search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனகதுர்கா
    X
    கனகதுர்கா

    சபரிமலை சென்ற இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய மாமியார்

    சபரிமலை சென்று சாமி தரிசம் செய்த கனகதுர்கா, அவரது மாமியார் தாக்கியதில் படுகாயடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Sabarimalatemple #Kanakadurga
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 2-ந்தேதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வந்த ஆச்சாரத்தை மீறி சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்த முதல் இளம்பெண்கள் என்ற சிறப்பை இவர்கள் பெற்றனர்.

    ஆனாலும் இவர்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தது ஐயப்ப பக்தர்களிடையே ஆத்திரத்தை எற்படுத்தியது. அவர்களுக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த இளம்பெண்களுக்கு மிரட்டல்களும் வந்தன. இதனால் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

    சபரிமலை சென்று திரும்பிய பிறகு கனகதுர்கா தனது உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில் நிலைமை சற்று சகஜம் ஆனதை தொடர்ந்து கனகதுர்கா நேற்று அதிகாலையில் மலப்புரம் அங்காடிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டில் அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி, 2 குழந்தைகள் மாமியார் சுமதி ஆகியோர் இருந்தனர். கனகதுர்காவை பார்த்ததும் ஆவேசம் அடைந்த மாமியார் சுமதி, அவரை வீட்டிற்குள் வர வேண்டாம் என்று கூறி தடுத்தார். ஆச்சாரத்தை மீறி சபரிமலைக்கு சென்றது ஏன்? என்று கூறி அவரை கண்டித்தார்.

    அதற்கு தான் ஆச்சாரத்தை மீறவில்லை என்று கனகதுர்கா கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் ஆவேசம் அடங்காத சுமதி, வீட்டில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக கனகதுர்காவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கனகதுர்கா மயங்கி விழுந்தார்.

    மேலும் கனகதுர்கா அங்கு வந்த தகவல் அறிந்த ஐயப்ப பக்தர்களும் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கனக துர்காவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தன்னை மாமியார் தாக்கியது பற்றி கனகதுர்கா, போலீசில் புகார் செய்தார். போலீசார் 324-வது பிரிவின்படி மாமியார் சுமதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சுமதியும், தன்னை கனகதுர்கா தாக்கியதாக புகார் செய்துள்ளார். அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Sabarimalatemple #Kanakadurga



    Next Story
    ×