search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதிய உணவு திட்ட தகவல்களை வெளியிடாத தமிழக அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    மதிய உணவு திட்ட தகவல்களை வெளியிடாத தமிழக அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MidDayMeal #Tamilnadu #Jharkhand #SupremeCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நாடு முழுவதும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால், முறையான கண்காணிப்பு இல்லாததால், உணவு, நச்சுத்தன்மையாக மாறுவதுடன் பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படுகின்றன” என்று கூறப்பட்டு இருந்தது.



    அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதிய உணவு திட்டத்தால் பலன் அடையும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் தங்களது இணையதளத்தில் 3 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்நிலையில், நேற்று இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் உத்தரவுப்படி மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டு சட்ட பணிகள் ஆணையகத்திடம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர்.

    புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களும் இத்தகவல்களை வெளியிடாதபோதிலும், இப்போதைக்கு அவற்றுக்கு அபராதம் விதிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர். அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #MidDayMeal #Tamilnadu #Jharkhand #SupremeCourt
    Next Story
    ×