search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம் - சஞ்சய் ராவத் உறுதி
    X

    உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம் - சஞ்சய் ராவத் உறுதி

    • மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார்.
    • அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார் சஞ்சய் ராவத்.

    மும்பை:

    மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அஜித் பவார் அதிருப்தியில் இருந்தார். அண்மையில் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பில் சுப்ரியா சுலே நியமனம் செய்யட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அஜித் பவார் ஆளும் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார்.

    இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் அஜித் பவார் துணை முதல்மந்திரியாக பதவியேற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் டுவீட் செய்துள்ளார். அதில்,

    மகாராஷ்டிர அரசியலை சுத்தப்படுத்தும் பணியை சிலர் கையில் எடுத்துள்ளனர், அவர்கள் வழிக்கு வரட்டும். நான் சரத் பவாருடன் இப்போதுதான் பேசினேன். அவர், நான் வலிமையானவன். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம். ஆம், இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை உடைக்கிறது. அவர்கள் ஆட்சியை உருவாக்குகிறார்கள், உடைக்கிறார்கள். பிரதமர் மோடியால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் இன்று பதவியேற்றனர். அதாவது அந்தக் கூற்றுகள் தவறானவை அல்லது பாஜக ஊழல்வாதிகளை தங்கள் கட்சியில் சேர்க்கிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×