search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ராகுல்காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு
    X

    டெல்லியில் ராகுல்காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு

    டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் கலந்துகொள்ள வரும்படி அழைப்பு விடுத்தார்.
    புதுடெல்லி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வரும்படி ராகுல்காந்திக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

    இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மதவாத சக்திக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை அவரிடம் தெரிவித்தேன். மேலும், தலித் வன்கொடுமை சட்டத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சி காட்டிய எதிர்வினைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்’ என்றார்.

    முன்னதாக திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற தெருவில் தலித் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    அப்போது திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2-வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். வன்கொடுமை தடுப்புசட்டத்தை 9-வது அட்டவணையில் இணைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தீர்மானம் நிறைவேற்றியதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    பா.ஜனதா அல்லாத அனைத்து மதசார்பற்ற கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை பா.ஜனதா, காங்கிரஸ் என இரண்டின் மீதும் வெறுப்பு உண்டு. தமிழகத்தில் பா.ஜனதாவை தனிமைப்படுத்தி தி.மு.க. தலைமையில் தோழமை கட்சிகள் இணைந்து நிற்கின்றன.

    அதே நிலை தேசிய அளவிலும் இருந்தால் பா.ஜனதாவை தனிமைப்படுத்த முடியும். ஆட்சிக்கு வராமல் தடுக்கவும் முடியும். எனவே, காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடதுசாரிகள் போன்ற எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டியது வரலாற்று தேவையாக உள்ளது. தேர்தல் நெருங்கும்போது அது சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.

    தமிழக அரசு ஆட்சியை தக்க வைப்பதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதன்காரணமாக மக்களிடம் இருந்து அ.தி.மு.க. நாளுக்குநாள் அன்னியப்பட்டு வருகிறது என்பதை முதல்-அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார். 
    Next Story
    ×