என் மலர்
செய்திகள்

சபரிமலையில் குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு அனுமதி மறுக்கும் வழக்கில் நாளை தீர்ப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது. #Sabarimala #SupremeCourt
புதுடெல்லி:
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
கேரள மாநில அரசு, தேவஸ்தான போர்டு, மத்திய அரசு, மத அமைப்புகள் இந்த வழக்கில் தனித்தனியாக பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. ஒரு மாநிலத்தின் பாரம்பரியம், மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றோடு அரசமைப்பு சட்டப்படி ஒரு பெண்ணின் உரிமையை தீர்மானிக்கும் இந்த வழக்கு மிகவும் சவாலானதாக கருதப்படுகிறது.

தீர்ப்பு வழங்க இருக்கும் தலைமை நீதிபதி அமர்வு
மதரீதியிலான செயல்பாடுகளுக்கு உரிமை அளிக்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 25-ன் கீழ் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை அணுகுமா? அல்லது பாலின அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்யும் அரசமைப்பு சட்டப்பிரிவு 14 மற்றும் 15-ன் கீழ் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் அணுகுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு மட்டும் தடை விதிப்பதென்பது தீண்டாமைக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கோவில் பக்தர்கள் தங்களது பாரம்பரியத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு சட்டப்பிரிவு 26-ன் படி உரிமை உள்ளதா என்பது குறித்தும் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
Next Story






