என் மலர்
இந்தியா

கெஜ்ரிவாலுக்கு புது அரசு பங்களா.. உயர்நீதிமன்றம் தலையிட்ட பின் ஒதுக்கிய மத்திய அரசு!
- மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
- அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.
ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு இறுதியாக அதிகாரப்பூர்வ பங்களாவை ஒதுக்கியுள்ளது.
கெஜ்ரிவால், கடந்த 2024 செப்டம்பர் 17 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின், தனது கட்சி எம்.பி.யான அசோக் மிட்டலின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.
தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மத்திய அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசு பங்களா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.
இதனையடுத்து, செப்டம்பர் 25 அன்று, 10 நாட்களுக்குள் தகுந்த பங்களாவை ஒதுக்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
அந்த வகையில் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள டைப்-7 பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாவில் இதற்கு முன்னர், பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான இக்பால் சிங் லால்புரா வசித்து வந்தார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி தேர்தலின்போது கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் ஆடம்பர வசதிகள் இருப்பதாக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.






