என் மலர்
இந்தியா

அரசியல் சண்டையில் உங்களுக்கு என்ன வேலை?.. அமலாக்கத்துறையை விளாசிய உச்சநீதிமன்றம்
- அரசியல் ஆதாயங்களுக்காக அதன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தது.
- அமலாக்கத்துறையின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, தங்கள் மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார்.
கர்நாடகாவில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா)14 நிலங்கள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் மீது விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே நேற்று, மூடா முறைகேடு வழக்கில் கர்நாடக பார்வதிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
நேற்று நடந்த விசாரணையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்திற்கு வழக்கு தொடர்ந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அரசியல் ஆதாயங்களுக்காக அதன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி உறுதி செய்துள்ளார். அதாவது இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு நிலை தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மாற்ற அமலாக்கத்துறை முயற்சிப்பது தேவையற்றது என்று தெரிவித்தது.
மேலும், "மக்களிடையே அரசியல் சண்டைகள் நடக்கட்டும். உங்களுக்கு என்ன வேலை?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறையின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, தங்கள் மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.






