ராட்சத இயந்திர விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஷிண்டே இழப்பீடு அறிவிப்பு

காயமடைந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000ம் வழங்கப்படும்.விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிப்பு.
ராட்சத இயந்திர விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஷிண்டே இழப்பீடு அறிவிப்பு
Published on

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது.

இங்கு, இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிர்டர் என்கிற ராட்சத இயந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மகாராஷ்டிராவிற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், ராட்சத இயந்திரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே ஆகியோர் இழப்பீடு அறிவித்துள்ளனர்.

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, அம்மாநில முதல்வர் ஷிண்டே இறந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com