search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிக்ஸ் மாநாட்டை முடித்து இந்தியா திரும்பினார் மோடி
    X

    பிரிக்ஸ் மாநாட்டை முடித்து இந்தியா திரும்பினார் மோடி

    தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறபட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். #PMModi #BRICSSummit
    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா, ருவாண்டா நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

    இந்த ஆலோசனையின் போது இந்தியாவுக்கும் மேற்கண்ட இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், இந்த நாடுகளின் தலைவர்களை மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறுதியாக, நேற்று மாலை துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன்-ஐ சந்தித்த பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தனி விமானம் மூலம் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா உள்பட மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி.

    விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார். #PMModi #BRICSSummit #Johannesburg
    Next Story
    ×