என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஜம்மு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொகமது யூசுப் பட். இவர் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை மொகமது பட் வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த ஜன்னல் தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, முக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மீது கல் வீச்சு, ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் போன்ற நிகழ்வுகள் நடந்து வருவது வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
எம்.எல்.ஏ. வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது வீட்டின் மீது ஏற்கனவே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Next Story