search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    என்ன நடக்கிறது குஜராத்தில்..? அப்படின்னா ஆம் ஆத்மி சொன்னது பொய்யா...? விலகிய வேட்பாளரின் தடாலடி விளக்கம்
    X

    என்ன நடக்கிறது குஜராத்தில்..? அப்படின்னா ஆம் ஆத்மி சொன்னது பொய்யா...? விலகிய வேட்பாளரின் தடாலடி விளக்கம்

    • பாஜக தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாக மணீஷ் சிசோடியா விமர்சனம்
    • ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகம் மீண்டும் அம்பலமாகியிருப்பதாக பாஜக கூறியுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அவரை பாஜகவினர் கடத்தி தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டி வேட்பு மனுவை வாபஸ் பெற செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் கூறி உள்ளது.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன்பின்னர், வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    ஜரிவாலா 500 போலீஸ்காரர்களால் சூழப்பட்டு குஜராத் தேர்தல் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

    என்னை யாரும் கட்டாயப்படுத்தியதால் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. நானாக முன்வந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நான் பிரசாரம் செய்யும்போது, தேசவிரோத மற்றும் குஜராத்திற்கு எதிரான கட்சியின் வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்டார்கள். நானும் யோசித்துப் பார்த்தேன். என் உள் மனம் சொல்வதை கேட்டேன். எந்த அழுத்தமும் இன்றி வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளேன். அப்படிப்பட்ட கட்சியை என்னால் ஆதரிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேட்பாளரை பாஜக கடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி அழுத்தமாக குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வேறு மாதிரியாக கூறியிருக்கிறார். அவர் தனது சொந்த கட்சியையே வசை பாடியது, இந்த விஷயத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×