என் மலர்
இந்தியா

VIDEO: நடு ரோட்டில் வாக்குவாதம்.. டெல்லி போலீசார் மீது கடத்தல் வழக்குப்பதிந்த இமாச்சல் போலீசார்
- டெல்லி போலீசாருக்கு 18 மணி நேர டிரான்சிட் ரிமாண்ட் வழங்கப்பட்டது.
- ல்லி போலீசாரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என இமாச்சல பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டில், இளைஞர் காங்கிரசார் சட்டையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் ஏற்கனவே சிலரை கைது செய்தனர்.
இந்நிலையில் சௌரப், சித்தார்த், அர்பாஸ் ஆகிய மூன்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்ரு பகுதியில் வைத்து நேற்று டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ஒரு மாநில போலீசார் மற்றொரு மாநிலத்திற்குச் சென்று ஒருவரைக் கைது செய்யும்போது, உள்ளூர் போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், டெல்லி போலீசார் இந்த விதியைப் பின்பற்றவில்லை.
எனவே சிவில் உடையில் வந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மூவரை கைது செய்து, அவர்கள் தங்கிருந்த விடுதியின் சிசிடிவி உபகாரணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை எடுத்துச் சென்ற டெல்லி போலீசார் மீது சிம்லா போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர்.
நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில், சிம்லா கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் கான்ஷ் கபில் இல்லத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
டெல்லி போலீசாருக்கு 18 மணி நேர டிரான்சிட் ரிமாண்ட் வழங்கப்பட்டது. இதன் மூலம் கைதிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்ற அனுமதி கிடைத்த பிறகும், இன்று அதிகாலை 4 மணியளவில் சிம்லா அருகே உள்ள ஷோகி எல்லையில் டெல்லி போலீஸ் வாகனங்களை இமாச்சலப் போலீசார் வழிமறித்தனர்.
சிசிடிவி ஆதாரங்கள் உள்ள வாகனத்தின் சாவியை ஒப்படைக்கும்படி சிம்லா போலீசார் கேட்டனர். ஆனால், டெல்லி போலீசார் அதனை மறுத்துவிட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே நாடு ரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.
டெல்லி போலீசார் தங்களிடம் உள்ள ஆதாரங்களின் பட்டியலை முறைப்படி காட்டிய பிறகு, சிம்லா போலீசார் தடையை நீக்கினர். இதையடுத்து டெல்லி குழுவினர் அங்கிருந்து புறப்பட்டனர்.
இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, டெல்லி போலீசாரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர், மாநில அரசு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குப் புகலிடம் அளித்துப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






