தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்: கேரளாவில் பஸ்கள் ஓடாததால் பொது போக்குவரத்து கடும் பாதிப்பு

ஆன்லைன் டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களை மட்டுமே சாலைகளில் காண முடிந்தது.போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்: கேரளாவில் பஸ்கள் ஓடாததால் பொது போக்குவரத்து கடும் பாதிப்பு
Published on

தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.

அதன்படி தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடந்தது. கேரள மாநிலத்தில் தொழிற்சங்கங்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாய தொழிலாளர் அமைப்புகள், சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அரசு பஸ்கள் ஓடவில்லை. அது மட்டுமின்றி தனியார் பஸ்களும் இயங்கவில்லை.

ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் ஆட்டோ, வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. மேலும் பெரும்பாலான கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.

கொச்சியை பொருத்த வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பல இடங்களில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில ஓட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. ஆன்லைன் டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களை மட்டுமே சாலைகளில் காண முடிந்தது.

திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் இருந்தும் எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. அங்கு ஏராளமான அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலைநிறுத்த போராட்டம் தொடங்குவதற்கு முன்பு புறப்பட்ட சில பஸ்கள் மட்டும் இன்று அதிகாலை பஸ் நிலையத்திற்கு வந்தன. அதன்பிறகு அந்த பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.

திருவனந்தபுரம், கொச்சியை போன்று கோழிக்கோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. மருத்துவ சிகிச்சைக்காக வெளி யூர்களில் இருந்து ரெயில்களில் திருவனந்தபுரத்திற்கு வந்த நோயாளிகள் பலர், மருத்துவமனைகளுக்கு செல்ல வாகனம் கிடைக்கா மல் தவித்தனர்.

ரெயில் நிலையத்தின் முன் தவித்தபடி நின்ற பல நோயாளிகளை, மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்சு வாகனத்தை போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்தனர். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையங்களில் தவித்த படி நின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com