search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    சிறையில் இருந்து வெளியே வருகிறார் ப.சிதம்பரம்- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தது

    ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

    ப.சிதம்பரம் 2007-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதியை பெற்றது.

    இதற்கு மத்திய நிதி அமைச்சகத்துக்கு கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இதில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே கைதாகி இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம்கோர்ட்டு கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி ஜாமீன் வழங்கியது.

    ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் அக்டோபர் 16-ந்தேதி கைது செய்யப்பட்டு இருந்ததால் அவரால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. அவரது சிறை வாசம் தொடர்ந்து நீடித்தது.

    அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் 15-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ப.சிதம்பரம் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    இந்த ஜாமீன் மனுவை நீதிபதி பானுமதி தலைமையில் நீதிபதிகள் போபண்ணா, ஹிரிசிகேஷ்ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பல நாட்களாக நடந்தது.

    ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரை ஜாமீனில் விடுவித்தால் வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைத்து விடுவார். ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்று அமலாக்கத்துறை வக்கீல் துஸ்கர் மேத்தா வாதிட்டார்.

    மேலும், “சட்ட விரோத பணபரிவர்த்தனை என்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும்போது நிர்வாக அமைப்பு முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். இதனால் ஜாமீன் வழங்கக் கூடாது” என்றும் அவர் முறையிட்டார்.

    ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் அபிஷேக்சிங்வி, கபில்சிபல் ஆகியோர் வாதாடும்போது, “ப.சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. அவர் தொடர்புடைய நேரடி அல்லது மறைமுக ஆதாரங்கள் எதையும் அமலாக்கத் துறை சமர்ப்பிக்கவில்லை. எனவே 100 நாட்களுக்கு மேல் சிறையில் ப.சிதம்பரம் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறினர்.

    சுப்ரீம் கோர்ட்

    இரு தரப்பு வாதங்கள் நிறைவு அடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்தனர்.

    இந்த நிலையில் ப.சிதம்பரம் மீதான ஜாமீன் வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது. பொருளாதார குற்றச்சாட்டு அதி தீவிரமானது.

    ப.சிதம்பரத்துக்கு ரூ.2 லட்சம் உத்தரவாதத்துடன் கூடிய ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.

    நிபந்தனை ஜாமீனில் வெளியே வரும் ப.சிதம்பரம் சாட்சிகளை கலைக்கக் கூடாது. வழக்கு தொடர்பாக அவர் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ப.சிதம்பரத்துக்கு ஏற்கனவே சி.பி.ஐ. வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது. தற்போது அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் அவர் டெல்லி திகார் சிறையில் இருந்து 106 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார்.

    இன்று மாலைக்குள் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×