என் மலர்
இந்தியா

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்- மத்திய அரசு ஆலோசனை?
- டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பிரதமரை சந்தித்து டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 29-ந் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடந்தது. மேலும் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. அப்போது மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தனித்தீர்மானம் மீது சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து தனித்தீர்மானம், பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய சுரங்க அமைச்சகம் பிரதமர் அலுவலகத்தின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பிரதமரை சந்தித்து டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் சுரங்க உரிமத்தை ரத்து செய்வதா? ஒத்தி வைப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






