என் மலர்
செய்திகள்

ராஜீவ் காந்தி ஊழல்வாதி என விமர்சனம் - பிரதமர் மோடிக்கு ராகுல் பதில்
புதுடெல்லி:
பிரதமர் மோடி உத்திரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரபேல் விமான ஒப்பந்தத்தில் என்னை குற்றம் சாட்டி வருகிறார்.
உங்கள் (ராகுல்காந்தி) தந்தை ராஜீவ்காந்தி நேர்மையானவர் என்று அவரது விசுவாசிகளால் கூறப்பட்ட நிலையில் அவர் தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் ஊழலில் ‘நம்பர் ஒன்’னாக திகழ்ந்தார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டதை சுட்டிக்காட்டி மோடி பேசினார்.
மேலும் மோடி பேசும்போது, எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் நாட்டில் நிலையற்ற, பலவீனமான அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். நான் பிறக்கும்போது தங்க தட்டிலோ, வசதியான குடும்பத்திலோ பிறக்க வில்லை என ராகுல் காந்தியையும் விமர்சித்தும் பேசினார்.

மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-
மோடிஜி, போர் முடிந்துவிட்டது. உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தையை பற்றிய உங்களின் உள் நம்பிக்கைகளை பரப்புவது எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது. உங்களுக்கு எனது அனைத்து அன்பும், ஒரு பெரிய அரவணைப்பும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியதாவது:-
மோடி எல்லை மீறி மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி அவதூறாக பேசியுள்ளார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ்காந்தி லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என கூறி கோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்தது பற்றி மோடிக்கு தெரியாதா?
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்ததும் அப்போதைய பா.ஜனதா ஆட்சி என்பது மோடிக்கு தெரியுமா?
இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #PMModi






