என் மலர்
இந்தியா

பிரான்ஸ் அதிபருடன் சந்திப்பு... மேக்ரானை குறிப்பிட்டு x தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி
- டெல்லியில் வைத்து பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
- பிரதமர் மோடியுடன் மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மேற்கொண்டுள்ளார். நேற்று இந்தியா வந்தடைந்த மேக்ரான் இன்று டெல்லியில் வைத்து பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
இன்று பிற்பகலில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் மேக்ரானை வரவேற்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "இந்தியாவிற்கு வருக! உங்களை வரவேற்பதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது, மேலும் எங்கள் மூலோபாய கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளிக்க விரும்புகிறது, மிக விரைவில் மும்பையில் சந்திப்போம், பின்னர் டெல்லியில் சந்திப்போம், என் அன்பு நண்பரே," என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பை ஆழப்படுத்த வணிக, பொருளாதார, தொழில்துறை, கலாச்சார மற்றும் டிஜிட்டல் தலைவர்களுடன் பயணிக்க இருப்பதாகக் கூறி, மேக்ரான் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "இந்தியாவுக்குச் செல்லும் வழியில், நாம் ஒன்றாக இணைந்து, நமது ஒத்துழைப்பில் இன்னும் முன்னேறுவோம். நாளை சந்திப்போம், என் அன்பு நண்பர் நரேந்திர மோடி," என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை திட்டமிடப்பட்ட பயணத்திற்காக பிரிஜிட் மேக்ரானுடன் நேற்று (திங்கள்கிழமை) இரவு மேக்ரான் மும்பைக்கு வந்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் பரந்த மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக பிரதமர் மோடியுடன் மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை விமான நிலையத்தில் பிரெஞ்சு அதிபர் மேக்ரானை மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர். இது மேக்ரானின் இந்தியாவிற்கான நான்காவது வருகையாகும். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மும்பையில் நடைபெறும் AI உச்சி மாநாடு மற்றும் இருதரப்பு உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்.






