என் மலர்
இந்தியா

காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்- ராகுல் காந்திக்கு அசோக் கெலாட் அழைப்பு
- நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்துள்ளது.
- அதன் காரணமாக இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார்.
வரும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்து வருகிறார்.
இது குறித்து ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:
ராகுல் காந்தி கட்சித் தலைவராக வரவில்லை என்றால், அது நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்.
நாட்டில் உள்ள சாமானிய காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் (ராகுல் காந்தி) இந்த பதவியை தானாக ஏற்க வேண்டும்.
கட்சிக்குள் ராகுல் காந்தி தலைவராவதற்குதான் ஆதரவான சூழல் இருக்கிறது. கடந்த 32 ஆண்டுகளில் ராகுல் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ பொறுப்பேற்றதில்லை. பிறகு ஏன் மோடி இந்தக் குடும்பத்தைக் கண்டு பயப்படுகிறார்.
சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஒரே மாதிரியாகதான் உள்ளது. அனைத்து மதங்களையும் வகுப்பினரையும் அழைத்துச் செல்லும் கட்சி காங்கிரஸ்.
கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்துள்ளது. அதன் காரணமாகவே இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும், கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகவும் உள்ளனர்.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளனர்.






