search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாம் - இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 230 பயங்கரவாதிகள்
    X

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாம் - இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 230 பயங்கரவாதிகள்

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் அரசு உதவியுடன் முகாம் அமைத்துள்ள பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

    பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்து நாசவேலை சம்பவங்களில் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் பாதுகாப்பு படை மீது பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தாக்கினார்கள். இதில் 19 வீரர்கள் பலியானார்கள்.

    இதற்கு அந்த மாத இறுதியிலேயே இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் அட்டாக்) நடத்தி பதிலடி கொடுத்து எல்லையை ஒட்டி இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். இதில் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உதவியுடன் பயங்கரவாதிகள் முகாம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. புதிதாக 8 பயங்கரவாதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய படை துல்லியமாக தாக்குதல் நடத்திய லிபா பள்ளத்தாக்கில் மீண்டும் பயங்கரவாதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் லிபா, சகோதி, பராக் கோட், ‌ஷர்டி, ஜுரா ஆகிய பகுதிகளிலும், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பராக்கோட் மற்றும் கதுவா அருகே உள்ள பகுதிகளிலும் முகாம்கள் அமைத்துள்ளனர்.

    இந்த முகாம்களில் உள்ள 230 பயங்கரவாதிகள் எல்லை கோட்டு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. 27 இடங்கள் வழியாக அவர்கள் ஊடுருவ இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    கடந்த ஒரு மாதமாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைத்து விதமான பயிற்சிகளையும் பெற்ற அவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் கடந்த மாதம் 18-ந்தேதி பதவியேற்றார். அவர் பொறுப்புக்கு வந்த பிறகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறிவிட்டு மறுபுறம் தீவிரவாததத்தை தூண்டி வருகிறார். கடந்த வாரம் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 3 போலீசாரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா கடைசி நேரத்தில் ரத்து செய்தது.

    இதற்கு இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து இருந்தார். தற்போது அவரது ராணுவத்தின் ஆலோசனைப்படி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஹாஜிபூர், கதுவா பகுதிகளில் இந்திய ராணுவம் பாதுகாப்பு படைகளை அதிகரித்துள்ளது.  #JammuKashmir #Pakistan
    Next Story
    ×