search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசு ஆஸ்பத்திரிகளில்  அறுவை சிகிச்சை நடப்பதில் சிக்கல்: பெரியளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம்
    X

    அரசு ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை நடப்பதில் சிக்கல்: பெரியளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம்

    • மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது.
    • மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனைகளும் இங்கு ஏராளம். இருந்த போதிலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் நோயாளிகள் அதிக அளவில் வருகிறார்கள். திருவனந்தபுரம் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் ஆஸ்பத்திரிகளை போன்று நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. இதனால் வசதி படைத்த வர்கள் கூட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற விரும்பு கின்றனர்.

    இப்படிப்பட்ட சூழலில் கேரள மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரு சிக்கலான நிலை உருவாகி இருக்கிறது. கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இது இந்த மாத தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் எதிரொலித்தது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு நாட்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மாதம் அது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டது. பல துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிதி நெருக்கடி மருத்துவத் துறையையும் பாதித்துள்ளதாக தெரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருந்து விநியோகத்தில் ஏராளமான வினியோகஸ்தர்கள் ஈடுபடுகின்றனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அரசு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வழங்கி வந்தபடி இருந்தது. இந்நிலையில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை பல மாதங்களாக மாநில அரசு வழங்காமல் உள்ளது.

    2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.143கோடி தொகையை விநியோகஸ்தர்களுக்கு மாநில அரசு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவ னந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.50கோடி வரை பாக்கி வைத்துள்ளது.

    அதேபோல் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ17.55 கோடியும், கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ23.14 கோடியும், எர்ணாகுளம் பொது மருத்துவமனை ரூ10.97 கோடியும், கோழிக்கோடு பொது மருத்துவமனை ரூ3.21 கோடியும் பாக்கி வைத்துள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு அறுவை சிகிச்சை நிறுவன விநியோகஸ்தர்கள் மாநில அரசை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க அரசு நடவ டிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த அறுவை சிகிச்சை உபகரண நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அந்தந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிதொகையை வருகிற 31-ந்தேதிக்குள் கட்ட தவறி னால், உபகரணங்கள் சப்ளை நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது. அதன் எதிரொலியாக அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அங்கு இருதய அறுவை சிகிச்சைகள் ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. பின்பு இரண்டு மாத நிலுவை தொகையான 6 கோடி ரூபாயை அரசு செலுத்தியபிறகே விநியோ கஸ்தர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை உபகரணங்களை சப்ளை செய்தனர். பின்பு தான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கின.

    இந்தநிலையில் தற்போது அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்கள் சப்ளையை நிறுத்துவோம் என்று கூறி இருப்பதால் தற்போது மீண்டும் பிரச்சினை உருவாகி இருக்கிறது.

    அவர்கள் கூறியிருப்பது போல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் சப்ளையை நிறுத்தினால் மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி களில் ஏப்ரல் மாதம் முதல் அறுவை சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தட்டுப் பாடு ஏற்படும்.

    இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நோயா ளிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.

    தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு நோயாளிக்கும் தேதி குறிப்பிடப்பட்டே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையே நிலவி வருகிறது.

    இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்வது முற்றிலும் தடைபடும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    அறுவை சிகிச்சை நிறுவனங்களின் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முற்றிலுமாக வழங்கி, பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    Next Story
    ×