைத்திலும் மார்கழி மாதத்தில் திருப்பாவை அதிகாலை நேரத்தில் ஒலிக்கிறது.

    தமிழின் பரந்த பக்தி இலக்கியத்தில் திருப்பாவை திருவெம்பாவை ஆகிய இரண்டு நூல்களுக்கும் உள்ள இடம் மிக முக்கியமானது.

    மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் அருளிய திருப்பாவையையும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையையும் பாராயணம் செய்வதன் மூலம் இம்மைப்பயன், மறுமைப் பயன் இரண்டையும் நாம் அடைய முடியும்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • நீங்கள் கேள்விப் படாத ஒரு மகாபாரதக் கதை.
    • சத்திரத்தில் பல தேசங்களைச் சேர்ந்த பலரும் தங்கி இருந்தனர்.

    மாலை மலர் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    ஆன்மிக அறிவியல் எனும் இந்தத் தொடரின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துள்ளேன்.

    இந்தத் தொடரின் மூலம் எவரையும் கரடு முரடான தத்துவ விளக்கங்களுக்குள் அழைத்துச் சென்று மூழ்கடிக்கப் போவதில்லை.

    மாறாக இந்தத் தொடர், உங்களது அன்றாடப் பிரச்சனைகளை ஆன்மிகக் கதைகள் வாயிலாக ஆய்ந்திடும் ஒரு கதாகாலச்சேபமாக மட்டுமே அமையப் போகிறது.

    வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கும், ஆன்மிகத் தேடலில் முடிவு காண முடியாதிருப்பவர்களுக்கும், மனோரீதியான பிரச்சனை உள்ளவர்களுக்கும் இத்தொடர் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

    இந்தத் தொடரின் முடிவில் நீங்கள் ஒரு ஞானியாகவே மலர்ந்தாலும் கூட நாங்கள் எவரும் ஆச்சரியம் அடையமாட்டோம்.

    புதியதான ஒன்றை எவ்வாறு நாம் புரிந்து கொள்கிறோம்?

    நாம் அனைவரும் ஏற்கனவே பலவற்றைத் தெரிந்து வைத்துள்ளோம். தெரிந்து கொண்ட அவற்றின் மூலமாகவே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய புதியவைகளையும் அளந்து பார்க்கின்றோம்.

    நீங்கள் கேள்விப் படாத ஒரு மகாபாரதக் கதை. பாண்டவர்களும், கவுரவர்களும் போர் புரிந்தார்கள்.

    தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் எனும் பஞ்ச பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள்.

    தர்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது . பட்டாபிஷேகத்தின் போது தர்மன் மக்களுக்கு தானதர்மங்களை வழங்கினார்.

    அவரது தானதர்மத்தை பலரும் போற்றிப் புகழ்ந்ததால் தர்மன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எவராலும் இப்படி ஒரு தானதர்மத்தை செய்ய முடியாது என்ற கர்வமும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு வருடமும் இதேபோல் தொடர்ந்து தானதர்மங்கள் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

    அவருடைய எண்ண ஓட்டம் அவருடன் இருந்த கிருஷ்ணருக்குத் தெரிந்தது.

    "வேறு நாடுகளையும் பார்த்து வருவோம் வா!" என்று சொல்லி கிருஷ்ணர் அவரைக் கூட்டிக்கொண்டு கிளம்பினார்.

    இருவரும், பாதாள லோகத்தை ஆண்டு வந்த மகாபலி சக்கரவர்த்தியின் நாட்டுக்கு வந்தனர்.

    அரண்மனை வாயிலில் நின்ற காவலனிடம், தான் வந்துள்ள விபரத்தை மகாபலி சக்கரவர்த்தியிடம் தெரிவிக்குமாறு தர்மன் கூறினார்.

    காவலனும் புறப்பட்டுச் சென்று, சக்கரவர்த்தியிடம் விபரத்தைக் கூறினான்.

    அதற்கு மகாபலி சக்கரவர்த்தியும், "தானதர்மங்களைச் செய்யும் தர்மன் என்ற சண்டாளனா வந்துள்ளான் ? அந்த சண்டாளனை சந்திக்க நான் விரும்பல்லை" என்று கூறி விட்டார்.

    வாயில்காப்போன் திரும்பி வந்து தர்மனிடம் விபரத்தைக் கூறினான்.

    தர்மனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. உலகமே போற்றிப் புகழும் தானதர்மத்தை பழித்துப் பேசும் இந்த மகாபலி சக்கரவர்த்தி நல்லவனாக இருக்க முடியாது. அவனை நாமும் சந்திக்க வேண்டாம் என முடிவு செய்து கிருஷ்ணரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இருவரும் ஒரு தெருவின் வழியாக வரும்போது அவர்கள் இருவருக்கும் நல்ல தாகம் ஏற்பட்டது.

    அந்தத் தெருவில் இருந்த ஒரு வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.

    வயதான பெண்மணி ஒருவர் இருவருக்கும் தங்கச் செம்புகளில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

    தங்களுடைய தகுதியை அறிந்து தங்கச் செம்புகளில் தண்ணீர் தந்திருப்பதாக எண்ணிக் கொண்டனர்.

    இருவரும் தாகம் தீர்ந்திடும் வரையிலும் தண்ணீர் குடித்து விட்டு தங்கச் செம்புகளை அந்தப் பெண்மணியிடம் திரும்பக் கொடுத்தார்கள்.

    அந்தப் பெண்மணியும் அந்த தங்கச் செம்புகளை வாங்கி அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்.

    தர்மனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    அவர் அந்தப் பெண்ணிடம், "இது சாதாரண செம்பு இல்லையே அம்மா. தங்கச் செம்பல்லவா இது! உங்களுக்கு வேண்டாம் என்றால் யாருக்காவது கொடுத்து விடலாமே அம்மா?" என்று கேட்டார்.

    "உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்களே வைத்துக் கொள்ளலாம். இங்கு யாரிடம் கொடுத்தாலும் வாங்கமாட்டார்கள்.

    ஏதோவொரு நாட்டை தர்மன் என்று ஒரு சண்டாளன் ஆட்சி செய்கிறானாம். அவன் தான் இப்படி தானதர்மங்கள் எல்லாம் செய்கிறானாம். எங்கள் மகாபலி சக்கரவர்த்தி ஆட்சியில் எவருக்கும் எந்தத் தேவையும் இல்லை. எல்லா வளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. எவரும் எவரிடமும் வாங்கவும் தேவையில்லை கொடுக்கவும் தேவை இல்லை" என்று அந்த அம்மா சொல்லி முடித்தார்.

    ஸ்ரீ பகவத்

    தானதர்மம் உயர்ந்தது என்ற நமது பொதுவான கண்ணோட்டம், சில வேளைகளில் தவறானதாகவும் இருந்து விடலாம்.

    ஏனெனில் தர்மனை குணசீலம் மிகுந்தவர் என்றும், அடுத்தவர்களுக்கு வாரிக் கொடுப்பவர், உயர்ந்தவர் என்றும் எண்ணியிருந்தோம்.

    அதனால் தர்மனைப் புறக்கணித்த மகாபலி சக்கரவர்த்தி நமக்கு ஒரு வில்லன் போலவே தோற்றமளித்தார்.

    உண்மை தெரிந்த பிறகு அவர் தர்மனை விடவும் உயர்ந்து காணப்படுகிறார்.

    இப்படி ஆன்மிகம் என்பது சம்பந்தமாகவும் நமக்கு நம்மையறியாமலேயே சில கருத்துகள் உள்ளன.

    இப்போது உங்களிடம் ஒரு கேள்வி.

    "உலகத்திலேயே பிரம்மாண்டமானது எது?"

    ஆகாயத்தை விட பிரம்மாண்டமானது ஏதாவது இருக்க முடியுமா?

    ஆகாயந்தான் பிரம்மாண்டமானது .

    உங்களிடம் இன்னும் ஒரு கேள்வி .

    உலகத்திலேயே மிகவும் சாதாரணமானது எது?

    ஆகாயத்தை விடவும் சர்வ சாதாரணமானது ஏதாவது இருக்க முடியுமா?

    சர்வ சாதாரணமாக இருப்பதும் இந்த ஆகாயமே .

    இதே தன்மையில் தான் ஆன்மாவும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.

    எனது உடல் அழிந்துவிடும்; எனது மனமும் அழிந்துவிடும். ஆனால் எனது ஆன்மா மட்டும் அழியவே அழியாது என்று நம்மைப் பற்றி ஆன்மிக சாஸ்திரங்கள் அனைத்தும் கூறுகின்றன.

    சாஸ்திரங்கள் கூறுவது உண்மையா அல்லது பொய்யா?

    ஆன்மாவைப் பற்றி சாஸ்திரங்கள் வேறு என்னவெல்லாம் கூறுகின்றன?

    ஆன்மாவுக்கு அழிவே கிடையாது;

    ஆன்மா நீரில் நனையாது; நெருப்பில் வேகாது. - இப்படியெல்லாம் ஆன்மாவைப் பற்றி நமது சாஸ்திரங்கள் அடுக்கடுக்காகக் கூறுகின்றன .

    அழியக் கூடிய உடலோ மனமோ நாமல்ல. அழிவற்ற ஆன்மாவே நாம். -ஆன்மிக சாஸ்திரங்கள் இப்படி எல்லாம் நம்மைப் பற்றிக் கூறுகின்றன .

    அந்தக் காலத்தில் நடந்ததாக ஒரு கதை.

    வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இளைஞன் ஒருவன் ஒரு சத்திரத்தில் தங்கியிருந்தான்.

    அந்த சத்திரத்தில் பல தேசங்களைச் சேர்ந்த பலரும் தங்கி இருந்தனர்.

    இரவு வந்தது. அங்கு இருந்த பெரிய ஹாலில் பலரும் படுத்துத் தூங்க ஆரம்பித்தனர்.

    தேவையான படுக்கை வழங்கப்பட்டிருந்தும், அந்த இளைஞன் மட்டும் தூங்காமல் அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

    என்னவென்று கேட்டு, சத்திரத்தின் மேலாளர் அவனை விசாரித்தார் .

    அவன் வினோதமான காரணம் ஒன்றைக் கூறினான்:

    "அய்யா நான் குழந்தையாக இருந்தபோது எனது பெற்றோர் பக்கத்து ஊரில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டார்கள். திருவிழா கூட்டம் அதிகமாக இருந்தது...

    அந்தக் கூட்டத்தோடு கலந்து நான் தொலைந்து போய் விட்டேன். நான் எனது பெற்றோரைக் கண்டுபிடிக்க முடியாமலும், எனது பெற்றோர் என்னைக் கண்டுபிடிக்க முடியாமலும் சங்கடப்பட்டு விட்டோம்...

    இங்கும் கூட்டம் கூட்டமாக நிறைய பேர் படுத்து இருக்கிறார்கள்.

    நானும் இவர்களோடு கலந்து படுத்தேன் என்றால் மீண்டும் முன்னைப்போல் தொலைந்து போய் விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அதனால் தான் இவர்களோடு கலந்து படுத்துத் தூங்க பயமாக இருக்கிறது..."

    அந்த மேலாளர் அவனை சற்று விசித்திரமாகப் பார்த்தார். ஒரு முடிவுக்கு வந்த அவர் சிவப்பு நிற நாடா ஒன்றை எடுத்து வந்து அந்த இளைஞனுடைய இடது காலில் கட்டினார்.

    பிறகு அவர் அவனிடம், "உனது காலில் உனக்கு என ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி விட்டேன். இனி நீ தைரியமாகத் தூங்கலாம் . எத்தனை பெரிய கூட்டத்தில் நீ தொலைந்து போனாலும் கூட , உனது காலில் கட்டியிருக்கும் சிவப்பு நாடாவை வைத்து உன்னை நீயே சுலபமாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்!" என்று கூறினார்.

    அந்த இளைஞன் மிகுந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அடைந்தான்.

    அவன் அப்படியே நிம்மதியாகப் படுத்து தன்னை மறந்து தூங்க ஆரம்பித்துவிட்டான்.

    அவன் நன்றாகத் தூங்கியதும், அந்த மேலாளர் அவன் காலில் கட்டியிருந்த சிவப்பு நாடாவை அவிழ்த்து ,அவனுடைய பக்கத்தில் படுத்திருந்த இன்னொரு இளைஞனுடைய காலில் கட்டிவிட்டார்.

    இரவு விடிந்தது. இளைஞனும் கண்விழித்தான். கண்விழித்துப் பார்த்தால், காலில் கட்டியிருந்த சிவப்பு நாடாவைக் காணவில்லை. அந்த சிவப்பு நாடாவானது வேறு ஒரு இளைஞனுடைய காலில் காணப்பட்டு இருந்தது.

    ஆலோசனை செய்தவாறே உட்கார்ந்திருந்தான். இப்போது அந்த மேலாளர் அவனைக் கேட்டார்:

    "என்ன தம்பி! நீ தொலைந்து போகாமல் பத்திரமாக இருக்கிறாயா?"

    அந்த இளைஞனும் மகிழ்ச்சியுடன், "அய்யா உங்கள் ஆலோசனைக்கும் உதவிக்கும் மிகவும் நன்றி . உங்கள் ஆலோசனை மட்டும் இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் நான் இந்தக் கூட்டத்தினுள் மாட்டி, தொலைந்து தான் போயிருப்பேன். சிவப்பு நாடாவைக் கட்டியிருந்ததால் தப்பித்துக் கொண்டேன்...

    நீங்கள் கட்டிவிட்ட சிவப்பு நாடா எவருடைய காலில் உள்ளதோ அதுதான் நான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதனால் தான் தொலைந்து போகாமல் இருக்க முடிந்தது. ஆனால் இப்போது இன்னும் ஒரு பிரச்சனை...!" என்று கூறினான்.

    "இதற்குப் பிறகும் என்ன உனது பிரச்சனை?" -அந்த மேலாளர் அவனைக் கேட்டார்.

    "சிவப்பு நாடாவைக் கட்டியிருக்கும் நான் தொலைந்து போகாமல் பத்திரமாக இருக்கிறேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போது நான் உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேனே, இந்த நான் யார்?" என்று கேட்டான் அந்த இளைஞன்.

    நம்முடைய நிஜ சொரூபம் ஆன்மா என்று கூறப்படுகிறது. அதே நேரம் ஆன்மாவை அறியவே முடியாது, அது அறியப்படும் பொருளல்ல என்றும் கூறப்பட்டுவிடுகின்றது.

    நிஜமான ஆன்மா அல்லவா நிதர்சனமாகத் தெரிய வேண்டும்? அழியக் கூடிய உடலல்லவா நிதர்சனமாகத் தெரிகிறது?

    இதனை நாம் இன்னும் கொஞ்சம் ஆய்வு செய்வோம்!

    தொடர்புக்கு - sribagavathji@gmail.com

    • கல்லூரி வாழ்க்கை முடிந்தபின், மூவருக்கும் வெவ்வேறு ஊர்களில் வேலை.
    • கால ஓட்டத்தில் கொடைக்கானல் எவ்வளவோ மாறிப்போயிருந்தது.

    'நினைக்கத் தெரிந்த மனமே

    உனக்கு மறக்கத் தெரியாதா!

    பழகத் தெரிந்த உயிரே

    உனக்கு விலகத் தெரியாதா?'

    -கவியரசு கண்ணதாசன்

    பல வருடங்களுக்குப் பிறகு, தனது கல்லூரித் தோழர்கள் இருவரின் தொடர்பு கிடைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சித் தாளவில்லை.

    ஊர், முகவரி எதுவுமே பிடிபடாமல் தொடர்பறுந்து போன உறவுகள், இன்று சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் இணைப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பெருகிவிட்டன. சமூக ஊடகங்களினால் நாம் பெறுகின்ற பயன்களில் இது முக்கியமான விஷயம்.

    அந்த இருவரும் பள்ளிக் காலத்தில் இருந்து அவனுடன் படித்தவர்கள். கல்லூரிப் பருவத்தில் அவர்களின் நட்பு மிக நெருக்கமாயிற்று. விடுமுறை நாட்களில் நூலகம், திரைப்படம், கடைவீதி, விளையாட்டு என எங்கும் சேர்ந்தே திரிவார்கள்.

    கல்லூரி வாழ்க்கை முடிந்தபின், மூவருக்கும் வெவ்வேறு ஊர்களில் வேலை. எனவே, சந்திப்புகள் குறைந்தன. கொஞ்ச காலம்தான் நட்பின் தொடர்பைத் தக்கவைக்க முடிந்தது. மூவருக்கும் திருமணமாகிக் குடும்பஸ்தர்கள் ஆனபின், தொடர்புகள் அறவே அற்றுப்போயின. இப்போதிருக்கும் வியத்தகு ஊடக வசதிகள், அப்போது இல்லாதிருந்ததும் அதற்கொரு முக்கிய காரணம்.

    எத்தனையோ வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் தான், அந்த இரண்டு நண்பர்களை முகநூலில் அவன் கண்டுபிடித்தான். நட்பு மீண்டும் மலர்ந்தது. தகவல் பரிமாற்றங்கள் இனிதாயின.

    அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட,

    ஏதாவது ஒரு சுற்றுலாத் தலத்திற்குச் சென்று வரலாம் என்று அவன் சொல்ல, மற்ற இருவரும் மகிழ்ச்சியுடன் 'ஓகே' என்றார்கள்.

    'கோவா நல்லாருக்கும்' என்றான் ஒருவன்.

    'குலுமனாலி போகலாமே' என்றான் மற்றொருவன்.

    இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊராகச் சொல்லி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்.

    கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒருமுறை, இவர்கள் மூவரும் கொடைக்கானல் சென்று கொண்டாடிய நினைவுகள் அவன் நெஞ்சில் நிழலாடின. எனவே, அங்கு சென்று வரலாம் என்று அவன் சொல்ல, அதுதான் முடிவானது.

    குறிப்பிட்ட நாளில் மூவரும் மதுரையில் சந்தித்தனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி நட்பின் வாசத்தை நுகர்ந்தனர். அவர்களில் ஒருவனின் காரில், அங்கிருந்து கொடைக்கானலுக்குப் பயணமாயினர். மீண்டும் ஒரு 'பேச்லர் டூர்' என்னும் உணர்வு பற்றிக் கொள்ள, வழிநெடுக ஒரே அரட்டை ஆரவாரம்.

    7200 அடி உயரத்தில் இயற்கை எழில்கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையில், ஓர் அழகிய மலைவாசஸ்தலம் கொடைக்கானல். பசுமையான பூங்காக்கள், தெள்ளத் தெளிவான ஏரிகள், மூடுபனி, பச்சைப் புல்வெளிகள், பிரமாண்டமான மரங்கள், குளுமையான சூழல்! அதனால்தான், கொடைக்கானல் 'மலைகளின் இளவரசி'.

    அவர்கள் கொடைக்கானலை எட்டிய போது, அது மாலை நேரம். கடுமையான குளிர். எனவே, ஓட்டல் அறையிலேயே மூவரும் பழைய கதைகளை எல்லாம் பேசிக் களித்தனர். நினைவுகள் அவர்களைக் கல்லூரிப் பருவத்திற்கே கொண்டு சென்றன. சக மாணவர்கள், பேராசிரியர்கள், வகுப்பறைக் குறும்புகள், கலைவிழாக்கள், கேண்டீன் நாயர், சிகரெட் வாங்கும் பெட்டிக்கடை... எத்தனை நினைவுகள்! அத்தனையும் பேசிப் பேசிப் பொழுது போனதே அவர்களுக்குத் தெரியவில்லை. நள்ளிரவு கடந்து இரண்டு மணிக்குமேல்தான் தூங்கினர்.

    மறுநாள் பிரையன்ட்ஸ் பார்க், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, அறிவியல் ஆய்வகம், குணா குகைகள் என பல இடங்களுக்குச் சென்றனர். கால ஓட்டத்தில் கொடைக்கானல் எவ்வளவோ மாறிப்போயிருந்தது.

    'கோக்கர்ஸ் வாக்' பகுதியைக் கடந்து மூவரும் சென்று கொண்டிருந்தபோது, அவனுடைய கண்கள் எதையோ தேடின. மற்ற இருவரும் சில அடி தூரம் சென்றபின் திரும்பிப் பார்க்க, அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவனின் நினைவு நாடாக்கள் பின்னோக்கி ஓடின.

    கவிஞர் தியாரூ

    இருபது வருடங்களுக்கு முன்பு, இந்த மூவரும் இங்கே சுற்றுலா வந்திருந்த போது இதே பகுதியில் ஒரு பாறை; அந்தப் பாறையில் ஒரு சிறிய ஆணியைக் கொண்டு, தன் பெயரோடு தன் காதலியின் பெயரையும் இணைத்து, அழுத்தமாகக் கீறிக் கீறிப் பெயர்களைப் பதிவு செய்திருந்தான். கற்பாறையில் தங்கள் பெயர்களைப் பொறித்துவைத்ததில் அவனுக்குப் பேரானந்தம். அவளைத் திருமணம் செய்து, தேனிலவுக்கு இங்கே கூட்டிவரும்போது, இதனைக் காட்ட வேண்டும் என்று மனதிற்குள் ஆசைகளைத் தேக்கி வைத்திருந்தான். ஆனால், அவள் அந்த இளம்வயதிலேயே புற்றுநோயினால் இறந்துபோனாள். அவளின் நினைவில் வாடினான். நாட்கள் செல்லச் செல்ல, உள்ளத்தின் வலியைக் காலம் ஆற்றியது.

    இப்போது, அந்தப் பாறையைத்தான் அவன் கண்கள் தேடிச் சுழன்றன. மற்ற இருவரும் அவனருகில் வந்தனர்.

    'டேய், என்னடா? எதையோ தொலைச்சவன் மாதிரி நின்னுட்டிருக்கிறே?'

    'இல்ல... இதுக்கு முன்ன நாம இங்க வந்திருந்தப்ப, இதே இடத்துல ஒரு பாறையில் ரெண்டு பெயர்களை எழுதி வச்சேன்'.

    'ஆமா, தெரியும். அதுக்கென்ன இப்ப?'

    'அந்தப் பாறையைத்தான் தேடுறேன்'.

    'இருபது வருஷமாச்சி. இத்தனை வருஷத்துல என்னென்ன மாற்றங்கள். ஊரே மாறிடுச்சி. அந்தப் பாறை மட்டும் அப்படியே இங்க இருக்குமா என்ன? வாடா போகலாம்' என்று சொல்லிக்கொண்டே செல்ல, மற்றவனும் நகர்ந்தான். அவனின் மனமோ, அந்தப் பாறையைக் காணாத ஏக்கத்தில் அதே இடத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

    அதுதான் தேடலின் வலி. கால வெள்ளம் எல்லாவற்றையும் இழுத்துச் செல்கிறது. ஆனால், நினைவுகள் மட்டும் நம் உள்ளத்தில் கிணற்றுநீர்போல் தேங்கி நிற்கின்றன.

    சுகமான நினைவுகள், சங்கடப்படுத்தும் நினைவுகள், அன்பான நினைவுகள், ஆறுதலான நினைவுகள்... இப்படிப் பலவித நினைவுகள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. நினைவுகளே இல்லாத வாழ்க்கையை நாம் நினைத்துப் பார்க்க முடியுமா? அவை இல்லை என்றால் வாழ்க்கை சூனியம்.

    நமது மூளை நினைவுகளை ஒருங்கிணைக்கும் வழிகளில் ஒன்று, அனுபவத்தை மனரீதியாக மீட்டெடுப்பதாகும். கடந்த காலத்தின் நினைவுகள், நிகழ்காலத்தில் நமக்குப் பாடங்களாகவும் இருக்கக்கூடும். நல்லவையோ கெட்டவையோ, அவை இல்லாமல் நிகழ்காலம் ஏது! எதிர்காலம் ஏது!

    நம் நினைவுக் கூடைக்குள் வைரக்கற்களும் இருக்கின்றன; கூழாங்கற்களும் இருக்கின்றன. மயிலிறகுகளும் உண்டு; முட்களும் உண்டு. மல்லிகைப் பூக்களும் உண்டு; ரத்தம் தோய்ந்த அம்புகளும் உண்டு. எல்லாவற்றையும் சுமந்தபடி பயணிக்கிறது வாழ்க்கை நதி.

    ரம்மியமான அனுபவங்கள் மென்மையான நினைவுகளாய் மனதை வருடும். சில நினைவுகள் மனதை அழுத்தும். அவை மீண்டும் மீண்டும் நம்மைக் காயப்படுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், அப்படியே உட்கார்ந்துவிடக் கூடாது. ஓடிக்கொண்டே இருப்பதுதான் நதியின் இயல்பு.

    சிலரைப் பாருங்கள். எப்போதும் எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பார்கள். உட்கார்ந்து குனிந்திருந்தபடி முனகுவார்கள்; பெருவிரலால் தரையைத் தேய்ப்பார்கள். அல்லது வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பித்துப்பிடித்தவர்களைப்போல் தெரிவார்கள். அவர்கள், நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்.

    கடந்து வந்த பாதைகள்; விலகிச் சென்ற உறவுகள்; துரோகம் செய்த முகங்கள், கைநழுவிய காதல் என மனதைப் பிழியும் நினைவுகள் எல்லாம் அனுபவப் பாடங்கள்தான். வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கு அவை நமக்குத் துணைசெய்யும்.

    இனிமையான நினைவுகளை மட்டுமல்ல, கசப்பான நினைவுகளையும் மனதில் வைத்திருப்பது மிக மிக அவசியம். சில விஷயங்களை நாம் மறந்துவிடுகின்றோம். அதனால்தான் நம்பக்கூடாதவர்களை நம்புகின்றோம். செய்யக்கூடாதவைகளைச் செய்கின்றோம். மீண்டும் மீண்டும் ஏமாற்றங்களைப் பெறுகின்றோம்.

    'மறப்போம் மன்னிப்போம்' என்று அடுக்கு மொழியில் பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். மன்னித்தல் மகோன்னதப் பண்பு. அதற்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், 'மறந்துவிடுதல்' என்பது அபாயகரமானது.

    உங்களை வஞ்சித்தவர்களை மன்னித்து விடுங்கள். அது உங்கள் பெருந்தன்மை. ஆனால், அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகத்தை நீங்கள் மறந்துவிட்டால், அவர்கள் மீண்டும் உங்களை அதே நோக்கத்துடன்தானே நெருங்குவார்கள். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பதற்கு 'மறவாதிருத்தல்' அவசியம்.

    பெருந்தன்மை என்பது ஞானத்துடன் பொருந்துவதாக இருக்க வேண்டும். மதியீனமான பெருந்தன்மை நம் மனதை மழுங்கடித்துவிடும். அது நம் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிடும். நினைவுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஏனெனில், நினைவாற்றலே அறிவாற்றல் எனப்படுகிறது.

    நினைவுகளை அசைபோடுவது ஒரு ரம்மியமான அனுபவம். அப்போது, பல நிகழ்வுகள் நம் மனக்கண்முன் வந்து செல்லும். இன்பமான நினைவுகளை மீண்டும் மீண்டும் ரசிப்பதுபோல், கசப்பான நினைவுகளையும் ரசிக்க முடியும். காரணம், அந்தக் கடினமான அனுபவங்களையும் கடந்து வந்திருக்கிறோம் என்கிற நிம்மதிதான்.

    ஓர் இளைஞன் தூக்கமின்றித் தவித்தான். பல நாட்களாக இதுதான் பிரச்சனை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரிடம் சென்றான்.

    'அய்யா, என்னால் தூங்க முடியவில்லை. படுத்தால் பல நினைவுகள் வருகின்றன. என்ன செய்வது?'

    'ஒன்றும் செய்ய வேண்டாம், பேசாமல் தூங்கு' என்றார்.

    'அய்யா, அதுதானே பிரச்சனை. நினைவுகள் வந்து வந்து என் தூக்கத்தைக் கெடுக்கின்றன. உங்களுக்கு நினைவுகளே கிடையாதா?'

    'நிறைய உண்டு'.

    'அப்படியானால் எப்படித் தூங்குகிறீர்கள்?'

    'நான் தூங்கச் செல்லும்போது நினைவுகளுக்கு என்ன வேலை? எனவே, அவையும் தூங்கிவிடும். நான் விழித்தெழும்போது, அவற்றிற்கு என்ன தூக்கம்? எனவே அவையும் விழித்தெழுந்துவிடும். அன்றாடப் பணிகள் ஏராளம். அச்சமயம் நினைவுகள் ஒதுங்கிக் கொள்ளும். சிறிது நேரம் ஓய்வாகச் சாய்ந்திருக்கும்போது, நினைவுகளை அசைபோடுவது சுகமாக இருக்கும்' என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டு எழுந்தார் ஞானி. அவனுக்குள் ஏற்பட்ட ஒரு தெளிவான வெளிச்சம் அவன் கண்களில் தெரிந்தது.

    நினைவுகள் அற்புதமானவை. அவையே நம் வாழ்வின் உயிரோட்டம். அவற்றோடுதான் நம் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது. நினைவுகளற்ற நிலை, வேரிழந்து நிற்கின்ற மரத்தைப் போன்றது.

    நினைவுகளை நாம் ரசிக்க வேண்டும். இன்பமோ துன்பமோ, எல்லாவற்றிலும் ஒரு சுகம் இருக்கின்றது. உறவோ பிரிவோ, எந்த ஒன்றிலும் ஒரு படிப்பினை இருக்கின்றது. எனவே, நினைவுகளைக் கொண்டாட வேண்டும்.

    நினைவுகளைச் சுமையாக நாம் எண்ணிவிடக் கூடாது. ஏனெனில், அவையே வாழ்வின் சுவை.

    போன்: 9940056332

    • திவ்யாவின் அம்மா கிட்டத்தட்ட கத்தினாள்.
    • எல்லோரிடமும் திவ்யா காணாமல் போன பதட்டம் இருந்தது.

    தன் காதல் மனைவி திவ்யா, கண் எதிரே, 'டிரக் 'குடன் காணாமல் போனதை பார்த்து சில நிமிடங்கள் நிலை குலைந்து போய்விட்டான் டேவிட். உடல் படபடக்க, வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து ரத்தம் அழுத்தம் ஏறி தலை கிறுகிறுக்க, என்ன செய்ய? ஏது செய்ய? என்ற குழப்பத்தில் அருகில் இருந்த மைல் கல்லில் அப்படியே உட்கார்ந்து விட்டான்.

    ஒரு நிமிஷம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு யோசித்தான். -"திவ்யா தூங்கவில்லை, மயங்கி இருக்கிறாள். குடித்த ஜூஸில் ஏதோ கலந்து இருக்கிறான் அந்த டிரைவர் மனோகர்!".

    "பாட்டில் கவர் சீல் செய்யப்பட்டு இருந்ததே. ஒருவேளை இன்ஜெக்ஷன் மூலம் மயக்க மருந்தை ஜூஸில் செலுத்தி இருக்காலாம். பாட்டில் மூடி திறக்கும் போது, கையில் ஜூஸின் திரவம் பிசுபிசுக்கும் போதே யோசித்து இருக்கணும்…!"

    "கடவுளே.. திவ்யாவுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது. அவள் தைரியமானவள். அந்த மனோகரால் அவளை ஒன்றும் செய்ய முடியாது..!"

    "சரி.. இப்போ நான் என்ன செய்யணும்..!"

    இப்படி பலவாறாக யோசித்த டேவிட் 'டக்' கென்று முடிவு செய்து செல்போனை எடுத்து திவ்யா போனுக்கு டயல் செய்ய அது ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. வேறு வழியின்றி நண்பன் செந்திலை அழைத்தான்.


    'டிரக்' போய்க்கொண்டிருந்தது. உள்ளே கேபினில் டிரைவர் மனோகர். அருகில் உள்ள சீட்டில் படுத்திருந்தாள் திவ்யா. அவளையே உற்று நோக்கியபடி, டிரக்கை ஒட்டியபடி மனோகர், 'நல்லா அழகாத்தான் இருக்கா. இவ மயக்கம் தெளியறதுக்குள்ள, காரியத்த முடிச்சருனும்' - யோசித்தவன் அங்கிருந்த திவ்யாவோட ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட போனை தூக்கி வெளியில் எறிந்தான்.

    பின்னர் தன்னுடைய செல்போனில் இருந்து யாருக்கோ டயல் செய்தான். "ம்.. சரி.. சரி.. வந்துடுறேன்" என போனை கட் செய்தான். டிரக் போய்க்கொண்டிருந்த, தார் சாலையில் இருந்து, இடது புறமாய் உள்ள ஒரு ஒற்றையடி செம்மண் சாலையில் திரும்பி சென்றது.

    "என்னங்க சொல்றிங்க திவ்யாவ யாரோ ஒரு 'டிரக்'காரன் கடத்திட்டானா? ஐயோ.. மணி ராத்திரி 12 தாண்டிடுச்சே. என் புள்ளைய என்ன பண்ணானோ படுபாவி. இப்ப என்னங்க பண்றது."

    திவ்யாவின் அம்மா ராஜேஸ்வரி கிட்டத்தட்ட கத்தினாள்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    "பொரும்மா… மாப்பிள்ளை போன் பண்ணி அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்காரு. இப்பதான் செந்தில் தம்பி தகவல் சொன்னாரு. அவங்க இப்பவே கிளம்புறாங்களாம். போய் டேவிட் வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வந்து, நம்மளையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.. சீக்கிரம் கிளம்பு!. என திவயாவின் அப்பா ரங்கராஜன் சொல்லவும், பதறியபடியே

    "இப்ப மாப்பிள்ளை எங்க இருக்காரு?"

    "மேலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன். அங்க வாங்கன்னு பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்காரு!"

    பதட்டம் குறையாத ராஜேஸ்வரி, கெஞ்சும் குரலில் திவ்யா அப்பாவிடம் கேட்டாள்.

    "எதுக்கும் நம்ம பையன் பெருமாளுக்கு ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லலாங்களா..?

    "அதெல்லாம் தேவையில்லை. அவன் அரசியல் பலத்துல நமக்கு உதவுவான்னு நினைக்குற.. அவன் கோவத்துல இந்த வீட்ட விட்டு போனவன். இன்னிக்கு வர பேசல. இப்ப இந்த நியூஸ் தெரிஞ்சு சந்தோசம்தான் படுவான். உதவி செய்றவனா இருந்தா, எப்பவோ, எவ்வளவோ பண்ணி இருக்கலாம். இப்போ… என் பொண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. கடவுளே… அவளுக்கு எதுவும் ஆயிடக்கூடாது..."

    குரல் உடைந்து அவரும் நிலை குலைந்து சேரில் அமர்ந்தார். தளர்ந்து அமர்ந்த தனது கணவரின் தோளை பிடித்து ஆசுவாசப்படுத்தினாள் ராஜேஸ்வரி. அப்போது டேவிட்டின் நண்பர்கள், அவர்களுடன் டேவிட்டின் அம்மா, அப்பா, தங்கை எல்லோருமாய் ஒரு வேனில் வந்து இறங்கினர். எல்லோரிடமும் திவ்யா காணாமல் போன பதட்டம் இருந்தது.

    மேலூர் போலீஸ் ஸ்டேஷன்.

    அந்த இன்ஸ்பெக்டர் வேறு யாரும் இல்லை. டேவிட், திவ்யாவிடம் ரவுடிகள் கலாட்டா செய்தபோது, அந்த கேசை விசாரித்தாரே அதே இன்ஸ்பெக்டர் அழகர் தான். அதே முறுக்கு மீசையும், தொப்பையுமாக நின்றார்.

    டேவிட் அதிர்ச்சியாய் பார்க்க, அந்த இன்ஸ்பெக்டர் "என்ன சார்.. வாழ்க்கை நம்ம ரெண்டுபேரையும் மீண்டும் சந்திக்க வைக்குது. அன்னிக்கு உங்க மச்சான், உங்க கேசு விஷயமா வந்து, ஸ்டேஷன்ல கத்திட்டு போனாரா.. மறுநாளே எனக்கு டிரான்ஸ்வர். இந்த ஸ்டேஷனுக்கு மாத்திட்டாங்க. இங்க வந்து ரெண்டு நாள்தான் ஆகுது. பொண்டாட்டிய 'டிரக்' காரன் கடத்திட்டான்னு நீங்க இங்க வந்து நிக்கிறீங்க…"

    டேவிட் என்ன பதில் சொல்வது என்று தெரியாத மனநிலையில் நின்றான். "போங்க சார்… ரைட்டர் கிட்ட நடந்த எல்லாத்தையும் டீடெயிலா ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க.."

    டேவிட் ரைட்டர் டேபிளுக்கு செல்ல, பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிளிடம், "யோவ்.. எல்லா டோல்கேட், போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணுங்க. சிகப்பு கலரு டிரக், கேரளா ரிஜிஸ்டிரேசன், தாடி, கூலிங் கிளாஸ் போட்ட டிரைவர் பேரு மனோகர், பொண்ணு கிட்னாப் கேசுன்னு சொல்லுங்க..!"

    கான்ஸ்டபிள் நகர,

    "முன்ன பின்ன தெரியாத டிரக்ல ஏறப்போ, நம்பர் கூட நோட் பண்ணாம இருந்து இருக்கீங்களே… என்ன படிச்சு என்ன பிரயோஜனம். டேவிட்டை பார்த்து, சலிப்பாய் கூறினார் இன்ஸ்பெக்டர் அழகர்.

    அப்போது ஒரு போனை அட்டெண்ட் பண்ணி எழுந்த கான்ஸ்டபிள், "சார்.. இவரு மனைவி திவ்யாவோட செல்போன் ஜிபிஎஸ் டிராக பண்ணதுல, மேலூர் கூடிரோட்ல, காட்டுச்சாம்… போய் பார்த்தா போன் ஒரு பையன் வச்சு இருக்கானாம். கூடிரோடு, புதர்ல கிடந்து எடுத்தேன்னு அவன் சொன்னானாம். கடத்துனவன், போனை ஆப் பண்ணி, தூக்கி போட்டு போயிருக்கான்…"

    "ப்ச்.. கடத்துன டிரக் டிரைவர் மனோகர் பிரிலியண்டாவே 'மூவ்' பண்ணி இருக்கான். அப்போ அவன் ஒரு புரொபஷனல் கிட்நாபர்."இன்ஸ்பெக்டர் அழகர் தனக்குள் பேசியபடி யோசித்தார். அப்போது வாசலில் வந்து நின்ற வேனில் அனைவரும் இறங்கினர்.

    "டேவிட்டு… திவ்யாவுக்கு என்னடா ஆச்சு"

    அலறி அடித்தபடி டேவிட்டின் அம்மா லிசா ஓடி வந்து டேவிட்டின் கைகளை பிடிக்க, கூடவே திவ்யாவின் அம்மா அழுதபடி வர, வந்து இறங்கிய அனைவரும், ஒரே பதட்டத்தோடு ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கேட்க, ஸ்டேஷன் பரபரப்பானது.

    சற்று நேரம் பொறுத்து பார்த்த இன்ஸ்பெக்டர் அழகர், "அமைதி.. அமைதி..!" என கத்தி அலறல்களை ஆசுவாசப்படுத்தினார்.

    அனைவரும் அமைதியாகி அவரை பார்க்க,

    "இவரு நெல்லை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த இன்ஸ்பெக்டராச்சே?" செந்தில் 'கிசுகிசுப்பாய்' நெல்சனிடம் கேட்க.. "என்னை இந்த ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் பண்ணது திவ்யாவோட அண்ணன் பெருமாள் தான்!" என்று இன்ஸ்பெக்டர் அழகர் சொல்லவும், அனைவரும் அவரையே பார்க்க,

    "அன்னைக்கு, அவரு ஸ்டேஷன் வந்தாரு இல்ல.. அப்ப நீங்கல்லாம் கூட அவர அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி வச்சீங்களே.. அன்னிக்கு கோபமா போனவரு.. அவரோட அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, என்னைய இந்த ஸ்டேஷனுக்கு உடனே தூக்கி அடிச்சிட்டாரு!"

    "எங்க மேல உள்ள கோபத்துல… உங்கள எதுக்கு டிரான்ஸ்பர்…? தியாகு கேட்டான்.

    "ஆங்… அன்னிக்கு கேசை ஒழுங்கா விசாரிச்சு இருந்தா.. அவரு ஸ்டேஷனுக்கு வந்து இருக்க மாட்டாராம்.. தங்கச்சிக்காக வரப்போயி நீங்க எல்லாம் அவர தரக்குறைவா நடத்துனதுக்கு நான்தான் காரணமாம்…! எங்க இடிச்சு, எங்க முடியுது பார்த்தீங்களா..?"

    அனைவரும் பார்க்க,

    "இப்ப பாருங்க.. மறுபடியும் நான் வந்த ஸ்டேசனுக்கே., அவர் தங்கச்சிய 'கிட்நாப்' பண்ண கேசு என்கிட்டையே வந்துருக்கு… இது என்னமோ விட்ட குறை தொட்ட குறை மாதிரி இந்த திவ்யா கேசு.. விடாது கருப்புன்னு என்னையே துரத்துது.."என இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு, பின் அவர்களை பார்த்து,

    "இன்னும் இந்த 'கிட்நாப்' விசயத்தை பெருமாள் சாருக்கு நீங்க யாரும் தகவல் சொல்லலியா..?" என கேட்க.. அவர்கள் 'இல்லை' என தலையாட்டினர்.

    திவ்யாவின் அப்பா முன்வந்து, "எங்களுக்கு அதுல விருப்பம் இல்லை சார்.. இப்ப அது முக்கியம் இல்ல. திவ்யாவை பத்தி எதுவும் தகவல் கிடைச்சதா.. அத சொல்லுங்க..!" என நா தழுதழுக்க கேட்டார்.

    "ஒரு பெண்ணோட அப்பாவா உங்க பதட்டமும், பயமும் புரியுது சார்.. ஆனா, புரிஞ்சுக்கோங்க… நாங்க போலீஸ் தான். மந்திரவாதி இல்லை. மை போட்டு பார்த்து, உடனே உங்க பொண்ணு எந்த இடத்துல இருக்கான்னு சொல்ல…!"

    திவ்யாவின் அம்மா தேம்பி அழ, அவளை தோளோடு அணைத்து ஆறுதல்படுத்தினாள், மேரி.

    "பொதுவா.. இந்த மாதிரி கேசுல 'கிட்நாப்' காரணம் தெரியணும். கிட்நாப் பண்ணவன் எதுக்கு பண்ணினான்னு தெரியணும்னா, அவன் உங்களில் யாருக்காவது, இந்நேரம் போன் பண்ணி இருக்கணும்… அவன் திவ்யாவை ஏதாவது பண்றதுக்கு முன்னாடி, கண்டுபிடிக்க, மொத்த போலீசும் வயர்லெஸ்ல அலறிகிட்டு இருக்காங்க. ரோந்து போலீஸ், ஹைவேஸ், பேடிரோல் எல்லாரும் அலார்ட்டா இருக்காங்க.. பொறுமையா இருங்க, திவ்யாவுக்கு ஏதும் நடக்காது.. கண்டுபுடிச்சுடலாம்…"

    அவர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவது போல் இருந்தது இன்ஸ்பெக்டர் அழகரின் கனிவான பேச்சு. அப்போது போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போன் அடித்தது. எடுத்து பேசிய கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டரை பார்த்து கத்தினார். "சார்.. திவ்யாவை கடத்தின கடத்தல்காரன் பேசுறான் சார்!"

    அனைவரும் அந்த டெலிபோனை நோக்கி ஓடினர். ரிசிவரை வாங்கி காதில் வைத்த இன்ஸ்பெக்டர் அழகர் முகம் அதிர்ச்சியில் உறைந்தது…

    (தொடரும்

    E-Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353

    • ‘உலக புடவை தினம்’ என்பது புடவைக்கு கொடுக்கப்படும் மரியாதை, அங்கீகாரம்.
    • புடவையின் சிறப்பு காலத்திற்கும் நிற்கும் என்பதே உண்மை.

    புடவை... இது ஒரு சாதாரண துணி அல்ல. அழகுபடுத்தப்பட்ட துணி மட்டும் அல்ல. கண்ணைப் பறிக்கும் வண்ண நிறங்களும், டிசைன்களும் கொண்டது மட்டுமல்ல.

    இது கலாச்சாரத்தின் பொக்கிஷம். பாரம் பரியத்தின் அடையாளம். ஏனோ தெரியவில்லை, இதற்கு ஒரு மென்மையும், கருணையும், கம்பீரமும், மரியாதையும் உண்டு. இது பெண்களின் ஆடை. தென் ஆசியா, வங்களாதேசம், நேபாளம், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான்-இங்கெல்லாம் புடவை என்பது பழமையான, மதிப்பான ஆடையாகும்.

    'பெண்மையின் அடையாளம் அழகு

    நேர்த்தி மிக்க ஆடை புடவை'

    'உலக புடவை தினம்' என்பது புடவைக்கு கொடுக்கப்படும் மரியாதை, அங்கீகாரம். இந்த நாள் புடவையின் அழகு, ஸ்டைல் பற்றி மட்டுமல்ல கலாச்சாரத்தின் ஆணி வேரினை போற்றுவதாகும். இந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றது. நம் பெண்களின் மரபுரிமை சொத்தாகின்றது. புடவை விழா சமீப காலமாகத்தான் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. என்றாலும் புடவையின் சிறப்பு காலத்திற்கும் நிற்கும் என்பதே உண்மை.


    புடவையின் சரித்திரம் சுமார் 5,000 வருடங்களுக்கும் பழமையானது. என்றாலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நிரூபணமாக கூறுவது புடவைகள் சுமார் கி.மு. 3000 வருடங்களுக்கு முந்தையதாக குறிப்பிடு கின்றனர். சிந்து வெளி நாகரிகத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது பழங்கால சிற்பங்களிலும், மற்ற சிற்ப வேலைகளிலும் பெண்கள் புடவையினை உடலை சுற்றி அணிந்திருந்ததாகக் கூறுகின்றனர்.

    காலத்திற்கேற்ப, நாகரிகத்திற்கேற்ப, கலாசாரத்திற்கேற்ப, சமுதாயத்திற்கேற்ப, மத, மொழிகளுக்கேற்ப புடவை அணியும் முறைகளில் மாறுதல்கள் ஏற்பட்டன.

    இந்த மாறுதல்கள் அதிகம் இந்தியாவிலேயே ஏற்பட்டன. அதனை ஒட்டியுள்ள நாடுகளிலும் இந்த மாற்றங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகளில் மேலே குறிப்பிடப்பட்ட மாறுதல்கள் ஏற்பட்டன. வட இந்தியர், தென் இந்தியர்-அதிலும் கன்னடம், தெலுங்கு, தமிழ் பேசுபவர்கள் இவர்கள் புடவை அணியும் முறையில் மாறுதல் ஏற்பட்டது. நூல் சேலை, பட்டு சேலை, சுங்குடி சேலை என புடவையின் துணியின் தரமும் மாறுபட்டு இருக்கின்றது.

    புராண புத்தகங்களில் பெண்கள் தைக்காத ஒரு நீண்ட ஆடையினை உடலினை சுற்றி அணிந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இது 5-9 கஜ நீளம் இருந்தது. துணித்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக இன்று சாயர், கைவேலை, நெசவில் முன்னேற்றம் என உயர்தரம், அதிக விலை, கண் கவர் நாகரிகம் புடவைத் துறையில் ஏற்பட்டுள்ளது.

    கமலி ஸ்ரீபால்

    மருத்துவ துறை, கல்வித்துறை, படிப்புத் துறை என எல்லா துறைகளிலும் 'உலக தினமாக புடவை'யினை கொண்டாடுவது இதன் முக்கியத்துவத்தினை அனைவரும் மறந்து விடாது என்பதற்காகத்தான். இந்நாளன்று விதவிதமான உற்பத்திகளை வெளி கொணர்ந்து மக்களிடம் புடவைகளின் சமீப கால முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்வர்.

    அது மட்டுமா! அப்புடவை உருவாக்கப்பட்ட விதம், அதிலுள்ள டிசைன்களின் விவரங்கள், உடுத்தும் முறை இவற்றினை கூட விளக்குவர்.

    தென் ஆசியா குறிப்பாக இந்தியாவில் புடவை கலாச்சாரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. விழாக் காலங்கள், பண்டிகைகள், கல்யாணங்கள், பூஜைகள், சமூக விழாக்கள் இவைகளில் பெண்கள் வித விதமாய் புடவை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து, தலை நிறைய பூ என வலம் வரும் பொழுது தேவலோகம் போல் அவ்விடமே காட்சி அளிக்கும்.

    * என்றுமே புடவை நம் கலாச்சாரத்தின் பண்பாடு.

    * பெண்ணின் பெருமை

    * பெண்ணின் தனிப்பட்ட அடையாளம்.

    முன்பு நூல் சேலை, பட்டு சேலை என்ற காலம் மாறி ஷிபான், ஜார்ஜெட், ஆர்கென்சா, கல், முத்து பதித்தவை, தங்கம், வெள்ளி கொண்டு உருவாக்கப் பட்டவை என கொடி கட்டி பறக்கின்றது.

    கல்யாண செலவில், பெண்ணுக்கு சேலையும், வேலைப்பாடு மிகுந்த பிளவுசும் என்பது முக்கிய செலவு என்றாகி விட்டது.

    * பனாரஸ் புடவைகள்: உத்தர பிரதேசத்தினை சொந்தமாகக் கொண்டது. உயர் பட்டில் தங்கம், வெள்ளி வேலை பாடுகளில் அதிக மொகல் பிரிவு கலை வடிவத்தில் இருக்கும்.

    * காஞ்சிபுரம் பட்டு: கனத்த உயர்தர பட்டுப்புவை, நீண்ட பெரிய பார்டர்கள், தங்கம், வெள்ளியின் வேலைப்பாடு, புடவை முந்தானை ராஜ பாம்பனா போன்ற வேலைபாடு கொண்டது. வண்ண, வண்ண நிறங்களுக்குப் பஞ்சமே இராது. அநேக மணமகளின் சாய்ஸ் காஞ்சிபுரம் பட்டுப்புடவையாகத்தான் இருக்கும்.


    * பாத்தினி புடவை: ராஜஸ்தான், குஜராத் பகுதியினைச் சார்ந்தது. பளிச்சென நிறங்களில் பல பிரிண்டுகளில் வரும் இந்த புடவை பாரம்பரியமானது மட்டுமல்ல. வட இந்திய நாட்டுப்புற நடனங்களில் இவ்வகை புடவைகளே அதிகமாக இருக்கும்.

    * பாந்தினி புடவைகள்: மகாராஷ்டிரா பிரிவினைச் சார்ந்தது. உயர் பட்டில், நிறத்தில், பெரிய மயில், பூக்கள் கொண்டது. இதன் பார்டர் தங்கம், வெள்ளி கொண்டு மிக நுணுக்கமாக நெய்யப்பட்டிருக்கும்.

    * ஷிபான் மற்றும் ஜார்ஜெட் புடவைகள்: எடையற்றது. நவீன நாகரிகமானது. அன்றாட உபயோகம் மற்றும் விழாக்காலங்களுக்கு ஏற்றது. வெய்யில் காலத்திற்கு ஏற்றது.

    புடவைக்கென்று ஒரு சரித்திரமே எழுதலாம். இது இடத்திற்கு இடம் சற்று மாறுபடலாம். ஆனால் தென் இந்தியா விற்கென்று ஒரு சரித்திரம் உண்டு. இங்கு உருவாகும் உயர்தர உருவாக்கம் கண் கவர் வேலைபாடுகளைக் கொண்டது. ஆகையால்தான் மக்கள் புடவை என்றாலே தென் இந்தியாவையே அதிகம் குறி வைப்பர்.

    * காஞ்சிபுரம் நூல் சேலைகளும் அகன்ற பார்டர், முழுமையான உயர்தர பருத்தி, கண் கவர் வண்ணம் என உடுத்துபவரை அதி கம்பீரமாகக் காட்டும். இதனை அணிபவர் நல்ல வாட்ட சாட்டமான உயரம், தோற்றத்துடன் இருந்து விட்டால் போதும். கொள்ளை அழகுதான். மரியாதையும் கொஞ்சம் கெத்தும் கொண்ட புடவை இது.

    *மைசூர் சில்க்: இதனை தென்னிந்தியாவின் புடவை கிரீடம் எனலாம். இதன் வழு வழுப்பும், மென்மையும் உடலோடு ஒத்து போகும் விதமும், நிறமும், ஜரிகை வேலைப்பாடும் அடடா!! அடடா!! என்று இருக்கும். எடை அதிகம் இல்லாதது. கூடுதல் மென்மையானது. எந்த பெண்ணும், அதாவது அதிக உயரம், சாதா உயரம், பருமன் தோற்றம், எந்த வயதும் இவற்றிற்கு வளைந்து கொடுத்து அப்பெண்ணையே சாந்தமாகக் காட்டும். இதனை அணியும் போது அதிக ஒல்லியாகக் காட்டும்.

    * குமதவல்லி புடவைகள்: தமிழ் நாட்டினைச் சார்ந்தது. அதிக பிரபலம் இல்லாதது. பார்டர், உடல் தாமரைப்பூ மற்ற பூக்களைக் கொண்டு நெய்யப்பட்டு இருக்கும். கனமில்லாதது. கோடைக்காலத்திற்கு ஏற்றது.

    * போச்சம் பள்ளி புடவை: ஆந்திர மாநிலம் பருத்தி, பட்டு இரண்டு வகை உண்டு. போச்சம் பள்ளிக்கே உரித்தான டிசைன்கள் உண்டு. பல நிறங்கள், ஜிக்ஸக் பிரிண்ட், யானை, மயில், கோவில்கள் என்ற உருவ பதிவுகள் கொண்டது.

    *கோள புடவைகள்: எளி மையான தோற்றம், சீதோஷன நிலைக்கேற்ற புடவை, அடர்ந்த நிறம் கொண்ட பார்டர்கள், எளிதான முந்தானை கொண்டது. இதற்கென தனி அமைதியான தோற்றமும், உயர்தரமும் உண்டு.

    * ஆரணி பட்டு: பார்டரும், முந்தானையும், உடல் நிறமும் அசத்த லான தோற்றத்தினைக் கொண்டிருக்கும். அநேக விழாக்களில் பெண்கள் இப்புடவையில் வலம் வருவதினைக் காணலாம்.

    இன்னும் எழுதப்படாதவை எத்தனை எத்தனையோ! பல வீடுகளில் பண வீக்கம் எற்பட்டு விடக்கூடாது என்ற காரணம் கருதி மிக குறைந்த அளவில் தான் இங்கு எழுதப்பட்டுள்ளன.

    * நாளுக்கு நாள் இதன் பேஷன் மாறிக் கொண்டேதான் இருக்கின்றது.

    * பருத்தி, பட்டு, பாலியெஸ்டர், ஷிபான், கிரேப் போன்றவை உள்ளன. குறைந்த செலவில் பராமரிக்கும் வகையிலும் உள்ளன.

    * சில்க் காட்டன், காட்டன் லினென், சில்க் ஜார்ஜெட் என கலந்து புடவைகள் உருவாக்கப்படுகின்றன.

    * ஆர்கானிக் காட்டன், மூங்கில் பட்டு, வாழைநார் என்றெல்லாம் தினுசு, தினுசாக உள்ளன.

    * பாரம்பரிய முறைபடி உடுத்துதல். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

    பேண்ட் ஸ்டைல் சாரி: இது இந்த கால பெண்களுக்கு ஏற்றாற் போல் பேண்ட் அணிந்து ரெடிமேடாக தைத்த புடவையினை அணிவது மிக எளிதாக உள்ளது.

    இதனை அவரவர் விருப்பப்படி அணிய முடியும். அவரவர் உருவத்திற்கு ஏற்றாற் போல் டெய்லரும் தைத்து கொடுத்து விடுகின்றார்.

    * லெகங்கா ஸ்டைலில் புடவை கட்டுவதும் இன்றைய நாகரிகத்தின் வளர்ச்சிதான்.

    இப்படி புடவை உடுத்தும் விதத்தினைக் கூட அதிகம் கூற முடியும். இத்தனை சொல்லி விட்டு பிளவுஸ் எனப்படும் சட்டையினைப் பற்றிக் கூறாமல் இருக்கலாமா?

    முன்பெல்லாம் புடவை விலை உயர்ந்ததாக இருந்தாலும், பிளவுஸ் மிக மிக சாதாரணமாக இருக்கும். ஆனால் இன்று பிளவுஸ் அதிக வேலை பாடுகள் கொண்டது. மிக மிக அழகு வாய்ந்தது. எம்ப்ராய்டரி வேலை, முத்து, கல் பதிப்பு என அசாத்திய வேலைபாடு கொண்டது. சில நேரங்களில் புடவையினை விட பிளவுசுக்கு அதிக விலை இருக்கும்.

    இன்றைய நிலையில் புடவை 200 ரூபாயில் இருந்து ஒரு கோடி வரை கூட உள்ளன.

    எத்தனை விதங்களை சொன்னாலும் 'மதுரை சுங்குடி' புடவைக்கு தனி மவுசுதான். தூய காட்டனில் அன்றாடம் அணிவதற்கு ஏற்றாற் போல் மங்களகரமான நிறங்களில் பெண்கள் அணிந்து மஞ்சள் பூசிய முகமும், பெரிய குங்கும பொட்டும், தலை நிறைய பூவும், கை நிறைய கண்ணாடி வளையல் மற்ற அணிகலன்கள் காலில் கொலுசு என வரும் பொழுது எந்த வகை ஸ்டைலும் எதிரே நிற்க முடியாது.

    இன்றைய காலத்தில் பெண்களுக்கு அன்றாடம் புடவை கட்டிவேலை செய்வது என்பது கடினம். இந்த வகையில் தான் சுடிதார், சல்வார் என உருவாகின. ஆனால் விழாக்காலங்களில் புடவைக்கு நிகர் புடவைதான். புடவையை போற்றுவோம்! கொண்டாடுவோம்!

    "அம்பாளுக்கும் விதம் விதமாய் புடவை சார்த்தி மகிழ்வது நம் ரத்தத்தில் ஊறிய ஒன்று. செய்வோமே"

    • கி.மு.7 அல்லது 8-ம் நூற்றாண்டில் அகத்தியர் வாழ்ந்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.
    • அகத்தியர் தலைமையில் முதல் தமிழ்ச் சங்கம் செயல்பட்டதும் முருகப்பெருமானின் அருள் ஆசியால் நிகழ்ந்ததாகும்.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள், ஆச்சரியங்கள் ஏராளம்... ஏராளம்...! அதில் சில மட்டுமே வரலாற்றில் பதிவாகி நமக்கு தெரிகிறது. ஆனால் திருச்செந்தூரில் முருகப்பெருமான் எப்போது அமர்ந்து அருள்பாலிக்க தொடங்கினாரோ அப்போதே அவரது அற்புதங்களும் தொடங்கி விட்டன.

    சங்க காலத்துக்கும் முன்பே வேதம்-புராண காலத்திலேயே திருச்செந்தூர் முருகன் தனது அடியார்களுக்கு அற்புதங்கள் செய்து வழிகாட்டி உள்ளார். அப்படி முருகனின் அருள்பெற்ற அடியார்களில் முதல் நபராகவும், முதன்மையானவராகவும் கருதப்படுபவர் அகத்தியர்.

    கி.மு.7 அல்லது 8-ம் நூற்றாண்டில் அகத்தியர் வாழ்ந்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அந்த வகையில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ரிக்வேதம், ராமாயணம் ஆகியவற்றில் அகத்தியர் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன.

    இவர் சப்த ரிஷிகளுள் ஒருவர் என பெயர் பெற்றவர். ஏழு கடலையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வெற்றி கொண்டவர். வாதாபி இவ்லன் என்னும் அசுரர்களை வென்றவர். தன் பித்ருக்களின் கர்மவினை தீர லோபமித்திரை என்னும் கற்புக்கரசியை மணந்து இல்லற தர்மத்திலும் சிறந்து விளங்கினார். காவிரியின் கர்வத்தை கமண்டலத்தில் அடக்கி பின்னர் அதை விரியச் செய்தவர்.

    ராமாயண காலத்தில் அகத்திய பெருமான் ராம லட்சுமணர்களுக்கு மந்திரோபதேசம் செய்து வாழ்த்தினார்.

    அகத்தியருக்கு கும்பமுனி, குருமுனி, தமிழ்முனி, பொதிகை முனி என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் உண்டு. பிரம்மாவின் வழித்தோன்றலான இவர் முக்காலமும் அறிந்தவர் என்ற சிறப்பை பெற்றவர்.

    சிவபெருமானின் உத்தரவுபடி இவர் வடக்கில் இருந்து தெற்கே பொதிகை மலைக்கு வந்ததாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர் தென்னாட்டுக்கு வரும் போது கோல்காபூர் என்ற இடத்தில் மகாலட்சுமியை வழிபட்டார். அப்போது அவள், 'அகத்தியா நீ தென்னாட்டுக்கு சென்றதும் உனக்கு எல்லா வரங்களையும் முருகன் தந்தருளுவார்' என்று கூறினாள்.

    அதன்படி பொதிகை மலைக்கு வந்த அகத்தியரை திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆட்கொண்டார். தெற்கே வந்த பிறகு அவர் முருகப்பெருமானின் முதல் சீடராக மாறினார். முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டில், தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தார்.

    சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற பழங்கால இலக்கியங்கள் இந்த கருத்தை ஆதரிக்கின்றன. குறிப்பாக, சிலப்பதிகாரத்தில், அகத்தியர் தென்னிந்தியாவுக்கு வந்தபோது, முருகன் அவருக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

    பல கோவில்களில், அகத்தியருக்கு முருகன் தமிழ் கற்பிக்கும் காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் காணப்படுகின்றன.

    அகத்தியர் மற்றும் முருகன் இருவரும் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் கடவுள்களாக கருதப்படுகின்றனர். எனவே, அகத்தியருக்கு முருகன் தமிழ் கற்றுக் கொடுத்தார் என்ற நம்பிக்கை இயற்கையானது.

     

    முருகன் புகட்டிய தமிழ்ப் பாலை குடித்துதான் அகத்தியர் 'அகத்தியம்' எனும் தமிழ் இலக்கண நூலை படைத்தார். அந்த நூல் 12 ஆயிரம் சூத்திரங்கள் கொண்டது என்று புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால் அந்த நூல் துரதிருஷ்டவசமாக நமக்கு கிடைக்காமலேயே போய் விட்டது.

    என்றாலும் அகத்தியரின் முதன்மை சீடரான தொல்காப்பியர் அகத்திய இலக்கண நூலை பின்பற்றி எழுதிய தொல்காப்பியம் நமக்கு கிடைத்தது. இத்தகைய சிறப்புடைய அகத்தியர் சித்தர்களுக்கெல்லாம் சித்தராக திகழ்ந்தார்.

    அவர் மூலம்தான் சித்தர் பரம்பரையை முருகப்பெருமான் தமிழகத்தில் உருவாக்கியதாக கருதுகிறார்கள். முருகப்பெருமான் அருளால் அகத்தியர் இலக்கியம், இலக்கணம், இசை, மருத்துவம், ஜோதிடம், உளவியல் என்று அனைத்து துறைகளிலும் மேன்மை பெற்று இருந்தார். அதனால்தான் அவரால் பல்வேறு துறைகளில் இன்றும் வழிகாட்டும் அளவில் குறிப்புகள் எழுதி வைக்க முடிந்தது.

    அகத்தியர் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்தது சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அகத்தியருக்கு தென்னாட்டை சிவபெருமான் கொடையாக வழங்கியதாகவும் அதில் ஒரு பகுதியை பாண்டிய மன்னர்களுக்கு அகத்தியர் கொடுத்தார் என்றும் திருநெல்வேலி தல புராணம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழுக்காக தமிழின் இனிமைக்காக அகத்திய முனிவர் பொதிகை மலையில் தங்கி தமிழ் வளர்த்தார் என்று புராணம் கூறுகிறது அகத்திய மாமுனிவரிடம் தமிழ் கற்கவே கைலைமலையில் இருந்து புறப்பட்டு வந்தவர் நந்தி. எம்பெருமானின் சீடரும் திருமந்திரம் தந்தருளியவருமான சித்தர் திருமூலர் ஆவார்.

    பல பெருமைகளையும் சிறப்பையும் தந்து சிறப்பு பெற்றவரான அகத்திய மாமுனிவருக்கு தமிழின் ஞான குருவாகி நின்றவன் திருச்செந்தூர் முருகப் பெருமான். அருணகிரிநாதர் அதை தம் பாடலில்

    "சிவனை நிகர் பொதியவரை

    முனிவன் அகமகிழ இருசெவி

    குளிர இனிய தமிழ் பகர்வோனே"

    என்று போற்றி பாடியருள்கிறார்.

    இத்தகைய தகவல்கள் மூலம் அகத்தியர் தமிழ்க்கடவுள் முருகனிடம் இருந்துதான் தமிழை தெரிந்து கொண்டு காலத்தால் அழியாத நூல்களை தந்து இருக்கிறார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும். அகத்தியருக்கு வழிகாட்டிய முருகப்பெருமான் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகப்பெருமான்தான் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    அகத்தியர் தலைமையில் முதல் தமிழ்ச் சங்கம் செயல்பட்டதும் முருகப்பெருமானின் அருள் ஆசியால் நிகழ்ந்ததாகும். முருகனின் உத்தரவுபடிதான் அகத்தியர் தல யாத்திரைகள் மேற்கொண்டதாக புராண நூல்களில் சொல்லப்பட்டு உள்ளன.

    தமிழகத்தில் பழமை சிறப்பு வாய்ந்த பல ஆலயங்களில் உள்ள தல வரலாறுகள் அகத்தியருடன் தொடர்பு கொண்டு இருப்பதே இதற்கு சான்றாகும். திருச்செந்தூர் முருகன் அருள் பெற்ற அகத்தியர் தென்னாட்டில் முருகன் தலங்களில் ஏராளமான வழிபாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தினார்.

    இன்றும் அவை பக்தர்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள வழிபாட்டு முறைகளில் பல அகத்தியர் காட்டிய வழிகாட்டுதல்படி நடப்பதாக சொல்கிறார்கள். இது முருகப்பெருமானின் முதல் சீடர் அகத்தியர் என்பதை காட்டுகிறது.

    அகத்தியர் மூலம் திருச்செந்தூர் முருகன் நடத்திய அற்புதங்களும், திருவிளையாடல்களும் ஏராளம். ஆனால் அந்த நிகழ்வுகள் எதுவும் வரலாற்று குறிப்புகளில் பதிவு பெறாமல் போனது துரதிருஷ்டமாகும். என்றாலும் திருச்செந்தூர் முருகனுக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பை பிரதிபலிக்கும் வகையில் ஒரு சில பதிவுகள் திருச்செந்தூரில் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

    அதில் ஒன்று தான் அகத்தியர் அருளிய முருகன் மந்திரம் ஆகும். மானிட நலனுக்காக பல மந்திரங்களை அகத்தியர் தந்துள்ளார். அந்த வகையில் நமது சொல்லும் செயலும் தெளிவாக இருக்க அகத்தியர், முருகன் மந்திரம் அருளியுள்ளார்.

    அகத்தியரின் அந்த முருகன் மந்திரம் வருமாறு:-

    ஓம் முருகா,

    குரு முருகா,

    அருள் முருகா,

    ஆனந்த முருகா,

    சிவசக்தி பாலகனே,

    ஷண்முகனே,

    சடாக் ஷரனே,

    என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க,

    ஓம் ஐம் ஹ்ரீம்,

    வேல் காக்க சுவஹா!

    இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் குரு பகவானின் அருள் கிடைக்கும், செவ்வாய் தோஷம் விலகும். அதோடு நமது நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் சத்திய வாக்காக இருக்கும். நமது எண்ணமும் செயலும் நன்னெறிகளை நோக்கி இருக்கும். இதன் காரணமாக சமுதாயத்தில் நமக்கான ஒரு உரிய இடம் கிடைக்கும். நமது நிலையானது படிப்படியாக உயரும். நம் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படும் என்பது நம்பிக்கை.

    திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் மந்திரத்தை சொல்ல தவறுவது இல்லை. பெரும்பாலான திருச்செந்தூர் முருக பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி தினத்தன்று அகத்தியர் வழங்கிய இந்த முருகர் மந்திரத்தை உச்சரிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    திருச்செந்தூர் முருகனுக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பை இது தெள்ளத்தெளிவாக உறுதிப்படுத்துகிறது. இது மட்டுமின்றி திருச்செந்தூரில் அகத்தியருக்கு தனி சன்னதியுடன் அவரது சிலை நிறுவப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    திருச்செந்தூர் ஆலயத்துக்கு செல்லும்போது மண்டபம் வழியில் தூண்டுகை விநாயகர் ஆலயம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த விநாயகர் ஆலயத்துக்கு அருகில் அகத்தியருக்கும் சிறிய சன்னதி இருக்கிறது. இது பற்றி தெரிந்தவர்கள் அந்த இடத்தில் அகத்தியரை வணங்காமல் செல்வதில்லை.

    அகத்தியர் மீது பற்றுக் கொண்டவர்கள் அந்த சன்னதியை தேடி பிடித்து வந்து வணங்கி விட்டு பிறகு திருச்செந்தூர் முருகன் வீற்றிருக்கும் ஆலயத்துக்கு செல்வதுண்டு. முருகன் கருணைக்கேற்ப அகத்தியர் செயல்பட்டார் என்பதை இந்த சன்னதி நமக்கு உறுதிபடுத்துகிறது. அடுத்த முறை நீங்கள் திருச்செந்தூருக்கு செல்லும்போது அகத்தியரை வழிபட தவறாதீர்கள்.

    முருகனின் அற்புதங்கள் அடுத்த வாரமும் தொடரும்...

    • மனிதர்க்குப் பெருமையெல்லாம் தனது சுயமரியாதையிலிருந்து சற்றும் நழுவாத வரைக்கும் தான்.
    • சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் வாழும்வரைதான் மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும்

    சுயமரியாதை தவறாத வாழ்வு வாழக் காத்திருக்கும் வாசகப்பெருமக்களே! வணக்கம்.

    ஒருவரைப் பார்த்து, 'இவர் மனிதராக வாழ்வதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கிறார்' என்றால், அவரைத் தமிழின் உயர்ந்த சொல்லான 'தக்கார்' என்கிற மதிப்புடைய சொல்லைச் சொல்லிப் பாராட்டலாம். அதே சமயத்தில், தகுதிக்குரிய எந்தக் குணத்தையும் பெற்றிருக்காதவரைத், 'தகவிலார்' என்கிற சொல்லால் சொல்லிக் கீழ்மைப்படுத்தலாம்.

    "தக்கார் தகவிலர் என்பது அவரவர்

    எச்சத்தாற் காணப்படும்"

    என்பது வள்ளுவப் பேராசான் மனித வகைமைகளைத் தகுதி அடிப்படையில் பகுத்துக் காட்டும் பாகுபாடு ஆகும். ஒவ்வொரு மனிதரும் தமது எண்ணங்களாலும் செயல்களாலும் தம்மை ஒழுக்க நிலைகளில் தகுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இத்தகுதிப்பாடுகளால் தம்மைத் தகவமைத்துக்கொண்டே இருப்பவர் தக்கார்; இல்லாதவர் தகவிலார் ஆவர்.

    ஒவ்வொரு மனிதரும் தாம் கடைப்பிடிக்கும் ஒழுக்க நெறிகளாலேயே உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுகின்றனர். ஒழுக்கமே உயர்ந்த மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தருவதால், ஒழுக்க வாழ்வை, உயிரைப் பாதுகாப்பதுபோலப் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும். "புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்" என்னும் புறநானூற்றுச் சிந்தனை, 'எந்த நிலையிலும் தனது புகழுக்கும் பெருமைக்கும் ஒரு சிறு களங்கமும் வந்துவிடக்கூடாது; மீறி வந்துவிட்டால் உயிரையும் இழந்துவிடத் தயங்கக் கூடாது' என்பதை வலியுறுத்துகிறது.

    மானம் என்பது கண்களுக்குப் புலப்படாத ஒழுக்கக் கோட்பாடுகளால் மெலிதான வலைப்பின்னல்போல உயிரைச் சூழ்ந்து நின்று பாதுகாப்புத் தருவது. உயிர் குடியிருக்க உடம்பு உதவுவது போல, உயிரைப் பாதுகாக்க மான உணர்வு மகத்தான பாதுகாப்பாக உறுதியுடன் நிற்கிறது. தன்மானம் என்பது ஒவ்வொரு மனிதரும் தமதான செயற்கரிய செயல்களால் தம்மை உருவாக்கி நிற்பது. தன்மரியாதை, தற்கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், தன்மானம் போன்றவைகளெல்லாம் தனிமனித ஒழுக்கங்களால் ஒருவரைச் சுற்றி எழுப்பப்படும் கொள்கை அடையாள உணர்வுக் கோட்டைச் சுவர்கள் போன்றவை ஆகும். சுயமரியாதை நிரம்பிய மனிதர் என்பவர் எந்த இடத்திலும் தனக்குரிய மரியாதைக்கு இம்மியளவும் பங்கம் வராமல் பெருமிதத்தோடு செயல்படுபவர்கள் ஆவர்.

    தன்மானம் என்பதும் சுயமரியாதை என்பதும் ஒரே நாளில் வந்து ஒட்டிக்கொள்பவை அல்ல; கால காலமாக நன்மதிப்புடன்கூடிய ஒழுக்கங்களால் அவர்கள் ஈட்டிய சொத்துக்களாக அவை திகழ்கின்றன. குடிப்பெருமை, இனப்பெருமை என்று மரபு ரீதியாக வருகின்ற பெருமைகளாலும் அவை பொலிவு கொள்கின்றன. காலச்சுழற்சியில்,பணம், செல்வம், அதிகாரம், செல்வாக்கு, நிலபுலன்கள் போன்ற நிலையற்ற விஷயங்களால் ஒரு மனிதர் திடீரென மேனிலைக்கு வரலாம்; அல்லது அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுக் கீழ்நிலைக்கும் போகலாம். ஆனாலும் எப்பேர்ப்பட்ட இக்கட்டுநிலை வந்தாலும் ஒவ்வொரு மனிதரும் தனது சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் இழுக்கு நேர்ந்துவிடாமல் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வேண்டும்.

    "தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

    நிலையின் இழிந்தக் கடை"

    இந்தத் திருக்குறளில் திருவள்ளுவர், 'மனிதன் எவ்வளவு இக்கட்டு வந்தாலும் தன்னிலை தாழக்கூடாது' என்பதை வலியுறுத்துகிறார். அதே வேளையில், 'வறுமை என்னை இந்தநிலைக்குத் தள்ளிவிட்டது; வாழ்வியல் துன்பங்கள் என்னை இந்தக் கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டன; என்று தன்மானம் தவறி, சுயமரியாதை இழந்து நிற்பவர்களைத், தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமானவர்கள் என்று கீழ்மைப்படுத்துகிறார். தலைமுடிக்குப் பெருமையெல்லாம் தலையில் அது இருக்கும் வரைதான்; அதுபோல மனிதர்க்குப் பெருமையெல்லாம் தனது சுயமரியாதையிலிருந்து சற்றும் நழுவாத வரைக்கும் தான்.

    சுந்தர ஆவுடையப்பன்


    தலைமுடி தலையில் இருக்கின்ற வரை அதனை வளர்ப்பதற்கும், பேணிப் பாதுகாப்பதற்கும் நாம் அதற்குச் செய்கின்ற உபசாரங்கள் எண்ணில் அடங்காதவை. நவீன அங்காடிகளுக்குச் சென்றால், தலைமுடிக்காக வந்துள்ள எண்ணெய் வகைகள், ஷாம்பு வகைகள், சீயக்காய் வகைகள், கிரீம் வகைகள், தலைமுடிச்சாய வகைகள், பின்னல் அலங்கார வகைகள் எத்தனை எத்தனை என்று சட்டென்று கணக்குப்போட்டுச் சொல்லிவிட முடியாது; அழகு நிலையங்களுக்குச் சென்றாலும் அதனை வெட்டுவதற்கும், செதுக்குவதற்கும், நீட்டிவிடுவதற்கும், பரப்பிப் பறக்க விடுவதற்கும் என்று அழகுக்கலை நிபுணர்கள் இதற்காகவே படித்துவிட்டு நிறைய இருக்கிறார்கள்.

    இவை அத்தனையும் தலைமுடிக்கு நாம் செலவழித்துச் செலுத்துகிற மரியாதை மதிப்புகள். ஆனால், அதே தலைமுடியில் ஒன்று நம் தலையிலிருந்து உதிர்ந்து நாம் சாப்பிடும்போது நம் தட்டிலோ இலையிலோ குழம்பிலோ விழுந்துவிட்டால் அவ்வளவுதான் அத்தனையையும் குப்பைத் தொட்டியில் கொட்டிவிடுவோம். தலையில் இருக்கும்வரை மதித்துப் போற்றப்படக்கூடிய தலைமுடி, உதிர்ந்து விட்டால் அருவருப்புப் பொருளாக மாறிவிடுகிற பரிதாபம் நிகழ்ந்து விடுகிறது.

    அதைப்போலத்தான் சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் வாழும்வரைதான் மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும்; அந்த நிலையிலிருந்து சற்றுக் குறைந்துபோக நேரிட்டாலும் 'தலையின் இழிந்த மயிரின் நிலை' ஏற்பட்டுப்போகும்; அவமான நிலை உண்டாகி, மானமிழக்கும் மதிகெட்ட நிலை உண்டாகிப் போகும். தன்நிலை தாழாமையே எந்நிலைக்கும் உயர்வுதரும் தாரக மந்திரம்.

    ஒரு கதை. அமெரிக்காவில் பூனைகளுக்கான சர்வதேசக் குத்துச் சண்டைப் போட்டி நடைபெற்றது. இந்தியா, இலங்கை, ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து விதவிதமான பூனைகள் கலந்துகொண்டன. இவற்றில் குறிப்பாக அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த பூனைகள் நல்ல கொழு கொழுவென நாய்களின் உயரத்திற்கு வளர்த்தியாய் இருந்தன. அமெரிக்காவின் பூனையோ நடையிலும் பார்வையிலும் தான் திடகாத்திரமாக இருக்கிறேன் என்கிற கர்வத்தோடு மேடையில் காட்டிக்கொண்டது. அதற்கு நாள்தோறும் பால் முட்டை தவிர மீன் இறைச்சியும் ஆட்டிறைச்சியும் போட்டு வளர்க்கப்பட்டுள்ளதாக அங்கு வந்திருந்த அமெரிக்கப் பார்வையாளர்கள் பேசிக்கொண்டனர்.

    பூனைகளின் குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பமானது. போட்டி தொடங்கியதிலிருந்தே தன்னுடன் மோதவந்த எல்லாப் பூனைகளையும் அமெரிக்கப் பூனை வென்றுகொண்டே வந்தது. மேடையில் நிறைவாக அமெரிக்கப் பூனையுடன் மோதப்போகும் பூனை யார்? என்று பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது. சோமாலியா நாட்டைச் சேர்ந்த பூனைதான் இறுதிப் போட்டியாளர்.

    ஏற்கனவே எல்லா நாட்டுப் பூனைகளையும் வென்றுவிட்ட ஆணவத்தோடு அமெரிக்கப் பூனை நின்றிருந்தது. சோமாலியா பஞ்சத்திற்குப் பெயர்போன நாடு; அந்த நாட்டிலிருந்து வந்துள்ள பூனைமட்டும் என்ன கொழு கொழுவெனவா இருக்கப் போகிறது?; வத்தலும் தொத்தலுமாக நோஞ்சானாகவே தட்டுத்தடுமாறிக் கால்களை எடுத்து வைத்து மேடைக்கு வந்தது. ஏளனமாகப் பார்த்த அமெரிக்கப் பூனை ஒரு அசைவுமின்றி நின்றிருந்தது. மேடையில் ஏறியதும் சோமாலியப்பூனை, அமெரிக்கப் பூனைமீது ஒரே பாயச்சலில் பாய்ந்து, ஓங்கி ஒரு குத்து விட்டது. அவ்வளவுதான் தலை கிறுகிறுவெனச் சுற்றித் தரையில் மயங்கி விழுந்து விட்டது அமெரிக்கப்பூனை.

    அமெரிக்கப்பூனை கிறக்கம் தெளிந்து தலையைத் தூக்கிப் பார்க்கும்போது தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டிருந்தது சோமாலியப் பூனை. அதன் காதருகில் சென்று, மெதுவாகக் கேட்டது அமெரிக்கப் பூனை," இது எப்படி நடந்தது?". உடனே சோமாலியப் பூனை பதிலளித்தது, " நான் பூனை அல்லடா; புலி!. பஞ்சத்தில் அடிபட்டு நோஞ்சானாகிப் போனாலும் புலி புலிதான்; அதே வேளையில் பாலும் மீனும் சாப்பிட்டுக் கொழு கொழுவென்று வளர்ந்திருந்தாலும் பூனை பூனைதான்; நீ புலியாகிவிடமுடியாது " என்று கர்ஜித்தது. ஆம்! எவ்வளவு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டாலும் புலி புலியாகவே தன்நிலை தாளாமல் சுயமதிப்போடு இருந்தால் புலியின் வெற்றி எப்போதும் உறுதி செய்யப்பட்டதாகவே இருக்கும்.

    வாழ்வியல் பாடமும் இப்படிப் பட்டதாகவே இருக்கவேண்டும். பொருளாதாரப் பின்னடைவுகளோ, உடல்நலக் குறைபாடுகளோ அதிகார ஏற்றத் தாழ்வுகளோ ஏற்பட்டுவிட்டாலும், தன்னுடைய தன்மானத்திற்கு எந்தநிலையிலும் தாழ்வு நேர்ந்துவிடாமல் நடந்துகொள்ள வேண்டும்.

    சுயமரியாதை என்பது நம்முடைய நடத்தை, நம்முடைய எண்ணம், நம்முடைய செயல் எல்லாவற்றிலும் முதலில் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பது. நாம் நேர்மையாக இருக்கிறோம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தால் போதும், வேறு யாருக்காகவும் வேறு எச்சூழலுக்காகவும் நாம் நம்நிலை தாழாமல் தன்மானத்தோடு வாழ்ந்து காட்டலாம்.

    நாம் நமக்கு நாமே வகுத்துக்கொண்டு வாழ்கின்ற கோட்பாடுகளாலேயே, நம்மை மற்றவர்கள் மதிக்கக்கூடிய அளவுக்கு நமது செல்வாக்கு உயர்ந்து போகும். நாம் யார்? நமது எண்ணங்களின் உயரம் என்ன? என்பதை உண்மையாக உணரத் தொடங்கிவிட்டால் போதும்; நாம் சுயமரியாதைக் காரர்களாக நெஞ்சம் நிமிர்த்தி இந்தச் சமூகத்தில் உலா வரமுடியும்.

    ஒரு சாதாரண வழக்கறிஞராகத்தான் தென்னாப்பிரிக்க ரெயிலொன்றில் உரிய முதல் வகுப்புப் பயணச் சீட்டுடன் பயணம் செய்துகொண்டிருந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆனால் அவர் கறுப்பாக இருப்பதனால், உரிய பயணச்சீட்டு வைத்திருந்தாலும், வெள்ளையர்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய அந்த முதல்வகுப்புப் பெட்டியில் பயணிக்கத் தகுதியற்றவர் என்று ரெயிலதிகாரி ஒருவரால் தள்ளிவிடப்படுகிறார். பீட்டர்ஸ்மாரீஸ்பர்க் ரெயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்தக் கொடுஞ் செயல் தனது சுயமரியாதைக்கு இழுக்கான செயல் என்று உணர்ந்து உடனே சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குகிறார். அந்த நொடியிலேயே மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற சாதாரண மனிதர் மறைந்து, மகாத்மா காந்தி என்கிற மாமனிதர் பிறப்பெடுத்து விடுகிறார். காந்தியடிகளின் சுயமரியாதைச் சிந்தனை அவரை மகாத்மா காந்தியாக உயர்த்திக் காட்டியது.

    ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நொடியும் தம்மைப் புடம்போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அன்றாடம் நிகழும் வேலைப் பளுக்களிலிருந்தும், துயர நேர்வுகளிலிருந்தும் விடுபட்டு நமக்குள் நாமே நம்மை மதிக்கவும், அன்பில் நம்மை நேசிக்கவும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மனசாட்சியின் துணைகொண்டு நம்மை உள்முகமாகத் தேடினால், நமது நேர்மையும் அன்புகனிந்த கருணையும் பளிச்செனப் புலப்பட வேண்டும். நம்முடைய பெருமைகளால் முதலில் நமக்குநாமே பெருமிதம் மிக்கவர்களாக மாறவேண்டும்; இது தற்பெருமை அல்ல; சுயமாக மதிக்கின்ற சுய மரியாதை.

    சுய ஒழுக்கத்திலும். சுயகட்டுப்பாட்டிலும், சுய நேர்மையிலும் அக்கறை கொண்டு அவற்றின்மீது தளராத நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் எந்த நாளிலும் எந்த நிலையிலும் தன்மானம் இழக்காத சுயமரியாதைக்காரர்களாக மிளிரவே செய்வார்கள்.

    தொடர்புக்கு 9443190098

    • சமத்துவத்தை நிலை நாட்டிட முயற்சி செய்தது.
    • சமூக நீதியை நிலைநாட்டப் பணியாற்றியது.

    19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வைகுண்ட சுவாமிகள் தென் திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஓர் அமைதியான சமூகப் புரட்சியை ஏற்படுத்தினார். அவரது இயக்கம் எதேச்சதிகார உயர்சாதி வர்க்கத்தினை இடித்துரைத்தது. காலத்திற்கு ஒவ்வாத மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கி கிடந்த ஒடுக்கப்பட்ட வகுப்பினரை நன்னெறிப் பாதையில் சிந்தித்துச் செயல்பட தூண்டியது. பிறப்பின் வழி நின்று ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தி, சமதர்ம சமுதாயத்திற்கு ஒரு பெரிய தடைக்கல்லாக நின்ற சாதிப் பேயைக் கண்டனம் செய்தது. நாடி வந்த மக்கள் எல்லோரிடமும், சாதி சமயப் பேதம் காட்டாது, சமத்துவத்தை நிலை நாட்டிட முயற்சி செய்தது. சமுதாயத்தை பல்வேறு சாதிகளாக பிரித்து ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியை கடுமையாக தாக்கி, சாதிப் பிரிவினைக்குக் காரணமாக இருந்தவர்களை 'நீசன்' எனப் பழித்துரைத்தது.' தாழ்த்தப்பட்டுக் கிடந்த சமூகத்தவர்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை காத்திட தன்மானத்துடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு வேண்டியது. சமூக நீதியை நிலைநாட்டப் பணியாற்றியது. சுவாமிகளின் சீர்திருத்த இயக்கம் தனது குறிக்கோளை அடைந்திடுவதற்காக பல்வேறு வழிகளில் செயலாற்றியது.

    சமுதாயம் பல பிரிவுகளாக பிளவு பட்டுக் கிடந்த வேளையில், எல்லாப் பிரிவு மக்களும் 'சமத்துவம்' என்ற போதிமரத்தின் கீழ் ஒன்றுபட்டு இளைப்பாறிடச் சங்கம் ஒன்றினை வைகுண்ட சுவாமிகள் ஏற்படுத்தினார். சமத்துவமே அதன் உயிர் மூச்சு எனத் திகழ்ந்ததால் சமத்துவச் சங்கம் எனப் பெயர் பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். தேர்ந்தெடுத்த தவசீலர்களுள் மாமணிகளாக சுவாமிகள் ஐவரை தேர்ந்தெடுத்து, பஞ்ச பாண்டவர்களை நினைவு கூறும் விதமாக அவர்கள் பெயரில் அழைக்கலானார்.

    "பாரேழில் நம்முடைய பஞ்சவர்கள் தன் வழியில்

    தெரிந்துந்தன் மக்களிலே சீசரெனத் தெரிந்து

    கூர்ந்து என்கைக்குள் கொள்ளுகிறேன் வேலையது"

    என்று சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

    மயிலாடியை சார்ந்த சிவனாண்டி என்ற தர்ம சீடரும், கைலாசபுரத்தைச் சார்ந்த பண்டாரம் என்ற வீமன் சீடரும், பிள்ளையார் குடியிருப்பைச் சார்ந்த அர்ச்சுனன் சீடரும், குளச்சலை சார்ந்த சுப்பையா என்ற நகுலன் சீடரும், தாமரைக் குளத்தை சார்ந்த அரிகோபாலன் என்ற சகாதேவன் சீடரும், வைகுண்ட சுவாமிகளின் தலைமைச் சீடர்களாவர். ஆடவர்கள் மட்டுமின்றி, சமத்துவ சங்கத்தில் மகளிரும் பங்கு கொண்டனர். சுவாமிகள், தன் சீடர்களுக்கு தக்க பயிற்சியளித்து சமத்துவ நெறியினை கிராமம்தோறும் சென்று பரப்பிடுமாறு பணித்தார்.

    விருப்பமில்லா மாந்தர்களிடம் தனது கொள்கைகளை கட்டாயப்படுத்தி புகுத்திட வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். 'உலகமே அழிந்திடினும் சத்தியம் தவறக்கூடாது' என கட்டளையிட்டு உண்மை ஊழியர்களாகவும் சமுதாயத்தின் நலம் பேணுபவர்களாகவும் பணிபுரிந்திடுமாறு செய்தார். சங்கத்தின் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று, சமத்துவ நெறிகளையும் தர்மநெறி முறைகளையும் மக்களிடையே சுவாமிகளும் மக்கள் யாவரும் ஏற்ற தாழ்வுகள் பாராட்டாமல் ஒன்றாய் வாழ்ந்திடவும், அனைத்து மக்களும் போதிக்கலாயினர். சமவுரிமை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டியும் ஏராளமான கிராமங்களுக்கு வருகைபுரிந்து, சங்கத்தின் நெறிகளை பரப்பினார். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கிடையே இருந்த பிணக்குகளை மறந்து வைகுண்டரின் அறிவுரைகளை செவிமடுத்து ஒன்றாய் வாழ்ந்திடத் தொடங்கினர்.

    சமத்துவக் கொள்கையினை பேச்சளவில் மட்டும் வைத்துக் கொள்ளாமல், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சுவாமிகள் முனைந்து செயலாற்றினார். தீண்டாமை நோயின் பிடியில் சமுதாயம் சிக்கித் தவித்த காலச் சூழ்நிலையில், 'எல்லோரும் ஓர் குலம்' என்ற உயரிய கண்ணோட்டத்துடன் சமபந்தி விருந்து நடத்தினார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினருடன் சேர்ந்து உணவு உட்கொள்வதென்பது அக்காலத்தில் நடைமுறையில் காணற்கரிய செயலாகும். குறிப்பாக ஓங்கு சாதியினர் தங்களுக்குள்ளேயும் கூட ஒன்றாக அமர்ந்து உணவுண்ணும் வழக்கம் இல்லாதவர்களாக இருந்தனர். பிஷப் மேற்றீர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், "ஒரு வீட்டிலுள்ள ஆடவரோ அல்லது பெண்டிரோ வேறு வீட்டார் சமைத்த உணவினைத் தொடக்கூட மாட்டார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் ஒரே வரிசையில் உட்கார்ந்து உணவு உண்ணவும் மாட்டார்கள்" எனக் கூறுகின்றார். இவ்வாறான சூழ்நிலையில் தான் வைகுண்ட சுவாமிகள் எல்லாச் சாதி மக்களும் தங்களிடையே நிலவிய ஏற்றத்தாழ்வுகளை மறந்து, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும்படியான ஒரு நிலையை உருவாக்கினார். பதிணெண் சாதி மக்களும் தத்தம் வீடுகளில் இருந்து உணவுப் பொருள்களை எடுத்துச்சென்று, முத்திரி கிணற்று நீரினை கொணர்ந்து, சுவாமிகள் முன்னிலையில் சமைத்து, அவருடன் அமர்ந்து சமபந்தி விருந்துண்டனர். சுவாமிகள் நடத்திய விருந்து இதயத்தின் அடித்தளத்தில் இருந்தெழுந்த ஒற்றுமையுணர்வும், சமதர்ம உணர்வும் ஒன்றி நடந்தேறியதாகும். விளம்பரம் கருதியோ, குறிப்பிட்ட சில நாட்களில் அலங்காரத்திற்காகவோ, ஆடம்பரத்திற்காகவோ நடந்தது அன்று 'எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஒரு நிறை' என்னும் உயரிய குறிக்கோளுடன் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வந்தனவாகும். இன்றும் அன்புக்குடி மக்களின் பதிகள் தோறும் காணக்கூடிய அன்றாட நிகழ்ச்சியாகவும் இது இருக்கின்றது.

    வைகுண்ட சுவாமிகள் தன் சீடர்களைப் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி, அங்குள்ள தாழ்த்தப்பட்ட சாதியினரின் வீடுகளில் உணவருந்துமாறு பணித்தார். சமபந்தி விருந்தோடு தொடர்புடைய செவிவழிச் செய்தி ஒன்று குமரி மாவட்ட மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றது. ஒரு சமயம் வைகுண்ட சுவாமிகள் தன்னுடைய சீடர்களில் இருவரை பிச்சம்மாள் என்ற சலவைத் தொழிலாளியின் வீட்டில் உணவருந்தி வருமாறு அனுப்பினார் எனவும், அங்குச்சென்ற இருவரும் விருப்பமில்லாதபடியால் உணவருந்தாது திரும்பி விடவே, அதனை அறிந்த சுவாமிகள் இருவரையும் அழைத்துக் கடுமையாக கண்டித்து, திரும்பிச்சென்று உணவருந்தி வருமாறு பணித்தார் எனவும், சீடர்கள் பிச்சம்மாள் இட்ட உணவினை அகமகிழ்ந்து உண்டு திரும்பினர் எனவும் மக்களிடையே ஒரு செய்தி அறியக்கிடக்கின்றது.

    சாதி ஆதிக்கம் செலுத்திய சமுதாயத்தில் நடை உடை பாவனைகளில் கூட ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டது. அப்பாவி அவர்ணர்கள் இடுப்புக்கு மேலோ முட்டுக்குக் கீழோ ஆடை அணிய உரிமையின்றி அரை நிர்வாணப் பக்கிரிகளாக நடமாடினர். தட்டிக்கேட்க நாதியின்றி, ரத்தக்கண்ணீர் வடித்த ஒடுக்கப்பட்ட பிரிவினரின் இருள் மாய்க்க, வந்துதித்த அருளாளர் அய்யாவின் சீர்திருத்தப்பணிகளில் மணி முடியாகத் திகழ்வதும், புரட்சிமயமானதும், புதுமையானதுமாக விளங்குவது அவர்தம் தலைப்பாகைப் புரட்சியாகும்.

    ஓங்கு சாதியினரிடம் ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருந்த அச்சத்தினைத் தவிர்த்து, நலிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த மக்களும் சுதந்திரமான வாழ்வினை கொண்டிட வேண்டும் என்பதில் சுவாமிகள் உறுதி கொண்டிருந்தார். எனவே, ஓங்கு சாதியாரும், அரசாங்கமும் ஆடை அணிகலன்கள் அணிவதில் ஒடுக்கப்பட்டோர் மீது திணித்திருந்த அவமானச் செயல் முறைகளை நீக்கிட முனைந்து நின்றார். பண்டுதொட்டே நாடார் சமூகத்தவர்களிடம் ஒரு பழக்கம் இருந்து வந்தது. ஒரு நாடார் சமூக இளைஞன் தனது பதினாறாவது அகவையில் தலையில் தலைப்பாகை அணிந்து, பாதுகாப்பிற்காகப் பிச்சுவா கத்தியையும் கொண்டு விளங்குவான். இப்பழக்கத்தினை 'உறுமால் கட்டு' என்றழைப்பர். இவ்வுறுமால் கட்டு நிகழ்ச்சியை சடங்கு சம்பிரதாயங்களுடன் இச்சமூகத்தவர்கள் நடத்தி வந்தனர். மேல்சாதியாரின் ஆதிக்கப்பிடியில் இவ்வுறுமால் கட்டுப்பழக்கம் தடைப்படுத்திடப்பட்டது. சுமை தூக்கிச் செல்வதற்குக்கூட தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படவில்லை.

    பனையோலையையும், வைக்கோலையும் தலைப்பாகைக்குப் பதிலாக 'சும்மாடு' என்ற பெயரில் பயன்படுத்திடும் படியான அவலநிலைக்கு ஒடுக்கப்பட்டப் பிரிவினர் தள்ளப்பட்டிருந்தனர். இந்த அவலமிக்க சூழ்நிலையில் தான் வைகுண்ட சுவாமிகள் ஓங்கு சாதியாரின் அடக்கு முறையிலிருந்து எளியப் பிரிவினரை விடுவிக்கும் விதமாக அவர்களின் அச்சம் அகற்ற முயற்சித்தார். அவர்களை தட்டி எழுப்பி தன்மான உணர்வை ஊட்டும் வகையில் பண்டைய பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைத்தார்.

    "கூலிக்காரர் மக்களில்லை

    கோடி வரிசை பெற்ற மக்கள்"

    என்று பழம் பெருமையுரைத்து துணிச்சலும், வீரமும் ஊட்டினார். 'நெய் நிதிய சான்றோர்கள்,' 'தெய்வச் சான்றோர்கள்,' 'திசை வென்றச் சான்றோர்கள்' என்று, அரசாண்ட மரபுரைத்து ஆண்மை பெறச் செய்தார்.

    "குகையாளப் பிறந்தவனே

    என் குழந்தாய் எழுந்திருடா

    அதிகமுள்ள நீசனும் தான்

    மற்பிடித்து அடிக்கிறானே

    படையெடுக்க வா மகனே

    பாருலகம் சுட்டழிக்க

    வரிசை பெற்ற நீ மகனே

    மானமறுக்கம் பொறுக்கலையோ"

    என்று ஆளும் மன்னனுக்கு எதிராக வெகுண்டெழுந்து பகையழிக்க போர்க்கோலம் கொள்ளுமாறு தைரியப்படுத்தினார்.

    "எவன் எவனுக்கும் பதறி

    இனி மலைய வேண்டாமே"

    என சுவாமிகள் போர்ப்பரணி பாடியது, அச்சமிலா சமுதாயம் காண அவர் விரும்பி யதாலாகும். மேலும் தங்கள் பூமியைக்கூட "அச்சமிலாப் பூமி" என்று வர்ணித்து பயம் அகற்றிட முனைந்து செயல்பட்டார். தன்னை காண வந்த அன்பர்களிடம் தலைப்பாகை அணிந்து வருமாறு பணித்தார். இடுப்புக்கு மேல் உடை உடுத்தவே உரிமை மறுக்கப்பட்ட காலச்சூழலில்-சவர்ணனை காணும் போதெல்லாம் ஆடையினை இறக்கி மரியாதை செலுத்திய வேளையில் திருவிதாங்கூர் பிராமணிய கோவில்களில் வழிபடுவோர்கள் மேலாடை அகற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு வழிபடும் வழக்கம் இருந்த நிலையில், தலையில் பாகைக் கட்டச் செய்தது ஒரு புரட்சியேயாகும். தலைப்பாகை மூலம் தன்மானத்தை நிலை நாட்டினார். அடிப்படை உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட உரக்கவே ஓங்காரம் இசைத்தார். தலைப்பாகையின் மூலமாக சாதிப்பேய்க்கு சமாதிகட்டி 'எல்லோரும் ஓர் நிறை' என்பதை உணர்த்திட ஒப்பற்ற புரட்சியினை நடத்தி முடித்தார். அடுத்து தூய்மை வாழ்க்கைக்கு துவையல் பந்தி கண்டார். அதனை காண்போம் வரும் தொடரில்.

    ×