search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாஜ் மஹாலை பாதுகாக்க தவறிய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
    X

    தாஜ் மஹாலை பாதுகாக்க தவறிய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசு கடைபிடித்துவரும் மெத்தனப்போக்குக்கு சுப்ரீம் கோர்ட் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. #TajMahal
    புதுடெல்லி:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாஜ் மஹாலை ஒட்டியுள்ள யமுனை ஆற்றுப் பகுதியில் உள்ள மரங்களை இனியாவது வெட்டாமல் தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, எம்.சி. மேத்தா சமர்ப்பித்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் தாஜ் மஹால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்சையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது என்று வேதனை தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் அவர்கள் கேள்வி எழுப்பியபோது, தாஜ் மஹாலை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பு இந்திய தொல்லியல் துறையிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.

    தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்க உங்களிடம் தேவையான நிபுணர்கள் இல்லையா? அல்லது, இருந்தும் இதுதொடர்பாக நீங்கள் அக்கறை எடுக்கவில்லையா? தாஜ் மஹால் எப்படியாவது போகட்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா?

    அப்படி, உங்களிடம் நிபுணர்கள் இல்லாமல் போனாலும் நமது நாட்டில் உள்ள நிபுணர்கள் அல்லது வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம் என்று தெரிவித்த நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணையை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


    மே 9-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தாஜ் மஹாலை சுற்றி தேங்கி நிற்கும் யமுனை ஆற்றின் அசுத்த நீரில் காணப்படும் பூச்சிகளால் தாஜ் மஹால் அரிக்கப்பட்டு, பொலிவிழந்து வருவதாக குறிப்பிட்டார்.

    இதை கேட்டு பொறுமையிழந்த நீதிபதிகள், ’இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் தங்கள் பணியை சரியாக செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இதை தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஆனால், நீங்கள் பழியில் இருந்து தப்பித்து, உங்களை தற்காத்து கொள்வதில் அக்கறை காட்டுவதை அறிந்து இந்த கோர்ட் ஆச்சரியப்படுகிறது.

    தாஜ் மஹாலின் பராமரிப்பு தொடர்ந்து இந்திய தொல்லியல் ஆய்வு துறையிடம் இருக்க வேண்டுமா? என்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டனர்.

    இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர், ‘சுப்ரீம்  கோர்ட் முன்னர் அறிவுறுத்தியபடி, தாஜ் மஹாலை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு நிபுணர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.


    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர்முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    தாஜ் மஹாலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாசுப்பாடு தொடர்பாக கான்பூர் ஐ.ஐ.டி.யை சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்து வருவதாகவும், இந்த குழுவின் அறிக்கை இன்னும் நான்கு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இவ்விகாரத்தில் பாராளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்காமல் தாஜ் மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசு கடைபிடித்துவரும் மெத்தனப்போக்குக்கு இன்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தாஜ் மஹாலை பாதுகாக்க மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இனி மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.

    தாஜ் மஹாலை பாதுகாப்பது தொடர்பாக வரைவு திட்டம் ஏதும் தயாரிக்க தவறிய உத்தரப்பிரதேசம் மாநில அரசின் செயல்பாடு குறித்தும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், வரும் 31-ம் தேதி முதல் இவ்வழக்கில் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். #SCslamsCentre #protectingTajMahal
    Next Story
    ×