search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட் - நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல்
    X

    பாராளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட் - நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல்

    பாராளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். #Budgetsession #PiyushGoyal
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.

    மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.

    உடனே காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது. அது மட்டும் இன்றி இதில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு ஏற்கனவே 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.

    இந்த நிலையில், பாராளுமன்றத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என வெளியான ஊடக தகவல்களை மத்திய அரசு நேற்று மறுத்து விட்டது.



    இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் நேற்று கூறும்போது, “ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்தான்” என்று தெரிவித்தன.

    நிதி மந்திரி பொறுப்பை கவனித்து வந்த அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் அமெரிக்கா சென்று, நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது அங்கு ஓய்வில் இருந்து வருகிறார்.

    எனவே தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    முழு பட்ஜெட் என்றால் அரசு பெரிய அளவில் தனது கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியும், நலத்திட்டங்களை வெளியிட இயலும். உத்தேச வரவுகளை பதிவு செய்ய முடியும். செலவினங்களை கணித்துக்கூற இயலும்.

    இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை.

    தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

    இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் டெல்லியில் கூட்டினார். அவரது தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் ராம் கிரிபால் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதைப்போல தேசியவாத காங்கிரஸ், அகாலிதளம், அ.தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும், மத்திய அரசு சார்பில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், இணை மந்திரிகள் விஜய் கோயல், அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் நிறைவேற்றத்தை போல, பல்வேறு முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சிகளை சபாநாயகர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Budgetsession #PiyushGoyal 
    Next Story
    ×