search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி  18 சதவீதமாக குறைகிறது - சிமெண்டு, கார், ஏசி விலை இறங்கும்
    X

    பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைகிறது - சிமெண்டு, கார், ஏசி விலை இறங்கும்

    பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைவதால் சிமெண்டு மற்றும் கார், ஏசி விலை இறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. #GST

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது.

    அதன்படி பலமுனை வரிகள் நீக்கப்பட்டு, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்காக வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. அரசு மேற் கொண்ட இந்த மிகப்பெரிய வரிச் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக கடந்த 1½ ஆண்டுகளில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்தன. அதே சமயத்தில் மத்திய அரசுக்கு வரி வருவாய் கணிசமான அளவுக்கு அதிகரித்தது.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தியாவில் 65 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே வரி செலுத்தும் பட்டியலில் இருந்தன. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு மேலும் 55 லட்சம் நிறுவனங்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் தற்போது வரி செலுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

    வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் சுமார் 4 கோடியில் இருந்து சுமார் 7 கோடியாக அதிகரித்தது. இத்தகைய காரணங்களால் மத்திய அரசுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் ஜி.எஸ்.டி. வரி வருவாய் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு சதவீதத்தை மத்திய அரசு அடுத்தடுத்து குறைத்தது.

    பொதுமக்கள், தொழில் செய்பவர்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மிக முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு 5 சதவீதம், 12 சதவீதம் என்ற வரி திட்டத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது. அந்த வகையில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 320 பொருட்கள் மீதான வரி விதிப்பு சதவீதம் குறைக்கப்பட்டது.

    அந்த 320 பொருட்களில் 191 பொருட்கள் மீதான வரி விதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீத வரி விதிப்பு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இருந்தன.

    அதில் 191 பொருட்கள் மீதான வரி விதிப்பு சதவீதம் குறைக்கப்பட்டதால் 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் 35 பொருட்கள் மட்டுமே இருந்தன. அதன் பிறகும் மத்திய அரசுக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி. வரி வருவாயில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை. மாதம் தோறும் மத்திய அரசுக்கு சராசரியாக 1 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. மூலம் நிரந்தர வருவாயாக கிடைக்கிறது.


    இந்த நிலையில் 28 சதவீதம் வரி விதிப்பு பட்டியலில் இருந்து மேலும் பல பொருட்களை நீக்கி, மக்களுக்கு சலுகைகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மும்பையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மிக எளிதாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கமாகும். அதன்படி 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் உள்ள பல பொருட்களின் மீதான வரி விதிப்பு 18 சதவீதம் அல்லது அதற்கு கீழான பட்டியலுக்குள் கொண்டு வரப்படும். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    மத்திய அரசின் உத்தரவின் பேரில் வருகிற 22-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அன்று 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இருக்கும் பொருட்களில் 25 முதல் 30 பொருட்களின் மீதான வரி 18 அல்லது அதற்கும் குறைவான சதவீத வரி விதிப்பு பட்டியலுக்குள் கொண்டு வரப்படும். அந்த 30 பொருட்கள் என்னென்ன என்பது 22-ந்தேதி தெரிய வரும்.

    அனேகமாக சிமெண்ட், கிரானைட், மார்பிள், டயர்கள், ஏ.சி. எந்திரங்கள், டிஷ்வாசர், இரு சக்கர வாகனங்கள், டிஜிட்டல் கேமிராக்கள், டிஜிட்டல் ரிக்கார்டுகள், வீடியோ கேம்ஸ் கருவிகள், குளிர் பானங்கள், கார் உதிரிப் பாகங்கள் மீதான 28 சதவீத வரியில் சலுகைகள் அளிக்கப்பட்டு 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரி விதிப்பு பட்டியலுக்குள் வந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வரிச் சலுகையால் 30 பொருட்களின் விலை மளமளவென குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த நடவடிக்கைக்குப் பிறகு அதிகபட்ச 28 சதவீத வரி விதிப்புப் பிரிவில் 5 அல்லது 7 பொருட்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புகையிலை சார்ந்த பொருட்கள், அதிநவீன சொகுசு கார்கள், விமானங்கள், வெளிநாட்டு மதுபான வகைகள், சுற்றுலா கப்பல்கள், துப்பாக்கிகள் போன்றவை மட்டுமே இனி 28 சதவீத வரி விதிப்பு பிரிவில் இருக்கும். ஜி.எஸ்.டி. வரி முறை அமல்படுத்தப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பு பிரிவில் இருந்தன. தற்போது சுமார் 200 பொருட்கள் மீதான வரி விதிப்பு முறை மாற்றப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 99 சதவீத பொருட்களின் விலை குறையும். சிமெண்ட் மீதான 28 சதவீத வரி விதிப்பை 18 சதவீதமாக மாற்றும் போது மத்திய அரசுக்கு ஆண்டு தோறும் சுமார் 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். என்றாலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த இழப்பை ஏற்க மத்திய அரசு முன் வந்துள்ளது.

    28 சதவீத வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றம் நடுத்தர பிரிவு மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GST

    Next Story
    ×