என் மலர்
இந்தியா

சர்ச்சை பேச்சு விவகாரம்: மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
- மத்திய மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.
- மத்திய மந்திரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்தது.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பா.ஜ.க. சார்பில் நடந்த போராட்டத்தில் மத்திய மந்திரி ஷோபா பங்கேற்றார். போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஷோபா, பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள்மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அவர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
மத்திய மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
அவரது கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியது தொடர்பாக மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் புகார் மீது கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.






