search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் தொழிலதிபர், மனைவி வீடு புகுந்து கடத்தல்: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
    X

    ஆந்திராவில் தொழிலதிபர், மனைவி வீடு புகுந்து கடத்தல்: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

    • ஸ்ரீனிவாசன் உறவினர்கள் ரூ.10 லட்சம் தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லட்சுமி.

    உள்ளூரில் உள்ள ரவுடிகள் ஸ்ரீனிவாசனிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு மிரட்டி வந்தனர்.

    இதனால் விரத்தி அடைந்த ஸ்ரீனிவாசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அன்னவரம் போலீஸ் நிலையம் பகுதியில் தனியாக வீடு வாங்கி குடியேறினார். இருப்பினும் ரவுடிகள் அடிக்கடி வந்து பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீனிவாசன் வீட்டிற்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்தனர். ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவியை காரில் கடத்திச் சென்றனர். மறைவான இடத்தில் அடைத்து வைத்தனர்.

    பின்னர் ஸ்ரீனிவாசன் உறவினர்களுக்கு போன் செய்த கடத்தல் கும்பல் ரூ.60 லட்சம் பணத்தை கொடுத்தால் கணவன், மனைவி இருவரையும் விடுவிப்போம், போலீசுக்கு சென்றால் அவர்களை கொலை செய்து விடுவதாகவும் போனில் தெரிவித்தனர்.

    ஸ்ரீனிவாசன் உறவினர்கள் ரூ.10 லட்சம் தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தனர். ஆனால் கடத்தல் கும்பல் ரூ.60 லட்சம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிக்க முடியும் என தெரிவித்தனர்.

    இதை அடுத்து ஸ்ரீனிவாசன் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

    மேலும் கடத்தல்காரர்கள் ஸ்ரீனிவாசனின் உறவினர்களிடம் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது கடத்தல் கும்பல் உள்ளூரிலேயே இருப்பது தெரிய வந்தது.

    நேற்று மாலை அன்னவரம் கட்டிப்புடி சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரில் வந்த கடத்தல் கும்பல் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து தம்பதி மீட்கப்பட்டனர்.

    விஜயவாடாவை சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×