என் மலர்
இந்தியா

பீகார் தேர்தலில் விதிமீறல்.. உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் கட்சி மனுதாக்கல்
- சுமார் 1 கோடி பெண்கள் கணக்கில் தேர்தலுக்கு சில வாரம் முன்னர் இந்த பணம் செலுத்தப்பட்டது.
- அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 21, 112, 202 மற்றும் 324 ஐ மீறுவதாகவும் அறிவிக்க வேண்டும்.
2025 நவம்பரில் நடந்த பீகார் தேர்தலில் பாஜகவின் NDA கூட்டணி 202 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார்.
இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் பீகார் தேர்தல் சமயத்தில் பாஜகவின் என்டிஏ அரசு செயல்படுத்திய பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜன் சூராஜ் கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.
பீகார் தேர்தல் நெருங்கும் வேளையில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பெண்களுக்கு தலா தொழில் தொடங்க ரூ.10,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தியது. சுமார் 1 கோடி பெண்கள் கணக்கில் தேர்தலுக்கு சில வாரம் முன்னர் இந்த பணம் செலுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் வாக்காளர்களைக் கவரும் ஒரு லஞ்சம் என்றும், இது நியாயமான முறையில் தேர்தல் நடப்பதைத் தடுத்தது என்றும் ஜன் சூராஜ், காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் இந்த திட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது செயல்படுத்தப்பட்டது விதிமீறல் என கூறி ஜன் சுராஜ் கட்சி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதும், மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்தபோது அவர்களுக்கு வழங்கப்பட்ட பணம் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 21, 112, 202 மற்றும் 324 ஐ மீறுவதாகவும் அறிவிக்க வேண்டும். ரூ.10000 நேரடி பரிமாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.






