என் மலர்
இந்தியா

VIDEO: 25-வது திருமண வெள்ளி விழா கொண்டாட்டத்தில் கணவருக்கு நிகழ்ந்த சோகம்...
- வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
- கொண்டாட்டத்தின் போது ஒருவர் மாரடைப்பால் இறப்பது இது முதல் முறையல்ல.
25-வது திருமண ஆண்டு வெள்ளி விழாவில் மனைவியுடன் நடனமாடிய கணவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதே மாநிலம் பரேலியில் நடந்துள்ளது.
ஷூ வியாபாரியான வாசிம் சர்வத் (50) மற்றும் அவரது மனைவி ஃபரா ஆகியோர் தங்கள் திருமணத்தின் வெள்ளி விழாவையொட்டி பரேலியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த கொண்டாட்டத்தில் இருதரப்பை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு திரைப்பட பாடலுக்கு தம்பதியினர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாசிம் சரிந்து விழுந்தார். இதனால் பதற்றமடைந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் கூடியிருந்தவர்களுக்கு இந்த செய்தி பேரிடியாக விழுந்தது.
கொண்டாட்டத்தில் தம்பதியினர் நடனம் ஆடி, பாடி, பின்னர் இருவரும் சேர்ந்து கேக் வெட்ட திட்டமிட்டிருந்தனர். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வாசிம் திடீர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. கொண்டாட்டத்தின் போது ஒருவர் மாரடைப்பால் இறப்பது இது முதல் முறையல்ல. இப்போதெல்லாம், நடக்கும்போதோ அல்லது நிற்கும்போதோ மாரடைப்பால் உயிரை இழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.






