என் மலர்
இந்தியா

தந்தையின் பாசத்திற்கு எல்லையில்லை... இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
- வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
- சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரம் மற்றும் நவீன வசதிகள் செய்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ ஒற்றை பெற்றோரின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழ செய்துள்ளது.
அதில், ஆட்டோ பயணத்தின் போது பயணி ஒருவர் ஆட்டோவின் பின் இருக்கையில் ஒரு சிறுமி மிகவும் அமைதியாக உறங்கி கொண்டிருப்பதை கவனிக்கிறார். அவர் டிரைவரிடம் அந்தச் சிறுமியை பற்றி கேட்கிறார். அதற்கு டிரைவர், அது என் மகள் ஆயுஷி என்று கூறுகிறார். தொடர்ந்து பயணி ஆட்டோ டிரைவரிடம் அவரை பற்றி கேட்ட போது அவர் அளித்த பதில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த சிறுமியின் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த தந்தை தனது மகளை தனியாகவே வளர்த்து வருகிறார். வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
எனவே தினமும் ஆட்டோ ஓட்ட செல்லும் போதெல்லாம் தனது மகளையும் உடன் அழைத்து செல்கிறாராம். ஆட்டோவின் இரைச்சல், மேடுபள்ளங்கள் என எதை பற்றியும் கவலைப்படாமல் அந்தத் தந்தை மீதான நம்பிக்கையில் ஆயுஷி நிம்மதியாக உறங்குகிறாள். வேலையையும் குழந்தைப் பராமரிப்பையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் ஒரு ஒற்றை பெற்றோரின் போராட்டத்தை பிரதிபலிக்கும் இந்த வீடியோவின் முடிவில், அந்தப் பயணி தந்தைக்கும் மகளுக்கும் சிற்றுண்டி வாங்கித் தருவதும், அப்போது அந்தச் சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், எளியவர்களின் சத்தமில்லாத போராட்டங்களுக்கு இந்தத் தந்தை ஒரு உதாரணம் என பதிவிட்டனர்.






