search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 24 லட்சம் மின்னணு எந்திரங்கள் தேவை- தேர்தல் கமிஷன்
    X

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 24 லட்சம் மின்னணு எந்திரங்கள் தேவை- தேர்தல் கமிஷன்

    பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 24 லட்சம் மின்னணு எந்திரங்கள் தேவை என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.#ElectionCommission
    புதுடெல்லி:

    தேர்தல் செலவுகளை குறைப்பதற்காகவும், அடிக்கடி தேர்தல் நடப்பதை தவிர்க்கும் விதத்திலும் நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

    தேர்தல் கமிஷனும் இது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. மேலும், மத்திய சட்ட கமிஷனுடன் அண்மையில் ஆலோசனையும் நடத்தியது.

    இதுபற்றி தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், இந்த இரு தேர்தல்களுக்கும் தனித்தனியே மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை வைக்கவேண்டும். நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு 10 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களும் இதே எண்ணிக்கையிலான ஒப்புகை சீட்டு எந்திரங்களும் தேவைப்படும்.

    மேலும் 20 சதவீத எந்திரங்கள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்படவேண்டும். அதன்படி பார்த்தால் மேலும் 2 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும். எனவே ஒட்டு மொத்த கணக்கின்படி 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் போது மொத்தம் 24 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், இதே எண்ணிக்கையிலான ஒப்புகை சீட்டு எந்திரங்களும் தேவையாக இருக்கும்.

    எனவே தற்போதைய நிலையில் மேலும் 12 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங் களை வாங்குவதற்கு கூடுதலாக ரூ.4,500 கோடி தேவைப்படும். இது இப்போதைய கொள்முதல் விலை நிலவரம் ஆகும்.

    மேலும் ஒரு வாக்குச் சாவடியில் தற்போது 5 தேர்தல் பணியாளர்கள் என்ற எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கும்.

    2024-ம் ஆண்டு மீண்டும் ஒரே நேரத்தில் இதுபோல் நாடா ளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால், 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை அதன் ஆயுட்காலம் முடிவடைவதையொட்டி அகற்ற வேண்டியும் இருக்கும். இதற்கும் ரூ.1,700 கோடி செலவு பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு எல்லைக்குள்ளும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் வராது என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 தேசிய கட்சிகள் வசூலித்த நன்கொடைகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க கோரி புனேவை சேர்ந்த விகார் துர்வே என்பவர் தேர்தல் கமிஷனிடம் கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷன் மேற்கண்டவாறு கூறி உள்ளது.

    இந்த 6 தேசிய கட்சிகளும் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் 2017-18-ம் நிதி ஆண்டுக்கான நன்கொடை பத்திரங்கள் மூலம் பெற்ற விவரங்களை தெரிவிக்கும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

    மத்திய தகவல் கமிஷன், 6 தேசிய கட்சிகளும் பெற்ற நன்கொடையை வெளிப்படைத் தன்மை சட்டவிதிகளின்படி கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தேர்தல் கமிஷன் இதுபோல் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. #ElectionCommission
    Next Story
    ×