search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்சோ வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவேண்டும் - ஐகோர்ட்டுகள் உறுதி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    போக்சோ வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவேண்டும் - ஐகோர்ட்டுகள் உறுதி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுவதை அனைத்து ஐகோர்ட்டுகளும் உறுதி செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் டெல்லியில் 8 மாத பெண் கைக்குழந்தை ஒன்றை 28 வயது வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த 2 சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பிரபல வக்கீல் ஸ்ரீவத்சவா சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கவேண்டும் எனவும் வழக்குப் பதிவு செய்த 6 மாதத்துக்குள் விசாரணையை கோர்ட்டுகள் முடிக்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திர சூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

    இதையடுத்து ஸ்ரீவத்சவா தொடர்ந்த வழக்கை நேற்று முடித்து வைத்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஐகோர்ட்டுகளுக்கு சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்தது.

    அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை (போக்சோ சட்டம்) விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைப்பது குறித்தும், அந்த வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுவது பற்றியும் ஐகோர்ட்டுகள் உறுதி செய்யவேண்டும். இது தொடர்பான வழக்குகளில் தேவையின்றி விசாரணையை ஒத்திவைக்க கூடாது என்று விசாரணை கோர்ட்டுகளுக்கு ஐகோர்ட்டுகள் அறிவுறுத்தவேண்டும். மேலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணைகளை ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும் 3 நீதிபதிகள் கொண்ட குழுவை ஐகோர்ட்டுகள் அமைத்துக் கொள்ளலாம்’ என்றனர்.
    Next Story
    ×