என் மலர்
இந்தியா

குதிரையில் திருமண ஊர்வலம் சென்ற தலித் மணமகன்.. சரமாரி தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதி கும்பல்
- ஒரு தலித் எப்படி எப்படிக் குதிரை சவாரி செய்யலாம்? என்று கூறி அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
- குஜராத்தில் தலித் மணமகன்கள் குதிரை சவாரி செய்வதால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் சந்துர்மனா என்ற கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தின் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் விஷால் சாவ்தா என்பவரின் திருமண விழா இன்று (பிப்ரவரி 2) நடைபெற்றது.
மணமகன் விஷால் சாவ்தா தனது திருமண ஊர்வலத்தின் போது குதிரை மீது அமர்ந்து சென்றது, அங்குள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலரை ஆத்திரமடையச் செய்துள்ளது.
எனவே ஊர்வலத்தை வழிமறித்த ஆதிக்க சாதி கும்பல், ஒரு தலித் எப்படி எப்படிக் குதிரை சவாரி செய்யலாம்? என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளது.
மணமகன் குதிரையிலிருந்து வலுக்கட்டாயமாக கீழே இழுத்துத் தள்ளப்பட்டார். தடுக்க வந்த உறவினர்களை கத்திகள் மற்றும் கட்டைகளால் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிலர் படுகாயமடைந்தனர்.
இதன்பின் மணமகன் குதிரை சவாரியை கைவிட்டு காரில் சென்று போலீஸ் பாதுகாப்புடன் திருமண சடங்குகளில் கலந்துகொண்டார்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாகூர், அஸ்வின் தாகூர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராமத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்கப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காந்திநகர் முதல் பனஸ்கந்தா வரை குஜராத்தில் தலித் மணமகன்கள் குதிரை சவாரி செய்வதால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.






