search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரேபரேலி தொகுதியில் ராகுலுக்கு காத்திருக்கும் சவால்கள்!
    X

    ரேபரேலி தொகுதியில் ராகுலுக்கு காத்திருக்கும் சவால்கள்!

    • பிரசாரம் செய்ய ராகுலுக்கு குறைந்த கால அவகாசமே உள்ளது.
    • இன்று பிரதமர் மோடிக்கு நிகராக ராகுல் பார்க்கப்படுகிறார்.

    உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளாக அமேதியும், ரேபரேலியும் உள்ளன. இவற்றில் அமேதி தொகுதி கடந்த தேர்தலில் பா.ஜனதா வசம் சென்றதால் அமேதி பற்றி ராகுல் கவலைப்படவில்லை. இதற்கு அங்கு பா.ஜனதா வலுவடைந்திருப்பதே காரணமாக கருதப்படுகிறது. இதனால், தனது தாயின் தொகுதியான ரேபரேலியை ராகுல் தேர்வு செய்துள்ளார்.

    பா.ஜனதா சார்பில் ரேபரேலியில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். இவர் அமேதி பாணியில் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்கிறார்.

    2014-ல் அமேதியில் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வியுற்றார். என்றாலும் ஸ்மிருதி தொகுதியை காலி செய்து விடாமல் அங்கேயே தங்கிவிட்டார். தொடர்ந்து அவர் மக்களிடையே வாழ்ந்து கடினமாக உைழத்ததால் 2019-ல் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது.

    இதேபோன்று தினேசும் 2019-ல் சோனியா காந்தியிடம் தோல்விஅடைந்தார். என்றாலும் சோனியாவின் வாக்குகளை குறைத்திருந்தார்.

    இதற்காக பா.ஜனதா தினேசுக்கு உத்திரபிரதேச மாநில மேலவையில் எம்.எல்.சி. பதவி அளித்ததுடன் மாநில அமைச்சராகவும் நியமித்தது.

    இந்த செல்வாக்கில் தினேஷ், தொடர்ந்து ஸ்மிருதியை போல் ரேபரேலி மக்களுடன் தங்கிப் பணி செய்துவந்தார். மேலும், 2018 வரை காங்கிரசில் சோனியாவுக்கு நெருக்கமானத் தலைவராக தினேஷ் இருந்ததன் பலனும் அவருக்கு தேர்தலில் கிடைக்கலாம்.

    அதேநேரத்தில் ரேபரேலியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னாள் முதல்வர் மாயாவதி தனது பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.

    ரேபரேலி வாக்காளர்களில் சுமார் 34 சதவீதம் பேர் தலித்துகள். தலித் ஆதரவு கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, தாகூர் பிரசாத் யாதவ் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் ராகுலிடம் இருந்து யாதவர் மற்றும் தலித் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    கடந்த முறை இக்கூட்டணி ரேபரேலியில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், தலித் வாக்காளர்களில் பெரும்பாலானோர் சோனியாவுக்கு வாக்களித்தனர். தற்போது ரேபரேலியில் உள்ள 6 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே காங்கிரசுக்கு வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது.

    அதேவேளையில் 2022 சட்டப்பேரவை தேர்தலில் ரேபரேலியின் 5 தொகுதிகளில் 4-ல் சமாஜ்வாடி வெற்றி பெற்றது. ஒன்றை மட்டுமே பா.ஜனதா கைப்பற்றியது. இங்கு காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சமாஜ்வாடி எம்எல்ஏ மனோஜ் பாண்டேவும் பா.ஜனதாவில் இணைந்து உள்ளார்.

    காங்கிரசுக்கு ரேபரேலியில் கிடைத்த வாக்கு சதவீதங்களும் குறைந்து வருகின்றன. 2009-ல் 72.2 சதவீதம், 2014-ல் 63.8 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2019-ல் பா.ஜனதாவின் தினேஷ் சோனியாவுக்கு சவாலாக விளங்கினார்.

    இவரால் காங்கிரசின் வாக்கு சதவீதம் 55.8 என்றானது. பா.ஜனதாவுக்கு 2014-ல் 21.1 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. இது 2019-ல் 38.7 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

    இத்தனை காரணிகளுக்குப் பிறகும் ராகுலை பா.ஜனதா வீழ்த்துவது கடினம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில் ரேபரேலியின் முதல் பாராளுமன்ற தேர்தலில் பெரோஸ் காந்தி போட்டியிட்டது முதல் நேரு காந்தி குடும்பத்துடன் அதன் வாக்காளர்கள் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளனர். இன்று பிரதமர் மோடிக்கு நிகராக ராகுல் பார்க்கப்படுகிறார்.

    இதற்கான பலனுடன் நேரு காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் ராகுலுக்கு கூடுதல் பலம் தரக் கூடியதாக உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பிரசாரம் செய்ய ராகுலுக்கு குறைந்த கால அவகாசமே உள்ளது. இதுவும் அவருக்கு சவாலாகவே பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×