search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பாக செயல்பட்ட எம்.பி.க்களுக்கு மட்டும் தேர்தல் டிக்கெட் - பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். கட்டளை
    X

    சிறப்பாக செயல்பட்ட எம்.பி.க்களுக்கு மட்டும் தேர்தல் டிக்கெட் - பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். கட்டளை

    சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு மட்டுமே 2019 பாராளுமன்ற தேர்தலில் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    பாரதிய ஜனதா கட்சிக்கு தாய் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் செயல்பட்டு வருகிறது. கட்சியை எப்படி நடத்த வேண்டும், அதன் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைகளை வழங்குவது உண்டு.

    இந்த நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலை பாரதிய ஜனதா எப்படி எதிர்கொள்வது என்பது சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதற்கான ஆலோசனை கூட்டம் அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று அந்த கூட்டம் முடிவு பெறுகிறது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தேர்தல் தொடர்பாக சில ஆலோசனைகளை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கி உள்ளனர். அதில், தற்போது எம்.பி.க்களாக உள்ளவர்கள் செயல்பாடுகளை முற்றிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதற்காக தனியாக சர்வே ஒன்றை எடுக்க வேண்டும். அவர்களுடைய செயல்பாடுகளை முற்றிலும் அலச வேண்டும். அவர்கள் தொகுதியில் எப்படி பணிகளை செய்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா? வருகிற தேர்தலில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் தங்களுக்கு அறிக்கை தர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    இவர்களில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு மட்டுமே 2019 பாராளுமன்ற தேர்தலில் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கும் நபர்கள் யாருக்கும் மீண்டும் டிக்கெட் கொடுக்க கூடாது என்றும் கூறியுள்ளனர். மேலும் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்ற தொகுதிகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதற்கான காரணங்களை கண்டறிந்து வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.


    மேலும் உத்தரபிரதேசத்தில் தற்போது கட்சியின் நிலைமை பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளனர். அங்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது பாரதிய ஜனதாவை எந்த வகையில் பாதிக்கும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக எதை செய்யலாம் என்றும் ஆலோசித்து உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த தேர்தல் போலவே பெரும் வெற்றியை பெறுவதற்காக முக்கிய நபர்கள் பலரை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் அதில் முடிவு செய்யப்பட்டது.

    இதுபோன்ற கூட்டங்களை இந்த ஆண்டில் இன்னும் பல தடவை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இறுதியாக பிரதமர் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பின்னர் தேர்தலை சந்திப்பது தொடர்பான இறுதி கட்ட முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். அப்போது கூட்டத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக பிரதமருடன் அவர்கள் விவாதித்து உள்ளனர். #BJP #RSS
    Next Story
    ×