என் மலர்
செய்திகள்

டெல்லி, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தானில் ரெயில் நிலையங்களை தகர்க்க 20 லஷ்கர் தீவிரவாதிகள் ஊடுருவல்
புதுடெல்லி:
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் - இ- தொய்பா தீவிரவாத இயக்கம் இந்தியாவில் நாசவேலை செய்ய தினமும் காஷ்மீர் எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபட்டபடி உள்ளது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உதவியுடன் இந்த லஷ்கர் தீவிரவாதிகள் செயல்படுகிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து 20 முதல் 21 தீவிரவாதிகள் வரை சமீபத்தில் ஊடுருவி இருப்பதை உளவுத்துறையின் பல்வேறு அமைப்புகள் உறுதி செய்துள்ளன. அந்த 20 தீவிரவாதிகள், எந்த நேரத்திலும் கைவரிசைக் காட்டக்கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உளவுத்துறை எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது.
இதைத் தொடர்ந்து பல மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. குறிப்பாக மராட்டியம், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களை மிக, மிக விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
பயங்கர நாசவேலை திட்டத்துடன் ஊடுருவி இருக்கும் 20 தீவிரவாதிகளும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். அவர்கள் டெல்லி, மும்பையில் உள்ள மெட்ரோ ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களை தகர்க்கும் திட்டத்துடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அந்த 20 தீவிரவாதிகளுக்கும் தாக்குதலுக்கான புதிய பயிற்சியை அளித்து இருப்பதாக தெரிகிறது. இந்த 20 தீவிரவாதிகளும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் தவிர டெல்லியில் விமான நிலையம், சுற்றுலா பயணிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள், மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு ஸ்டேடியங்களுக்கும் குறி வைத்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பையில் தாக்குதல் நடத்தும் அதே சமயம் பஞ்சாப், ராஜஸ்தானில் உள்ள எல்லைப் பகுதிகளிலும் பயங்கர தாக்குதலுக்கு வியூகம் வகுத்துள்ளனர். மெட்ரோ ரெயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தும் போது நடுத்தர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் பயன்படுத்தக்கூடும் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளை சுலபமாக எடுத்து வருவதற்காக லஷ்கர் தீவிரவாதிகள் இத்தகைய திட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே மெட்ரோ ரெயில் நிலையங்களில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு மாநில போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கும் 20 தீவிரவாதிகளில் சிலர் தற்கொலை படையை சேர்ந்தவர்கள். டெல்லியில் மக்கள் அதிகம் திரளும் பகுதிகளில் இவர்கள் தாகக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க உளவுத்துறையும் இதே போன்ற ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி மும்பை மற்றும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களில் தீவிர கண்காணிப்பும், சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.