search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டாவது நாளாக பாரத் பந்த் - பாராளுமன்றத்தை நோக்கி தொழிற்சங்கங்கத்தினர் பேரணி
    X

    இரண்டாவது நாளாக பாரத் பந்த் - பாராளுமன்றத்தை நோக்கி தொழிற்சங்கங்கத்தினர் பேரணி

    நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் இரண்டாவது நாளான இன்று பாராளுமன்றம் நோக்கி தொழிலாளர்களின் மிகப்பெரிய பேரணி நடைபெறுவதால் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BharatBandh #Rally
    புதுடெல்லி:

    குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்துவது, பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு சார்பு தொழிற்சங்கங்களின் 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.

    ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், மத்திய-மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வடமாநிலங்களில் நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களிலும் ஸ்டிரைக்குக்கு ஆதரவு இருந்தது.

    பல மாநிலங்களில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணிக்கு வராததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    அசாம், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், கேரளாவில் பல இடங்களில் ரெயில் மறியல் நடந்தது. சத்தீஸ்கரில் வங்கி மற்றும் அஞ்சலகச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர்களும் பணிக்கு வரவில்லை.



    மணிப்பூர் பகுதியில் உள்ள அரசு நிலக்கரி சுரங்கம், கேவ்ரா, தீப்கா போன்ற இடங்களில் உள்ள சுரங்கங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. என்றாலும் இங்கு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படவில்லை. பள்ளி-கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின.

    கோவா மாநிலம் பனாஜியில் போக்குவரத்து, வங்கி, துறைமுக தொழிலாளர்கள் உள்பட 5,000 பேர் 3 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தினர்.

    கர்நாடகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால் தொலைதூரம் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    மராட்டியத்தில் மும்பை, தானே, நவிமும்பை ஆகிய இடங்களில் மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 33,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தொழிற்சங்கத்தினர் சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்லியில் இன்று பாராளுமன்றம் நோக்கி தொழிலாளர்களின் மிகப்பெரிய பேரணி நடக்க உள்ளது. டெல்லி மண்டி அவுசில் இருந்து தொடங்கும் இந்த பேரணியில் அனைத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பேரணி பாராளுமன்றத்தை அடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பாராளுமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் நேற்றும், இன்றும் அரசு பஸ்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம் போல ஓடின. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை. தொலைதூரம் செல்லும் ரெயில்களும், புறநகர் ரெயில்களும் வழக்கம் போல் ஓடின.

    மத்திய அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் போராட்டம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் உள்பட பல தபால் நிலையங்களில் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டது.

    சென்னையில் வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக பல ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு இருந்தன. வங்கிகளில் காசோலை மூலமான பல கோடி பணப் பரிமாற்றங்களும் நடைபெறாமல் 2-வது நாளாக முடங்கியது.

    சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. #BharatBandh #Rally

    Next Story
    ×