என் மலர்
இந்தியா

நாடாளுமன்றக் கட்டிடம் கூட வக்பு சொத்து என்று உரிமை கோரப்பட்டிருக்கும் - அமைச்சர் கிரண் ரிஜிஜு
- வக்பு சட்டத்திருத்த மசோதா எந்த மத அமைப்பிலும், எந்த மத நிறுவனத்திலும் தலையிடவில்லை.
- 284 பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் குழுவின் முன் முன்வைத்துள்ளனர்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார்
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதம், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை என்பதை இரு அவைகளின் கூட்டுக் குழுவிலும் கூற விரும்புகிறேன். கூட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... இதுவரை, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 284 பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் குழுவின் முன் முன்வைத்துள்ளனர். 25 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்களும் தங்கள் சமர்ப்பிப்புகளை முன்வைத்துள்ளன.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைவரும் இந்த மசோதாவை ஆதரிப்பார்கள்.
நாடாளுமன்ற கட்டிடம் உட்பட பல இடங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று டெல்லி வக்ஃப் வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இன்று இந்த சட்ட திருத்தத்தை நாம் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால், நாம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கூட வக்பு சொத்து என்று உரிமை கோரப்பட்டிருக்கும்.
2013 ஆம் ஆண்டில், சீக்கியர்கள், இந்துக்கள், பார்சிகள் ஆகியோர் வக்பு போர்டில் இருக்க அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது.
2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இருந்த 123 பிரதான சொத்துக்களை காங்கிரஸ் அரசாங்கம் டெல்லி வக்பு வாரியத்திற்கு அதற்காக மாற்றியது? இது தேர்தலில் வெற்றி பெற உதவும் என நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் தோல்வி தான் உங்களுக்கு கிடைத்தது.
வக்பு சட்டத்திருத்த மசோதா எந்த மத அமைப்பிலும், எந்த மத நிறுவனத்திலும், எந்த மத நடைமுறையிலும் எந்த வகையிலும் தலையிடவில்லை.
இந்த மசோதாவில் சில முரண்பாடுகள் இருந்தன, எனவே அதைத் திருத்துவது அவசியம். எந்தவொரு இந்தியரும் வக்பு போர்டை உருவாக்க முடியும் என்று நான் முன்பு குறிப்பிட்டிருந்தேன், ஆனால் 1995 இல் அப்படி இல்லை. 2013 இல், நீங்கள் அதில் மாற்றங்களைச் செய்தீர்கள், இப்போது 1995 ஆம் ஆண்டின் விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளோம், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றிய ஒருவர் மட்டுமே வக்பு போர்டை உருவாக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறோம்" என்று தெரிவித்தார்.






