

டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிற்கும், கெஜ்ரிவால் அரசுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட அரசின் 45 க்கும் மேற்பட்ட கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்து இல்லை என்று கூறி, ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்த சக்சேனா பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தந்தது தொடர்பாக 1400 கோடி அளவிற்கு ஊழல் செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
இதையடுத்து ஆளுநர் பதவியில் இருந்து சக்சேனா விலகக் கோரி அக்கட்சியின் எம்எல்ஏக்கள் நேற்று டெல்லி சட்டசபை வளாகத்தில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை நிலை ஆளுநர் மீதான ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.