என் மலர்
இந்தியா

"எலும்பு இல்லாத நாக்கைக் கொண்டு பொய்களின் இமயமலையை உருவாக்கும் மோடி.." விமர்சித்த தேஜஸ்வி மீது FIR பதிவு
- மோடி திறந்து வைத்த பாலம் மறுநாளே இடிந்து விழும்.
- பாலம் இடிந்து விழுவதில் என்டிஏ அரசு உலக சாதனை படைத்துள்ளதாகவும் தேஜஸ்வி கேலி செய்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (என்டிஏ கூட்டணி) மற்றும் ஆர்ஜேடி (இந்தியா கூட்டணி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று பீகார் வந்தார்.
இந்நிலையில் தேஜஸ்வி வெளிட்ட எக்ஸ் பதிவில், "இன்று, கயாவில் பொய்கள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளின் கடை திறக்கப்படும். எலும்பு இல்லாத நாக்கைக் கொண்ட பிரதமர் பொய்களின் இமயமலையை உருவாக்குவார். ஆனால் பீகார் மக்கள் அவரது பொய் மலைகளை அழிப்பார்கள்" என்று பதிவிட்டார்.
இதை எதிர்த்து மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ மிலிந்த் நரோட்டி, தேஜஸ்வி மீது புகார் அளித்தார். இதையடுத்து பிரதமரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவைப் பகிர்ந்ததாகக் கூறி, மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்ட காவல்துறை தேஜஸ்வி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரிலும் தேஜஸ்வி மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேஜஸ்வி மற்றொரு பதிவில் மோடியை மீண்டும் கேலி செய்தார். அதில் நேற்று மோடி திறந்து வைத்த பாலம் மறுநாளே இடிந்து விழும் என்றும், ரிப்பன் வெட்டுவதோடு, பொது நலன் கருதி, பாலம் இடிந்துவிலும் என்று பாலத்தின் இருபுறமும் மற்றொரு எச்சரிக்கை பலகையை நிறுவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாலம் இடிந்து விழுவதில் என்டிஏ அரசு உலக சாதனை படைத்துள்ளதாகவும் தேஜஸ்வி கேலி செய்தார்.
தன் மீதான வழக்கு குறித்து பேசிய தேஜஸ்வி, பாஜக உண்மையைப் பற்றி பயப்படுவதாகவும், ஒரு வார்த்தை கூட அவர்களுக்கு குற்றமாகிவிடும் என்றும் கூறினார்.
பாட்னா மற்றும் பெகுசராய் ஆகியவற்றை இணைக்கும் 1.86 கி.மீ நீள சிமாரியா பாலத்தை மோடி நேற்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.






