என் மலர்
இந்தியா

ஆண்களுக்கும் மாதவிலக்கு வர வேண்டும்- சுப்ரீம் கோர்ட் கருத்து
- ஒரு பெண் நீதிபதி கர்ப்பம் அடைந்து கருச்சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறார்.
- ஆண் நீதிபதிகளுக்கும் அதே அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படும் என்று நம்புகிறேன்.
புதுடெல்லி:
மத்தியபிரதேசத்தில், 6 பெண் சிவில் நீதிபதிகளை மாநில அரசு பணிநீக்கம் செய்தது. அவர்களது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்தது. பின்னர், இதை விசாரித்த மத்தியபிரதேச ஐகோர்ட்டு, அவர்களில் 4 பேரை மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டது. ஆனால், 2 பேரின் பணிநீக்கத்தை உறுதி செய்தது. அவர்களில் ஒரு பெண் நீதிபதி, கர்ப்பமாக இருந்தபோது கருச்சிதைவுக்கு உள்ளானவர் ஆவார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கோடீஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியதாவது:-
ஒரு பெண் நீதிபதி கர்ப்பம் அடைந்து கருச்சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறார். அதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்? அதை மத்தியபிரதேச ஐகோர்ட்டு கண்டுகொள்ளவில்லை.
என்ன இது? ஆண்களுக்கும் மாதவிலக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் அதன் நிலை புரியும்.
ஆண் நீதிபதிகளுக்கும் அதே அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






