search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி இப்போது விவாதிப்பது சரியல்ல - மம்தா பானர்ஜி
    X

    பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி இப்போது விவாதிப்பது சரியல்ல - மம்தா பானர்ஜி

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MKStalin #MamataBanerjee
    கொல்கத்தா:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசுகையில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுலை முன் மொழிந்தார்.

    எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி இன்னமும் முழுவடிவத்துக்கு வராத நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு எதிராக மாறுபட்ட கருத்துக்கள் வெளியானது.

    சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் மு.க.ஸ்டாலின் கருத்தை ஏற்க மறுத்தன. பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இதுபற்றி பேசிக் கொள்ளலாம் என்று இந்த கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர்.



    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் மு.க.ஸ்டாலின் கருத்தை ஏற்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் மு.க.ஸ்டாலின் கூறியதை ஏற்க மறுத்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தாவில் அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபற்றி விவாதிக்க தற்போது சரியான நேரமும் இல்லை.

    எதிர்க்கட்சி கூட்டணியில் நான் மட்டுமே அல்ல. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்படும் ஒருமித்த முடிவின்படியே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

    நிச்சயமாக மாற்றம் வரும். அந்த மாற்றத்துக்கான நேரம் வரும்வரை நாம் காத்து இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னால் அது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி விடக்கூடும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரும் இப்போதே பிரதமர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது என்று கூறி உள்ளனர். இதனால் ராகுலை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் கருத்தை ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஏற்க மறுத்து விட்டது தெரிய வந்து உள்ளது. #ParliamentaryElection #MKStalin #MamataBanerjee
    Next Story
    ×